பதிவு செய்த நாள்
13
பிப்
2016
01:02
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மண்ணுக்குள் புதையுண்ட சர்வரோக நிவாரண தீர்த்தம் 49 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமர் நீராடிய இந்த தீர்த்தம் புதுப்பிக்கப்பட உள்ளது.இலங்கை மன்னர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்த ஸ்ரீராமருக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. சிவபெருமான் தலையில் இருந்து வரும் கங்கை நீரில் உருவான ஜடாயு தீர்த்தம், அருகே (100 மீட்டர் துாரம்) தென்கிழக்கில் உள்ள சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் நீராடியதும் பாவம், நோய் நீங்கியதாக ராமாயண வரலாறு கூறுகிறது.சர்வரோக நிவாரண தீர்த்தத்தை பக்தர்கள், மூலிகை தீர்த்தம் என்றும் அழைத்தனர். மண்ணுக்குள் புதையுண்ட சர்வரோக நிவாரண தீர்த்தம், 49 ஆண்டுகளுக்கு பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1964ல் தனுஷ்கோடி புயலில் இந்த தீர்த்தம் மண்ணுக்குள் புதையுண்டது. இருப்பினும் 1967ம் ஆண்டு வரை உள்ளுர் மக்கள் நீராடி வந்ததாகவும், நாளடைவில் மணல் மேவி புதர் சூழ்ந்தது.இந்நிலையில் மகாமகத்தை முன்னிட்டு ஜடாமகுட கோயில் பகுதிகளில் பசுமை பாதுகாப்புத்திட்ட நிர்வாகிகள், உழவாரப் பணியில் ஈடு பட்டனர். இதில், சர்வரோக நிவாரண தீர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மண், புதர்கள் அகற்றப்பட்டு தீர்த்த குளத்தை சீரமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.பசுமை பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி கூறியதாவது: தீர்த்த தலமான ராமேஸ்வரம் தீவில் கோயிலுக்கு வெளியில் 64 தீர்த்த குளங்கள் உள்ளன. இதில் ஸ்ரீராமர் நீராடிய சர்வ ரோக நிவாரண தீர்த்தத்தை கண்டுபிடித்தது பெருமையாக உள்ளது. பிப்., 25க்கு பின் இதை துார்வாரி, குளத்தை சுற்றி புதிய கட்டுமானம், பக்தர்கள் செல்ல பாதை அமைக்கப்படும், என்றார்.