பதிவு செய்த நாள்
06
ஆக
2015
11:08
அவிநாசி: அவிநாசி வட்டாரத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பொங்கல் விழா நேற்று நடைபெற்றது; பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். எம்.நாதம்பாளையத்தில் உள்ள ஸ்ரீஅத்தனூரம்மன் கோவிலில் பொங்கல் சாட்டு விழா, கடந்த முதல் தேதி பூச்சாட்டுதல் பூஜையுடன் துவங்கியது. இளநீர் காவடி எடுத்தல், அபிஷேகம் ஆகியனவும், நேற்று காலை கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும், அம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மறுபூஜை நடைபெறுகிறது.
* அவிநாசி, வாணியர் வீதியிலுள்ள முனியப்ப சுவாமி, ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பொங்கல் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது. அதன்பின், முனியப்ப சுவாமி, ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முனிய ப்ப சுவாமி, ஆதிபராசக்தி கோவில் அறக்கட்டளை, ஆதிபராசக்தி மகளிர் அமைப்பு நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
* பழங்கரை ஊராட்சி, நல்லிக்கவுண்டம்பாளையத்தில் உள்ள கருப்பராயன், கன்னிமார், வீரமாத்தியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை அடைந்தது. பின், அனைத்து சன்னதிகளிலும் அபிஷேகம் செய் விக்கப்பட்டது. பெண்கள், பொங்கல் வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.