பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
05:06
உணவு பஞ்சமின்றி, விவசாயம் செழிக்க காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது.
காரைக்காலில் பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என்று அழைக்கப்பட்ட கோவில்பத்துவில், பல நூறு ஆண்டுகளுக்கு முன் நீண்டகாலமாக மழை இல்லாததால் மக்கள் வறுமையில் வாடினர். பயிர்கள் விளைச்சல் இன்றி நலிந்து உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரினங்கள் இறக்க நேர்ந்தாகவும், இதை கண்ட சிவபெருமான் உழவனாக தோன்றி நிலத்தை உழுது விதை தெளித்ததாகவுமும், அன்று முதல் உணவு பஞ்சம் இன்றி மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.
சிவபெருமானே உழவராக வந்து நிலத்தை உழுது விதை தெளித்தால் இவ்வூர் திருத்தெளிச்சேரி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, விவசாயம் மேன்மை பெறவும், உணவு பஞ்சமின்றி மக்கள் வாழவும் நேற்று விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது. நேற்று காலை 6.45 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள குளக்கரையில், பார்வதீஸ்வரர் சுயம்வரதபஸ்வினி சமேதராக எழுந்தருளினார். அங்கு, சிறப்பு பூஜைகள் செய்து நிலம் உழுது விதை தெளிக்கும் உற்சவ விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் நகரமைப்புக்குழு தலைவர் கோவிந்தராஜ், தனி அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.