பதிவு செய்த நாள்
13
ஜன
2016
11:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. தீ மிதிப்பதற்காக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் நேற்று முதலே இடம் பிடிக்கத் துவங்கி விட்டனர். கோபி வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தீ மிதிக்கும் விழா, நாளை வெகு விமர்சையாக நடக்கிறது. இதற்காக, அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள, 60 அடி நீள குண்டம் அமைக்கப்படுகிறது. விழாவையொட்டி இன்று மாலை, 6 மணிக்கு மாவிளக்கு தோரணம், இரவு, 7 மணிக்கு பொங்கல் நடக்கிறது. இரவு, 9 மணிக்கு மேல், கோவில் ஆகமவிதிப்படி, கற்பூரம் மூலம், குண்டத்துக்கு நெருப்பு மூட்டப்படும். கடந்த ஆண்டு, 30 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர். இந்த ஆண்டு, எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஈரோடு மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் தீ மிதிக்க வருகின்றனர்.
குண்டம் இறங்க வசதியாக, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே, மூங்கிலில் தடுப்புகள் அமைத்து, வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூச்சாட்டுதல் தொடங்கியது முதல் விரதம் இருக்கும் பக்தர்கள், நேற்று முதலே, இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பெண்கள் வரிசையில் கோபி மேட்டுவலவை சேர்ந்த மல்லிகா முதலில் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் வரிசையில் திருச்சி ரமேஷ் இடம் பிடித்துள்ளார். நாளை அதிகாலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை, வாக்கு கேட்கும் நிகழ்ச்சிக்கு பின், தலைமை பூசாரி லோகநாதன் முதலில் குண்டம் இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். தீ மிதி விழாவையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
உடை கட்டுப்பாடு: ஆண்கள் வேட்டி அல்லது பேண்ட் அணிந்து வரவேண்டும். லுங்கி, அரைக்கால் டிராயர் அணிந்து வரக்கூடாது. பெண்கள் சேலை, பாவாடை தாவணி அணிந்து வரலாம். சுடிதார் அணிந்து வருவோர், கண்டிப்பாக ஷால் அணிந்திருக்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ், அரைக்கால் பாவடை அணிந்து வரக்கூடாது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.