பதிவு செய்த நாள்
11
பிப்
2016
06:02
ராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோரை மட்டுமே அனேகமாக ராமர் கோயில்களில் காணமுடியும். அயோத்தியில்தான் ராமனின் தம்பிகளான லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகிய அனைவரையும் ஒருசேர காணமுடியும். அயோத்திக்கு செல்வது அனைவராலும் இயலாத காரியம் என்பதால் கும்பகோணம் வந்தாலே தம்பியருடன் கூடிய ராமனை தரிசித்துவரமுடியும்.
தல வரலாறு: அயோத்தியில் தன் தம்பியருடன் பட்டாபிஷேகத்தன்று ராமபிரான் கூடிக்களித்தார். வடக்கில் இருப்பவர்களுக்கே அவரது அருள் தரிசனம் கிடைக்கும். தென்னவர்களுக்கு எப்படி இதை காணமுடியும் என்ற ஆதங்கம் பக்தர்களுக்கு இருந்தது. பக்தர்களின் இவ்வேண்டுகோளைஏற்ற ராமபிரான் தென்னகத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படும் மகாமக குளம் இருக்கும் கும்பகோணத்தில் தம்பியருடன் குடிகொள்வதாக வாக்களித்தார். அதன்படி இந்த தலத்தில் பட்டாபிராமன் என்ற பெயருடன் சீதா தாயாருடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்து அருள்பாலித்தார். அவரை வணங்கும் நிலையில் சத்ருக்கனர், லட்சுமணர், பரதாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோர் அருகில் அமர்ந்தனர். ராமனும், சீதையும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர்.
சிறப்பம்சம்: ஒரே ஆசனத்தில்அமர்ந்த ராமனையும், சீதையையும் இங்கு மட்டுமே காண இயலும். தமிழகத்திலோ, பிற மாநில கோயில்களிலோ ஒரே ஆசனத்தில்அமர்ந்த ராமன் சீதையை தரிசிப்பது அபூர்வமே. ராமனின் இடதுபுறம் சத்ருக்கனனும், வலதுபுறம் பரதன் மற்றும் அனுமானும் அமர்ந்துள்ளனர். இதுதவிர, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சன்னதியும் உள்ளது. கோஷ்டத்தில் வராக சுவாமி, விநாயகர் ஆகியோர் அமர்ந்துள்ளனர். கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள சுவர்களில் ராமாயணத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ள காட்சிகள் பழங்கால மூலிகை வர்ணங்களால் தீட்டப்பட்டுள்ளது. உலகின் மிகஅரிய கோயில்களில் இதுவும் ஒன்று. 1620ம் ஆண்டு தஞ்சையை தலைநகராக கொண்டுஆட்சி நடத்திய ரகுநாத நாயக்கரால் இந்த கோயில் கட்டப்பட்டது. முன் மண்டபத்தில் உள்ள துõண்களில் திருமாலின் பல அவதாரங்களை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன.
வீணை மீட்டும் ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயர் வீணையுடனும், ராமாயண பாராயணத்துடனும் காட்சி தருகிறார். வீணையுடன் கூடிய ஆஞ்சநேயரை இங்கு மட்டுமே காண இயலும். பரதன் குடை பிடிக்கும் நிலையிலும், சத்ருக்கனர் சாமரம் வீசவும், லட்சுமணன் கோதண்டத்தை தாங்கி பாதுகாக்கும் நிலையிலும் காட்சி தருகின்றனர்.
திருவிழா: மகாமகத்தன்று ராமனும், சீதையும் காவிரிக்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவர். அந்த தினத்தில் அவரை வணங்கினால் தீராத பாவங்கள் தீர்ந்துவிடும். ராமநவமி உள்ளிட்ட அனைத்துவிழாக்களும் இங்கு நடக்கும்.
இருப்பிடம்: கும்பகோணம் நகரின் மத்தியில் பெரிய கடைவீதியின் தென்கோடியில் அமைந்துள்ளது.