பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடந்த ராமகிருஷ்ணர் குருபூஜை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு வித்யாலய மாணவர்கள், நாயக்கன்பாளையம், வீரபாண்டி கிராமப்புற பஜனைக் குழுக்களின் பஜனைகளும், அவிநாசிலிங்க பல்கலை மாணவியரின் பிரார்த்தனையும் நடந்தது. சிங்கப்பூர் ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி விமோஷானந்தர் கொடியேற்றினார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, கல்வி பொருட்காட்சியை திறந்து வைத்து பேசுகையில்,“இக்கால மாணவர்களின் அறிவுத்திறன், இது போன்ற பொருட்காட்சிகளில் வெளியாகிறது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வி கற்பிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், கலை, கலாசாரம், பண்பாடு குறித்தும் கற்றுத் தர வேண்டும்,” என்றார்.
இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், வித்யாலய மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி, சேலம் விஷ்ணுப்பிரியா குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகியன நடந்தன. பொதுக் கூட்டத்தில், சுவாமி விமோஷானந்தர், பட்டிமன்ற பேச்சாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனை சேர்ந்த துறவிகள் பங்கேற்றனர். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லுாரி முதல்வர் முத்தையா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகள், வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.