மகாமக கோயில்கள் பதினாறையும் தரிசித்து மகாமக குளத்திலும், பொற்றாமரை குளத்திலும், காவிரியிலும் நீராடி தீர்த்தம் பெற்று அனைத்து பாவங்களையும் கழுவி மிகப் பெரிய புண்ணியத்தை பெற்று விட்டோம். நம்மை யாராலும் அசைக்க முடியாது என எண்ணி விடாதீர்கள். ஏனெனில், மகாமக தீர்த்தத்தில் ஆடிய பலன் உங்களுக்கல்ல. சக்கரபாணி தெய்வத்திற்கு உரியது. இந்த பலன்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் சக்கரபாணி கோயில். வாசகர்களே! மகாமகத்தின் கடைசி கோயிலான சக்கரபாணி கோயிலுக்குள் சென்று யாத்திரையை நிறைவு செய்து கொள்வோமா?
தல வரலாறு: ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்கபாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்துஅமர்ந்தது. மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் ஸ்ரீசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். இந்த சக்கரம் சூரியனைவிட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான். தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான். உடனே சக்கரம் அவனது அனைத்து ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிக்கொண்டது. சூரியன் ஒளியற்றவனாகவும், பலமற்றவனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான். வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும், அக்னி மயமான கேசத்துடனும் ஸ்ரீ சக்கரராஜன் அருட்காட்சி தந்தார். சூரியனுக்கு ஒளி கிடைத்தது. இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியன்.
சிறப்பம்சம்: காவிரியில் ஸ்ரீ சக்கரம் தோன்றிய இடத்தை இப்போதும் சக்கரதீர்த்தம் என்றும், சக்கர படித்துறை என்றும் அழைக்கிறார்கள். சூரியன் இத்தலத்து மூர்த்தியிடம் சரணாகதி அடைந்ததால் நவகோள்களால் வரும் அனைத்து துன்பங்களும் நீங்கும். ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, ராகு தசை, கேது தசை ஆகியவற்றால் அல்லல்படுபவர்கள் சக்கரராஜனை வணங்கி துன்பம் நீங்கப்பெறலாம். இக்கோயிலை பக்தியுடன் பிரதட்சணம் செய்தால் திருமணபாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி இருப்பதால் பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அக்னிபகவான் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்தால் மிகுந்த நலன் தரும். கோயிலுக்குள் உள்ள அமிர்த புஷ்கரணி தீர்த்தம் காசியைவிட மகிமை கூடியது. சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரராஜன் அருள்புரிகிறார். சக்கரபாணி சன்னதியின் வடபுறம் விஜயவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இவர்களைத்தவிர தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோரும் காட்சியளிக்கின்றனர். மகாமக புண்ணியம் அனைத்தையும் சக்கரத்தாழ்வாரிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். சூரியன் தன்னை பெரிதாக கருதி அழிந்துபோனதுபோல, புண்ணியம் பெற்ற நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வத்துடன் கும்பகோணத்தைவிட்டு வெளியேறக்கூடாது. அனைத்தும் சக்கரராஜனுக்குள் அடக்கம் என்பதை உணர்ந்து அவரிடமே புண்ணியத்தை ஒப்படைத்துவிட வேண்டும். அவர் தேவையான நேரத்தில் தேவையானதை தந்து அருள்புரிவார்.