பதிவு செய்த நாள்
22
பிப்
2016
06:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், மகாமகம் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, இன்று கோலாகலமாக நடக்கிறது. இன்று மகாமகத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே நீராட பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. புனித நீராட, 20 லட்சம் பேர் வருவர் என்பதால், நகரம் முழுவதும், 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணத்தில், பிப்., 13ல் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இதுவரை, 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடக்கிறது; இதில், 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (பிப்.,22ல்) அதிகாலை மகாமக குளத்தில் இலங்கை எம்.பி, சீனிதம்பி யோகஸ்வரன், இந்து மக்கள்கட்சி மாநிலத்தலைவர் அர்ஜீன்சம்பத் ஆகியோர் மகாமககுளத்தில் புனித நீராடினர்கள். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய இலங்கை எம்.பி, சீனிதம்பி யோகஸ்வரன், இலங்கையில் உள்ள தமிழ்மக்களுக்கு முழுமையாக அரசியல் தீர்வு ஏற்பட வேண்டி பிரத்தனை செய்துவிட்டு மகாமகத்தில் நீராடியுள்ளேன். மேலும், இதுவே எனது முதல் மகாமகம் இவ்வாறு தெரிவித்தார். இதற்குமுன்னதாக காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாமக குளத்தில் புனித நீராடினர்.