பதிவு செய்த நாள்
06
ஜூலை
2015
10:07
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சேப்பாட்டி அம்மன் கோவில் தேரோட்டம், 18 ஆண்டு களுக்கு பின் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு, பெரிய நத்தம் பகுதியில், சேப்பாட்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், 18 ஆண்டுகளுக்கு முன், சிதிலமடைந்து. அதை தொடர்ந்து, ஓம்சக்தி ஆன்மிக அறக்கட்டளை சார்பில், புதிய தேர் செய்யும் பணி துவங்கி, கடந்த 2013ம் ஆண்டு, தேர் செய்யும் பணிகள் அனைத்தும் முடிந்தன. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சேப்பாட்டி அம்மன் கோவிலில், கடந்த 30ம் தேதி, அம்மனுக்கு காப்புகட்டி, இராபுறையார் விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை, 5:00 மணிக்கு, சேப்பாட்டி அம்மன் மலர்களால் அலங்காரிக்கப்பட்டு, தேரில் எழுந்தருளினார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். காலை, 6:30 மணிக்கு, தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். கோவிலிலிருந்து புறப்பட்ட தேரோட்டம், ரைட்டர் சபாபதி தெரு, காஞ்சிபுரம் ஹைரோடு வழியாக, ஜி.எஸ்.டி., சாலை, அண்ணா சாலை, மேட்டுத்தெரு வழியாகச் சென்று, ஓசூரம்மன் கோவில் அருகில் முடிந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கினர்.
இன்று...: வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில், போலீஸ் ஏ.எஸ்.பி., ஜோர்ஜ் ஜோர்ஜி, வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர் முகிலன் மற்றும் 100 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று (6ம் தேதியும்), நத்தம் பகுதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.