பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
பழநி: கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்க உள்ள புத்துணர்வு முகாமிற்கு பழநி கோவில் யானை கஸ்துாரி நாளை செல்ல உள்ளதால், இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை. கடந்தாண்டு, யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம், தைப்பூசத் திருவிழாவிற்கு முன்னதாக நடந்தது. அதில் பழநி கோவில் யானை கஸ்துாரி கலந்து கொண்டு, மற்ற யானைகளுக்கு முன் உதாரணமாகவும், நல்ல ஆரோக்கியம், புத்துணர்வுடன் திரும்பி வந்தது. தேரோட்டத்தின் போது மேடான பகுதியில், தேரை இழுத்து செல்ல கஸ்துாரி யானை உதவி செய்தது. இந்த ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் ஜன., 7 முதல் பிப்., 22 வரை, யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, கஸ்துாரிக்கு சிறப்பு காவல் படை மைதானத்தில் தினமும் நடைபயிற்சி மற்றும் லாரியில் ஏறுவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. நாளை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகாமிற்கு யானையை லாரியில் கொண்டு செல்ல உள்ளனர். இதனால், வரும், 24ம் தேதி தைப்பூச திருவிழாவில், கஸ்துாரி பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் யானை லட்சுமி முகாமிற்கு தாமதமாக, ஜன.,20க்குபின் செல்கிறது. அதைப்போல, பழநிகோவில் யானைக்கும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.