பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
உடுமலை: உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவுக்காக புக்குளம் பகுதியில் உருவபொம்மைகள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. உடுமலை சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள மாலகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைகளுக்கு நோய்கள் பரவாமல் இருப்பதுக்கும், கால்நடை வளம் பெருகவும், ஆடு, மாடு மற்றும் நாய் உட்பட உருவபொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
இன்னும் பத்து நாட்களில் கோவில் திருவிழா துவங்க இருப்பதால் புக்குளம் பகுதியில் உருவ பொம்மைகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. மண் எடுப்பதில் பிரச்னை மற்றும் விலையில் முன்னேற்றம் இல்லாததால் தொழில் நலிவடைந்து வருகிறது. இதுகுறித்து பொம்மைகள் செய்யும் மலையாண்டிசிற்பி கூறியதாவது: பாரம்பரியமாக உருவபொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக இத்தொழிலில் பெரியளவில் வருமானம் இல்லாததால், இளைய தலைமுறையினர் மாற்றுத்தொழிலை நாடிச்செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், உருவபொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தற்போது எங்கள் இரு குடும்பம் மட்டுமே இதை செய்து வருகின்றனர். வேலை அதிகம் என்பதாலும் வேலைக்கேற்ற ஊதியம் இல்லாததாலும் இத்தொழில் முற்றிலும் நலிவடைந்து காணப்படுகிறது. களிமண்ணும் கிடைக்காததால் பொம்மைகள் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
மண்பதம்: கொழுமம் கோதையம்மன் குளம், ஜல்லிபட்டி மற்றும் தளி போன்ற பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து, அதனுடன் கம்பு பொட்டு மற்றும் குதிரை சாணம் கலந்து குறைந்தது ஒரு மணிநேரம் மண்ணை நன்றாக மிதிக்க வேண்டும். அவ்வாறு மிதிக்கும் போதுதான் மண் பொம்மை செய்யும் பதத்திற்கு வரும்.
பொம்மை செய்யும் முறை: ஒவ்வொரு பொம்மையும் செய்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முதலில், நான்கு கால்கள் செய்து அதனை காயவைக்க வேண்டும். பின்பு அதன் உடலை செய்ய வேண்டும். அது காய்ந்த பிறகு, தலை பகுதியை செய்து ஒட்ட வைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பொம்மையையும் ஒவ்வொரு பகுதியாக செய்து இணைக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து பொம்மைகள் மட்டுமே செய்ய முடியும். இதற்கு குறைந்தபட்சம் பத்து மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்த பொம்மைகளை வெயிலில் நன்கு காயவைத்து, சுட வேண்டும். பின்பு பொம்மைகளுக்கு வர்ணம் பூச வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு பொம்மைகள் தயாரிப்பதுக்கும் நாங்கள் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. சிரமத்துக்குண்டான வருமானமும் கிடைக்காததால் இத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். குறைந்தபட்சம் ஒரு பொம்மை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொழிலை விட்டுசென்று விடலாம் என்று பார்த்தால், முன்பு பொம்மைகள் வாங்கியவர்கள் கேட்கும் போது இல்லை என்று சொல்ல மனம் வருவதில்லை. குடும்பத்தொழிலையும் விடக்கூடாது, வருவோருக்கு இல்லையென்று சொல்ல மனமில்லாமல் ஏதோ கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு உருவ பொம்மைகள் தயாரித்து வருகிறோம். இவ்வாறு சிற்பி மலையாண்டி கூறினார்.