பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மக தீர்த்தவாரியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, கோவில் இணை ஆணையருக்கு, அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அய்யங்குளத்தில், கடந்த, 8ம் தேதி நடந்த
மகோதய தீர்த்தவாரியில், கூட்ட நெரிசலில் சிக்கி, குளத்தில் மூழ்கி, நான்கு பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள், இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கோவில் இணை
ஆணையர் செந்தில்வேலவன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, அவர் மீது துறை
ரீதியான விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.
இந்நிலையில், வரும், 22ம் தேதி அண்ணாமலையார் கோவில் மாசி மக தீர்த்தவாரி, பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி,
அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் வாசுதேவனுக்கு, ஒரு சுற்றறிக்கை அனுப்பி
உள்ளார். அதில், தீர்த்தவாரி நடக்கும் இடத்தில், பக்தர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும்
வகையில், ஆழம் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். கண்டிப்பாக,
நீர்மூழ்கி வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கூட்ட
நெரிசலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தீர்த்தவாரி நடக்கும் இடத்தில், கூடுதல்
பணியாளர்களை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர
வேண்டும். பாதுகாப்புக்கு கூடுதல் போலீசாரை அமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.