கும்பகோணம் மகாமகத்தை ஒட்டி திருமால் ஐந்து கோயில்களிலிருந்து காவிரிக்கரைக்கு தீர்த்தவாரிக்கு செல்வார். இதில்முதலிடம் வகிப்பது சாரங்கபாணி சுவாமி கோயில். இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே சொர்க்கம்தான். எனவே இங்கு சொர்க்கவாசல் கிடையாது.
தல வரலாறு: ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் திருவரங்கப் பெருமானை தனது பிரணவாஹார விமானத்திலிருந்து வைதீக விமானமாக பிரிந்து இங்கும் மற்றொரு உருவாக எழுந்தருளி இருக்கிறார் என புராணங்கள் சொல்கின்றன. இன்னொரு சாரார் திருப்பதி வேங்கமுடையான் இங்கு எழுந்தருளி இருக்கிறார் என்கிறார்கள். ஸ்ரீதேவி லட்சுமியின் கோபத்திற்கு ஒருமுறை சீனிவாசன் ஆளானார். லட்சுமிக்கு பயந்ததுபோல நடித்து திருமலையிலிருந்து இங்கு வந்து ஒரு புதரில் ஒளிந்திருந்தார். இவரைக் காணாதபடியால் தாயார் வருத்தமுற்றார். வெகுகாலம் தவமிருந்தார். இதன்பிறகு வைகுண்டம் சென்ற பெருமாள் மிகப்பெரிய ரதத்தில் ஏறி கும்பகோணம் வந்து தாயாரை திருமணம் செய்துகொண்டார். எனவே இந்த கோயில் ரதவடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய சக்கரங்கள், யானைகள், குதிரைகள் ரதத்தை இழுக்கும் வகையில் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்: இந்த தேர் வடிவ கோயிலை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்பாக சந்தானகிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும். தாயார் கோமளவல்லியை வணங்கியபிறகே பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் சயன நிலையில் ஸ்ரீரங்கத் தைப்போல கண்ணயர்ந்து உள்ளார். இங்குள்ள உத்தராயண மற்றும் தட்சிணாயண வாயில்களைக் கடந்தாலே வைகுண்ட பிராப்தம் கிட்டுவதாக ஐதீகம். எனவே தனியாக சொர்க்கவாசல் கிடையாது. இந்த பெருமாள் எப்போதும் தன் கையில் சார்ங்கம் என்ற வில்லை வைத்திருக்கிறார். எனவே சார்ங்கராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் ராஜ கோபுரம் மிக உயரமானது. மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மகாலட்சுமியுடன் ஆதிசேஷ சயனத்தில் பெருமாள் எழும் நிலையில் உள்ளார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆராவமுதாழ்வார், சந்தானகோபாலன், சேனை முதலியார் ஆகியோரும் எழுந்தருளி உள்ளனர்.
இந்த கோயிலில் பாதாள சீனிவாசன் சன்னதியும், மேட்டு சீனிவாசன் தாயார்களுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கலியுக மகிமை: பெருமாளுக்கு பக்தர்கள் மீது மிகுந்த அன்பு உண்டு என்பதை கலியுகத்தில் நடந்த ஒரு சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. லட்சுமிநாராயணசாமி என்பவர் குழந்தைப்பருவம் முதல் இந்த கோயிலில்நித்திய கைங்கர்யத்தில் ஈடுபட்டார். பெருமாளுக்கு கோபுரம் கட்டினார். நிலங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை கொடுத்து உதவினார். தன்னை தந்தையாகவும், பெருமாளை மகனாகவும் கருதிக்கொண்டு ஒரு மகனுக்கு தந்தை செய்யும் கடமை போல எல்லாவற்றையும் செய்தார். அவர் பரமபதம் அடைந்தவுடன் உற்றார், உறவினர் யாரும் இல்லாததால் ஊராரே ஈமக்கிரியை செய்தார்கள். மறுநாள் காலையில் கோயிலை திறந்துபார்த்தபோது பெருமாள் ஈர வேஷ்டியுடனும், மாற்றியுள்ள பூணுõலுடனும் தர்ப்பங்களுடனும் சம்ஸ்காரம் செய்யும் கோலத்துடன் காட்சியளித்தார். அதாவது பெருமாளே இவருக்கு ஈமக்கிரியை செய்து வைத்துள்ளார். அந்த அளவுக்கு கருணைக்கடலாக விளங்கியவர் சாரங்கபாணி.
திருவிழாக்கள்: சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகம் தெப்பம், வைகுண்டஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும். காலை 7 முதல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
இருப்பிடம்: கும்பகோணம் நகரின் நடுநாயகமாக பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. துõரத்தில் இந்த கோயில்உள்ளது.