குழந்தைகள் சரிவர படிக்காவிட்டாலோ, வாலிப வயதுக்கு வந்த பிறகும் வேலைக்கு செல்லாவிட்டாலோ மாடு மேய்க்கப்போ என திட்டுவது வழக்கம். மாடு மேய்ப்பதை ஏதோ கேவலமான பணி என்பதுபோல நம்மவர்கள் உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே, மாடு மேய்க்கும் தொழிலை செய்தவர் என்பதை மறந்து விடக்கூடாது. இதை நினைவுபடுத்துவதற்காகத்தானோ என்னவோ கும்பகோணத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் மாடு மேய்க்கும் நிலையில் கண்ணன் காட்சி தருகிறார். கோ மேய்ப்பவன் ராஜா ஆவான் என்பதை நிரூபிக்கும் வகையில். ராஜகோபாலன் என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்த கண்ணன் தன் நண்பர்களுடன் மாடு மேய்க்கும் பணியை செய்துவந்தான். அவனது புல்லாங்குழல் ஓசைக்கு மாடுகள் அனைத்தும் மயங்கி நிற்கும். இந்த மாடுகளை, மக்களாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்ணனுக்கு, நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே அவரது மாடு மேய்க்கும் பணி அமைந்தது. கோகுலத்து வீடுகளில் உள்ள வெண்ணெயை திருடி தானும் உண்டு, தன் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வான் கண்ணன். இந்தச் செயலை சாதாரண திருட்டுகளோடு ஒப்பிட்டு, திருடுவதை நியாயப்படுத்தக்கூடாது. பொருள் அதிகமாக வைத்திருப்போர் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இறைவனே அதை செய்வார் என்பதே இதன் தாத்பர்யம்.
சிறப்பம்சம்: இங்கு மாடு மேய்க்கும் அரிய கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். அவரது புல்லாங்குழல் இசைக்கு மயங்கிய பசு அவரது பின்னால் நிற்கிறது. தாயார் செங்கமலவல்லி தனி சன்னதியில் அமர்ந்திருக்கிறார். ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன், உற்சவராக எழுந்தருளி உள்ளார். செங்கமல தாயாரின் உற்சவர் சிலையும் உள்ளது. சந்தானகிருஷ்ணனும் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல மைந்தன் அமைவான். ராஜகோபால சுவாமியை சேவித்தால் எப்பேர்ப்பட்ட பீடையும் நீங்கிவிடும்.
விழாக்கள்: மகாமகத்தை ஒட்டி ராஜகோபாலசுவாமி தாயாருடன் காவிரிக்கரைக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். ஒவ்வொரு மகாமகத்தை ஒட்டியும் இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். சப்த நதிகளுக்கு இந்த கோபாலன் அருள்பாலித்ததாக நம்பிக்கை. எனவே மகாமகத்தன்று இவரை அவசியம் வழிபட வேண்டும்.
இருப்பிடம்: கும்பகோணம் பெரிய பஜார் தெருவில் இந்த கோயில்அமைந்துள்ளது.
மேலும்
கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016
5 பெருமாள் கோயில்கள் »