பதிவு செய்த நாள்
04
செப்
2015
01:09
கிருஷ்ண பக்தரான கனகதாசர், உடுப்பி கிருஷ்ணன் கோயில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால், சேவகர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே செல்ல முயன்ற கனகதாசரிடம், அவரது குலம் பற்றி விசாரித்தனர். அவர், இடையர் குலம் என்று சொன்னதும், கழுத்தைப் பிடித்துத் வெளியே தள்ளினர். காவலர்களே! எல்லா மனிதர்களும் பிறப்பால் ஒன்றுதான். குலத்தால் பிரிப்பது நியாயமல்ல, என்று கனகதாசர் சொல்லியும் மறுத்தனர். இருந்தாலும் தாசர் நம்பிக்கை இழக்கவில்லை. உடுப்பி கிருஷ்ணனைத் தரிசித்துவிட்டுத்தான் ஊர் திரும்ப வேண்டும் என்று உறுதி பூண்டார்.
கிருஷ்ணா... உன் தரிசனம் எனக்கு மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? சதா சர்வ காலமும் உன் சிந்தனையிலேயே மூழ்கித் திளைக்கும் இந்த பக்தன் மீது இரக்கம் காட்டு, என கோயிலுக்கு பின்பக்கமாக வந்து கதறி அழுதார். அதுவரை, கிழக்கு நோக்கி நின்று அருள்பாலித்த கிருஷ்ணர் சிலை, பின்பக்கமான மேற்கு நோக்கி திரும்பியது. அத்துடன், தனது உண்மையான பக்தன் தரிசிக்கும் வகையில், சிலையின் கையிலிருந்த மத்து சுவரில் துவாரத்தை உண்டாக்கியது. துவாரத்தின் வழியாக கிருஷ்ணனின் திவ்ய தரிசனம் கனகதாசருக்கு கிடைத்தது. அன்றிலிருந்து உடுப்பி கிருஷ்ணர், மேற்கு நோக்கியே நிரந்தரமாக நின்று விட்டார். கனகதாசர் கண்டு தரிசித்த அந்த துவாரம் கனகன கிண்டி எனப்படுகிறது.
கிருஷ்ணா 5240: பூவுலகில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பதாக கிருஷ்ணர் கூறியுள்ளார். என்னைச் சரணடைவாயாக. உன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மோட்சத்தை அளிக்கிறேன், என்றும் கீதையில் நமக்கு வழிகாட்டியுள்ளார். துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணர் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். அவர் பிறந்த ஊர் மதுரா. ஆய்வாளர்களின் கருத்துப்படி ஆண்டுகளுக்கு 5240 ஆண்டுகளுக்கு முன் பிறந்ததாகக் கணிக்கப்படுகிறது. துவாபரயுகம், ஸ்ரீமுக ஆண்டு, ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் அவர் அவதரித்தார். இதன்படி ஆங்கிலத்தேதி 4.9. 3228 (கி.மு.) வருகிறது. விஷ்ணுபுராணத்தில் 1:5:26 வது ஸ்லோகத்திலும், ஹரிவம்சத்தின் 52ம் பகுதியிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. மண்ணுலகில் தர்மத்தைக் காத்து அருளிய கிருஷ்ணர், 18.2.3102(கி.மு.)ல் கோலோக பிருந்தாவனத்திற்கு எழுந்தருளினார். ஆக, கிருஷ்ணர் பிறந்து (3228+2012) 5240 ஆண்டுகள் ஆகின்றன. தர்மம் என்றும் அழிவதில்லை என்பதற்கேற்ப, மகிழ்ச்சிக்குரிய அவரது பிறந்தநாளை நாம் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.