பதிவு செய்த நாள்
02
டிச
2015
11:12
திருப்பூர்: திருப்பூர் அருகே, 8ம் நுாற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், கொடுவாய், நாகீஸ்வரர் கோவிலில், கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்த, பழமையான அய்யனார் சிலையை, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய த்தினர் கண்டறிந்துள்ளனர். அதன் இயக்குனர் ரவிக்குமார் கூறிய தாவது: பண்டை காலத்தில், தரைவழி வணிகம் செய்தவர் , ‘சாத்துவர்’ எனவும், கடல் வழி வணிகம் செய்தவர், ‘நாயகர்’ எனவும் குறிப்பிடப்படுகிறது. வணிகர்கள் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். பயணம் செய் யும் வணிக பெருவழிகளில், அய்யனார் சிலைகளை நிறுவி வழிபட்டனர். அவ்வகையில், சங்க காலத்தில் மேலை நாட்டவரும், சேரர் கடற்கரை தலைநகராம் முசிறியிலிருந்து சோழர் துறைமுக நகரான பூம்புகார் வரை, பேரூர், வெள்ளலுார், சூலுார், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர் வழியாக பயணம் செய்து, வணிகம் செய்த, பண்டைய பெருவழிகளில் முக்கியமானதான, ‘ராஜகேசரி பெருவழி’ அருகே, வட்டெழுத்துக்களுடன் கூடிய, இந்த அய்யனார் சிலை காணப்படுகிறது. இது, 105 செ.மீ., நீளமும், 75 செ.மீ., அகலமும் கொண்டது. இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.