பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
திருப்பூர் :பங்குனி உத்திர விழாவை ஒட்டி, திருப்பூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கொங்கணகிரி முருகன் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்கள் மூலம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 5:30 மணிக்கு, வள்ளி, தேவசேனாவுடன் சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி னார்.வெள்ளித்தேரில் எழுந்தருளிய கந்த பெருமான், திருவீதியுலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர், வாலிபாளையம், வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் தேவியருடன், முருகப்பெருமான் எழுந்தருளி, அருள்பாலித்தார். சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.