பதிவு செய்த நாள்
07
ஜன
2016
10:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, ராகு தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் திருநாகேஸ்வரத்தில், ராகு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் அடுத்த திருநாகேஸ்வரத்தில், ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற நவக்கிரக தலங்களில் ஒன்றாக விளங்கும் இங்கு நாகக்கன்னி, நாகவல்லி என இரு தேவியருடன், தனி சன்னிதி கொண்டு ராகு பகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இங்கு ராகு காலத்தில், ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.நாளை, 8ம் தேதி மதியம், 12:37 மணிக்கு ராகு பெயர்ச்சி விழா இக்கோவிலில் நடைபெறுகிறது. அப்போது, ராகு பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.ராகு பகவானுக்கு பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகமும், மதியம், 12:37 மணிக்கு மகா அபிஷேகமும் செய்யப்படும். பின், மகா தீபாராதனை, பஞ்ச தீபாராதனை நடைபெறுகிறது.