பதிவு செய்த நாள்
30
நவ
2015
12:11
அன்னுார்: அ.மேட்டுப்பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அ.மேட்டுப்பாளையத்தில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தர்மசாஸ்தா கோவில், மேடை பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன.
கும்பாபிஷேக விழா, 27ம் தேதி மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. 28ம் தேதி காலை கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் நடந்தது. இரவு யாகசாலை பூஜை நடந்தது. கூனம்பட்டி மடம், கல்யாணபுரி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சாமிகள் பங்கேற்றார். நேற்று காலை 8:30 மணிக்கு விமான கோபுரங்கள், செல்வ விநாயகர், மேடை பிள்ளையார், சின்ன பிள்ளையார் மற்றும் ஐயப்பசாமிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அவிநாசி, வாகிசர் மடத்தின் காமாட்சிதாச சாமிகள் அருளுரை வழங்கினார். பின், மகா அபிஷேகம், அன்னதானம் வழங்குதல் நடந்தது. செண்டை மேள இசை நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.