பதிவு செய்த நாள்
22
செப்
2015
12:09
அமானவன்...இப்படி ஒரு பெயரையே கேள்விப்பட்டதில்லையே...! இது கடவுளின் பெயரா... தேவர்களில் ஒருவனா... இல்லை... ஏதாவது புராணப் பாத்திரமா...!இவனை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், பூமியில் ரொம்பவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். புரட்டாசி சனி விரதமெல்லாம் முறையாக அனுஷ்டித்திருக்க வேண்டும். நம் இறப்புக்கு பிறகு தான் இவனை பார்க்க முடியும். இவனது இருப்பிடம் எங்கே தெரியுமா...
வைகுண்டத்தில்.வைகுண்டத்தில் பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால், இரண்டு துவார பாலகர்கள் இருப்பார்கள். பெருமாள் கோவிலுக்குப் போனால், ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவில் இவர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த பாலகர்கள் இருக்கும் இடத்திற்கும் சற்று முன்னால், இவன் நின்று கொண்டிருப்பான்.சரி...இவனுக்கு அங்கே என்ன வேலை! நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம். ஹரி..ஹரி..., நாராயணா... கோவிந்தா... பத்மநாபா என்றெல்லாம், பெருமாளின் திருநாமத்தைச் சொல்லியபடியே எழலாம். மனதில் கள்ளம் கபடே இல்லாமல், எந்த நேரமும் பிறர் நலம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும், அதைச் சகித்துக் கொண்டு, பெருமாளே! நீ தான் எனக்கு எல்லாம்..இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்றுக்கொள்கிறேன், என்று எல்லாவற்றையும் பாசிட்டிவ் ஆக பார்த்திருக்கலாம். புரட்டாசி சனி விரதத்தை முறையாக அனுஷ்டித்திருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள். அங்கே அமானவன் காத்திருப்பான். இவர்கள் அங்கே சென்றதும், கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்வான். இவன் அழைத்து வரும் யாரையும் துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். நேராக பெருமாள் முன் நம்மை நிறுத்தி விடுவான். நாம் ஸ்ரீதேவியோடு (லட்சுமி) கூடிய பெருமாளைத் தரிசிப்போம்.அதிருக்கட்டும்...இவனுக்கு ஏன் அமானவன் என்று பெயர் வந்தது?மானவன் என்றால் மனிதன். அமானவன் என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது இவன் ஒரு தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது பணி.அமானவன் கரத்தாலே தீண்டல் கடன் என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள். அதாவது, அவன் என்னைக் கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன் என்கிறார்.நம் கரத்தையும் அமானவன் பிடிக்க வேண்டுமென்றால், இந்த நிமிடம் முதல் புண்ணியம் செய்யத் தொடங்கி விடுவோம்.