பதிவு செய்த நாள்
05
செப்
2015
11:09
திருக்கோவிலூர்: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் பராமரிப்பின்றி பழுதடையும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலகளந்த பெருமாள் கோவில் கொண்டுள்ள இவ்வூர், ஒருகாலத்தில் கிருஷ்ணரண்ய ஷோத்ரம் என அழைக்கப்பட்டது.
முதல் ஆழ்வார்கள் திருக்கோவலூர் என மங்களாசாசனம் செய்தனர். அதன்பிறகு மருவி திருக்கோவிலூர் என அழைக்கப்படுகிறது.பெயருக்கு ஏற்ற வகையில் திரும்பிய பக்கம் எல்லாம் விண்ணை தொடும் உயர்ந்த கோபுரங்கள், நகரில் ஓங்கி நிற்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கோவிலுக்கு கிழக்கே, பெரிய கோபுரம் உள்ளது.இது 11 நிலைகளுடன் 192 அடி உயரத்திற்கு, தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய கோபுரமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோபுரம் மட்டுமல்லாது, கோவில் முகப்பில் உள்ள ராஜகோபுரம், திருமங்கை மன்னன் கோபுரம், பரமபதவாசல் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது.பலநூறு ஆண்டுகள் பழமையான கோபுரங்கள் என்பதால், ஒவ்வொரு நிலையிலும் உள்ள தேக்குமரங்கள் மழை, வெயில், காற்று என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு, சிதிலமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிதாக்கியதில், பெரியகோபுரத்தின் சிற்பங்கள் உடைத்து விழுந்தது.ஜீயர் பராமரிப்பில் உள்ள இந்த கோபுரங்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சீரமைப்பு பணிக்கான பாலாலய வைபவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டது. கோவில் நிர்வாகம் ஜீயர் வசம் இருந்தாலும், சீரமைப்பு பணிக்கு இந்துசமய அறநிலையத்துறையின் அனுமதி தேவை. பக்தர்களின் உதவியுடன் திருப்பணி துவங்குவதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி கோரி, இந்துசமய அறநிலையத்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு ஆகியும் அதற்கான அனுமதி இன்னும் கிடைக்காததால், திருப்பணி துவங்கப்படவில்லை. பலமான காற்று மற்றும் மழையின்போது பெரிய கோபுரத்தில் உள்ள சிலைகளின் பாகங்கள் உடைத்து கீழே விழும் சம்பவம் வாடிக்கையாகி விட்டது.கோபுரத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த பயத்துடனே நடமாடி வருகின்றனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோபுரத்தை கட்டிய மன்னர்களின் வரலாறு சரிவர தெரியாத நிலையில், அவர்கள் கட்டிய கோபுரம் நகருக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது.எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும் , இதுபோன்ற கோபுரத்தை இனி யாராலும் கட்ட முடியாது என்ற நிலையில், இருக்கும் கோபுரத்தை சீரமைக்க பக்தர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வரலாற்றுச் சின்னமாக விளங்கும், பழமைவாய்ந்த கோவில் கோபுரத்தை புனரமைக்க அனுமதி வழங்காமல், அறநிலையத்துறை இழுத்தடிப்பதால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.