பதிவு செய்த நாள்
12
மே
2016
11:05
டேராடூன்: சார்தாம் யாத்திரை எனப்படும், இமயமலையில் உள்ள, நான்கு இந்து புனித தலங்களின் வழிபாடு, கேதார்நாத்தில் மே 9ம் தேதியும், பத்ரிநாத்தில் மே 11ம் தேதியும் துவங்கியது.
உத்தரகண்ட் மாநிலத்தில், கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன, பிரசித்தி பெற்ற இந்த கோவில்கள் அமைந்துள்ள பகுதி, ஆண்டின் ஆறு மாதங்கள் பனியால் சூழப்பட்டிருக்கும். இதனால், அந்த மாதங்களில், இந்த நான்கு கோவில்களும் நடை சாத்தப்பட்டிருக்கும். கோடை துவங்கியதை அடுத்து, கடந்த ஞாயிறன்று கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்பட்டன. கடந்த திங்களன்று கேதார்நாத் சிவன் கோவில் திறக்கப்பட்டது. நேற்று, பத்ரிநாத் விஷ்ணு கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, நான்கு கோவில்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக தற்போது தயாராக உள்ளன. இந்த தகவலை நேற்று முறைப்படி உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்தது.