சூலுார்: சூலுார் மேற்கு மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஜன., 26ம்தேதி இரவு சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. அக்னி கம்பம், 2ம்தேதி நடப்பட்டு பக்தர்கள், தினமும் கம்பம் சுற்றி ஆடினர். நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து அம்மை அழைக்கும் பூஜை நடந்தது. சிம்ம வாகனத்தில் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சப்பரம் மதியம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மகாமுனி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.