நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த சி.என்.பாளையத்தில் புகழ் பெற்ற புஷ்பகிரி மலையாண்டவர் என்கிற மலைப்பிள்ளையார் கோவிலில் நேற்று 17ம் தேதி காணும்பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், காளியம்மன், ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவாரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விநாயகர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், புஷ்ப பிரபையில் வள்ளி தேவசேனா சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று 18ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். மாங்காதோப்பு திருவிழா: பண்ருட்டி அடுத்த மணம் தவிழ்ந்தபுத்துார் சக்தி விநாயகர் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று நடந்த மங்காதோப்பு திருவிழாவில், காலை 10:00 மணிக்கு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.