பதிவு செய்த நாள்
24
டிச
2015
05:12
பிரம்ம சொரூபத்தின் அளவிட முடியாத அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் லிங்கமாக அமைந்துள்ளது இந்த மலை. கர்ம, பாவங்களை நீக்கி, முக்தி தரக்கூடிய ஒரே இடம் அருணாச்சலம். அன்னை பார்வதிக்கு மட்டுமின்றி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோருடைய ஐக்கிய சொரூபம் இம்மலை என்றார் பிரம்மரிஷி ஞானத்தாய் அன்னை உமாதேவி.
பிரம்மனும், மாலும் பிரானே நான் என்னப்
பிரமன்மால் தங்கள் தம் பேதைமையாலே
பரமன் அனலாய்ப்பரந்து முன்நிற்க
அரன் அடித்தேடி அரற்றுகின்றாரே
என திருமந்திரம் அண்ணாமலை ஐதீகம் பற்றி அருள்வதைக் காணலாம். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலம். நடுநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றாக தேவாரத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் இத்திருத்தலத்தில் உதித்ததே என்பது நினைவுகூரத் தக்கது.
கயிலாயம், கேதாரம், காளஹஸ்தி, குற்றாலம், திருக்கழுக்குன்றம் போன்ற மலைகளில் சிவபெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். ஆனால், திருவண்ணாமலையில் சிவபெருமானே மலை (கிரி)யாக இருக்கிறார். ஆதாரத் தலம் ஆறில் இது மணிபூரகத் தலம், பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். லட்சக்கணக்கான யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும், சூட்சும சரீரங்களுடன் உலாவரும் தலம். அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வணங்கினாலே ஊழ்வினைகள் தீரும்.
கிரி பிரதட்சிணம் என்பதே ஒரு புனிதச் செயல்தான். இதனால் நல்ஞானம் கிடைக்கும். சான்றோரின் ஆசி கிட்டும். கிரிவலம் செய்யும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு: உடல் பிணி நீங்கும். சிவகதி பெறலாம்.
திங்கள்: ஆற்றல் பெருகும், இந்திர வாழ்வு கிட்டும்.
செவ்வாய்: வறுமை, பிறவிப் பிணி, கடன் சுமை நீங்கும்.
புதன்: வித்தைகள் சிறக்கும். தேவராகும் தகுதி வாய்க்கும்.
வியாழன்: ஞானம் அதிகரிக்கும். குரு பதவி அடையலாம்.
வெள்ளி: விஷ்ணு பதம் கிடைக்கும்.
சனி: நவக்கிரக தோஷம் நீங்கும் என அருணாசல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.