திருப்புத்தூர்: திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு, ராஜநிலை நாட்டுதல் நடந்தது. திருப்புத்தூரில் ராஜகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இரு முறை கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
தற்போது மீண்டும் திருப்பணி துவங்கி மூன்றடுக்கிலான ராஜகோபுரம்,புதியதாக முருகன் சன்னதி, விநாயகர் சன்னதி புனரமைப்பு,அர்த்தமண்டபம், மூலவர் கர்ப்பகிரகம் உள்ளிட்ட திருப்பணி நடைபெறுகிறது.நேற்று ராஜகோபுரத்திற்கான ராஜகோபுர நிலை நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. காலை 8மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை துவங்கியது.
பிள்ளையார்பட்டி கோயில் தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் ராஜகோபுரத்திற்கு சந்தனக் கல் வைத்தல் மற்றும் ராஜநிலைக்கால் நிறுத்தும் பணியை நடத்தினார். திருப்பணிக்குழுவினர்,பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஸ்ரீராஜகாளியம்மன் திருக்கோயில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.