பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
12:04
கீழக்கரை: உத்தரகோசமங்கை கோவிந்தன் கோயிலுக்கு செல்ல வசதியாக கண்மாய் மீது பாலம் அமைக்கவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர். உத்தரகோசமங்கை கண்மாயின் மேல் கரையில் பழமைவாய்ந்த கோவிந்தன் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் நாட்களில் வழிபாடு நடக்கிறது. சித்திரை, புரட்டாசி, மார்கழி, தை மாதங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். கண்மாயில் நீர்நிரம்பினால் கோயிலுக்கு செல்வதில் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் விதமாக கண்மாய்க்குள் பாலம் அமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பக்தர்கள் கணேசன், முருகானந்தம் கூறுகையில்,“நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவிந்தன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். கண்மாயில் நீர்நிரம்பினால் கோயிலுக்கு செல்ல சிரமமாக உள்ளது. 50 மீ., நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரத்தில் நடைபாலம் அமைத்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்,” என்றனர். ஊராட்சி தலைவர் நாகராஜன் கூறுகையில்,“ தேர்தலுக்கு பின் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.