பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளம், 50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதைஅடுத்து, விசேஷ தெப்ப உற்சவம், நாளை முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவர் கோவில் அருகில், ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம், 1965ம் ஆண்டு, முழு அளவில் நிரம்பியது. அதன் பின், முழு அளவில் நிரம்பவில்லை.இந்த நிலையில், சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால், 50 ஆண்டுகளுக்கு பின், குளம் முழு கொள்ளளவில் நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து, விசேஷ தெப்ப உற்சவம், நாளை துவங்கி வரும் 9ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, துவங்கி மூன்று சுற்றுகள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவர் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வருவார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.