பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், சிறுமலை மலைப் பகுதிகளில் வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்து வருகின்றன. பழநியை புகழ்பெற்ற ஆன்மிக நகராக நினைத்துவரும் நமக்கு, ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நகராகவும் விளங்குவது பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இங்கு திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமிநாராயணப் பெருமாள்கோயில், சண்முகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயில் உள்ளன. இத்தலங்கள் அனைத்திலும் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் கலைத்திறன்களை இன்றும் நமக்கு எடுத்துரைக்கும் வரலாற்று சான்றுகள் எண்ணற்றவை உள்ளன.
பழநிமலைக்கோயிலில் நவபாஷாணத்தால் ஆன தண்டாயுதபாணி சிலை, அதை உருவாக்கிய சித்தர் போகர், அவரது சீடர் புலிப்பாணி இவர்கள் பழநியின் தொன்மைக்கு மாபெரும் சான்றாக விளங்கிவருகிறது.இதேபோல பழநியை சுற்றியுள்ள ரவிமங்கலம், பாப்பம்பட்டி, காவலப்பட்டி மலைச்சாரல், பாலசமுத்திரம், தன்னாசியப்பன் கரடு, ஆயக்குடி, பொட்டம்பட்டி, சண்முகநதிக்கரை பகுதிகளில் வரலாற்று சிறப்பு மிக்க புராதன சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆண்டிபட்டி மலைப்பகுதியில் ஆடி முதல் நாளில் தட்சணாய கால துவக்கத்தை குறிக்க,"சவுக்கை வழியாக உதித்த சூரிய ஒளிக்கதிர்கள். பாச்சலூர் அருகே சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை. ஆண்டிபட்டி மலைக்குகையில் சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்க்கை முறையை விளக்கும், கற்பாறை ஓவியங்கள் இன்றும் அழியாமல் உள்ளன. பழநி அருகே ஆமைக்கரடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான கல் திட்டைகள் இன்றும் உள்ளன.
பண்டைய நாளில் போரில் இறந்த வீரனுக்காக எடுக்கப்படும், நடுகற்கள், குகை ஓவியங்கள், மண்திட்டு குகைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் படிப்படியாக அழிந்து வருகின்றன. இவைத்தவிர கல்வெட்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இவைகளை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும். பண்டைத்தமிழர்களின் வேளாண்மைச் சான்றாக, உள்ள இரவிமங்கலம், வரதமாநதி பாண்டியர் கால அணை ஆகியவை போற்றி பாதுக்காக்கப்பட வேண்டியவை. சங்க காலமான 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மதுரையிலிருந்து கிரேக்கம், ரோமாபுரி சென்ற பெருவழிப்பாதை, பழநியை கடந்து சென்றுள்ளது. இதற்கு சான்றாக உள்ள ஐவர் மலைப்பெருவழி சத்திரம், சிதைந்த நிலையில் உள்ளது. பழநியை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க சின்னங்கள் உள்ள பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் அழிந்து வருகின்றன. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல்மலை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வரலாற்று சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கிறோம். கொண்டு செல்ல முடியாத தொல்லியல் சின்னங்களை, அந்தந்த ஊர் மக்களிடம் பாதுகாக்க வலியுறுத்துகிறோம். குறிப்பாக பழநியை சுற்றி நூற்றுக்குமேற்பட்ட நினைவுச்சின்னங்கள் உள்ளன. இதன் காரணமாகத்தான் பழநிக்கு அரசு அருங்காட்சியகம் கொண்டு வரப்பட்டுள்ளது. பழநிக்கு தனியாக தொல்லியல் அலுவலர் நியமனம் செய்து வரலாற்று சின்னங்களை அழியாமல் பாதுகாக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.