திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் கழிவு துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. இத்தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கோயில் சார்பில் மிதவை தெப்பம் அமைத்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள தெப்பத் திருவிழா நடக்கும். இந்தாண்டும் ஜன., 20ல் தெப்பத் திருவிழா நடக்கவுள்ளது. இதற்காக சில நாட்களாக குளம் அருகேயுள்ள ஆழ்குழாயிலிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது. தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. துர்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தெப்பக்குளம் துாய்மைப்படுத்தப்பட்டது. ஒரு காவலாளியும் நியமிக்கப்பட்டார். ஆனால் சமீபகாலமாக கழிவு துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை தெப்பக்குளத்திற்குள் தண்ணீரில் போடுகின்றனர். வெளிப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தெப்பக்குளம் மீண்டும் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. எனவே தெப்பக்குளத்தை சுற்றி வேலி அமைத்து, கூடுதல் காவலாளிகளை நியமித்து சுத்தமாக பராமரிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.