பதிவு செய்த நாள்
07
நவ
2015
10:11
வந்தவாசி: வந்தவாசி அருகே, மோட்சம் அடைய, 41 நாள் விரதமிருந்த ஜைன மத மூதாட்டியின் உயிர் பிரிந்தது. இவரை, ஜைன மத வழக்கப்படி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்று, தேங்காயால் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, தென்சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் பட்டுசாமி ஜெயின் மனைவி மருதேவி அம்மாள், 83. பட்டுசாமி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு, இலவனகுமாரி, 64, சாந்தகுமாரி, 61, பேபியம்மாள், 59, என்ற மூன்று மகள்களும், பாபு, 55, இளங்கோவன், 52, தரனேந்திரன், 49, என்ற மூன்று மகன்களும் உள்ளனர். மருதேவி அம்மாள், ஜைன மதத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் இறந்த பின்னர் மோட்சம் அடைவதற்காக, அக்கிராமத்தில் உள்ள, 1,008 பார்சுவ தீர்த்தங்கரர் ஜினாலயத்தில், கடந்த, 41 நாட்களாக உணவு எதுவும் உண்ணாமல், விரதம் இருந்து வந்தார். முதல், 30 நாள் தண்ணீர், டீ ஆகிய திரவ உணவு மட்டும் உட்கொண்டார். கடந்த, 11 நாட்களாக, திட உணவு மற்றும் தண்ணீர் கூட எதுவும் அருந்தாமல் கடும் விரதம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், ஜினகஞ்சி லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சாரியார் சுவாமிகள், சென்னை சிம்மசந்திர சாஸ்திரியார், திருமலை தவளகீர்த்தி சுவாமிகள் ஆகியோர், அக்கிராமத்திற்கு சென்று, விரதம் இருந்த மருதேவி அம்மாளுக்கு ஆசி வழங்கினர். மேலும், மருதேவி அம்மாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆசிபெற்றனர். இந்நிலையில், கடும் விரதமிருந்த மருதேவி அம்மாள், நேற்று முன்தினம் மாலை, 6 மணி மணியளவில் மரணமடைந்தார். இதையடுத்து ஜைன மத வழக்கப்படி, மோட்சம் அடைய ஸ்ல்லக்கேன விரதம் இருந்து உயிர் துறப்பவர்களின் உடலை, யாருக்காகவும் எதிர்பார்த்து காலதாமதம் செய்யாமல் எரியூட்டப்பட வேண்டும் என்பது விதி.
அதன்படி, உயிர் துறந்த அரை மணி நேரத்தில், ஜோடிக்கப்பட்ட பல்லக்கில், அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு, 500 மீட்டர் தூரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில், அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. பின், மட்டை உரிக்காத காய்ந்த நிலையில் உள்ள தேங்காய் அடுக்கி வைத்து, அதில் அவரது உடல் வைக்கப்பட்டு, அவரது மூத்தமகன் பாபு, சிதைக்கு தீ மூட்டினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஜைனர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம், மருதேவி அம்மாள் மோட்சம் அடைந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.