Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் ... இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம் இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » இரண்டாம் திருமறை
இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2011
03:09

183. மயிலாப்பூர் (அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை)

திருச்சிற்றம்பலம்

502. மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் ஒருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் புன்னை விளங்கும் அழகிய சோலை சூழ்ந்த மயிலையில் விருப்பம் கொண்டு கபாலீச்சரத்தில் கோயில் கொண்டு அமர்ந்தவன் ஈசன். அப் பெருமானிடம் அன்பு கொண்டு ஈசன் இரண்டறக் கலந்த அன்பின் பண்பு தோன்ற உருத்திரர் முதலான பலகணங்களைச் சார்ந்தவர்களுக்கு அமுது செய்வித்து ஆற்றுகின்ற சிறப்பினைக் காணாது பூம்பாவையே ! போவாயோ ! போக மாட்டாய். எழுந்து வருவாயாக என்பது குறிப்பு.

503. மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியே பூம்பாவாய்.

தெளிவுரை : மை திகழும் ஒளி மிக்க கண்களை உடைய மகளிர் விளங்கும் சிறப்பின் மிக்க மயிலையில், கையால் எடுத்து அணியப் பயந்த திருவெண்ணீற்றினனாய் அருவப்பொருளாய் மேவும் ஈசன், கபாலீச்சரம் அமர்ந்த பெருமான், பூம்பாவாய் ! அருந்தவத்தைச் செய்து மேன்மை கொண்ட முனிவர்களும் மகிழ்ந்து போற்றுகின்றதாகவும் கண்டு மகிழத்தக்கதாகவும் விளங்கும் ஐப்பசி மாதத்தில் அப்பெருமானுக்கு நிகழும் திருஓண விழாவைக் காணாது போவாயோ ! போகமாட்டாய் ! எழுந்து அத்திருவிழாப் பொலிவைக் காண வருவாய் என்பது குறிப்பு.

504. வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : வளையலைக் கையில் அணிந்து மடப்பம் என்னும் விழுமிய கற்பின் வழி ஒழுகும் பண்புடைய மாதர்கள் விளங்குகின்ற சிறப்புடைய மயிலையின் கபாலீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனின் தொன்மையான கார்த்திகைத் தீபத் திருநாளில் சிறுமிகளும் மாதர்களும் விளங்குகளை வரிசையாக ஏத்திக் கொண்டாடும் திருவிழாவைக் காணாது, பூம்பாவாய் ! போவாயோ ! போகமாட்டாய் ! எழுந்து வருவாய் என்றவாறு.

505. ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : கடலலைகள் ஊர்ந்து சென்று உலவும் மயிலையில் உள்ள நெய்தல் நில மக்கள், கடலில் வாழும் பெரிய மீன்களைத் தம் கைவேல் கொண்டு தரக்கும் சேரியில், வளப்பமான பசுஞ்சோலை சூழந்த கபாலீச்சரத்தில் அமர்ந்த ஈசனார் திருநாளாகிய ஆதிரை நாள் சிறப்பினைக் காணாது, பூம்பாவாய், போவாயோ !

506. மைப்பூசுமச் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : மை திகழும் ஒளிமிக்க கண்களை உடைய மடப்பம் என்னும் விழுமிய கற்பின் வழி ஒழுகும் பண்புடைய மகளிர் விளங்குளம் மயிலையில், கையினால் பூசி அணியப்படும் திருநீற்றுத் திருமேனியனாகிய ஈசன், கபாலீச்சரத்தின்கண் அமர்ந்து விளங்குபவன். அப் பெருமானுக்கு நெய்வார்த்துக் கலந்து சோறு அளைந்து நைவேத்தியம் வழங்கும் தைப்பூச விழாவை நங்கையர்கள் கொண்டாடி மகிழந்து விளங்க, பூம்பாவாய், அதனைக் காணாது போவாயோ !

507. மடலார்ந்த தெங்கின் மிலையார்மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
கடலானேரு ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : அகன்ற மடல் கொண்ட தென்னை மரங்கள் விளங்கும் மயிலையில் சிறப்பாகப் பொலிந்து பெருவிழாவாகத் திகழ்வது மாசி மகத்தில் நிகழும் கடலோடு விழாவாகும். அத்தகைய பெருவிழா காண்பவன், கபாலீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமான் இடப வாகனத்தில் அமர்ந்து அருள் புரியும் அடிகள் ஆவர். அவர் திருவடியைப் பரவி நடனம் ஆடுதலும் காணுதலும் புரியாது, பூம்பாவாய், போவாயோ !

508. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழா கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : விழாக்கள் நாளும் பெருகி வீதிகள் தோறும் மகளிர் திருத்தொண்டாற்றித் தோரணம், கோலம் முதலான அலங்காரங்கள் புனைந்து, சிறப்புறும் மயிலையில், பெரும் ஆராவாரம் விளங்கும் வீழாக்களைக் கண்டு கபாலீச்சரத்தில் விளங்குபவன் ஈசன். தருப்பைப் புற்களால் காப்பிட்டுக் கொடியேற்றித் திருக்குகளதோறும் பலியாக, அளிந்த அமுதக் கவளம் இட்டு வேதங்கள் மந்திரமாய் ஒலிக்க, முழவும், பறையும் மற்றும் இசை எழுப்பும் ஒலிகளும் நிறைநது ஆரவாரம் செய்ய விளங்கும், பங்குனி உத்திரப் பெருவிழா காணாது, பூம்பாவாய், போவாயோ !

509. தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமி நாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : தணிந்து விளங்கும் தன்மையற்ற இராவணனுடைய தோளை நெரித்து மகிழ்ந்த ஈசன், கண்களுக்கு இனிமையாக மயிலைக் கபாலீச்சரத்தில் அமர்ந்த பெருமான் ஆவார். பண்ணின் இசைவல்ல பதினெட்டு கணத்தினர் அப்பெருமானை வாழ்த்திப்(சைவ சமய நெறி பாட்டு 17) அட்டமி நாள் விழா நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிக்காமல் பூம்பாவாய், போவாயோ !

510. நற்றா மரைமலர்மேல் நான்முகனு நாரணனும்
உற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கலாலீச் சரம்அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் உற்றுத் தேடியும் ஆங்கு உணர்தற்கு அரிய மூர்த்தியாகிய ஈசன் திருவடியை, வேதம் வல்ல அந்தணர்கள் நாளும் ஏத்தக் கபாலீச்சரத்தில் அமர்ந்திருப்பவன். அப்பெருமானுக்குப் பொன்னூஞ்சல் கொண்டு திருவிழா எடுக்கும் காட்சியைக் காணாது, பூம்பாவாய் ! போவாயோ !

511. உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் தூற்றி உரைப்பினும், அடர்த்தியான பெரிய சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரத்தில் வீற்றிருக்கும் திருக்கோலக் காட்சியைக் காணாது, பூம்பாவாய், போவாயோ ! எழுந்து வருக என்றவாறு.

512. கானமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழால்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்துள்ள ஈசனைப் போற்றிப் பூம்பாவையின் பொருட்டுச் செந்தமிழ்ப் பாட்டாக, ஞானசம்பந்தர் சொன்ன நலம் புகழ்ந்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உயர்ந்த பேறாகிய முத்திச் செல்வத்தைப் பெற்று விளங்கும் பெருந்தகையாளர்களுடன் கூடி இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

184. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

513. கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

தெளிவுரை : ஈசன், நெற்றிக் கண்ணுடையவன்; கையில் நெருப்பு ஏந்தியவன்; ஒரு பாகத்தில் உமாதேவியைக் கொண்டு விளங்குபவன்; சடையில் பிறைச் சந்திரனைச் சூடியவன்; இசைபாடும் தன்மையன். அப்பெருமான் பயிர்விளங்கி வளர்வதற்கு வளந்தரும் பரம் பொருளானவன். அவன் இடபக் கொடியுடையவனாய் வெண்காட்டில் வீற்றிருக்கும் இறைவன்.

514. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனவே தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.

தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோள் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட வெண்காட்டு நாதரின் திருத்தலத் தீர்த்தமாக விளங்கும் முக்குள நீரில் தோய்ந்து நீராடுபவர்களுக்குத் தீய வினைகள் சாராது; பேய் நாடாது; அஞ்ஞானம் நீங்கும்; புத்திரப் பேற உண்டாகும்; மற்றும் வேண்டிய வரங்களைப் பெறுவார்கள். இவற்றைக் குறித்து எவ்வகையான சந்தேகமும் இல்லை.
இது வழிபாட்டின் பயனை உணர்த்திற்று. திருத்தலத்தின் சிறப்பும் உணர்த்தவதாயிற்று தீர்த்த மகிமையும் காண்க.

515. மண்ணொடுநீர் அனல்காலாடு ஆகாய மதியிரவி
எண்ணில்வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடுஆண் பெருமையொடு சிறுசையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமாய் விரும்பினனே.

தெளிவுரை : ஈசன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய அட்ட மூர்த்தியாகியவன்; இம்மையும் மறுமையும் ஆகி, எண்திசையும் ஆனவன். அர்த்தநாரியென ஆணும் பெண்ணும் கலந்தவனாயும் பிறர் பெருமையாகவும் சிறுமையாகவும் சொல்லும் பேராளனாய் வழிபாடு செய்த வெண்காட்டை இடமாகக் கொண்டு விளங்குபவன்.

516. விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.

தெளிவுரை : திருநீலகண்டனாக விளங்கும் ஈசன் விளங்குகின்ற வெண்காட்டின மலர்ச் சோலையில், மடல் அவிழ்ந்த தாழையின் நிழலைக் கண்டு நீர் நிலையில் வாழும் கொண்டை மீன்கள், தம்மைக் கொத்திச் செல்லும் குருகுகள் என்று அஞ்சி, நடுக்கம் கொண்டு தாமரைப் பூவின் இடை சென்று ஒளிந்து கொள்ள, அதனைக் காணும், கடலிலிருந்து வெளி வந்த முத்துகள், நகைப்பது போன்று காட்சியடையது ஆகும்.

517. வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறைவென்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றானடியார் என்றடர அஞ்சுவரே.

தெளிவுரை : கடற்கரைச் சோலை சூழ்ந்த வெண்காட்டு நாதன் திருவடியை மலர் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலன் உயிரைப் போக்கிய பின்னர், காலனுடைய தூதர்கள் சிவனடியார்பால் அணுவதற்கு அஞ்சுவர்.

518. தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவனாமம் பலஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

தெளிவுரை : குளிர்ந்த சந்திரனும், கொடிய நாகமும் சடையில் தாங்கிய ஈசன், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டுள்ளவன். அப்பெருமான் உறையும் கோயில் ஈசன் திருநாமத்தை ஓதக் கேட்ட கிளிகளக மரத்தின் மீது அமர்ந்து ஓதும் பான்மையது வெண்காடு.

519. சக்கரமாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக்கு அருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கு
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறைவனே.

தெளிவுரை : சக்கரப்படையைத் திருமாலுக்கு வழங்கியவனும், சலந்தராசுரனை வதை செய்தவனும், எலும்பு மாலையை உடையவனும், தன்னை வழிபட்ட ஐராவதம் என்னும் யானைக்கு அருள் புரிந்தவனும், வெண்காடு என்னும் தலத்திற்கும் அத்தலத்தில் விளங்கும் முக்குளநீர் என்னும் தீர்ததத்திற்கும் உரியவனும் ஆகிய பெருமான் முக்கண்ணுடைய இறைவனே ஆவான்.

520. பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலைஎடுத்த
உண்மத்தன் உரநெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொயத்தபொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

தெளிவுரை : பண்போன்ற இனிய மொழியாளாகிய உமாதேவி அச்சம் கொள்ளுமாறு கயிலையைப் பெயர்த்த இராவணனுக்கு அருள்செய்த ஈசன் உறையும் கோயில், நீல மயில் ஆடவும், கடல் முழங்கி ஒலிக்கவும் பொழிலில் உள்ள வண்டுகள் இசைபாடும் வெண்காடு ஆகும்.

521. கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம்செய்யு மேதகுவெண் காட்டனென்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை யுணரோமே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், பாற்கடலில் பள்ளிகொண்டு இருக்கும் திருமாலும் ஆகிய இவர்கள், தாம் பெரியவர் என்று அறியும் நாட்டத்தால் வானத்தில் உயர்ந்த சென்றும் பாதளத்தில் தாழ்ந்து சென்றும் உணர்வதற்கு அரியவனாய் விளங்கியவன் ஈசன். அப்பெருமானை வெள்ளை யானை தவம் செய்து போற்ற அருள்புரிந்த வெண்காட்டு நாதனே, என்று தியானமே செய்து உருகி நிற்காதது என்னே ! அவ்வாறு உருகாதவர்கள் உணர்வுடையவர் ஆகமாட்டார்கள்.

522. போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டான்என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர்என்று உணருமினே.

தெளிவுரை : பௌத்தர்களும் சமணர்களும் குதர்க்கமாகப் பொருள் கூறுபவராதலால் அவர்தம் உரைகளைக் கொள்ளற்க. மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்றவர்களே ! இது கேளுங்கள். வேதத்தில் வல்ல மறையவர்கள் விரும்புகின்ற புகழ் பரவிய திருவெண்காட்டுநாதனே ! என்று ஓதுபவர்களுக்கு எவ்விதமான தீதும் இல்லை என்று உணர்வீராக.

523. தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே.

தெளிவுரை : குளிர்ச்சியான பொழில் சூழ்ந்த சண்பை நகர் எனப் பெயர் தாங்கிய சீகாழியின் கோனாய் விளங்கும் தமிழ்ஞானசம்பந்தர், வெண்பிறைச் சந்திரனைச் சென்னியில் சூடிய விகிர்தன் உறையும் வெண்காட்டைப் பண் பொலிந்த செந்தமிழ் மாலையாய்ப் பாடிய இத் திருப்பதிகத்தினை ஓதவல்லவர்கள், இம்மையில் பூவுலகம் பொலியுமாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வாழ்ந்த, வானுலகம் பொலிவுறுமாறு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

185. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

524. பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாள்தொறும்
கண்ணி னேரயலே பொலியும்
கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு
மானை எம்பெரு மான்என்று என்று உன்னும்
குறைவிலரே.

தெளிவுரை : பண்ணின் இசை போன்று இனிமையாக மொழி பயிலும் மங்கையர்கள் பலரும் பாடி ஆடி எழுப்புகின்ற ஓசையானது, நாள்தொறும் பொலிந்து விளங்குகின்ற சிறப்புடையது கடல் சூழந்த காழிப்பதி. அத் திருப் பதியின்கண் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் பெருமானை, எமக்கு அருள் செய்து காக்கும் பிரான் என்று எல்லாக் காலங்களிலும் எண்ணி மகிழ்கின்ற அண்ணலின் அடியவர்கள், அருள் நிரம்ப பெற்று, குறைவற்றவர்களாகத் திகழ்வார்கள்.

525. மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்க வங்கமும்
கண்ட லம்புடைசூழ் வயல்சேர்
கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கொளி தாமநுதல்
விதியாமே.

தெளிவுரை : கடல் அலைகள் மோதி எறிய, சங்குகள் அலைகள் வாயிலாகத் தாழைகள் சூழ்ந்த வயல்களில் சேரும் பதிவளம் பெருகும் காழியாகும். அப் பதியின்கண், வண்டுகள் ஒலி செய்யக் கொன்றை மாலை அணிந்த ஈசன் திருவடியை, வாழ்த்தி ஏத்திய மாந்தர்தம் வினையாயின் நீங்குவது எளிதாகும். அப்பதியின் தெய்வத் தன்மை ஆங்கு எல்லாக் காலங்களிலும் நல்விதியைப் பெருகச் செய்யும்.

526. நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்றும் ஏத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்கும்
கடற் காழித்
தோடு லாவிய காது ளார்கரி
சங்கவெண்குழை யானென்று என்றுஉன்னும்
வேடங் கொண்டவர்கள் வினை
நீங்கலுற்றாரே.

தெளிவுரை : நாடெல்லாம் புகழ் அடைந்து பெருகவும் நல்ல தன்மை உடையவர்களாய் நல்வினையால் ஏத்தி வணங்கப் பொழில் சூழும் காடுகளில் உள்ள மலர்கள் தேன் விளங்கத் திகழவும் விளக்குவது கடல் சூழ்ந்த காழிப் பதி. அப் பதியில் வீற்றிருக்கும் பெருமான் தோடும், சங்க வெண்குழையும் அணிந்திருப்பவன். எல்லாக் காலத்தில் மனம் ஒன்றி அப் பெருமானை நினைப்பவர்கள், திருநீறு அணிந்த கோலத்தினராய் விளங்குவார்கள். அவர்கள் வினை நீங்கியவர் ஆவார்கள்.

527. மையி னார்பொயில் சூல நீழலில்
வாசமார்மது மல்க நாடொறும்
கையின் ஆர்மலர் கொண்டெழுவார்
கலிக்காழி
ஐய னேஅர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் லுயர்ந்தா ரின்
னுள்ளாரே.

தெளிவுரை : பசுமையான பொழிலில் நறுமணமும் தேனும் பெருகி விளங்கும் மலர்களை நாள்தோறும் பறித்துப் பக்தியுடன் விளங்குகின்ற காழிப்பதியில், ஐயனே ! அரனே ! என்று கசிந்துருகி ஈசன் திருநாமத்தை ஓதி, விதிப்படி நினைத்து வழிபடுபவர்கள், பிறவி எடுத்ததன் பயனாய் உய்தி பெறும் நெறியில் உயர்ந்து விளங்குபவர்களுடன் இருப்பவர் ஆவர்.

528. மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்த வந்தொளிர் நித்திலம் விழக்
கலிக டிந்தகையார் மருவும்
கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியும் தீவினைநோ யவைமேவு
வார்வீடே.

தெளிவுரை : பெருகிச் சேர்ந்து வீசும் கடுமையான கடல் அலைகள் வந்து முத்துக்களைக் குவிக்கத் துன்பம் தரும் வறுமையை மாற்றி, வளம் திகழும் சிறப்புடையது காழிப்பதி. அப்பதியில் வீற்றிருக்கும் பெருமான், வலிமை மிக்க காலனை வீழ்த்தி மாய்த்து, மார்க்கண்டேயரின் உயிரைக் காத்தவன். அவ் இறைவனை வாழ்த்தடத் தீவினை அகலும்; முத்திப்பேறு வாய்க்கும்.

529. மற்றுமிவ் உலகத்து ளோர்களும் வானு
ளோர்களும் வந்து வைகலும்
கற்றி சிந்தையராய்க் கருதும்
கலிக்காழி
நெற்றி மேலமர் குண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடு வார்வினை
செற்றமாந் தரெனத் தெளிமின்கள்
சிந்தையுளே.

தெளிவுரை : இவ் உலகத்தில் உள்ளவர்களும் மற்றும் வானுலகத்திவர்களும் வந்து நாள்தோறும் ஈசனை வழிபடும் சிந்தையுடையவராகச் செய்வது கலிக்காழி என்னும் பதி. அப் பதியில் விளங்கும் முக்கண்ணனைப் போற்றி இசைபாடுகின்றவர்கள் வினைமாயும். இதனை நன்கு தேர்ந்து மனத்திற் கொள்ளுமின் என்பதாம்.

530. தான லம்புரை வேதிய ரொடு
தக்க மாதவர் தாம்தொ ழப்பயில்
கானலின் விரைசேர் விம்மும்
கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனேயென்று
ஆனலங் கொடுப்பார் அருள்வேந்தர்
ஆவாரே.

தெளிவுரை : நன்நலமும் பெருமையும் திகழும் வேதம் வல்ல அந்தணர்கள் மற்றும் தவவேந்தர்கள் தொழக்கானலின் நன்மணம் சேர்ந்து அழகுடன் விளங்குவது காழிப்பதி. அப் பதியில் விளங்கும் பெருமானுக்கு, ஊனுள் உயிராக விளங்குபவன் ஈசனே என்னும் கருத்தில் தேர்ந்து, பசுக்களிலிருந்து பால், தயிர் முதலான பஞ்சகவ்வியங்களைப் பூசனைக்குத் தருபவர்கள் அருளின் வேந்தராய்த் திகழ்வார்கள்.

531. மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வயல் ஆர வைகலும்
கத்து வார்கடல் சென்றுலவும்
கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்ததுகந் தாயு னகழல்
பத்த ராய்ப் பரவும் பயனீங்கு
நல்காயே.

தெளிவுரை : கரிய வண்டுகள், சோலைகளிலும், கரும்பாலைகளிலும் சாலிசேர் வயல்களிலும் பொருந்தி, யாண்டும் ஒலி எழும் கடலின் ஒலியுடன் சேர்ந்து விளங்குவது, காழிப்பதியாகும். அப் பதியில் விளங்கும் அரனே ! அரக்கனாகிய இராவணனை அடர்த்து உகந்த பெருமானே ! பக்தராக உனது திருவடியைப் பரவிப் போற்றவும் இப்பிறவியில் அருள் புரிவீராக.

532. பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ்
கலிக்காழித்
திருவி னாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியான் எனஏத்துதல்
இன்பமே.

தெளிவுரை : பருமையான மரங்களும், தென்னை, வாழை மரங்களும் மருங்கு இருக்க, மந்திகள் கனிகளை உண்ணவும் வரால் மீன்கள் வயல்களில் சூழ்ந்து விளங்குவது காழிப்பதி. திருமகளின் நாயகனாகிய திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் காண்பதற்கு அரியவனாகிய பெருமானே! என்று அவ் இறைவனை ஏத்தி வழிபடுதல் இன்பம் ஆகும்.

533. பிண்டம் உண்டுழல் வார்களும் பிரி
யாது வண்துகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகார்
கலிக் காழித்
தொண்டை வாயுமை யோடும் கூடிய
வேட னேசுட லைப்பொடி யணி
அண்ட வாணன்என் பார்க்கு அடையா
அல்லல் தானே.

தெளிவுரை : நீண்ட துகிலையுடைய சாக்கியர்களும், சமணர்களும் கண்டு வணங்காதவராய்ப் புறத்தே இருக்க, அழகிய தன்மையும் விழாக்களின் ஆராவாரம் முழங்குகின்ற சிறப்பும் உடைய காழிப் பதியில், ஈசனார்க்குத் தொண்டு செய்து மகிழும் பாங்குடைய உமாதேவியோடு வேடுவனாய்த் திருக்கோலம் தாங்கியும், சுடலைப் பொடியணிந்தும் விளங்கும் அண்டர் நாயகனே ! என்று துதிப்பவர்களுக்கு அல்லல் இல்லை.

534.  பெயரெனும்இவை பன்னி ரண்டினும்
உண்டெனப் பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வழல்சூழ்ந் தழகார்
கலிக்காழி
நயன டன்கழல் ஏத்த வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்த மிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து
உயர்ந்தாரே.

தெளிவுரை : பெயர் என்று பன்னிரண்டு உண்டு எனும் சிறப்பினைப் பெற்ற ஊர், கயல் உலவும் வயல் சூழும் அழகிய, அரவாரமும் எழுச்சியும் மிக்க காழிப்பதியாகும். அப்பதியில் மேவும் அருள் வழங்கும் திருநடம் புரியும் ஈசன் கழலை ஏத்தி வாழத்திய ஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பதிகத்தை, உயர்ந்த சொல்லாகக் கொண்டு மொழிபவர்கள், உலகத்தில் உயர்ந்த பெருமக்களாகத் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

186. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

535. குன்றவார்சிலை நாணராவரி வாளிகூர்எரி
காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடையேறும்
வேதியனே
தென்றலார்மணி மாடமாளிகை சூளிகைக்கெதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : இடப வாகனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் வேதநாயகனே ! தென்றல் சேர்ந்த இனிமையான காற்று மாடமாளிகையின்மேல் தளத்தில் தவழ்ந்து மேவ, எதிர்புறத்தில் நீண்டு வளர்ந்த பனைமரத்தின் மீது அன்றில் பறவை சார்ந்து அணைந்து மகிழும் இயல்புடைய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் இறைவனே ! மேருமலையை நெடிய வில்லாகவும், வாசுகி என்னும் அரவத்தை நாண் ஆகவும், அக்கினியும், வாயுவும் கூர்மையாக விளங்கும் அம்பாகவும் கொண்டு, மும்மதில்களை வென்று எரித்தது எவ்வாறு ? இத் திருப்பாட்டு ஈசன், முப்புரத்தை எரித்த சிறப்பினை வியந்து போற்றியது ஆகும்.

536. பரவி வானவர் தானவர்பல ருங்கலங்கிட
வந்தகார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல்
விண்ணவனே
கரவின்மாமணி பொன் கொழித்திழி
சந்துகாரகில் தந்துபம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : கரத்தல் இல்லாத சிறந்த மணிகளும், பொன்னும் கொழித்து சந்தனம், கரிய அகில் ஆகியவற்றையும் தந்த, பம்பை என்னும் ஆற்றிலிருந்து நீர் பெருகி வந்து சேரும் ஆமாத்தூரில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவர்களும், அசுரர்களும் மற்றும் பலரும் கலங்குமாறு, பரவி வந்த கொடிய நஞ்சினைத் தேவாதி தேவனே ! யாவரும் வெருவி அஞ்சுமாறு உட்கொண்டு, கண்டத்தில் நிறுத்திய அருள் என் கொல் !

537. நீண்டவார்சடை தாழநேரிழை பாடநீறுமெய்
பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடு
மாண்பது என்
பூண்டகேழல் மருப்பராவிரி கொன்றைவாள்வரி
ஆமைபூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : பன்றியின் கொம்பும், பாம்பும், விரிந்த கொன்றை மலரும், ஆமையின் ஓடும் ஆபரணமாகப் பூண்டு ஆட்கொள்ளும் நாயகனே ! ஆமாத்தூரில் விளங்கும் அழகிய நாதனே ! நீண்ட சடை முடி தாழ்ந்து விளங்கவும், உமாதேவியார் பாடவும், நீவிர் திருநீற்றினை மெய்யில் பூசி, மாலும் அயனும் மாண்ட சுடுகாட்டில் நடம் புரியும் மாண்புதான் என்கொல் !

538. சேலினேரவு கண்ணிவெண்ணகை மான்விழித்திரு
மாதைப் பாகம் வைத்து
ஏலமாதவ நீமுயல்கின்ற
வேடமிதென்
பாலினேர்மொழி மங்கைமார்நட மாடியின்னிசை
பாடநீள்பதி
ஆலைசூழ்கழனி ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : பால்போன்ற இனிமையான மொழி பேசும் மங்கையர்கள் நடனம் ஆடியும் இனிமையான பாடல்களைப் பாடியும் விளங்குகின்ற பதியானது, கரும்பாலை சூழ்ந்த கழனிகளை யுடைய ஆமாத்தூர் ஆகும். அப்பதியில் மேவும் ஈசனே ! சேல் போன்ற கண்ணும், வெண்மையான பற்களும். மான் விழியும் உடைய உமா தேவியாரைப் பாகமாகக் கொண்டு, பொருந்திய தவத்தை யுடையவராய்த் திருக்கோலம் தாங்கியது என் கொல் !

539. தொண்டர்வந்து வணங்கிமாமலர் தூவிநின்கழல்
ஏத்துவார் அவர்
உண்டியால் விருந்த இரங்காதது
என்னைகொலாம்
வண்டலார்கழ னிக்கலந்து மலர்ந்த தாமரை
மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : வண்டல் மண் பொருந்திய கழனிகளில் கலந்த மலர்ந்த தாமரை போல் அழகிய முகத்தினை உடைய மாதர்கள் தொழுது போற்றும் ஆமாத்தூர் வீற்றிருக்கும் நாதனே ! தேவர்கள் தொழுதேத்தும் பெருமானே ! திருத்தொண்டர்கள் வந்து வணங்கி மாமலர் தூவி நின் கழலைச் சார்ந்திருக்க அவர்கள் பசிப் பிணியுற்று வருந்திய நிலையில் இரக்கம் கொண்டு அருள் புரியாதது என்கொல் !

540.ஓதியாரணம் ஆயநுண்பொருள் அன்றுநால்வர்முன்
கேட்க நன்னெறி
நீதியாலநிழல் உரைக்கின்ற
நீர்மையது  என்
சோதியே சுடரே சுரும்பமர் கொன்றையாய்திரு
நின்றியூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : சோதியாய் ஒளிர்பவனே ! சுடராய் விளங்கபவனே ! வண்டுகள் அமரும் கொன்றை மலர் சூடி பெருமானே ! திருநின்றியூர் என்னும் திருத்தலத்தில் உறையும் ஆதியே ! அரனே ! ஆமாத்தூரில் வீற்றிருக்கும் பெருமானே ! ஐம்புலன்கள் மேவி அடர்த்துத் துன்பத்தில் சேர்க்கும் தன்மை உடைத்தமையால், அது நிலையாத வண்ணம், உறுதியுடன் வென்று விளங்கும் நீவிர், ஒரு பாகத்தில் மாது விளங்குமாறு வரித்து விரும்பி இருத்தல் எனக்கொல் !

541. செய்யதாமரை மேலிருந்தவ னோடுமாலடி
தேடநீள்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற
வெற்றிமை யென்
தையாலாளொடு பிச்சைக்கிச்சை தயங்குதோலரை
யார்த்த டேங்கொண்டு
ஐயம் ஏற்றுகந்தாய் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : உமாதேவியுடன், விளங்குகின்ற தோலை உடையாகக் கொண்டு, பிச்சை ஏற்பதற்கு விரும்பி ஆமாத்தூரில் வீற்றிருக்கும் நாதனே ! செந்தாமரை மேல் விளங்குகின்ற பிரமனும் திருமாலும், முடியும் திருப்பாத மலரடியும் முறையே தேடியும் காணுதற்கு ஒண்ணாதவனாய், ஆர்த்து எழும் பேரழலாய் ஓங்கிய வெற்றித் தன்மைதான் என்னே !

542. புத்தர்புன்சம ணாதர்பொய்ம்மொழி நூல்பிடித்தவர்
தூற்றிநின்னடி
பத்தர் போணநின்ற பரமாய
பான்மையதென்
முத்தைவென்ற முறுவலாளுமை பங்கனென்றிமை
யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தார்
அம்மானே.

தெளிவுரை : முத்தின் சிறப்பினை வெல்லும் வெண்முறுவல் மேவும் உமாதேவியைப் பாகங்கொண்டு, தேவர்கள் போற்றும் அத்தனே ! அரியவனே ! ஆமாத்தூர் அம்மானே ! தம்மிடம் உள்ள நூலைக் கொண்டு, பொய்ம்மொழியாற்றி நின் திருவடியைப் பழித்துத் தூற்றினாலும், பக்தர்கள் பேணுகின்ற பரம் பொருளாய் விளக்குகின்ற சிறப்பு என்னே !

543. செய்யதாமரை மேலிருந்தவ னோடுமாலடி
தேடநீள்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற
வெற்றிமை யென்
தையலாளொடு பிச்சைக்கிச்சை தயங்குதோலரை
யார்த்த வேடங்கொண்டு ஐயம் ஏற்றுகந்தாய்
ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : உமாதேவியுடன், விளங்குகின்ற தோலை உடையாகக் கொண்டு, பிச்சை ஏற்பதற்கு விரும்பி ஆமாத்தாரில் வீற்றிருக்கும் நாதனே ! செந்தாமரை மேல் விளங்குகின்ற பிரமனும் திருமாலும், முடியும் திருப்பாத மலரடியும் முறையே தேடியும் காணுதற்கு ஒண்ணாதவனாய், ஆர்த்த எழும் பேரழலாய் ஓங்கிய வெற்றித் தன்மைதான் என்னே !

544. புத்தர்புன்சம ணாதர்பொய்ம்மொழி நூல்பிடித்தலர்
தூற்றநின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய
பான்மையதென்
முத்தைவென்ற முறுவலாளுமை பங்கனென்றிமை
யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : முத்தின் சிறப்பினை வெல்லும் வெண்முறுவல் மேவும் உமாதேவியைப் பாகங்கொண்டு, தேவர்கள் போற்றும் அத்தனே ! அரியவனே ! ஆமாத்தூர் அம்மானே ! தம்மிடம் உள்ள நூலைக் கொண்டு, பொய்ம்மொழியாற்றி நின் திருவடியைப் பழித்துத் தூற்றினாலும், பக்தர்கள் பேணுகின்ற பரம்பொருளாய் விளங்குகின்ற சிறப்பு என்னே !

545. வாடல் வெண்டலை மாலையார்த்து மயங்கிருள்எரி
யேந்தி மாநடம்
ஆடல் மேய தென்னென்று ஆமாத்தூர்
அம்மானைக்
கோடல்நாகம் அரும்புபைம் பொழில் கொச்சை
யாரிறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ்
சேர்வாரே.

தெளிவுரை : கோடல் (வெண்காந்தன்) நாகம் ஆகிய மலர்கள் கொண்ட பசுமையான பொழில் திகழும் கொச்சைவயம் என்னும் சீகாழியின் நாதன் ஞானசம்பந்தர், தலைமாலை கொண்டு மயானத்தில் நெருப்பைக் கரத்தில் ஏந்திப் போராடல் மேவியது என் கொல் ! என்று ஆமாத்தாரில் வீற்றிருக்கும் நாதனைப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் ஈசன் உலகத்தில் சேர்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

187. திருக்களர் (அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

546. நீருளார்கயல் வாவிசூழ்பொழில்
நீண்ட மாவயல்ஈண்டு மாமதில்
தேரினார் மறுகில்
விழாமல்கு திருக்களர்
ஊருளார்இடு பிச்சைபேணும்
ஒருவனேயொளிர் செஞ்சடைம்மதி
ஆர நின்றவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : நீர் நிலைகள் மிகுந்த கயல்களின் பெருக்கமும், குளங்கள், பொழில்கள், நீண்ட சிறப்பான வயல்கள் மிகுதியுடன், நீண்ட நெடிய மதில், தேர் செல்லும் வீதிகள் மற்றம் திருவிழாக்கள் மல்கும் திருக்களர் என்னும் ஊருள் மேவும் இறைவனே ! பலி ஏற்கும் பெருமானே ! ஒளிர்கின்ற செஞ்சடையில் சந்திரனை வைத்த நாதனே ! நின்னை அடைக்கலமாகச் சார்ந்த அடியவர்களுக்கு அருள் புரிவீராக.

547. தோளின் மேலொளி நீறுதாங்கிய
தொண்டர்வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளரும்
தவமல்கு திருக்களருள்
வேளினேர் விசயற்கருள்புரி
வித்தகா விரும்பும்அடியாரை
ஆளுகந் தவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : திருத்தொண்டர்கள், தோளின்மீது நீறு அணிந்து திருவடி போற்ற, நெருங்கி தொண்டு புரியும் திருவருள் மிக்கவர் வளரும் தவச் சிறப்புடைய திருக்களருள் மன்மதனை நிகர்த்த அழகுடைய விசயனுக்கு அருள் புரிந்த வித்தகனே ! நின்னை விரும்பி ஏத்தும் அடியவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கி அருள் புரிந்த பெருமானே ! நின்னை அடைந்து வழிபடுபவர்களுக்கு அருள் புரிவீராக.

548. பாடவல்லநன் மைந்தரோடு
பனிமலர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில்சூழ்
செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே யடி
நிரைகழல்சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆடவல் லவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : பண்ணின் இசையுடன் பாடவல்ல அடியவர்கள், மலர்கொண்டு தூவிப் போற்றும் பெருமக்கள் ஆகியோர் வாழும் பொழில் சூழ்ந்த வளம் மிக்க மாடமாளிகைகள் உடைய திருக்களருள் வீற்றிருக்கும் நிமலனே ! திருவடியில் விளங்கும் கழலும் சிலம்பும் ஒலிக்கச் சிறப்பான நடனம் புரிய வல்லவனே ! நின்னை அடைந்து வணங்குபவர்களுக்கு அருள்புரிவீராக.

549. அம்பினேர்தடங் கண்ணினாருடன்
ஆடவர்பயில் மாடமாளிகை
செம்பொ னார்பொழில்
சூழ்ந்தழகாய திருக்களருள்
என்புபூண்டதோர் மேனியெம்இறைவா
இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : அம்பு போன்ற கூர்மையான நோக்கு உடையதும், விசாலமாக அகன்று விளங்கும் கண்களை உடைய மகளிரும் ஆடவரும் பொலியும் மாட மாளிகைகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்து விளங்கும் திருக்களருள், எலும்பினை மாலையாகத் திருமேனியில் தரித்த எம் இறைவனே ! நின் திருவடியைப் போற்றி நின்றவர்களுக்கு அன்பொடு விளங்கி அருள் புரிந்தவனே ! நின்னை அடைந்து வணங்கியவர்க்கு அருள்வீராக.

550. கொங்குலாமலர்ச் சோலை வண்டினம்
கொண்டிமாமது உண்டுஇசைசெயத்
தெங்கு பைங்கமுகம்
புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடும் கூடியமண
வாமனேபிணை கொண்டொர் கைத்தலத்து
அங்கை யிற்படையாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : சோலைகளில் விளங்கும் வண்டினம் மலர்களைக் கெண்டி தேன் உண்டு மகிழ்ந்து செய்யவும் தென்னையும் பாக்கு மரங்களும் பக்கத்தில் புடைசூழ விளங்கும் திருக்களருள் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் மாணாளனே ! ஒரு கரத்தில் மானும் மற்றொன்றில் மழுப்படையும் உடையவனே ! நின்னை அடைந்து வணங்கியவருக்கு அருள்புரிவீராக.

551. கோலமாமயில் ஆலக்கொண்டல்கள்
சேர்பொழிற்குல வும்வயலிடைச்
சேலிளங் கயலார்
புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலமேவிய கண்டனேநிமிர்
புன்சடைப்பெரு மான்எனப்பொலி
ஆல நீழலுளாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : அழகிய மயில்கள் ஆடவும் மேகங்கள் சேர்பொழில் விளங்கம் வயல்கள் இடையில் சேலும் கயலும் விளங்குகின்ற நீர் சூழ்ந்த திருக்களருள் நீல கண்டனாய்த் திகழ்பவனே ! சடை விளங்கும் பெருமானாய் ஆல் நிழலில் வீற்றிருந்து அறமுரைத்த நாதனே ! நின்னை அடைந்தவர்க்கு அருள்புரிவீராக.

552. தம்பலம்மறி யாதவர்மதில்
தாங்குமால்வரை யால்அழல்எழத்
திண்பலங் கெடுத்தாய்
திகழ்கின்ற திருக்களருள்
வம்பலர்மலர் தூவிநின்னடி
வானவர் தொழக் கூத்துகந்தபேர்
அம்பலத் துறைவாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : இறைவன் திருமுன்னர், தமது ஆற்றல் பயனற்றதாகும் என்பதை அறியாத அசுரர்கள் பகைத்து நிற்க, அவர்களை, மூன்று கோட்டை மதில்களுடன் எரிந்து சாம்பலாகுமாறு, மேருமலையை வில்லாகக் கொண்டு செற்று, அடர்த்த பெருமானே ! பெருமையுடன் திகழும் திருக்களருள், நறுமணம் பரவும் மலர் தூவி நின்திருவடியை வணங்கிய மேன்மையாளர்கள் காணுமாறு திருநடனம் புரிந்த அம்பல வாணனே ! நின்னை அடைந்தவர்க்கு அருள் புரிவீராக.

553. குன்றடுத்தநன் மாளிகைக்கொடி
மாடநீடுயர் கோபுரங்கண்மேல்
சென்ற டுத்துயர்வான்
மதிதோயும் திருக்களருள்
நின்றடுத்துயர் மால்வரைத்திரள்
தோளினால்எடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : குன்றனைய உறுதியும் உயர்வும் கொண்ட மாட மாளிகைகளிலும் கோபுரங்களிலும் விளங்கும் கொடிகள் வானத்தில் உள்ள சந்திரன்பால் தோயும் சிறப்புடைய திருக்களரில், நின்று உயர்ந்த விளங்கும் கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோளையும் நீண்ட முடிகளையும் தன் திரப்பாதத்தால் அடர்த்து விளங்கும் ஈசனே ! நின்னை அடைந்தவர்க்கு அருள் புரிவீராக.

554. பண்ணியாழ்பயில் கின்றமங்கையர்
பாடலாடலொடு ஆரவாழ்பதி
தெண்ணி லாமதியம்
பொழில்சேரும் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே குரு
வர்க்குநின்கழல் காட்சி ஆரழல்
அண்ண லாயஎம்மான்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : பண்ணில் விளங்கும் யாழ் பயிலும் மங்கையரின் பாடலுடன் ஆடலும் பொருந்தி வாழ் பதியாய்த் தெளிந்த நிலவின் ஒளியும் பொழிலும் சேரும் சிறப்புடைய திருக்களருள், உள்ளிருந்து யாவிலும் நிலவும் ஒருவனாகிய ஈசனாய், திருமால் பிரமன் ஆகிய இருவருக்கும் சோதிப் பிழம்பாய்க் காட்சி நல்கிய அண்ணலாகிய பெருமானே ! நின்னை அடைந்து வணங்கியவர்க்கு அருள் புரிவீராக.

555. பாக்கியம்பல செய்த பக்தர்கள்
பாட்டொடும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார்
சிறந்தாருந் திருக்களருள்
வாக்கினான்மறை யோதினாய்அமண்
தேரர்சொல்லிய சொற்களாபொய்
ஆக்கி நின்றவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : பாக்கியம் செய்த பக்தர்கள் புகழ் பாடல் களைக் கூறித் துதித்துப் போற்ற வேதம் பயின்ற மறையவர்கள், தீவளர்த்து வேள்வி செய்து, செம்மை புரியும் சிறந்த குணம் உடையவர்களாய்ப் பொலிய விளங்கும் திருக்கருள், சமணர் மற்றும் சாக்கியரின் சொற்களைப் பொய்யுரையாக்கி, திருவாயால் மறை ஓதி நின்ற பெருமானே ! நின்னை அடைந் வணங்குபவர்களுக்கு அருள்புரிவீராக.

556. இந்துவந்தெயு மாடவீதி
எழில்கொள்காழிந் நகர்க்கவுணியன்
செசந்து நேர்மொழியார்
அவர்சேரும் திருக்களருள்
அந்தியன்னதொர் மேனியானை
அமரர்தம்பெரு மானைஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும்
பாடத் தவமாமே.

தெளிவுரை : சந்திரனின் குளிர்ச்சி மிக்க வெண்மையான ஒளி சேர் மாடவீதியின் எழில் மிக்க காழி நகரில் மேவும் கவுணியர் மரபில் தோன்றிய ஞானசம்பந்தர், செந்து என்னும் பண்ணிசை பாடும் மகளிர் சேரும் திருக்களருள், அந்திப்போது போன்ற செவ்வண்ண மேனியனாய் விளங்கம் தேவர்தம் பெருமானைச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதுதல் சிறந்த தவம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

188. கோட்டாறு (அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம், திருவாரூர்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

557. கருந்தடங்கண்ணின் மாதராரிசை
செய்யக்காரதிர் கின்றபூம்பொழிற்
குருந்த மாதவியின்
விரைமல்கு கோட்டாற்றில்
இருந்தஎம்பெரு மானையுள்கி
யிணையடி தொழுது ஏத்துமாந்தர்கள்
வருந்து மாறறியார்
நெறிசேர்வர் வானூடே.

தெளிவுரை : கருமையான விசாலமான கண்களை உடைய பெண்கள் இசை பாட, அடர்த்திöõன மேகம் போன்ற பூம்பொழில் சூழக் குருந்த மரத்தில் மாதவிக் கொடி படர்ந்து நறுமணம் பரப்பி விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருக்கும் எம் ஈசனை நினைத்து, திருவடியை வணங்கி ஏத்துகின்ற மாந்தர்கள் உலகத்தில் வருத்தம் அடைமாட்டார்கள்; வீடுபேறு அடைவதற்கு உரிய வழியாக ஞானம் கைவரப் பெறுவார்கள்.

558. நின்றுமேய்ந்த நினைந்து மாகரி
நீரொடும் மலர் வேண்டிவான்மழை
குன்றி னேர்ந்து குத்திப்
பணி செய்யும் கோட்டாற்றுள்
என்று மன்னிய எம்பிரான்கழல்
ஏத்தி வானரக ஆளவல்லவர்
பொன்று மாறறி யார்
புகழார்ந்த புண்ணியரே.

தெளிவுரை : நின்ற வண்ணம் விளங்கி மேவும் பெரிய யானை நீரும் மலரும் கொண்டு வானத்திலிருந்து ஈட்டிப் பூசித்துப் பணிந்த கோட்டாற்றுள், எக்காலத்திலும் பொலிவுடன் விளங்குகின்ற எம்பெருமான் திருக்கழலை ஏத்தி வழிபடுபவர், வானுலகை ஆளும் வல்லமை அடைவர்; அழிவு அற்றவராய் விளங்குவர்; புகழ் மிக்கவராயும் புண்ணியவான்களாயும் திகழ்வர்.

559. விரவி நாளும் விழாவிடைப்பொலி
தொண்டர்வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு நீழற்
பொழில் மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானையுள்கிநின்று
ஆதரித்துமுன் அன்புசெய்துஅடி
பரவுமாறு வல்லார்
பழிபற்று அறுப்பாரே.

தெளிவுரை : நாள்தோறும் சிறப்பு மிக்க திருவிழாப் பொலிவு காண்கின்ற திருத்தொண்டர்கள் வந்து குழுமி, பண் மிகுந்த பாடல்களைப் பாடிப் பக்திப் பெருக்கில் திளைக்க, குரவ மலர்களின் மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோட்டாற்றில், அரவம் தரித்த நீண்ட சடையுடைய ஈசனை நினைத்து உருகி நின்று அன்புடன் திருவடியைப் பரவும் அடியவர்கள், பழியில்லாதவர்கள் ஆவார்கள். அவர்க்குப் பற்றறுக்கும் செம்மையும் வாய்க்கும்.

560. அம்பினேர்விழி மங்கைமார் பலர்
ஆடகம்பெறு மாடமாளிகைக்
கொம்பினேர்துகி லின்கொடி
யாடு கோட்டாற்றில்
நம்பனேநட னேநலந்திகழ்
நாதனேயென்று காதல்செய்தவர்
தம்பி னேர்ந்தறி யார்
தடுமாற் றவல் வினையே.

தெளிவுரை : அம்பு போன்ற கூரிய விழியுடைய மங்கையர் பலர் ஆடுகின்ற மாட மாளிகையும் உயர்ந்த கொம்புகளில் கொடிகள் விளங்கிப் பறக்கும் கோட்டாற்றின் சிவனே ! நடனம் புரியும் நாதனே ! என்று மொழிந்து பக்தி செய்தவர்களுக்கு, அஞ்ஞானத்தால் நிகழும் தடுமாற்றமும் இல்லை; வன்மை செய்யும் வினையால் நேரும் துன்பமும் இல்லை.

561. பழையதம்மடி யார்துதி செயப்பாரு
ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை விழா
ஒலிசெய்யும் கோட்டாற்றில்
கழலும்வண்சிலம் பும்ஒலிசெயக்
கானிடைக்கணம் ஏத்தஆடிய
அழகன் என்றெழுவார்
அணியாவர் வானவர்க்கே.

தெளிவுரை : பழமையாய்த் தொண்டு செய்து வழிபாடு இயற்றி அடியவர்களாகிய செல்வர்களும் துதி செய்ய, இவ்வுலகத்தின் உள்ள மாந்தர்களும் தேவலோகத்தில் உள்ளவர்களும் தொழுது ஏத்த, குழலும் மொந்தையும் கொண்டு இன்னிசை எழுப்பி விழா நிகழும் சிறப்புடைய கோட்டாற்றில், ஈசன் நனி விளங்குகின்றான். அப் பெருமான், கழலும் சிலம்பும் ஒலிக்க, மயானத்தில் பேயக்கணங்கள் இடையில் ஆடுகின்ற அழகன். அவனை ஏத்தி வணங்குபவர்ள் வானவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுவார்கள்.

562. பஞ்சின்மெல்லடி மாதர்ஆடவர்
பத்தர்சித்தர்கள் பண்புவைகலும்
கொஞ்சி யின்மொழியால்
தொழில்மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணி யேமணி மிடற்று
அண்ணலேயென உள்நெகிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார்
பிறவார்இத் தொன்னிலத்தே.

தெளிவுரை : பஞ்சுபோன்ற மென்மையான பாதங்களை உடைய மாதர்களும், ஆடவர்களும், பக்தர்களும் சித்தர்களும் ஈசன் திருப்புகழைப் போற்றி அன்பால் இசைத்து இனிய மொழிகளால் வழிபாடு நிகழ்வது கோட்டாறு. அத் திருத்தலத்தில் விளங்கும் நாதனை, மைந்தனே ! நீலகண்டனே ! என மனம் கசிந்து போற்றுபவர்கள், இறப்பு அடைய மாட்டார்கள்; சிவப்பேறு உடையவர்களாய்த் திகழ்ந்து, இவ்வுலகில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

563. கலவமாமயி லாளெர் பங்கனைக்
கண்டுகண்மிசை நீர்நெகிழ்த்திசை
குலவு மாறுவல்லார்
குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவுமாமதி சேர்சடையுடை
நிலவுமாமதி சேர்சடையுடை
நின்மலாவென உன்னுவாரவர்
உலவு வானவரின்
உயர்வாகுவது உண்மையதே.

தெளிவுரை : தோகையுடைய மயில் போன்ற சாயலைஉடைய உமாதேவியைப் பாகங்கொண்ட ஈசனைக் கண்டு, கண்ணீர் மல்கக் கசிந்து உருகி வணங்கும் பக்தர்கள் சூடிகொண்டு விளங்கும் கோட்டாற்றில், பிறை சூடிய சடையுடையவனே ! நின்மலனே ! என் நினைத்த வழிபடுபவர்கள், மகிழ்வு கொண்டு உலவும் இயல்பினையுடைய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்த வராய் விளங்குவார்கள். இது சத்தியம்.

564. வண்டலார்வயல் சாலியாலை
வளம்பொலிந்திட வார்புனல்திரை
கொண்டலார் கொணர்ந்த
அங்குலவும்திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாந்துதி செய்யநின்ற
தொயிலனேகழ லால்அரக்கனை
மிண்டெலாந் தவிர்த்து
என்னுகந்திட்ட வெற்றிமையே.

தெளிவுரை : வண்டல் மண் விளங்கம் வயல்களில், நெல்லும் கரும்பும் வளம் பொலிய, நெடிய நீர்வளத்தை மேகமானது கெண்டு வந்து சேர்த்துத் திகழ்வது கோட்டாறு. அத் தலத்தில் தொண்டர்கள் துதி செய்து வழிபட, அருள் வழங்கும் தொழிலில் மேம்பட்டு விளங்கும் பெருமானே ! உன் திருக்கழலால் இராவணனுடைய புன்மை கொண்ட வலிமையை நீக்கி, என்னை உகந்து ஏற்றது வெற்றிச் சிறப்பாகும்.

565. கருதிவந்தடி யார்தொழுது எழக்
கண்ணனோடுஅயன் தேடஆனையின்
குருதி மெய்கலப்ப
உரிகொண்டு கோட்டாற்றில்
விருதினால்ட மாதுநீயும்
வியப்பொடும்உயர் கோயில்மேவிவெள்
எருதுஉகந் தவனே
இரங்காய் உனது இன்னருளே.

தெளிவுரை : அடியவர்கள் நின்னை மனத்தால் கருத்து ஒருமித்துத் தொழுது போற்ற, திருமாலும் பிரமனும் தேடி நிற்க, யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கோட்டாற்றில் பெரும் புகழோடு உமாதேவியுடன், யாவரும் வியந்து போற்றும் சிறப்புடன் கோயில் கொண்டு, வென்மையான இடப வாகனத்தில் உகந்து வீற்றிருப்பவனே ! உனது இனிய அருளைக் கருணையுடன் புரிவாயாக.

566. உடையிலாதுழல் கின்ற குண்டரும்
ஊணருந்தவத் தாயசாக்கியர்
கொடையி லார்மனத்
தார்குறையாரும் கோட்டாற்றில்
படையிலார்மழு வேந்தி யாடிய
பண்பனேயிவர் என்கொலோநினை
அடைகி லாதவண்ணம்
அருளாய்உன் னடியவர்க்கே.

தெளிவுரை : சமணர்களாகிய திகம்பரர்களும், உணவு கொள்ளாது தவம் புரியும் சாக்கியரும் வண்மையற்ற மனத்தினராய்க் குறைகளை நவிலும் தன்மையில், கோட்டாற்றில் படைகளில் வலிமையானதாகிய மழு வேந்தித் திருநடம் புரியும் பண்புடைய பெருமானே ! இப் பெருமான் அருள் வண்ணம் என்கொல் ! என்று நின்னைச் சார்ந்து போற்றாது இவர்கள் வாளா இருப்பதுதான் எதற்கு ? அதன் உண்மையை உன் அடியவர்களுக்கு உணர்த்துவாயாக.

567. காலனைக் கழலால் உதைத்தொரு
காமனைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள்
குடிகொண்ட கோட்டாற்றில்
மூலனைமுடி வொன்றிலாதஎம்
முத்தனைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க்கு
எளிதாகும் வானகமே.

தெளிவுரை : காலனைக் காலால் உதைத்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் சீறி எரித்து, உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் கோட்டாற்றில், யாவற்றுக்கும் மூலப்பொருளாயும் முடிவற்றவனாயும் விளங்கும் முத்தனாகிய ஈசனை வணங்கிய ஞானசம்பந்தர், சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வானுலகினை எளிதாக அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

189. புறவார் பனங்காட்டூர் (அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

568. விண்ணமர்ந்தன மும்மதில்களை
வீழவெங்கணை யாலெய்தாய்விரி
பண்ணமர்ந்தொலி சேர்
புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந்தொரு பாகமாகிய
பிஞ்ஞகாபிறை சேர்நுதலிடைக்
கண்ணமர்ந் தவனே
கலந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : விண்ணில் பொருந்திய மூன்று மதில்கள் எரிந்து சாம்பலாகி அழியுமாறு கொடிய கணையால் எய்து விளங்கும் ஈசனே ! வேதங்கள் விரித்து ஓத, அவ்வொலியானது சேரம் புறவார் பனங்காட்டூரில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் பிஞ்ஞகனே ! பிறைச் சந்திரனைச் சூடிய நெற்றிக் கண்ணுடைய நாதனே ! நின்னை வணங்கும் அன்பர்களுக்கு அருள் புரிவீராக.

569. நீடல்கோடல் அலரவெண் முல்லை
நீர்மலர் நிரைத் தாதளம்செய்
பாடல்வண் டறையும்
புற வார்பனங்காட்டூர்த்
தோடுஇலங்கிய காதயன்மின்
துளங்கவெண்குழை துள்ளநள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே
அடைந் தார்க்கருளாயே.

தெளிவுரை : நீண்ட வெண்காந்தன், வெண்முல்லை மற்றும் உள்ள நீர் மலர்களின் மகரந்தத் தாதுக்களைக் வரிசையாய் விரவிக் குவித்து வைக்கும் வண்டுகள் பாடும் புறவார் பனங்காட்டூர் என்னும் திருத்தலத்தில், தோடு அணிந்து மின்னல் போன்று ஒளிரும் வெண் குழையும் விளங்க, நள்ளிருளில் நடம்புரியும் சங்கரனே ! நின்னைச் சரண் அடைந்து வணங்கும் அன்பர்களுக்கு அருள்வீராக.

570. வாளையும்கய லும்மிளிர்பொய்கை
வார்புனற்கரை யருகெலாம்வயல்
பாளையொண் கமுகம்
புற வார்பனங்காட்டூர்ப்
பூளையுந்நறுங் கொன்றையும்மத
மத்தமும்புனை வாய்கழலிணைத்
தாளை யேபரவும்
தவத் தார்க் கருளாயே.

தெளிவுரை : வாளை, கயல் ஆகிய மீன் வகைகள் மிளிரும் நீர் நிறைந்த பொய்கைக் கரையின் பக்கங்களில் வயல்களும் கமுக மரங்களும் திகழும் புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, கொன்றைமலர், ஊமத்தம் பூ ஆகியவற்றைப் புனைந்த ஈசனே, நின் கழல்களைப் பரவிப் போற்றும் தவத்தினர்க்கு அருள் புரிவீராக.

571. மேய்ந்திளஞ் செந்நெல் மென்கதிர்கல்வி
மேற்படுதலின் மேதிவைகறை
பாய்ந்த தண்பழனப்
புற வார் பனங்காட்டூர்
ஆய்ந்தநான்மறை பாடியாடும்
அடிகள்என்றென்று அரற்றிநன்மலர்
சாய்ந்தடி பரவும்
தவத் தார்க்கு அருளாயே.

தெளிவுரை : எருமையானது மேய்ந்து செந்நெற் கதிர்களைக் கவ்வி இருக்க வைகறையில் வயல்களுக்குச் செல்லும் வளப்பம் மிகுந்த புறவார் பனங்காட்டூரில், விளங்குகின்ற நான்மறை போற்றும் அடிகளே ! என்று அரற்றி, மலர் தூவி வணங்கும் தவத்தினர்க்கு அருள்வீராக.

572. செங்கயலொடு சேல்செருச் செயச்
சீறியாழ்முரல் தேனினத்தொடு
பங்கயம் மலரும்
புற வார்பனங்காட்டூர்க்
கங்கையும்மதி யும்கமழ்சடைக்
கேண்மையாளொடுங் கூடிமான்மறி
அங்கை யாடலனே
அடி யார்க்கருளாயே.

தெளிவுரை : கயலும் சேலும் (மீன் வகைகள்) ஒன்றுக் கொன்று மோதி பொருதலைத் தோற்றுவிக்க, சீறி ஒலி தரும் யாழைப் போன்று வண்டினங்கள் ஒலி செய்ய, தாமரை மலரும் நீர்வளமும் பெருகும் புறவார் பனங்காட்டூரில், கங்கையும் பிறைச் சந்திரனும் மணங்கமழும் சடையில் விளங்க, மிகுந்த அன்புடைய உமாதேவியைப் பாகங் கொண்டு, இளமையான மானைக் கரத்தில் ஏந்தி நடம்புரியும் நாதனே ! அடியவர்களுக்கு அருள் புரிவீராக.

573. நீரினார்வரை கோலிமால்கடல்
நீடியபொழில் சூழ்ந்துவைகலும்
பாரினார் பிரியாப்
புற வார் பனங்காட்டூர்க்
காரினார்மலர்க் கொன்றைதாங்கு
கடவுள் என்றுகை கூப்பிநாள்தொறும்
சீரினால் வணங்கும்
திறத்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : நீர்க்கால் வாய்களால் அகழி போன்ற எல்லை வகுத்துப் பெரிய கடல் போன்ற விரிந்த பொழில் சூழ்ந்து விளங்க, நாள்தோறும் உலக மாந்தர், பிரிவு கொள்ளாத புறவார் பனங்காட்டூரில், கார் காலத்தில் மலரும் கொன்றை மலரைச் சூடுகின்ற கடவுள் என்று கைகூப்பித் தினந்தோறும் அன்பாற் கலந்து வணங்கும் திறத்தார்க்கு, அருள் புரிவீராக.

574. கையரிவையர் மெல்விரல்லவை
காட்டியம்மலர்க் காந்தளங்குறி
பையரா விரியும்
புற வார்பனங்காட்டூர்
மெய்யரி வையொர் பாகமாகவும்
மேவினாய் கழல் ஏத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை
புரிந்தார்க் கருளாயே.

தெளிவுரை : மகளிர்தம் மெல்லிய விரல்கள் போன்ற காந்தள் மலரும், பாம்பும், படம் போன்று விரியும் மலர்களும் உடைய புறவார் பனங்காட்டூரில், திருமேனியில் உமாதேவியை ஒரு பாகமாக மேவிய ஈசனே ! நும் திருவடியை ஏத்திப் பொய்யற்ற அடிமை பூண்டு, நாள்தோறும் போற்றுகின்ற அன்பர்களுக்கு அருள் புரிவீராக.

575. தூவியஞ்சிறை மென்னடையென
மல்கியொல்கிய தூமலர்ப் பொய்க்கைப்
பாவில் வண்டறையும்
புற வார்பனங்காட்டூர்
மேவியந்நிலை யாயரக்கன
தோளடர்த்தவன் பாடல்கேட்டருள்
ஏவிய பெருமான்
என்பவர்க்கு அருளாயே.

தெளிவுரை : தூய்மையான சிறகுகளையுடைய மென்னடையுடைய அன்னப் பறவைகள் வாழ்கின்ற மலர்கள் மிகுந்த பொய்கையில் வண்டுகள் ஒலி செய்யும் புறவார் பனங்காட்டூரில், கயிலை மலையை எடுத்த இராவணனுக்கு அருள் வழங்கி மேவி விளங்கும் நாதனே ! எம் பெருமானே ! என்று போற்றித் துதிப்பவர்களுக்கு அருள் புரிவீராக.

576. அந்தண்மாதவி புன்னைநல்லஅ
சோகமும்அர விந்தமல்லிகை
பைந்தண்ஞாழல்கள் சூழ்
புற வார்பனங்காட்டூர்
எந் திளம்முகில் வண்ணனான்முகன்
என்றிவர்க்கரி தாய்நிமிர்ந்ததொர்
சந்தமா யவனே
தவத்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சியான மாதவி, புன்னை, நல்ல அசோகு, அரவிந்தம், மல்லிகை, கொன்றை ஆகிய மலர்கள் திகழ விளங்கும் சோலைகளும் பொழில்களும் சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில், திருமாலும் பிரமனும் ஆகிய இருவர்க்கும், காணுதற்கு அரிதாய் ஓங்கிய அழகனே ! தவம்புரிந்த பெருமக்களுக்கு அருள் புரிவீராக.

577. நீணமார்முரு குண்டுவண்டின
நீலமாமலர் கவ்விநேரிசை
பாணில்யாழ் முரலும்
புற வார்பனங்காட்டூர்
நாணழிந்துழல் வார்சமணரு
நண்பில்சாக்கிய ருந்நகத்தலை
ஊணுரியவனே
உகப்பார்க்கு அருளாயே.

தெளிவுரை : தேனை நெடிது உண்ட வண்டினம், நீல மலர்களைக் கவ்வி, யாழின் இசை போன்று ஒலிக்கும் புறவார் பனங்காட்டூரின்கண், உழல்கின்ற சமணரும் சாக்கியரும் நகைகொள்ளுமாறு, பிரம கபாலம் ஏந்தி உணவு கொண்ட ஈசனே ! நின்னை உகந்து போற்றும் அன்பர்களுக்கு அருள் புரிவீராக.

578. மையினார்மணி போல்மிடற்றனை
மாசில்வெண்பொடி பூசுமார்பனை
பையதேன் பொழில்சூழ்
புறவார் பனங்காட்டூர்
ஐயனைப்புக ழானகாழியுள்
ஆய்ந்தநான்மறை ஞானசம்பந்தன்
செய்யுள்பாட வல்லார்
சிவலோகம் சேர்வாரே.

தெளிவுரை : கரிய மணி போன்று மிடற்றை உடைய நீலகண்டனை, மாசுறாத திருநீறு பூசுகின்ற மார்பினனை, தேன் விளங்கும் பொழில் சூழ் புறவார் பனங்காட்டூர் தலைவனை, புகழ் மிக்க சீகாழியுள் நான்கு மறைகளையும் ஆய்ந்து தேர்ந்த ஞானசம்பந்தர் சொல்லிய செய்யுள் ஆகிய இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள் சிவலோகம் இனிது சென்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

190. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

579. உருவார்ந்த மெல்லியலோர்
பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங்
காட்டிக் கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடல்ஒண்
சங்கம்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : அழகிய பொலிவுடைய மென்மையின் இயல்பு உடைய உமாதேவியைப் ஒரு பாகம் உடைய தேவரீர் ! அடைந்து வழிபடு அடியவர்களுக்கு வான் உலகத்தின் சிறப்பினை நன்கு புகட்டுதலும் வழங்குதலும் கருத்தாக உடையீர். கடல் அலைகள் கரையைச் சார்ந்து மோதி சங்குகளைப் பெருக வழங்கும் அழகிய புகலியின்கண் திருவிளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு திகழ்பவர், நீவிரே ஆவீர்.

580. நீரார்ந்த செஞ்சடையீர்
நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர்
உழைமான் உரிதோல் ஆடையீர்
பேரார்ந்த தெண்டிரைசென்று
அணையுங் கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடையவரே ! திருக்கழலின் சிறப்பினைக் காட்டும் பாதம் உடையவரே ! சிறு பொருட்களையும் ஊர் ஊராகச் சென்று பிச்சையாக ஏற்றவரே ! மான் தோலை ஆடையாக உடையவரே ! அலைகள் மோதும் பூம்புகலியில் சீர் கொண்டு விளங்கும் கோயிலின்கண் இடமாகச் சேர்ந்து விளங்கும் பெருமான், நீவிர் ஆவீர்.

581. அழிமல்கு பூம்புனலும்
அரவும் சடைமேல் அடைவெய்த
மொழிமல்கு மாமறையீர்
கறையார் கண்டத்து எண்தோளீர்
பொழில்மல்கு வண்டினங்கள்
அறையும்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே
கோயிலாக இருந்தீரே.

தெளிவுரை : மிகுதியாகப் பெருகித் தோன்றும் அழகிய கங்கையும் அரவமும் சடையின் மீது சார்ந்து இருக்க, மொழியின் சிறப்பாக விளங்கும் வேதமாக உள்ளவரே ! கரிய கண்டமும் தோள்களும் உடைய நாதரே ! பொழில்கள் சிறந்து விளங்கவும் வண்டினங்கள் சூழ்ந்து ஒலிக்கவும் உள்ள சோலைகள் விளங்கும் பூம்புகலியில் எழில் பெருகும் திருக்கோயிலை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் நீவிர்.

582. கையில்ஆர்ந்த வெண்மழுவொன்று
உடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட
மங்கை வெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள்
பதியாய் விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே
கோயிலாக இசைந்தீரே.

தெளிவுரை : திருக்கரத்தில் பெருமையாய்த் திகழ்கின்ற மழுப் படையுடைய தேவரீர், கொடிய யானையின் பசுந்தோலை, மயில் போன்ற சாயலையுடைய மங்கையாகிய உமாதேவி வெருவி அஞ்சுமாறு திருமேனியில் போர்த்து உள்ளவர் ஆயினீர் ! வேத விற்பன்னர்களின் நகராக விளங்கும் அழகிய புகலியில், மதில் சிறப்புடைய திருக்கோயில்லை இடமாகக் கொண்டு  இசைந்து விளங்குபவர் ஆனீர்.

583. நாவார்ந்த பாடலீர்
ஆடல்அரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின்
பயன்கள் ஆனீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும்
வயலும் சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : நாவானது பொலியுமாறு விளங்கும் வேதமாக உடைய தேவரீர். ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டி, பாடல்களின் கருப் பொருளாகயும் மெய்பொருளாயும் நுண்பொருளாயும் விளங்குகின்ற பல்வேறு சிறப்புடைய பொருள்களாகவும், அவற்றின் பயன்களாகவும் ஆயினீர். பிரமன் பேணிப் பூசித்துப் போற்றும் பூக்களும், நீர்வளம் மிக்க பொய்கைகளும், வயல்களும் சூழ்ந்த பொழில்கள் திகழும் புகலி நகரின் தெய்வ விழாக்களும், சிறப்பும், மணமும் கொண்டு விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு திகழ்பவர் நீவிரே.

584. மண்ணார்ந்த மண்மழவம்
ததும்ப மலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழ்ப்
பேணி எரிகொண்டு ஆடினீர்
விண்ணார்ந்த மதியமிடை
மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.

தெளிவுரை : மண்ணுலகத்தில் உள்ள மாந்தர்கள் யாவரும் பெருமையுற்று மகிழுமாறு, மண்ணுலகில் மலையரசன் மகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரை, திருமேனி மகிழுமாறு பேணிப் பொருந்தி, திருக்கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடிய தேவரீர், விண்ணில் பொலியும் சந்திரனுடைய வெண்ணொளி மாட வீதிகளில் நன்கு திகழும் பெருமையுடைய புகலியில், கண்களுக்கு அரிய காட்சியாக விளங்கி மகிழ்வூட்டும் கோயிலை இடமாகக் கொண்டு வீற்றிருந்து கலந்து பொலிந்தவர் நீவிரே.

585.களிபுல்கு வல்லவுணர்
ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர்
அமரர்ஏத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும்
மலருள் விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே
கோயிலாக உகந்தீரே.

தெளிவுரை : மாயையில் வல்ல ஆணவத்தின் களிப்பில் திளைத்து மூழ்கிய கொடிய அசுரர்களின் மூன்று புரங்கள், எரிந்து சாம்பலாகுமாறு கணை தொடுத்த தேவரீர், வண்டுகள் மொய்க்கும் பூக்களைச் சூடிய முடியுடையவராய்த் தேவர்கள் வணங்கி ஏத்த அருள் செய்தீர். நீவிர், தேன் துளிர்க்கும் நறுமண மலர்கள் விளங்கும் அருள் திண்மையுடைய புகலியில் பெருமையுடன் விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு உகந்து விளங்குபவர் ஆயினீர்.

586. பரந்தோங்கு பல்புகழ் சேர்
அரக்கர் கோனை வரைக்கீழ்இட்டு
உரந்தோன்றும் பாடல்கேட்டு
உகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலும்
எரியச் செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பரந்த புகழுடைய இராவணனை மலையின் கீழ் நெரிவித்து, அவன் இசைத்த சாம வேதமாகிய வலிமை மிக்க கானத்தைக் கேட்டு உகக்குமாறு அருள் புரிந்த தேவரீர், உகந்து போற்றாத முப்புர அசுரர்களுடைய மூன்று மதில்களும் எரியுமாறு செற்றுப் பூம்புகலியில் வரந்திகழும் கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மகிழ்ந்தவர் ஆயினீர்.

587. சலந்தாங்கு தாமரைமேல்
அயனும்தரணி யளந்தானும்
கலந்தோங்கி வந்திழிந்தும்
காணாவண்ணம் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனும்
செற்றார் வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே
கோயிலாக நயந்தீரே.

தெளிவுரை : தாமரையில் விளங்கும் பிரமனும், உலகத்தை அளந்த திருமாலும் சேர்ந்து காணும் பொருட்டு ஓங்கி பறவையாகவும், இழிந்து பன்றி வடிவாயும், முயன்றும் காணாத வண்ணம் சோதிப் பிழம்பாகிய தேவரீர், செய்யுணர்வு உடையவராகி, ஐம்புலன்களை அடக்கி வாழும் பூம்புகலியில், மன்னுயிர்க்குப் படியளக்கும் நலம் முதற்கொண்டு முத்திப் பேறு அளிக்கும் நலம் ஈறாக, எல்லா நலங்களும் தாங்கி அருள் புரியும் கோயிலில் வீற்றிருந்து விரும்புமாறு விளங்குவீர் ஆயினீர்.

588. நெடிதாய வன்சமணு(ம்)
நிறைவொன்றில்லாச் சாக்கியரும்
கடிதாய் கட்டுரையாற்
கழற மேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர்
புகலி மறையோர் புரிந்தேத்த
வடிவாரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப் பேசி நிற்க, மேலாக விளங்கும் மெய்ப் பொருள் ஆகி விளங்கும் தேவரீர், திருநீறு விளங்கும் திருமேனி உடையவராய்ப் புகலியில் விளங்கும் மறைவல்ல அந்தணர்கள் பூசித்துப் பரவி ஏத்த அழகுடன் மிளிரும் கோயிலில் இடமாக வீற்று மகிழ்ந்தவர் ஆயினீர்.

589. ஒப்பரிய பூம்புகலி
ஓங்குகோயில் மேயானை
அப்பரிசிற் பதியான
அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால்
தெரிந்த பாடல் இவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி
இமையோர் உலகத்து இருப்பாரே.

தெளிவுரை : ஒப்புமை ஏதும் கூறுவதற்கு அரிய பதியான பூம்புகலியில் ஓங்கி விளங்கும் கோயிலில் மேவிய ஈசனை, அப்பரிசின் நிலையில் ஓங்கி, ஒப்புமை இல்லாத அணிமிகும் ஞானசம்பந்தர், செப்புவதற்கு அரிய தண்மையுடன் மேவும் தமிழால் விளங்கும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் எத்தகைய இடம் நேர்ந்தாலும் நீங்கி, தேவர்களின் இனிய உலகத்தில் இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

191. திருத்தலைச்சங்காடு (அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

590. நலச்சங்க வெண்குழையும்
தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச் சங்கை யில்லாதீர்
கடுகா டல்லாற் கருதீர்
குலைச் செங்காய்ப் பைங்கமுகின்
குளிர்கொள் சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே
கோயிலாகத் தாழ்ந்தீரே.

தெளிவுரை : நலத்தில் ஆர்ந்து விளங்கும் சங்க வெண்குழையும் தோடும் காதில் அணியாகக் கொண்டு விளங்கும் தேவரீரை, நான்கு வேதங்களும் போற்றித் துதிக்க, ஐயம் அற்றவராய், சுடுகாட்டில் மேவுவராய்த் திரிந்து, கமுக மரங்கள் விளங்கும் சோலையில் குயில்கள் பாடும் தலைச்சங்காட்டில் உள்ள கோயிலை, இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவர் ஆயினீர்.

591. துணிமல்கு கோவணமும்
தோலும்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர்
அண்டர்க் கெல்லா மாண்பானீர்
பிணிமல்கு நூல்மார்பர்
பெரியோர் வாழும் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே
கோயி லாக அமர்ந்தீரே.கு

தெளிவுரை : துகிலால் ஆன கோவணமும் தோலும் உடையாகக் கட்டி, திருத்தொண்டர்களை ஆட்கொண்டு, நீலகண்டராய்த் தேவர்களுக்கெல்லாம் மாட்சிமையுடைய பெரும் சிறப்பாகிய தேவரீர், பிணைத்து விளங்கும் முப்புரி நூல் அணிந்த திருமார்பினராய், பெரியோர்கள் வாழும் தலைச்சங்காட்டில் அழகு மிகுந்த கோயிலை இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றீர்.

592. சீர்கொண்ட பாடலீர்
செங்கண் வெள்ளேறு ஊர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு
நீங்காத் தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூல்மார்பர்
தக்கோர் வாழும் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே
கோயிலாக இருந்தீரே.

தெளிவுரை : சிறப்பான புகழைத் தெரிவிக்கும் பாடலில் விளங்கும் தேவரீர், இடப வாகனத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவராகிய தேவரீர் புனிதமான தீர்த்தத்தால் பூசித்து அபிடேகம் செய்து பூக்கள் தூவி அர்ச்சிக்கும் தொண்டர்கள், நின்று ஏத்தி வழிபடும் மாலை கொண்டும், பூணூல் மார்பில் திகழவும், தலைச்சங்காட்டில் உள்ள சிறப்பு மிக்க கோயிலில் வீற்றிருந்தீர்.

593. வேடஞ்சூழ் கொள்கையீர்
வேண்டிநீண்ட வெண்திங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும்
உச்சி வைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமும்
குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ் சூழ் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : அடியவர்களின் செம்மைக்கு ஏற்ப, திருவேடப் பொலிவு பலவாறு தாங்கி, அருள் புரியும் கொள்கையுடைய தேவரீர், பக்தியுடன் வேண்டித் தொழுத பிறைச் சந்திரனையும், கங்கையையும் உச்சியில் வைத்துத் தலைச்சங்காட்டில், கூடங்களும் மண்டபங்களும் கொடி மாடமும் சூழ்ந்த கோயிலில் வீற்று மகிழ்ந்தவராயினீர்.

594. சூலஞ்சேர் கையினீர்
கண்ணவெண்ணீறு ஆடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர்
நீண்ட சடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல்
அன்னமன்னும் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே
கோயிலாகக் கொண்டாரே.

தெளிவுரை : திருக்கரத்தில் சூலத்தை ஏந்தி, திருவெண்ணீற்றினைத் திருமேனியில் நன்கு பொலியுமாறு பூசிய தேவரீர், நீலகண்டம் உடையவராய், நீண்ட சடையில் கங்கையைத் தரித்துக் குளிர்ந்த நீர்நிலை திகழும் சோலையில் அன்னப் பறவைகள் விளங்கும் தலைச்சங்காட்டில் மாடமாளிகைகள் சூழ உள்ள கோயிலின்கண் வீற்றிருந்து மகிழ்ந்தவர் ஆயினீர்.

595. நிலநீரொடு ஆகாசம்
அனல்கா லாகி நின்றுஐந்து
புலநீர்மை புறங்கண்டார்
பொக்கம்செய்யார் போற்றோவார்
சலநீதர் அல்லாதார்
தக்கோர் வாழும் தலைச்சங்கை
நலநீர கோயிலே
கோயிலாக நயந்தீரே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்தின் தன்மையாகவும் விளங்கி மேவும் தேவரீர், ஐம்புலன்களை வென்றும் மனம் வாக்கு காயம் ஆகிய முக்குற்றங்களும் அற்றவராய், ஈசனைப் போற்றித் தொழும் பண்பு நீங்காதவராய் விளங்கும் அன்பர்கள் சூழவும் நீசர்களும் வஞ்சகர்களும் இன்மையராயும் விளங்கும் தலைச்சங்காட்டில் நலத்தின் தன்மையுடைய கோயிலில் விருப்பத்தடன் வீற்றிருப்பவர் ஆயினீர்.

596. அடிபுல்கு பைங்கழல்கள்
ஆர்ப்பப் பேர்ந்தோர் அனல்ஏந்திக்
கொடிபுல்கு மென்சாயல்
உமையோர் பாகம்கூடினீர்
பொடிபுல்கு நூன்மார்பர்
புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.

தெளிவுரை : யாவரும் போற்றித் தொழுகின்ற திருவடிகள் ஆராவாரித்துப் பேர்ந்து விளங்கி நடனம் புரிய மென்மையான உமாதேவியை ஒரு பாகம் கொண்டு திருநீறு அணிந்து, முப்புரி நூல் தரித்த மார்பினராய் மேவும் தேவரீர், வேதம் வல்ல மறையவர்கள் விளங்கும் தலைச்சங்காட்டில் விளங்கும், மணம் கமழும் கோயிலில் இருப்பிடமாகக் கொண்டவர் ஆயினீர்.

597. திரையார்ந்த மாகடல்சூழ்
தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர
விரலால் ஊன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர்
அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே
கோயிலாக நினைந்தீரே.

தெளிவுரை : இலங்கையில் தலைவனாகிய இராவணனுடைய மலைபோன்ற தோளை விரலால் ஊன்றி அடர்த்த மாண்புடைய தேவரீர், அரையில் மேகலை அணிந்தவராய், அந்தணர்கள் விளங்கும் தலைச்சங்காட்டில் திகழும் கோயிலில் வீற்றிருப்பவர் ஆயினீர்.

598. பாயோங்கு பாம்பணைமே
லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார்
புறநின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர்
திகழும் செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள திருமாலும், பிரமனும் தேடிப் போய்க் காண்கிலராய்ப் புறத்தே நின்றும் யாதும் அறிய முடியாதவராகிய தேவரீர், ஓய்வு இன்றிப் போற்றுதல் செய்து வேள்வித் தீ இயற்றி வேதம் புகலும் அந்தணர்கள் திகழ்கின்ற பெருமை வளரும் கோயிலின்கண் வீற்றிருப்பவர் ஆயினீர்.

599. அலையாரும் புனல்துறந்த
அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதுஅங்கு அலர்தூற்றத்
தோற்றம்காட்டி ஆட்கொண்டீர்
தலையான நால்வேதம்
தரித்தார் வாழும் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே
கோயிலாக நின்றீரே.

தெளிவுரை : நீராடுதலைத் துறந்து அமணர்களும் சாக்கியர்களும் ஓய்வில்லாது பழிச் சொற்களைக் கூறி நிற்க, திருக்கோல வடிவினைக் காட்டி ஆட்கொண்ட தேவரீர், தலையானதாய் விளங்குகின்ற நான்கு மறையின் வித்தகர்கள் வாழும் தலைச்சங்காட்டில், நிலை பெற்றுள்ள திருக்கோயிலின்கண் வீற்றிருந்து மேவியவர் ஆயினீர்.

600. நளிரும் புனற்காழி
நல்லஞான சம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை
ஓங்கு கோயில் மேயானை
ஒளிரும் பிறையானை
உரைத்தபாடல் இவைவல்லார்
மிளிரும் திரைசூழ்ந்த
வையத்தார்க்கு மேலாரே.

தெளிவுரை : குளிர்ந்த நீர் பெருகும் காழியில் விளங்கும் நல்ல ஞானசம்பந்தர், அன்பர்கள் மனத்தைக் குளிர்ச்சியாக்கும் இனிமையுடைய தலைச்சங்காட்டில் ஓங்கும் கோயிலில் மேவி வீற்றிருக்கும் பிறை சூடிய பெருமானாகிய ஈசனை உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இவ்வுலகத்தில் மேவும் மாந்தருக்கெல்லாம் மேலானவர்களாகத் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

192. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

601. பொங்குநூல் மார்பினீர்
பூதப்படையினீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர்
சாமவேதம் ஓதினீர்
எங்கும் எழிலார் மறையோர்கள்
முறையால்ஏத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : மேல் விளங்கித் திகழும் முப்புரி நூலினைத் திருமார்பில் உடைய தேவரீர், பூதப்படை உடையவராய், கங்கை தங்கி விளங்கும் சிவந்த சடை முடி உடையவராய், சாம வேதம் ஓதியவராய், வேத விற்பன்னர்களாயும், ஆசார சீலமும் உடைய எழில் மிக்க அந்தணர்கள் ஆகம முறைப்படி ஏத்தும் இடை மருதில், மேகம் தோய்ந்து குளிர்ச்சி தரும் கோயிலே, நீவிர் விற்றிருக்கும் கோயிலாக ஏற்று மகிழ்ந்தவர் ஆயினீர்.

602. நீரார்ந்த செஞ்சடையீர்
நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்
பேரார்ந்த வெண்மழுவொன்று
உடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள்
பாகங்கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : கங்கை தரித்த செஞ்சடையுடைய தேவரீர், நெற்றியில் திருக்கண்ணுடையவராய், மழுப்படையைக் கரத்தில் ஏந்தி, பூத கணங்கள் பாடி மகிழ உமா தேவியைப் பாகமாகக் கொண்டு, இடைமருதில் உள்ள சீர்மிக்க கோயிலில் வீற்றிருப்பவர் ஆயினீர்.

603. அழல்மல்கும் அங்கையில்
ஏந்திப் பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர்
சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கு நான்மறையோர்
முறையால் ஏத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே.

தெளிவுரை : அழகிய கையில், எரியும் நெருப்பினை ஏந்தியவாறு, பூதகணங்கள் பாடலுக்கு ஏற்பச் சுழன்று ஆடும் நடனத்தைப் புரியும் தேவரீர், மயானத்தைத் தவிர வேறு இடத்தைக் கருதாதவரய் விளங்குகின்றவர். நீவிர்ல ஆசாரசீலத்தின் எழில் கொண்டு மேவும் அந்தணர்ள் வேதாகம முறைப்படி ஏத்த, இடைமருதில் பொழில்கள் நன்கு விளங்கும் கோயிலே கோயிலாக் கொண்டு பொலிபவர் ஆயினீர்.

604. பொல்லாப் படுதலை யொன்று
ஏந்திப் புறங்காட்டாடலீர்
வில்லாற் புரமூன்றும்
எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும்
முறையால் ஏத்த இடைமருதில்
செல்வாய கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : கரத்தில், பொலிதல் இல்லாத மண்டை ஓடு ஏந்தி, மயானத்தில் ஆடல் புரியும் தேவரீர், முப்புரங்களை எரித்தவராயும், இடபக் கொடி உடையவராயும், சிவகணங்கள் முதலாக எல்லாக் கணங்களாலும் முறையாக ஏத்தப்படுபவராயும், இடைமருதில் செல்வம் பெருக்கும் கோயிலே இடமாகக் கொண்டுள்ளவர் ஆயினீர்.

605. வருந்திய மாதவத்தோர்
வானோர் ஏனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூசம்
ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே
கோயிலாகப் புத்தீரே.

தெளிவுரை : மெய்யினை வருத்தித் தவம் மேற்கொண்ட முனிவர்களும், வானவர்களும் பூவுலகத்தார் மற்றும் ஏனைய அனைவரும் வந்து அடைந்து தைப்பூசத் திருநாளில் நீராடியும், உலக நன்மைக்காக நான்மறையோர் வேதங்களால் ஏத்தியும், விளங்கும் இடை மருதில் தேவரீர், பொருந்தி விளங்கி வீற்றிருப்பவர் ஆயினீர்.

606. சலமல்கு செஞ்சடையீர்
சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண் மழுவொன்று
ஏந்தி மயானத்து ஆடலீர்
இலமல்கு நான்மறையோர்
இனிதாய் ஏத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே.

தெளிவுரை : கங்கை விளங்கும் சடையை உடைய பெருமானே ! மணம் கமழும் நீறு பூசி நாதனே ! வலிமை மிக்க ஒளி பொருந்திய மழுப்படை ஏந்தி, மயானத்தில் ஆடல் புரிபவரே ! ஆசைகளைத் துறந்த நான்மறை வல்ல அந்தணர்கள் இனிதாய் ஏத்த, இடை மருதில் ஞானம் பெருகும் கோயிலிலே கோயில் கொண்டு பொலிபவர் நீவிரே.

607. புனமல்கு கொன்றையீர்
புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர்
இனமல்கு நான்மறையோர்
ஏத்தும் சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.

தெளிவுரை : கொன்றை மலரும் புலியின் தோலாடையும் உடைய பெருமானே ! பெருமை மிக்க இடப வாகனத்தை உடையவராயும், அதில் கரிய கண்டத்தை உடையவராயும் விளங்கும் ஈசனே ! நான்மறையோர் ஏத்தும் சீர் மிகுந்த இடை மருதில் பெருமை மிகுந்த கோயிலில் கோயில் கொண்டு விளங்குபவர் நீவிரே.

608. சிலையுய்த்த வெங்கணையால்
புரமூன்று எரித்தீர் திறலரக்கன்
தலைபத்தும் திண்டோளு(ம்)
நெரித்தீர் தையல் பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும்
வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலமொய்ந்த கோயிலே
கோயிலாக நயந்தீரே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு வெம்மை மிகுந்த கொடிய கணையை எய்து, புரங்கள் மூன்றினையும் எரித்த ஈசனே ! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளும், திண்மையான தோள்களும் நெரித்த பெருமானே ! உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவரே ! இலைகள் மிகுந்து விளங்கும் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் எல்லா தலங்களும் ஒரு சேர விளங்கி அன்பர்களுக்கு வழங்குகின்ற சிறப்புடைய கோயிலின்கண் விருப்பம் கொண்டு வீற்றிருப்பவர் ஆயினீர்.

609. மறைமல்கு நான்முகனு(ம்)
மாலும் அறியா வண்ணத்தீர்
கறைமல்கும் கண்டத்தீர்
கபாலமேந்து கையினீர்
அறைமல்கும் வண்டினங்கள்
ஆலும்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.

தெளிவுரை : மறைவல்ல நான்முகனும், திருமாலும் அறியாத வண்ணத்தையுடைய ஈசனே ! கறைமல்கு கண்டத்தை உடைய பரமனே ! கபாலம் ஏந்திய கையினை உடையீர் ! நல்லோசையுடைய வண்டினங்கள் ஒலித்து ரீங்காரம் செய்யும் சோலையுடைய  இடைமருதில் நிறைவுடைய பெருமை கொண்ட கோயிலில் இருப்பிடம் கொண்டவர் நீவிரே.

610. சின்போர்வைச் சாக்கியரும்
ஆசுசேரும் சமணரும்
துன்பாய கட்டுரைகள்
சொல்லி அல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள்
ஏத்தும் ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே
கோயிலாக அமர்ந்தீரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் துன்பம் தரும் சொற்களைப் புனைந்து சொல்லி வருத்தம் தோன்றுமாறு தூற்றினாலும், அவற்றைப் பொருட்டாகக் கொள்ளாது அந்தணர்கள் மகிழ்வுடன் ஏத்தும் சிறப்புடைய இடைமருதில், அன்புடன் கோயில் கொண்டுள்ள ஈசனே, நீரே அமர்ந்து விளங்குகின்றீர்.

611. கல்லின் மணிமாடக்
கழு மலத்தார் காவலவன்
நல்ல் அரு மறையான்
நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்ல இடைமருதில்
ஏத்து பாடல் இவைபத்தும்
சொல்லு வார்க்கும்
கேட்பார்க்கும் துயரம் இல்லையே.

தெளிவுரை : உறுதி மிக்க மணிமாடங்கள் விளங்கும் கழுமலத்தின் காவலனாய் நலம் விளங்கும் அருமறை வல்ல நற்றமிழ் ஞானசம்பந்தர் ஒளி மிகும் இடைமருதில் ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கும் கேட்டு மகிழ்பவர்களுக்கும் துயரம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

193. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

612. பெண்ணமருந் திருமேனி
யுடையீர் பிறங்கு சடைதாழ
பண்ணமரு நான்மறையே
பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும்
வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : உமாதேவியைத் திருமேனியில் பாகங்கொண்டு விளங்கும் பெருமையுடையவரே ! சிறப்பினால் விளங்கும் சடை, நீண்டு திகழ்ந்திருக்கப் பண்ணிசையுடன் நன்கு பொலியும் நான்கு மறைகளை ஓதி நீவிர் ஆடலும் புரிபவர் ஆவீர். அடர்ந்து திருநல்லூர் என்னும் தலத்தில் தேவரீர் இப்பூவுலகத்தின் சிறப்புத் தோன்ற விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு வீற்றிருந்து மகிழ்ந்துள்ளீர்.

613. அலைமல்கு தண்புனலும்
பிறையும்சூடி அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவும்
அனலும் ஏந்தும் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையால்
புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : கங்கையும் பிறைச் சந்திரனும் சூடி, அழகிய கையில் வெண்மழுப் படையும் நெருப்புக் கனலும் ஏந்தம் இயல்பினையுடைய நீவிர், மேருமலையை வில்லாகக் கொண்டு வெம்மையான கணை தொடுத்து மலை போன்ற கட்டுமானச் சிறப்புடைய கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்து விளங்கும்பவரும் தேவரீர் ஆவீர்.

614. குறை நிரம்பா வெண்மதியும்
சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோடு
ஆடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும்
வயலும்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைக் கங்கை தங்கிய குளிர்ந்த சடையில் சூடி, பறை முழங்கும் பாடலோடு ஆடலும் புரிந்து விளங்குகின்ற நீவிர், பொய்கைகளும் வயலும் சூழ்ந்து விளங்கும் திருநல்லூர் என்னும் பதியின்கண், வேத ஒலி நனிவிளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்து வீற்றிருப்பவர் ஆவீர்.

615. கூனமரும் வெண்பிறையும்
புனலும் சூடும் கொள்கையீர்
மானமரு மென்விழியாள்
பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின்
வண்டுபாடும் திருநல்லூர்
வானமரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : வளைந்த வெண்மையான பிறைச் சந்திரனும், கங்கையும் சூடும் இயல்பினராகிய நீவிர், மான் போன்ற விழியுடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டுள்ள மாண்பினைப் பெற்றவராய்த் தேன் துளிர்க்கும் பொழிலில் வண்டுகள் இசை பாடும் திருநல்லூரில் உயர்ந்த பீடமாகச் சிறப்புடைய கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்தவர் ஆவீர்.

616. நிணங்கவரு மூவிலையும்
அனலும்ஏந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோடு
ஆடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும்
பிறையும்சூடித் திருநல்லூர்
மணங்கமழும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பிணித்து அழிக்கும் ஆற்றல் கொண்ட சூலப்படையும், நெருப்பும் கரத்தில் ஏந்தி, சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி உடனாகி விளங்கி, பாடலும் ஆடலும் கொண்டு மேவும் ஆழகுடையவராய்த் திகழும் நீவிர், திண்மையுற்று ஆடும் அரவத்தையும், பிறைச்சந்திரனையும் சூடித் திருநல்லூரில் அருள் மணம் கமழும் கோயிலே இடமாகக் கொண்டு விளங்கி, ஆங்கு மகிழ்வுடன் வீற்றிருப்பவரும் ஆயினீர்.

617. கார்மருவு பூங்கொன்றை
சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள்
பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக்
கொடிகள் ஆடும் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே
கோயிலாக இருந்தீரே.

தெளிவுரை : கார்காலத்தில் மலரும் கொன்றை மாலை சூடி, நறுமணம் கமழும் சடைமுடி நன்கு விரிந்து தாழ, உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்கும் மாண்புடைய நீவிர், தேர்கள் செல்லும் நெடிய வீதிகளும், அலங்காரக் கொடிகளும் விளங்கும் திருநல்லூர் என்னும் பதியில் சிறப்பின் மிக்கு விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு இருப்பவராவீர்.

618. ஊன்தோயும் வெண்மழுவும்
அனலேந்தி உமைகாண
மீன்தோயும் திசைநிறைய
ஓங்கியாடும் வேடத்தீர்
தேன்தோயும் பூம்பொழிலின்
வண்டுபாடும் திருநல்லூர்
வான்தோயும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பகைத்தவர்களை மாய்த்து, ஊன் தோய வெற்றியுடன் மேவும் மழுப்படையும், நெருப்பும் ஏந்தி, உமாதேவி மகிழ்ந்து காணுமாறு வானில் பொருந்தும், தன்மையில் ஓங்கி உயர்ந்து ஆடுகின்ற திருவேடம்தாங்கிய தேவரீர், தேன் கமழும் பூம்பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில், சிறப்பு மிக்க கோயிலில் வீற்றிருந்து மகிழ்பவராவீர்.

619. காதமரும் வெண்குறையீர்
கறுத்தஅரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாள்
மறுகும்வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள்
பரவியேந்துந் திருநல்லூர்
மாதமரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : காதில் குழையணிந்த ஈசனே ! மனத்டல் இருள் கொண்டு சினமுற்ற இராவணன், கயிலை மலையினை எடுக்க, கலங்கிய அழகிய மென்மொழி உடைய உமாதேவியாரின் வண்ணம் கண்டு உகந்தீர் நீவிர், தீமையின் பாற் சிறிதும் சாராத அந்தணர்கள் பரவியேத்தி வழிபடும் திருநல்லூரில் உள்ள பெருளை விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்தவர் ஆவீர்.

620. போதின்மேல் அயன்திருமால்
போற்றி உம்மைக் காணாது
நாதனே இவன்என்று
நயந்து ஏத்த மகிய்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள்
தீமூன்று ஓம்பும் திருநல்லூர்
மாதராள் அவளோடு
மன்னுகோயில் மகிழ்ந்தீரே.

தெளிவுரை : தாமரையின்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் போற்றி உம்மைக் காணாது தலைவனே என்று விரும்பி ஏத்த, மகிழ்ந்து நற்காட்சியைக் காணுமாறு சோதிச் சுடராய்த் தோன்றினீர். நீவிர், தீவினை தீய்ந்த அந்தணர்கள், ஆகவனீயம், காருக பத்தியம், தட்சணாக்கினி என்னும் மூன்று வகையான தீ வளர்ந்து வேள்வியை ஓம்புகின்ற திருநல்லூரில், அழகியவளாகிய உமாதேவியோடு விளங்குகின்ற கோயிலில் மேவி, மகிழ்ந்து வீற்றிருப்பவர் ஆவீர்.

621. பொல்லாத சமணரொடு
புறங்கூறும் சாக்கியர்ஒன்று
அல்லாதார் அறவுறை விட்டு
அடியார்கள் போற்றோவா
நல்லார்கள் அந்தணர்கள்
நாளும் ஏத்தும் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : சமணர்களும் புறம்கூறும் சாக்கியரும் மனம் ஒன்றி மேவாதவர்களாய் அறவுரைகளை நீத்தவர்களாய் இருக்க, மெய்யான பக்தியுடைய அடியவர்கள் நீங்காது போற்றித் துதிக்கவும், நன்னெறியுடைய அடியவர்கள் நீங்காது போற்றித் துதிக்கவும், நன்னெறிடயுடைய சீலர்களும், வேதம் புகலும் அந்தணர்களும் நாள்தோறும் ஏத்தும் திருநல்லூர் என்னும் தலத்தில், வளம் பெருக்கும் கோயில் இடமாகக் கொண்டு, ஈசனாகிய நீவிர் மகிழ்ந்து வீற்றிருப்பவர் ஆவீர்.

622. கொந்தணவும் பொழில்புடைசூழ்
கொச்மைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன்
சிறைவண் புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள்
பங்கன் றன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார்
சிவலோகம் சேர்ந்திருப்பாரே.

தெளிவுரை : கொத்துக்களாகப் பூக்கும் பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொச்சை வயம் என்னும் சீகாழியின் வேந்தன், செந்தமிழின் இனிய ஞானசம்பந்தர், பொய்ககைகள் நன்கு விளங்கம் திருநல்லூரில் பந்தார் விரலாளாகிய உமையவளைப் பாகம் கொண்டுள்ள ஈசனைப் போற்றியுரைக்கும் இத் திருப்பதிகத்தை, சிந்தை ஒன்றியவராய் உரைப்பவர்கள், சிவலோகத்தில் சேர்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

194. குடவாயில் (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

623. கலைவாழும் அங்கையீர்
கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழும் செஞ்சடையில்
அரவும் பிறையும் அமர்வித்தீர்
குலைவாழை கமுகம் பொன்
பவளம் பழுக்கும் குடவாயில்
நிலைவாழும் கோயிலே
கோயிலாக நின்றீரே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்தி, தேன் விளங்கும் அலைகளைத் தாங்கி மேவும் கங்கையைச் சிவந்த சடையில் திகழ் வைத்து, அரவும் பிறைச் சந்திரனும் வைத்து, விளங்கும் ஈசனே ! வாழையும், பாக்கும் பெருகவும், பொன்னும் பவளமும் கொழித்து மேவும் குடவாயில் என்னும் பதியில் நிலைகொண்டிருக்கும் கோயிலே இடமாகக் கொண்டுள்ளவர் நீவிர்.

624. அடியார்ந்த பைங்கழலும்
சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்தலையொன்று
ஏந்தி உலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர்
குலாவி யேத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே
கோயிலாகப் பயின்றீரே.

தெளிவுரை : திருவடியில் பொருந்தி விளங்குகின்ற அழகிய கழலும் சிலம்பும் ஆர்த்தி ஒலி செய்ய, அழகிய கையில் கபாலம் ஏந்தி உலகில் பலி ஏற்கும் ஈசனே ! வேதங்களை நன்கு பயின்று விரும்பி ஓதும் அந்தணர்கள் பரவி ஏத்தும் குடவாயில் என்னும் பதியில் நீவிர், உலகில் நன்கு விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவீர்.

625. கழலார்பூம் பாதத்தீர்
ஓதக்கடலில் விடமுண்டன்று
அழலாரும் கண்டத்தீர்
அண்டர்போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள்
கீதத் தொலிசெய் குடவாயில்
 த கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.

தெளிவுரை : திருக்கழல் நன்கு விளங்கி ஆர்க்கும் திருப்பாதச் செம்மையுடைய ஈசனே! அலைகொண்டு பாற்கடலில் தோன்றிய அழல் போன்று வெம்மை விளைவிக்கும் நஞ்சினை உண்டு கரியதாய் ஆகிய கண்டத்தை உடைபெருமானே ! தேவர்களெல்லாம் போற்றிப் புகழும் அளவின் எல்லை கடந்தவராகிய நாதனே ! வண்டுகள் குழலின் இசை போன்று ஒலித்து, கீதம் இசைக்கின்ற குடவாயிலின்கண், அருளொளி விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் வீற்றிருப்பவர் ஆயினீர்.

626. மறியாரும் கைத்தலத்தீர்
மங்கைபாக மாகச்சேர்ந்து
எறியாரும் மாமழுவும்
எரியும் ஏந்தும் கொள்கையீர்
குறியார வண்டினங்கள்
தேன் மிழற்றும் குடவாயில்
நெறியாரும் கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.

தெளிவுரை : திருக்கைத்தலத்தில் மான் ஏந்தி, உமாதேவியாரை ஒரு பாகமாகச் சேர்த்து, பகைவரை வீசிச் சாய்க்கும் சிறப்பு மிக்க மழுப்படையும் ஏந்தி, எரியும் ஏந்தி, விளங்கும் ஈசனே ! தேன் விளங்கும் மலர்களைக் கறிப்பாக அடைந்து தேன் சேர்க்கும் குடவாயிலில் வேதாகம நெறியில் விளங்குகின்ற கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் வீற்றிருப்பவர் ஆவீர்.

627. இழையார்ந்த கோவணமும்
கீளும் எழிலார் உடையாகப்
பிழையாத சூலம்பெய்து
ஆடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும்
வயலும் சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே
கோயிலாக மிக்கீரே.

தெளிவுரை : நூலிழையால் இழைக்கப் பெற்ற கிழிதுகில் மற்றும் கோவணம் உடையாகவும், தனது தாக்குதலில் தவறு ஏற்படாததும், ஈசனார் திருக்குறிப்பின்படி பிழை சிறிதும் உண்டாகாதவாறு விளங்கும் சூலமும் கொண்டு, ஆடலும் பாடலும் பேணி விளங்கும் ஈசனே ! தளிர்கள் விளங்கும் பூம்பொழிலும், வயலும் சூழ்ந்த குடவாயில் என்னும் பதியில், திருவிழாக்களின் பொலிவு பெருகி விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் வீற்றிருக்கின்றவர்.

628. அரவார்ந்த திருமேனி
யானவெண்ணீறு ஆடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண்டு
இமையோர்ஏத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை
வாசம் வீசும் குடவாயில்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : அரவம் தவழும் திருமேனியில் ஆக்கம் செய்யும் வெண்ணீறு நனி பூசி, கபாலம் ஏந்திப் பிச்சை கொள்ளவும், தேவர்கள் எல்லாம் ஏத்தி மகிழுமாறு நஞ்சை உண்டு அருள்புரியும் ஈசனே ! நறுமணம் மிக்க குரவ மலர்கள் விளங்கும் பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் செல்வம் விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் திகழ்ந்து விளங்குபவர் ஆவீர்.

629. பாடலார் வாய்மொழியீர்
பைங்கண்வெள்ளேறு ஊர்தியீர்
ஆடலார் மாநடத்தீர்
அரிவை போற்றும் ஆற்றலீர்
கேடலார் தும்பிமுரன்று
இசை மிழற்றும் குடவாயில்
நீடலார் கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : வேதங்கள் ஓதும் திருவாய் மொழியுடைய ஈசனே ! வெண்மையான இடபத்தை வாகனமாக உடையவரே ! நடனக் கலையின் பெருமை தோன்ற சிறப்பான நடனம் புரிகின்ற பெருமானே ! உமாதேவியார் போற்றி மகிழும் அருளாற்றல் உடைய நாதனே ! வெண்காந்தன் மலரில் வண்டு சுற்றி இசை எழுப்பும் குடவாயில் என்னும் ஊரில் உயர்ந்து விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு நீவிர் திகழ்பவர் ஆவீர்.

630. கொங்கார்ந்த பைங்கமலத்து
அயனும் குறளாய் நிமிர்ந்தாலும்
அங்காந்து தள்ளாட
அழலாய் நிமிர்ந்தீர் இலங்கைக் கோன்
தங்காதன் மாமுடியும்
தாளும் அடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே
கோயிலாகப் பகர்ந்தீரே.

தெளிவுரை : தேன் திகழ்ந்து விளங்கும் தாமரை மலரில் விற்றிருக்கும் பிரமனும், சிறிய குறம் வடிவம் எனப்படும் வாமனனாய்ப் பின்னர் நீண்டு உயர்ந்த திருமாலும், வியப்புற்ற நிலையில் வாய் திறந்து அயர்ந்து தம் நிலை தளர, அழலாய் ஓங்கிய ஈசனே ! இராவணன் முடியும் தாளும் அடர்த்த நாதனே ! குடவாயில் என்னும் தலத்தில், அங்கமாகக் கோயில் கொண்டு நீவிர், வீற்றிருந்து ஒளிர்பவர் ஆயினீர்.

631. தூசார்ந்த சாக்கியரும்
தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத்து
எழில்கொள்மாடக் குடவாயில்
ஆசாரம் செய்மறையோர்
அளவிற் குன்றாது அடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் இகழ்ச்சியான புல்லிய பொய்யுரைகளைப் பொருளாகக் கொள்ளாது, எழிமிகுந்த மாடங்களையுடைய குடவாயில் என்னும் பதியில் ஆசார சீலத்துடன் வேள்வி புரிதல் முதலான கிரியைகளைச் செய்யும் மறை வல்லவர்களகிய அந்தணர்கள், தமது பக்தியிலும் ஒழுக்க முறையிலும் செய்ய வேண்டிய அளவின் தன்மையிலிருந்து குறையாது திருவடியைப் போற்ற, பெருமை மிகும் கோயிலை நீவிர் இடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.

632. நளிர்பூந் திரைமல்கு
காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற்
கோயில்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை
உரைத்த பாடல் இவைவல்லார்
தளர்வான தானொழியத்
தகுசீர் வானத்து இருப்பாரே.

தெளிவுரை : குளிர்ச்சியான திரைகள் பெருகும் காழியில் விளங்கும் ஞானசம்பந்தர், குளிர்ச்சியான அருள் விளங்கும் குடவாயிலில் கோயில்கொண்டு மேவும் ஈசனை உரைத்த தமிழ்மாலையால் ஏத்த வல்லவர்கள், தளர்ச்சி அற்றவர்களாய் இம்மையில் விளங்கி, சீர்மிகும் வானுலகத்திலும் சிறப்புடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

195. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

633. நலங்கொள் முத்து மணியும் அணியும் திரளோதக்
கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன்று உடையாய் விடையாய் எனஏத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா வருநோயே.

தெளிவுரை : உயர்ந்த முத்துக்களும் மணிகள் முதலான ஆபரணங்களும் திரளாக மரக் கலங்கள் வழியாகக் கரையில் சேரும் கடல் வழி கொண்ட சிறப்புடைய சீகாழி நகரில், வலிமை மிக்க மழுப்படையும் இடப வாகனமும் உடைய ஈசனே ! என ஏத்தி மலர்மாலை சூட்டுகின்ற அடியவர்களை நோய் அடையாது.

634. ஊரார் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
காரார் ஓதம் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

தெளிவுரை : ஊர்ந்தி செல்லும் சங்குகளைக் கடல் அலைகள் கரைகளில் சேர்க்கும் சீகாழியில், கங்கை தரித்த சடையுடைய ஈசனே ! நெற்றிக் கண்ணுடைய பெருமானே ! என்று ஆயிரம் மறை அவன் திருநாமத்தை தன்னை மறந்த நிலையில் தியானம் செய்யப் பிணியானது நீங்கும்.

635. வடிகொள் பொழிலின் மழலை வரிவண்டு இசைசெய்யக்
கடிகொள் போதில் தென்றல் அணையும் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா என்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க்கும் இல்லை அல்லல் அவலமே.

தெளிவுரை : காற்றினைப் பெருக்கும் பொழிலில் இனிய வண்டுகள் இசையெழுப்ப நறுமணம் வீசும் மலர்களில் தென்றல் அணையும் சீகாழியில் விளங்கும் சடைமுடி உடைய நாதனே ! என்று கைகூப்பித் தொழுபவர்களுக்குத் துன்பமும் வறுமையும் இல்லை.

636. மனைக்கே ஏற வளம்செய் பவளம் வளர்முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டுஈர் உரியாய் பெரியாய் எனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

தெளிவுரை : கடல் அலைகளால் வீசி எறியப்படும் பவளமும் முத்துக்களும் இல்லங்களுக்கே செல்லும் வளப்பம் மிகுந்த சீகாழியில், யானையின் தோலை உரித்துப் போர்த்து விளங்கும் பெருமானே ! எனப் பெருமைகளை மொழிந்து நினைக்கவல்ல அடியவர்கள் நன்மனத்தர் ஆக விளங்குவார்கள்.

637. பரிதி இயங்கும் பாரில் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக்காழிச்
சுருதி மறைநான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின் வழுவா வண்ணம் துயர்போமே.

தெளிவுரை : சூரியன் விளங்கி ஒளி தந்து இயங்கும் இவ்வுலகத்தில், சிறப்பு மிக்க அருள் பணிகள் மேவும் செயலைக் கருதி, தேவர்களும் மண்ணுலகத்தவர்களும் விரும்புகின்ற பெருமை மிக்க சீகாழிப் பதியில் நான்கு தேவங்களுடைய கீதமாக வீற்றிருக்கும் ஈசனை நினைத்து வணங்குபவர்களுக்குத் துயர் நீங்கும்.

638. மந்தமருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண்டு இசைசெய் கலிக்காழிப்
பந்த நீங்க அருளும் பரனே எனஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

தெளிவுரை : தென்றல் மருவி விளங்கும் பொழிலில், சுவை மிக்க தேனை உண்ட வண்டுகள் இசைத்து மகிழும் பெருமை மிக்க சீகாழிப் பதியில், உலகத்தின் பாசத்தால் ஏற்படும் கட்டினை நீங்கச் செய்தருளும் பரனே ! என்று ஏத்தி வணங்குபவர்களின் சிறப்பு எத்தன்மையிலும் நீங்காது நின்று விளங்கிப் புகழ் கொடுக்கும்.

639. புயலார் பூம் நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்றுமுடுகாதே.

தெளிவுரை : மேகம் சூழ்ந்த இவ்வுலகில் ஈசன் திருநாமத்தை ஓதிப் புகழ் மிக்கு விளங்கும் பாடல்களை, மகளிர் பண்ணிசையுடன் இணைந்து பாடும் பெருமையுடைய காழிப்பதியில் விளங்கும் ஈசனைப் பக்தியுடன் தொழுது ஏத்திப் பணிபவர்பால், காலனுடைய வெம்மை நெருங்காது.

640. அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்க கில்லாது அருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் றன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பம் துன்பமான பிணிபோமே.

தெளிவுரை : இராவணனுடைய முடியும் தோளும் நெரிந்து துன்புறுமாறு அடர்த்து, அடியவர்களுக்குக் கரவாது வளமான அரளைப் புரியும் பெருமான், பெருமை மிகுவிழாக்கள் கொண்ட சீகாழிப் பதியில் விளங்கும் ஈசன். அப்பெருமானை ஏத்திப் பணிபவர்கள் இன்பத்தில் பெருகித் திளைத்து மகிழ்வார்கள்; துன்பம் தரும் பிணியானவை யாவும் நீங்கப் பெறுவார்கள்.

641.மாணா உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணதவாறு தீப்பிழம்பாக ஓங்கிய ஈசன், விழாமல்கும் சீகாழியில், ஆபரணம் நனி கொண்ட உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசன் ஆவர். அப்பெருமானைப் புகழ்ந்து ஏத்தி மாறுபாடற்ற மனத்தினராய் வணங்குபவர்கள் குற்றம் இல்லாதவர்களாய் மிளிர்வார்கள்.

642. அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமணாதர்
கஞ்சி காலை யுண்பார்க்கு அரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் றன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.

தெளிவுரை : அச்சத்தின் காரணமாகத் துன்பர் தரும் சொற்களை மொழியும் சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் அறிவதற்கு அரியவனாகி, விழா  முழக்கம் மிகுந்த சீகாழியில் இருப்பிடமாகக் கொண்டு விளக்கும் ஈசனை நினைத்துப் போற்றுபவர்கள், இறத்தல் இல்லாத நல்ல உலகில் இருக்கப் பெறுவார்கள். இது பேரின்பம் வழங்கும் சிவலோகம் என்பது குறிப்பு.

643. ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணும் சம்பந்தன்
தாழு மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

தெளிவுரை : ஊழிக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உயர்ந்த சிறப்பினையுடைய சீகாழியில் வீற்றிருக்கும் ஈசனின் திருக்கழலைப் பேணும் ஞானசம்பந்தர், ஈசனாரைப் பணிந்து உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வாழும் சிறப்பிலிருந்து பிரியாதவர்களாகிய தேவர் உலகத்தில் மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

196. திருப்பாசூர் (அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

644. சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா என்ன மகிழ்வார் ஊர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

தெளிவுரை : என் சிந்தையில் விளங்கி, தலையின்மீது வைகி நின்று, முழுமையும் ஆட்கொண்டு, செம்மையான சொல் பயிலும் வாய்சொல்லாகியும், மைந்தனே ! மணாளனே ! என்று போற்றி ஏத்த மகிழ்பவராகிய ஈசன் விளங்குகின்ற ஊர், பசுமையான குருக்கத்தியில் சோலை சூழ்ந்த பாசூர் என்னும் நகரே போலும்.

645. பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான்என்று
ஆருந் தனையும் அடியார்ஏத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

தெளிவுரை : எத்தகைய செயலையும் தொடங்கும் பொழுதும், நிகழும் பொழுதும் ஈசன் திருநாமத்தை உள்ளார்ந்து, மனம் நிறையக் கூறி மகிழும் அளவும், அடியவர்கள்பால் விளங்கி அருள் புரிபவனாகிய பெருமான், ஊர் செல்லும் அரவத்தை உடையவராய்த் திகழும் ஊரானது, இப்புவியின் மீது இசைப் பாடல்களை ஓய்வின்றி இசைதஅத மகிழும் பாசூர் போலும்.

646. கையால் தொழுது தலைசாய்த்து உள்ள கசிவார்கண்
மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யா டுதல்அஞ்சு உடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

தெளிவுரை : கைகளால் தொழுது வணங்கித் தலை தாழ்த்தி, உள்ளம் பக்தி கொண்டு கசிந்து உருகி நிற்பவர்பால், உடற்பிணியும் மனக்குறையும் தீர்ப்பவர் சிவபெருமான். நெய் முதலான பஞ்ச கவ்வியம் கொண்டு அபிடேகம் கொள்ளும் அப்பெருமான், நிலவி விளங்குகின்ற ஊரானது, நாகலிங்கம், கோடல் பூக்கள் மல்கியுள்ள பாசூர் போலும்.

647. பொங்கா டரவும் புனலும் சடைமேல் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளம் குளிர்வித்தார்
தங்கா தலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.

தெளிவுரை : பொங்கி எழுகின்ற அரவமும் கங்கையும் சடைமுடியின் மீது பொலிவுடன் விளங்கி இருக்க, தேன் துளிர்க்கும் கொன்றைமலர் சூடி, என்னுள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தி, உமாதேவியை உடனாகக் கொண்டு வாழும் ஈசன் திகழும் ஊர், முல்லை அரும்புகள் பெருகி ஓங்கும் பாசூர் போலும்.

648. ஆடல் புரியும் ஐவாய் அரவவொன்று அரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்
வாடல் தலையில் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

தெளிவுரை : படம் எடுத்து ஆடுகின்ற ஐந்து தலைகளை உடைய அரவத்தை அரையில் கட்டி விளங்கும் பெருமை மிக்கவர், என் சிந்தையில் பிரியாது  எக்காலமும் வீற்றிருக்கும் ஈசன் ஆவர். அப்பெருமான், பிரம கபால் ஏந்திப் பலி தேர்ந்து ஏற்கும் கையுடையவர். அவர் ஊரானது, இசை பாடும் குயில்கள் விளங்குகின்ற பூஞ்சோலை திகழும் பாசூர் போலும்.

649. கால்நின்று அதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
தோலொன்று உடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
மால்கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த பாசூரே.

தெளிவுரை : திருப்பாதம் ஊன்றிக் கழல்கள் அதிர்ந்து ஒலிக்கவும், கொடிய விடத்தையுடைய நாகத்தைக் கச்சாகக் கட்டியும், தோலை உடையாகக் கொண்டும். இடப வாகனத்தை உடையவராயும், தொழுபவர்கள் மயக்கத்தை தீர்ப்பவராயும் ஈசன் வீற்றிருக்கும் ஊர், வெண்மதி தோயும் மாடம் சூழ்ந்த பாசூர் போலும்.

650. கண்ணின் அயலே கண்ணொன்று உடையார் கழல்உன்னி
எண்ணுந் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
உள்நின்று உருக உகவை தருவார் ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

தெளிவுரை : இரு கண்களுக்கும் அயலாக நெற்றியில் ஒரு கண்ணுடையவர்; திருவடியை நினைத்து வணங்கும் அடியவர்களுக்கு அருள் செய்பவர்; தியானம் செய்து ஒன்றி நின்று கசிந்து உருகி நிற்பவர்களுக்கு மகிழ்ச்சி தருபவர், ஈசனார் ஆவர். அப்பெருமான், பண்ணுடன் இசைபாடும் அன்பர்கள் விளங்கும் ஊராகிய பாசூர் என்னும் பதியை தமது ஊராகக் கொண்டுள்ளவர் போலும்.

651. தேசு குன்றாத் தெண்ணீர் இலங்கைக் கோமானைக்
கூசஅடர்த்துக் கூர்வாள்கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

தெளிவுரை : தனது பெருமையிலிருந்து குறைவு படாத நிலையில் இலங்கையின் வேந்தனாகிய இராவணன், வீரத்தின் நாணம் கொள்ளுமாறு அடர்த்து, கூரிய வாளை வழங்கி அருள் செய்தவர்; தம்மைப் போற்றிப் புகழ்பாடி வணங்கும் அன்புடையவர்களுக்குப் பெருமை தருபவர், ஈசன். அவர் ஊரானது, நீர் வளம் மிக்கு விளங்குதலால் உண்டாகும் பாசியின் தடமும் வயலும் சூழ்ந்த பாசூர் போலும்.

652. நகுவாய் மலர்மேல் அயனு நாகத்து அணையானும்
புகுவாய் அறியார் புறநின்று ஓரார் போற்றோவார்
செகுவாய் உகுபல் தலைசேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

தெளிவுரை : தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணைமேல் இருக்கும் திருமாலும், ஈசனைக் காண்கின்ற வழி அறியாதவராய்ப் புறத்தே நின்று ஓய்வின்றி போற்றித் துதிக்க, பிரம கபாலம் ஏந்தி விளங்கி கையுடையவராகிய ஈசன், நாரையானது மீன்களைக் கொத்தி வாரிச் செல்லும் நீர் வளத்தை உடைய பாசூர் போலும்.

653. தூயவெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையென்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

தெளிவுரை : வெயிலில் உடலை வருத்தியும் துவராடை கொண்டும் உள்ள புறச் சமயத்தார்கள், கொடிய வார்த்தைகளைக் கூறித் திரிய, அன்பற்றவராயும், பகைமை கொண்டவராயும் இருந்து மூன்று அசுரர்களையும் கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு, கணைதொடுத்த ஈசனாரின் ஊரானது, குரவமலர் விளங்குகின்ற சோலை திகழும் பாசூர் போலும்.

654. ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே.

தெளிவுரை : ஞானம் உணர்ந்த, காழியில் மேவும் ஞானசம்பந்தர், வண்டுகள் இன்னிசை பாடும் திருப்பாசூரில் விளங்கும் ஈசனை, திருவடி சேரும் பாடலாகச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இம்மையில் ஊனம் ஏதும் இல்லாதவராய் விளங்கி, மறுமையில் வானுலகில் நனி விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

197. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

655. உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே.

தெளிவுரை : பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினை உட்கொண்டு காத்தருளிய உமைபங்கனே ! என்று போற்றித் தொண்டுபுரியும் அடியவர்களுக்குத் துயரங்கள் நாடாதவாறு அருள் புரிந்த காக்கும் எந்தையாகிய ஈசன் விளங்கும் ஊரானது, தாமரை மலர்மீது வண்டுகள் அமர்ந்து தேன் அருந்தி யாழ்போன்று இசை எழுப்புகின்ற வெண்காடு போலும்.

656. நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதந்தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே.

தெளிவுரை : தலைவனாக விளங்கும் பெருமான், நம்மை ஆட்கொண்டு நற்கதியை அருள் புரிவான் என்னும் கருத்தில், பல நாள்கள் பணிந்து போற்றுகின்ற அடியவர்களுடைய குற்றம் தீர்த்து அருளிச் செய்ய வீற்றிருக்கும் ஈசன் ஊரானது, வேதவொலிகளைக் கேட்டுப் பழகிய கிளிகள், அதனைச் சொல்லி விளங்கும் வெண்காடு போலும்.

657. தண்முத்து அரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத்து அரும்பக்கழல் சேவடிகை தொழுவார்கள்
உண்முத்து அரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண்முத்து அரும்பிப் புனல்வந்த அலைக்கும் வெண்காடே.

தெளிவுரை : குளிர்ந்த முத்துக்களைப் போன்ற நீர்த்திவலைகளையுடைய மூன்று குளங்கள் விளங்கத் திகழும் பெருமானை நினைத்துக் கசிந்து உருகி, பக்தியுடன் கண்ணீர் மல்கிப் பரவியேத்தி, திருக்கழலைப் பணிந்து கை தொழுபவர்கள் உள்ளத்தில் முத்துப்போன்று மலரும் உவகை தருகினற ஈசன் விளங்கும் ஊர், வெண் முத்துக்களைக் கடலலைகள் வாயிலாகச் சேர்த்துக் குவிக்கும் வெண்காடு போலும்.

658. நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்கு வார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமலத்து அன்ன மருவும் வெண்காடே.

தெளிவுரை : மூப்பின் காரணமாகத் தோன்றும் நரைவந்து அணுகும் முன்பாகப் பக்தி உரையிலிருந்து மாறுபாடு கொள்ளாது தியானம் செய்பவர்கள் உள்ளத்தில், அருளுருவாய் விளங்குகின்ற ஈசன் ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னப் பறவைகள் மருவி வாழும் வெண்காடு போலும்.

659. பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.

தெளிவுரை : இளமையான பிறைச் சந்திரனும், கங்கையும் சூடும் பெருமானை, உள்ளத்தால் ஒன்றி நினைத்து வணங்குபவர்களின் பிணிகள் யாவும் விலகிச் சொல்லுமாறு அருள் புரியும் தலைவனாகிய ஈசன் விளங்குகின்ற ஊரானது, வெண்மையான சங்குகள் கடலலைகள் வாயிலாக வெளியேறிக் கரை கொண்டு திகழும் வெண்காடு போலும்.

660. ஒளிகொள் மேனி உடையாய் உம்ப ராளீயென்று
அளிய ராகி அழுதுற்று ஊறும் அடியார்கட்கு
எளியான் அமரர்க்கு அரியான்வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

தெளிவுரை : சோதி வடிவாய் விளங்கித் தேவர்களை ஆட்கொள்ளும் பெருமானே என்று அன்புடைய நெஞ்சினராகி, பக்தியில் நனிதோய்ந்து கண்ணீர் பெருக விளங்கும் அடியவர்களுக்கு, எளியவனாய் விளங்குபவன் ஈசன். அப்பெருமான் தேவர்களுக்கு அரியவனாய் வீற்றிருக்கின்ற ஊரானது, இந்திரனுடைய வெள்ளை யானையாகிய ஐராவதம் வணங்கும் வெண்காடு போலும்.

661. கோள்வித் தனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித் தவனை மகிழ்ந்துஅங்கு ஏத்த மாணிக்காய்
ஆள்வித்து அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய கூற்றுவனை மாள்வித்து, மார்க்கண்டேய முனிவர் போற்றித் தொழுமாறு சிறந்த பேற்றினை வழங்கிய ஈசன் விளங்குகின்ற ஊரானது, அந்தணர்கள் இயற்றும் வேள்விப் புகையானத வானத்தில் படர்ந்து இருள் போன்று செய்விக்கும் வெண்காடு போலும்.

662. வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியம் சூடி என்று முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தையூர் போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.

தெளிவுரை : முன்கையில் வளையல் பொருந்திய உமாதேவி வெருவித் தோன்றுமாறு கயிலை மலையைத் திருப்பாதமலரால் ஊன்றி, இளைய பிறைச் சந்திரனைச் சூடிய பெருமானை முப்போதும் குறைவில்லாது போற்றித் துதிக்கப்படுபவனாகிய எந்தையாகிய ஈசன் விளங்குகின்ற ஊர், விளைச்சலை நன்கு தருகின்ற கழனிகளும் பொய்கைகளும் சூழ்ந்த வெண்காடு போலும்.

663. கரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான் அமரக் கரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணாதவாறு சோதி வடிவாய் ஓங்கிய எங்கள் பெருமானே ! என்று போற்றி வணங்குபவர்களுக்கு உரியவனாய் விளங்குகினற ஈசன், அமரர்களுக்கு அரியவனாய் வாழும் ஊர், விரிந்து பரவும் பொழிலில் வண்டு இசை பாடும் வெண்காடு போலும்.

664. பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.

தெளிவுரை : அடியவர் பலரும் சூடிப் பாடிப் போற்றி பரிவுடையவராய்ப் புகழ் மொழிகள் கூற, ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டிய பெருமானைச் சமணர்களும், சாக்கியர்களும் உணராத திருக்கோலத்தை உடைய அவ் ஈசன் பதியாவது, வெண்காடு ஆகும்.

665. விடையார் கொடியான் மேவி உறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றும் காழியான்
நடையார் இன்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்கு
அடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.

தெளிவுரை : இடபக் கொடியுடைய ஈசன் மேவி உறைகின்ற வெண்காட்டை, கடைவாயில் பொருந்திய மாடங்களை உடைய சீகாழியில், ஒழுக்கத்தைப் பெருகச் செய்யும் இனிய சொற்கள் அளிக்கும் ஞானசம்பந்தர், போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வினை அற்றவர்கள் ஆவார்கள்; தேவலோகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

198. திருமீய்ச்சூர் (அருள்மிகு மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

666. காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரைத் தொழுது வினையை வீட்டுமே.

தெளிவுரை : பஞ்ச பாணம் எனச் சொல்லப்படும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்னும் ஐங்கணையால் தாக்கிய மன்மதனின் உடலின் வடிவத்தை எரித்து, கங்கையைப் படர்ந்த சடைமுடியில் ஏற்றுப் பதியுமாறு செய்த மேலான பரம்பொருளாகிய ஈசன், மாயை வல்ல சூரபத்மனை மாய்த்த அழகனாகிய முருகவேளின் தந்தையாவார். அப் பெருமானுடைய மீயச்சூரைத் தொழுது வணங்கி நும்மைப் பற்றியுள்ள வினையை வீழ்த்துவீராக.

667. பூவார் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

தெளிவுரை : கொன்றை முதலான பூக்கள் பொருந்திய சடை முடியின் மீது கங்கையையுடைய ஈசன், நெருப்பைக் கரத்தில் கொண்டு விளங்குபவர், நாவார மறை நவிலும் பெருமானாவார்; பிறைச் சந்திரனைத் தரித்து விளங்குபவர்; பிரம கபாலம் ஏந்தியவர். அப்பெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினியை நீண்ட அம்பாகத் தொடுத்து, பகைவராய் நின்ற மூன்று அசுரர்களையும் மதில்களையும் எரித்தவர். அவர் மீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவனே ஆவார்.

668. பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம்எய்தற் கரிதன்றே.

தெளிவுரை : பொன் போன்ற கொன்றை மாலை புரளும் அகன்ற திருமார்பை உடைய ஈசன், மின்னலைப் போன்று சிவந்த ஒளிரும் சடைகளை உடையவனாய், மீயச் சூரானாய், தனக்கு இணையாக வேறு எவரும் இல்லாதவனாய் விளங்குபவன். அப்பெருமானைத் தலையால் வணங்குபவர்களுக்கு இமையோர் உலகத்தில் மேவித் திகழும் சிறப்பு கிடைத்தற்கு அரியதாகாது. தேவருலகம் கிடைத்தற்கு எளியது என்ற குறிப்பு ஆயிற்று.

669. வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடமாடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.

தெளிவுரை : மரம் பொருந்திய யானை வெருவ அதனை உரித்துப் போர்த்து, உமாதேவியைப் பாகமாகக் கொண்டு துதிப்பாடல்களைப் பாட, நாகத்தை அரையில் கட்டி, நடனம் ஆடிய ஈசன், மேகத்தை உரிஞ்சி இழுக்கும் உயர்ந்த பொழில் சூழ்ந்த மீயச்சூரில் விளங்கும் பரமன் ஆவர்.

670. விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்று உடையார் மீயச் சூராரே.

தெளிவுரை : ஈசன், இடபக் கொடியுடையவர்; சடை முடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடியவர்; பூதப் படைகள் சூழ விளங்கிப் பாடுதலும் ஆடுதலும் கொண்டவர்; பெடை சூழ வண்டுகள் சேரும் கொன்றை மாலை அணிந்தவர்; விடை போன்ற பீடுநடையுடைய மீயச்சூரில் விளங்குபவர்.

671. குளிரும் சடைகொள் முடிமேல் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட(ம்) நவில்நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே.

தெளிவுரை : குளிர்ந்த கங்கை தரித்த சடைமுடியின் மீது அழகிய கொன்றை மலர் தரித்து, ஒளிர்கின்ற பிறைச் சந்திரனைச் சூடிய ஒருவன், கையை வளைத்த மென்மையான மாலை கொண்டு நடனம் புரியும் ஈசன் ஆவான். அவன் அரவத்தை உடையவனாய் விளங்கம் மீயச்சூரானே.

672. நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாம் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.

தெளிவுரை : ஈசனார், நீல மிடற்றினையுடைய அழகர்; தீத்திரட்சியாக நெடிது ஓங்கியவர்; திருவடிவத்தை யாரும் அறியவொண்ணாத தன்மையர்; திருக்கழல் அணிந்த திருவடியுடையர்; யானையின் தோலை உரித்தவர்; மழுப்படை உடையவர்; மேன்மையானவர்; மதி சூடியவர்; விதியாக விளங்குபவர். அவர் மீயச்சூரில் விளங்கும் பெருமானாவார்.

673. புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற்சுரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வண்கண் அரக்கர் கோன்றன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.

தெளிவுரை : ஈசன், புலியின் தோலை ஆடையாகக் கொண்டவர்; திருநீறு மெய்யில் பூசுபவர்; ஆராவாரித்து எழுகின்ற கங்கையைச் சடையில் (கரந்து) மறைத்தவர்; உமாதேவியார் அஞ்சி நிற்குமாறு இலங்கையின் வேந்தனாகிய இராவணன் தோளை நெரித்து மலையின்கீழ் அடர்த்தவர். அவர் மீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவனே.

674. காதில் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதிலவனு(ம்) மாலும் தொழப் பொங்ககொரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

தெளிவுரை : ஒளிரும் குழையைக் காதில் உடையவராய், கரிய கண்டத்தவராய் விளங்கும் ஈசனார், பிரமனும் திருமாலும் தொழுமாறு எரிகின்ற சோதிப் பிழம்பனவர். அப்பெருமான், வண்டு கோதி ஒலிக்கும் பூக்களையுடைய பொய்கையில் எருமைகள் படிந்து நீரில் மூழ்கித் திளைக்கவும், வயல் சூழ்ந்தும் விளங்கும் மீயச்சூரை உடையவர் ஆவார்.

675. கண்டார் நாணும் படியார் கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

தெளிவுரை : திகம்பரரும் சாக்கியரும் சொல்லும் சொற்களை ஒரு பொருட்டாகக் கொள்ளாது, உயர்ந்த கொள்கையின் தன்மையினால் உமாதேவியைப் பாகமாக உடையவர் ஈசன். அவர் பெரிய மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவர். அவர் மீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவர்.

676. வேட முடைய பெருமான் உறையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம் பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே.

தெளிவுரை : பலபல வேடம் கொண்டுள்ள பெருமானாகிய ஈசன் உறையும் மீயச்சூரைப் போற்றி, விரும்பும் புகழ் யாவும் பொருந்திய புகலி நகரில் விளக்கும் ஞானசம்பந்தர் பாடல்களாகிய இத்திருப்பதிகத்தை ஓதி உள்ளம் பக்தியில் திளைக்கும் அடியவர்கள், அகன்ற வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

199. அரிசிற்கரைப்புத்தூர் (அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

677. மின்னும் சடைமேல் இளவெண்
திங்கள் விளங்கவே
துன்னும் கடல்நஞ்சு இருள்தோய்
கண்டர் தொல்மூதூர்
அன்னம் படியும் புனலார்
அரிசில் அலை கொண்டு
பொன்னும் மணியும் பொருதென்
கரைமேல் புத்தூரே.

தெளிவுரை : மின்னலைப் போன்று ஒளிரும் சடை முடியின் மீது இளமையான பிறைச் சந்திரன் வெண்மையான ஒளி கொண்டு திகழ, கரிய நஞ்சினைக் கண்டத்தில் உடைய ஈசன் வீற்றிருக்கும் பழைமையான ஊர் என்பது, அன்னம் வாழ்கின்ற நீர் மிக்க அரிசில் ஆற்றின் நீர் அலைகள் பொன்னும் மணியும் கொண்டு கரையில் சேர்க்கும் புத்தூர் ஆகும்.

678. மேவா அசுரர் மேவெயில்
வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையால்
எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாத(ன்) நாமம்
ஓதி நாள்தோறும்
பூவால் நீரால் பூசுரர்
போற்றும் புத்தூரே.

தெளிவுரை : பகைமைகொண்ட அசுரர்கள் பாதுகாப்பு கொண்டு பதுங்கி இருந்த மூன்று கோட்டைகள் வெந்து சாம்பலாகுமாறு மேருலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கொடிய அம்பாகத் தொடுத்து எய்தவனாகிய ஈசனுடைய தொன்மையான ஊரானாது, அந்தணர்கள் நாவினால், நாதன் நாமத்தை நாள்தோறும் ஓதி, பூக்கள் தூவி, நீரால் பூசித்துப் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும்.

679. பல்லார் தலைசேர் மாலை
சூடிப் பாம்பும் பூண்டு
எல்லா விடமும் வெண்ணீறு
அணிந்தோர் ஏறுஏறிக்
கல்லார் மங்கை பங்க
ரேனும் காணுங்கால்
பொல்லார் அல்லர் அழகியர்
புத்தூர்ப் புனிதரே.

தெளிவுரை : மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாக அணிந்து, பாம்பும் ஆபரணமாகப் பூண்டு, திருமேனி முழுமையும் திருவெண்ணீறு விளங்குமாறு பூசி, ஒப்பற்ற இடபத்தை வாகனமாகக் கொண்டு மலைமகளாகிய உமாதேவியைப் ஒருபாகமாக உடைய அழகர், புத்தூரில் வீற்றிருக்கும் புனிதராகிய ஈசன் ஆவர்.

680. வரியேர் வளையாள் அரிவை
அஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த
கடவுள் கருதும்ஊர்
அரியேர் கழனிப் பழனம்
சூழ்ந்தங்கு அழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ்
சோலைப் புத்தூரே.

தெளிவுரை : வளையல் அணிந்துள்ள உமாதேவியும் அஞ்சுமாறு சீறி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் கருதுகின்ற ஊரானது, தவளைகள் விளங்குகின்ற கழனிகளும், குளங்களும் சூழ்ந்ததும் புங்க மரங்கள் பூக்களைச் சொரிகின்றதும் உள்ள சோலைகள் கொண்ட புத்தூர் ஆகும்.

681. என்போடு அரவம் ஏனத்து
எயிறோடு எழில்ஆமை
மின்போல் புரிநூல் விரவிப்
பூண்ட மணிமார்பர்
அன்போடு உருகும் அடியார்க்கு
அன்பர் அமரும் ஊர்
பொன்போது அலர்கோங்கு ஓங்கு
சோலைப் புத்தூரே.

தெளிவுரை : ஈசன், எலும்பு, பாம்பு, பன்றியின் கொம்பு, அழகு மிக்க ஆமை இவற்றுடன் மின்னல் போன்று ஒளிரும் முப்புரிநூல் விரவிப் பூண்ட திருமார்பினர். அப்பெருமான், அன்புடையவர்களாய் மனங் கசிந்து உருகிப் போற்றும் அடியவர்களுக்கு அன்பராய் விளங்குகின்ற ஊரானது, பொன்போன்ற கொன்றை மலரும் கோங்கும் ஓங்குகின்ற சோலையுடைய புத்தூர் ஆகும்.

682. வள்ளி முலைதோய் குமரன்
தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்று
உடையான் மேவும்ஊர்
தெள்ளி வருநீர் அரிசில்
தென்பால் சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை
சூழ்ந்த புத்தூரே.

தெளிவுரை : வள்ளி நாயகியை மணம் புரிந்த முருக வேளின் தந்தையாகிய ஈசன், வானை முட்டும் உயர்ந்த கயிலைபோன்ற கம்பீரமான தோற்றம் கொண்டுள்ள வெள்விடையினை வாகனமாக உடையவர். அப்பெருமான் மேவி இருக்கும் ஊரானது, தெளிந்த நீர் பெருகும் அரிசில் ஆற்றில் தென்பால், சிறகுகளை உடைய வண்டும், பறவைகளும் மலிந்த பூக்கள்திகழும் பொய்கை சூழ்ந்த புத்தூர் ஆகும்.

683. நிலந்த ணீரோடு அனல்கால்
விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழ
னாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு
அன் றோர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை
போற்றும் புத்தூரே.

தெளிவுரை : நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் தன்மையாக விளங்கும் ஈசன், சிலந்தியாக இருந்து சிவபூசை செய்தமையால் கோச்செங்கட் சோழனாக்கிய அருளாளர். அப்பெருமான் வீற்றிருக்கின்ற ஊரானது, துயரம் கொண்ட அடியவர்க்கு நித்தமும் காசு நல்கி அருள்புரிந்து காலையும் மாலையும் போற்றுகின்ற சிறப்புடைய புத்தூர் ஆகும்.

684. இத்தேர் ஏக இம்மலை
பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ்
அலறப் பாதந்தான்
வைத்தார் அருள்செய் வரதன்
மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார்
வினைகள் போகுமே.

தெளிவுரை : தேரினைத் தடைப்படுத்திய கயிலை மலையை எடுத்து வேறு இடத்தில் பேர்த்துவைக்கும் நோக்கத்தில் செயல்பட்ட இராவணனை, அலறுமாறு திருப்பாத மலரால் வைத்து அடர்த்து அருள் செய்த பரமன், விரும்புகின்ற ஊரான புத்தூர் என்னும் பதியைக் காணப் புகுபவர்கள் வினையானது நீங்கும்.

685. முள்ளார் கமலத்து அயன்மால்
முடியோடு அடிதேட
ஒள்ளார் எரியாய் உணர்தற்கு
அரியான் ஊர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீர்
ஆம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல
தோன்றும் புத்தூரே.

தெளிவுரை : முள்ளுடைய தண்டின்மேல் விளங்கும் தாமரையில் விளங்கும் பிரமனும் திருமாலும் திருமுடியும் திருப்பாதமும் தேட, ஒளி மிகுந்த பெருஞ்சோதியாகி, உணர்வதற்கு அரியவனாகி விளங்கிய ஈசனுடைய ஊரானது, தேன் துளிர்க்கும் நெய்தல், கழுநீர் ஆம்பல், தாமரை ஆகிய பூக்களையுடைய பொய்கையும் பறவைகளும் வாழும் புத்தூர் போலும்.

686. கையார் சோறு கவர்குண்
டர்களும் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர்
சொல்லு மெய்யல்ல
பொய்யா மொழியால் அந்தணர்
போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க்கு ஐயுறவு
இன்றி அழகாமே.

தெளிவுரை : சமணர்களும், தேவர்களும் கூறும் சொற்கள் மெய்யல்ல. பொய்யா மொழியாகிய வேதத்தால் அந்தணர்கள் போற்றுகின்ற புத்தூரில் வீற்றிருக்கும் ஈசனை, ஐயா தலைவா என்று ஏத்தி வழிபடுகின்ற அடியவர்கள் அழகுடையவராய் விளங்குவார்கள்.

687. நறவம் கமழ்பூங் காழி
ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான்
ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் தமிழ்செய் மாலை
செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந்து அன்போடு
இன்பம் அடைவாரே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் பூங்காழியில் மேவும் ஞானசம்பந்தர், படம் எடுத்தாடும் அரவத்தை ஆபரணமாகப் பூண்ட ஈசன் அருளாட்சி புரியும் புத்தூரின் மீது, செறிவான வண் தமிழால் செய்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள், அறத்தின் நாயகனாகிய அரன் கழல் சேர்ந்து, அன்பின் வயத்தினராய் விளங்கிப் பேரின்ப நுகர்ச்சியை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

200. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

688. தேவா சிறியோம் பிழையைப்
பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்றுஅங்கு அடியார்
தங்கட்கு அருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள
உயர்ந்தாய் என்றேத்தி
மூவா முனிவர் வணங்கும்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : தேவாதி தேவனே ! சிறியவர்களுடைய பிழைகளைப் பொறுப்பவனே ! யாவர்க்கும் முதன்மையனாய் விளங்கும் பெரியோனே ! ஆகும் நெறி கொண்டு மேவும் அடியவர்களுக்கு அருள் செய்பவனே ! ஓய்வில்லாது நிகழும் பிறவி என்னும் கடலில் இருந்து கரையேற்றிக் காத்தல்பொருட்டு உயர்ந்து விளங்கும் நாதனே ! என்று ஏத்தி, பிறவிகளின் தன்மையில் மூவாத முனிவர் பெருமக்கள் வணங்குகின்ற கோயில் முதுகுன்றம் ஆகும்.

689. எந்தை இவன் என்று இரவி
முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயிலாகத்
திகழ்வானை
மந்தி யேறி யினமாய்
மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்கும்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : எந்தை பிரான் என்று, சூரியன் முதலான தேவர்கள் வணங்கிப் பக்தியுடன் போற்ற, சிந்தையுள் கோயிலாகத் திகழ்பவன் ஈசன். அப் பெருமானை வானர இனங்களும் மலர் கொண்டு, கூட்டம் கூட்டமாக முந்திக் கொண்டு சென்று தொழுது வணங்குகின்ற கோயில் முதுகுன்றம் ஆகும்.

690. நீடு மலரும் புனலும்
கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை
யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலின் அயலே
கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகில்தோய்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : மிகுதியான மலர் கொண்டு அர்ச்சித்தும், தூய நீர் கொண்டு பூசனை செய்தும், மாயை வயப்படுத்தலும் வினை நுகர்தலும் ஆகிய இம் மானுடப் பிறவியிலிருந்து விடுபட்டு, நிரந்தரமாகிய ஈசன் திருவடிப் பேறாகிய முத்திப் பேரின்பத்தை விரும்புகின்ற மெய்யடியார் சிந்தையுள் திகழ்பவன் ஈசன். அப்பெருமான் வீற்றிருப்பது குயில்கள் தம் இனிய குரலால் ஏத்திப் பாடியும்; கிளிகள், வேத கீதங்களைக் கேட்டுப் பயின்று அவற்றால் ஏத்திப் போற்றுதல் செய்யவும் திகழ்கின்ற அடர்ந்த சோலைகள், முகிலினைப் பொருந்துமாறு மேவும் முதுகுன்றம் ஆகும்.

691. தெரிந்த அடியார் சிவனே
என்று திசைதோறும்
குருந்த மலரும் குரவின்
அலரும் கொண்டேந்தி
இருந்து நின்றும் இரவும்
பகலும் ஏத்தும்சீர்
முரிந்து மேகம் தவழும்
சோலை முதுகுன்றே.

தெளிவுரை : நன்கு உணர்ந்த அடியவர்கள், சிவனே என்று தியானித்த, எல்லாத் திசைகளிலிருந்தும் நறுமணம் கமழும் குருந்த மலரும் குரவ மலரும் கொண்டு ஏந்தி, நின்றும், இருந்தும் தூவி, இரவும் பகலும் ஏத்தும் சிறப்புடைய, மேகம் தவழும் சோலை உடைய முதுகுன்றம் ஆகும்.

692. வைத்த நிதியே மணியே
என்று வருந்தித்தம்
சித்தம் நைந்து சிவனே
என்பார் சிந்தையார்
கொத்தார் சந்தும் குரவும்
வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : என்னுடைய செல்வமாக விளங்கிக் காக்கும் சிவபெருமானே ! என்று உள்ளம் உருகிப் போற்றி, இதுவரை போற்றுதல் செய்யாது காலத்தைப் போக்கியது குறித்து வருந்தியும் விளங்கும் பக்தர்கள் சிந்தையில் வீற்றிருக்கும் நாதனின் கோயில் சந்தனமும், குரவமும் வாரிக் கொண்டு கரை சேர்க்கும் மணிமுத்தாற்றின் கரையில் திகழும் முதுகுன்றம் ஆகும்.

693. வம்பார் கொன்றை வன்னி
மத்த மலர்தூவி
நம்பா என்ன நல்கும்
பெருமான் உறை கோயில்
கொம்பார் குரவு கொகுடி
முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு
பாடு முதுகுன்றே.

தெளிவுரை : நறுமணம் விளங்குகின்ற கொன்றை மலர், வன்னிப் பத்திரம், ஊமத்த மலர் ஆகியவற்றைத் தூவி நம்பனே ! என்று போற்ற, அருள் புரிஎம் பெருமானாகிய சிவபெருமான் உறைகின்ற கோயிலானது, பூங்கொம்புகளில் விளங்கும் குரவமலரும், சிறப்பான கொகுடி முல்லையும், குவிந்து, வளமையான சோலைகள் திகழ வண்டுகள் இடைபாடும் முதுகுன்றம் ஆகும்.

694. வாசம் கமழும் பொழில்சூழ்
இலங்கை வாழ்வேந்தை
நாசம் செய்த நங்கள்
பெருமான் அமர்கோயில்
பூசை செய்து அடியார்
நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ்
சோலை முதுகுன்றே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கையில் வேந்தனாகிய இராவணனை அடர்த்து, அவனது ஆணவத்தை அழித்து விளங்கி எங்கள் சிவ பெருமான் அமர்ந்து இருக்கும் கோயிலானது, சிவபூசை செய்து அடியவர்கள் உள்ளத்தால் ஒருமித்து நின்று வாயாரப் புகழ்ந்து ஏத்த, வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலையுடைய முதுகுன்றம் ஆகும்.

695. அல்லி மலர்மேல் அயனும்
அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர
வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர் கூடி
நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல்
செய்யு முதுகுன்றே.

தெளிவுரை : தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலும், காணவேண்டும் என்று சொல்லிக் காணவொண்ணாத சோதியாகிய ஈசன் வீற்றிருக்கின்ற ஊர், வேடர்கள் கூடி விளங்கி ஏத்தி வழிபட, முல்லை அரும்புகள் விளங்கும் முதுகுன்றம் ஆகும்.

696. கருகு முடலார் கஞ்சி
யுண்டு கடுவேதின்று
உருகு சிந்தை இல்லார்க்கு
அயலான் உறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே
வளையச் சிறுமந்தி
முருகின் பணைமேல் இருந்து
நடம்செய் முதுகுன்றே.

தெளிவுரை : சிந்தை செய்யாதவர்களும் புறச் சமயத்தினரும் காண முடியாதவாறு விளங்கும் ஈசன் உறையும் கோயிலானது, முறுக்கிய மூங்கில்கள் வளையுமாறு குரங்கின் குட்டிகள் பாய்ந்து சிறிய கிளையின் மீது குதித்து ஆடும் முதுகுன்றம் ஆகும்.

697. அறையார் கடல்சூழ் அந்தண்
காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும்
கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப்
பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான்
கழல்கள் பிரியாரே.

தெளிவுரை : ஒலித்து முழங்கும் கடல் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய அழகிய சீகாழியில் மேவி விளங்கும் ஞானசம்பந்தர், நெறிமுறையின்படி தவமுனிவர்கள் வணங்கும் கோயிலாகிய முதுகுன்றினைக் குறைவிலாப் பதிகமாகப் பாடும் இத் திருப்பதிகத்தை அன்பர்கள் கூடிப் பாட, பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன் கழலின் கீழ்ப் பிரியாது வீற்றிருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

201. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

698. கறையணி வேலிலர் போலும்
கபாலம் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலு(ம்)
மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும்
பாசம் பிடித்திலர் போலும்
பிறையும் சடைக்கிலர் போலும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : சிவபெருமான், பகைவரை வென்று இரத்தக் கரையும் ஊனும் பதிந்த கறையுடைய சூலத்தை உடையவர்; பிச்சை ஏற்கப் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து ஆணவத்தை அழித்து, அத் தலையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டவர்; நான்கு வேதங்களையும் நன்கு ஓதியவர்; பாம்பினை ஆர்த்து விளங்குமாறு தரித்தவர்; டமருகம் என்னும் உடுக்கையைக் கரத்தேந்தி நடம் புரிபவர்; பாசக் கயிற்றைப் பிடித்திருப்பவர்; பிறைச் சந்திரனைச் சடையில் சூடியவர். அப்பெருமான் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர். (இலர்போலும் என்பது உளர் என்னும் குறிப்பைத் தருவது ஆகும்.) ஈசன் தமது திருக்குறிப்பால் செய்யும் அருட்செயல் மரபு குறித்து வீரச் செயலாக உணர்த்தப்படுவதாம்.

699. கூரம்பது இலர் போலும்
கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும்
ஆமை அணிந்திலர் போலும்
தாரும் சடைக்கிலர் போலும்
சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலஇலர் போலும்
பிரம புரம் அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினியைக் கூரிய அம்பாக உடையவர்; கொக்கின் இறகு சூடியவர்; மணிமாலை தரித்தவர்; ஆமை ஓட்டினை அணியாகப் பெற்றவர்; சடையில் கொன்றை மாலை சூடியவர்; சாண்டீசருக்கு அருள் செய்தவர்; பேராயிரம் பல உடையவர். அவர் பிரம புரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

700. சித்தர் வடிவிலர் போலும்
தேசந் திரிந்திலர் போலும்
கத்தி வருங் காளி
கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க்கு
ஆழி அளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும்
பிரம புரம் அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், சித்தர் வடிவுடைய அழகர்; ஊர்கள் எல்லாம் திரிந்து பிச்சை ஏற்பவர்; சினத்துடன் வந்த காளியின் சீற்றம் தணியுமாறு உருத்திர தாண்டவம் புரிந்து விளங்கியவர்; தனது கண்ணைப் பெயர்த்து அருச்சித்த திருமாலுக்குச் சக்கரப் படையை வழங்கியவர்; பித்தராக வடிவு கொண்டு இருப்பவர். அப்பெருமான் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர்.

701. நச்சரவு ஆட்டிலர் போலு(ம்)
நஞ்ச மிடற்றிலர் போலும்
கச்சுத் தரித்திலர் போலும்
கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலு(ம்)
முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும்
பிரம புரம்அமர்ந்த தாரே.

தெளிவுரை : ஈசன், நஞ்சுடைய அரவத்தை அசைத்த விளங்குபவர்; நஞ்சினை மிடற்றில் உடையவர்; கச்சு அரையில் கட்டியவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; வலிமையான பேய்க் கூட்டத்தில் விளங்கி இருப்பவர்; முப்புரத்தை எரித்து அழித்தவர்; கபாலம் ஏந்திப் பிச்சை எடுத்தவர். அப்பெருமான் பிரம புரத்தில் வீற்றிருப்பவர்.

702. தோடு செவிக்கிலர் போலும்
சூலம் பிடித்திலர் போலும்
ஆடுதடக்கை வலிய
யானை யுரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும்
ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், செவியில் தோடு அணிந்து, இருப்பவர்; சூலத்தைக் கரத்தில் ஏந்தி இருப்பவர்; ஆடுகின்ற பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை உரித்தவர்; திருக்கரத்தில் பிரம கபாலத்தைத் திருஓடாகக் கொண்டு விளங்குபவர்; ஒருகரத்தில் ஒளி விடுகின்ற நெருப்பைக் கொண்டவர். அப்பெருமான், பெருமை மிகுந்தும் செல்வச் செழிப்பும் உடைய பிரமபுரத்தில் வீற்றிருப்பவர்.

703. விண்ணவர் கண்டிலர் போலும்
வேள்வி அழித்திலர் போலும்
அண்ணல் அயன்றலை வீழ
அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொடு அக்கு
வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணின மொய்த்துஎழு செல்வப்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், தேவர்களுக்குள் அருள் புரிபவர்; தக்கன் செய்த புன்மையான வேள்வியைத் தகர்த்தவர்; ஐந்து முகத்தையுடைய பிரமனின் ஒரு தலையைக் கொய்து, ஆணவ மலத்தைக் களைந்து நான்முகனாக விளங்கச் செய்தவர்; அழகிய எலும்பு மாலையுடன் உருத்திராக்க மாலையும் தரித்து விளங்குபவர். அப்பெருமான் பெண்டிர் சேர்ந்து, விளங்குகின்ற திருத்தொண்டுகள் புரியும் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர்.

704. பன்றியின் கொம்பிலர் போலும்
பார்த்தற்கு அருளிலர் போலும்
கன்றிய காலனை வீழக்
கால்கொடு பாய்ந்திலர்போலும்
துன்று பிணஞ்சுடு காட்டில்
ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், பன்றியின் கொம்பினை அணிகலனாகப் பெற்றவர்; அர்ச்சுனருக்குப் பாசுபத அத்திரம் அருளிச் செய்தவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் நோக்கில் சீறி வந்த காலனின் உயிரைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்தவர்; மயானத்தில் ஆடி மகிழ்கின்றவர்; பெருமையும் பிணைப்பும் பெருகும் பிரமபுரத்தில் அவர் வீற்றிருப்பவர்.

705. பரசு தரித்திலர் போலும்
படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை
அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும்
புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த
பிரம புரம் அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், மழு ஏந்த விளங்குபவர்; தலை மாலை அணிந்து இருப்பவர்; இராவணனை அடர்த்தவர்; இளைய மானை ஏந்தியவர்; புலித் தோலை ஆடையாகக் கொண்டவர். அவர், தேன் கமழும் மலர்ப் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்து விளங்குபவர்.

706. அடிமுடி மாலயன் தேட
அன்றும் அளப்பிலர் போலும்
கடிமலர் ஐங்கணை வேளைக்
கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப்
பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், திருமாலும் பிரமனும், திருப்பாதமும் சடைமுடியும் தேடக் காணவொண்ணாதவர் ! ஐந்து மணம் தரும் மலர்க்கணைகளையுடைய மன்மதனை நெருப்புக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவர்; பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலை ஈந்த பெருமான். அவர் வீற்றிருப்பது பெண் யானை போன்று அழகிய நடையுடைய பிரமபுரம் ஆகும்.

707. வெற்றரைச் சீவரத் தார்க்கு
வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆல்நிழல் நால்வர்க்கு
அறங்கள் உரைத்திலர் போலும்
உற்றலர் ஒன்றிலர் போலும்
ஓடு முடிக்கிலர் போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், மாற்றுச் சமயத்தார்க்கு வெளிப்பட்டுக் காணாதவர்; முற்றும் துறந்த சனகாதி முனிவர்களுக்கு ஆல நிழலில் தட்சணாமூர்த்தித் திருக்கோலத்தில் அறம் உரைத்தவர்; பழிச்சொல்லும் தாங்குபவர்; கையில் பிரமகபாலத்தை ஏந்தியவர்; இடப வாகனம் உடையவர். அவர் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

708. பெண்ணுரு ஆணுரு அல்லாப்
பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன எல்லாம்
அறிந்து வகைவகை யாலே
நண்ணி ஞானசம் பந்தன்
நவின்றன பத்தும்வல் லார்கள்
விண்ணவ ரோடினி தாக
வீற்றிருப் பாரவர் தாமே.

தெளிவுரை : பெண்ணாகவும், ஆணாகவும், அதன்பால் இல்லாத வேறாகவும் விளங்கிப் பிரமபுரம் என்னும் நகரில் மேவும் அண்ணல், தானே முனைந்து செய்யாமையும் அருளால்  திரு உள்ளத்தின் பாங்கில் நிகழ்ந்தமையும் நண்ணிவாறு ஞானசம்பந்தர் நவின்ற இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவர்களுடன் இனிது வீற்றருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

202. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

709. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே.

தெளிவுரை : திருநீறானது, மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கி வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றை அணிகின்றனர். மனிதர்களுக்கு இது, வானவர்களைவிட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியும் திருநீறு, துதிக்கப்படும் பொருளாக உள்ளது. உமையவனைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின் திருநீறு இத்தகையது ஆகும்.

710. வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவத நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : வேதத்தால் சிறப்பாகப் போற்றப்படுகின்ற பெருமையடையது திருநீறு. உலக வாழ்க்கையில், ஐம்புலன்கள் வழி ஏற்படும் பிறி முதலானவற்றால் நேரும் துன்பத்தையும், அந்தக்கரணமாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவற்றின்வழி நேரும் துயரங்களையும் தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மை, ஓதத்தகுந்த பெருமையுடையதும், உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடியதும் ஆகும். இது திருவாலவாய் அண்ணலாக விளங்கும் ஈசனுக்கு உரிய திருநீறு.

711. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

தெளிவுரை : திருநீறு, முத்தி இன்பத்தைத் தருவது; முற்றும் துறந்த முனிவர் பெருமக்கள் அணியும் பெருமையுடையது; எக் காலத்திலும் மேலானதாக விளங்கிப் பெரும்பேறும் நலமும் இன்பமும் வழங்கும் சத்தியப் பொருளாக இருப்பது. இத்தகைய திருநீற்றை, அதன் மகிமையறிந்து, நன்குணர்ந்த சிவனடியார்கள் புகழ்ந்து பாராட்டிப் போற்றுகின்றனர். திருநீறானது மன்னுயிர்களுக்குச் சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். வணங்கத்தக்க இனிய பொருளாகித் தெய்வத்தன்மை கொண்டு விளங்கும் திருநீறு, எட்டுவகையான சித்தகளைத் தரவல்லது. அது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்குரிய திருநீறு ஆகும்.

712. காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

தெளிவுரை : திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள் இனிமை கொள்வார்கள். அத்தகைய பொலிவை அளிக்கவல்ல திருநீற்றை விரும்பிப் போற்றிப் புனிதமாகக் கொண்டு அணிகின்ற பெருமக்களுக்குப் பெருமை கொடுக்கும்; வல்லமை தரும்; இறப்பினைத் தடுக்கும். நல்லறிவையும் சிவஞானத் தெளிவையும் தரும் ஆற்றல் உடையது திருநீறு. மன்னுயிர்களுக்கு மேன்மையையும் உயர்வையும் தரும் ஆற்றல் உடைய இத் திருநீறு, இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுடைய திருநீறே ஆகும்.

713. பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : திருநீறு மெய்யில் பூசி அணிய, இனிமையாக்கித் துர்க்கந்தத்தைப் போக்கும் சிறப்பும், நன்மணம் வீசும் வண்ணமும், பிணி நீக்கமும் செய்யவும் புண்ணியத்தின் செய்களால் பெறும் அத்துணைச் சிறப்பினையும் அளிக்கும். திருநீற்றின் செம்மை யாவர்க்கும் இனிமை தருவதால் புகழ்ந்து பேசும் தன்மையில் இனிமை காணும்; பெரிய தவத்தை மேற் கெண்டுள்ள சீலர்களுக்கு உறுதுணையாக, உலக பந்தத்தால் உண்டாகும் ஆசைகளை நீக்கி, உயர்ந்த நிலைக்கு செல்ல வழி வகுக்கும் எல்லாவற்றுக்கும் முடிந்த முடிவாக  அந்தமாகத் திகழ்வது திருநீறு. தேசமெல்லாம் புகழ்ந்து போற்றும் சிறப்புடைய இத் திருநீறு, திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

714. அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

தெளிவுரை : பொன்போன்ற பெரிய செல்வமாக விளங்குவத திருநீறு, அவலமாகும் துன்பத்தைப் போக்குவதும், மனத்தில் வருத்திக் கொண்டிருந்து துன்புறுத்தும் நெஞ்சக் கனலைத் தணித்து விளக்குவதும், சிறப்பினை அளிப்பதும், எல்லா நிலைகளிலும் பொருந்தி விளங்கிச் சிறப்புத் தருவதும் திருநீறு. புண்ணியத் தன்மை கொண்டதுடன், புண்ணியம் செய்த பெருமக்கள் விரும்பிப் பூசி, மேலும் பொலிவு கொள்வதற்கும் காரணமாவது திருநீறு. செல்வம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனார்க்கு உரிய திருநீறு, இத்தகைய சிறப்பினை உடையதாகும்.

715. எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : முப்புரத்தை எரித்தச் சாம்பலாக்கியது திருநீறு; இம்மை, மறுமை ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு; நித்தியமாயும் உயர்ந்த பொருளாயும் பயின்று, நுகரும் பொருளாக உடையது நீறு; அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது; மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்துப் புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப்படையுடைய திருஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

716. இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே.

தெளிவுரை : இராவணன் திருநீறு அணியப் பெருமையுறச் செய்தது; எண்ணத்தால் தகுதியாக்கிப் போற்றி வழிபடுவதற்கு உரியது திருநீறு;  பராபரனைப் போன்று துதிக்கப்படும் பொருளாக விளங்குவது, பாவத்தைப் போக்குவதும் திருநீறு; தராவணமாக இருப்பது திருநீறு. அது தத்துவமாகவும் விளங்கி நிற்பது. அத்தகையது, அரவம் அணைந்து விளங்கும் திருமேனியராகிய திருஆலவாய் அண்ணலுக்கு உரியதாகிய திருநீறு ஆகும்.

717. மாலொ அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு; விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் தமது மெய்யில் பூசி மகிழ்வது திருநீறு ஆகும்; செம்மையான இத் தேகத்தில் நேரும் இடர்களான பிணி முதலான துன்பத்திலிருந்து காத்து அருள் செய்து, இன்பத்தை அவ்வப் புலன் வழி உயிருக்கு அளிக்கவல்லது இத் திருநீறு; அத்தகைய சிறப்புடைய, நஞ்சினையுண்ட மிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

718. குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்ட்த தவர்பணிந் தேத்தும் ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு; திருநீற்றை நெஞ்சில் பதித்த போதும் இனிமையைத் தரவல்ல அத்தகைய தெய்வீகம் உடையது. எண் திசையில் உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சரணடைந்த பெருமக்களும் ஏத்தும் சிறப்புடையது திருநீறு; அத்தகையது, தேவர்கள் பணிந்து ஏத்தும் திருஆலவாய் அண்ணலாகிய ஈசனார்க்கும் உரிய திருநீறு.

719. ஆற்றல் அடல்விடையேறும் ஆலாவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

தெளிவுரை : வலிமைமிக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற ஆலவாய் அண்ணலாரின் திருநீற்றைப் போற்றித் துதித்த ஞானசம்பந்தர், மன்னவனாகிய கூன்பாண்டியனுடைய தீமையான பிணி யாவும் தீரும்வகையில் தேற்றிச் சாற்றிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

203. திருப்பெரும்புலியூர் (அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

720. மண்ணுமோர் பாகம் உடையார்
மாலுமோர் பாகம் உடையார்
விண்ணுமோர் பாகம் உடையார்
வேதம் உடைய விமலர்
கண்ணுமோர் பாகம் உடையார்
கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகம் உடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசனாரின் அகண்ட திருமேனியில் இப்பூவுலகம் அங்கமாக விளங்கும். திருமாலும், விண்ணுலகமும் வேதமும் பாகம் உடைய அப்பெருமான், மலமற்ற நின்மலராய் விளங்கி, யாவற்றையும் நோக்கி மிளரச் செய்யும் தன்மையுடையவர். அவர், கங்கையைச் சடையில் ஈர்த்து வைத்து, உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு, பெரும் புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

721. துன்னு கடற் பவளம்சேர்
தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலு(ம்)
மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு
கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : கடலின் பவளம் போன்று ஒளிரும் தூயகொடி போன்ற மேனியும் உறுதியான தோள்களும் உடைய கங்கையின் கிளைகள் யாவும் பதினாறு கலைகளை உடைய திங்களுடன் சடையில் கலந்து பின்னிய ஈசன் விளங்கும் இடம் பெரும்புலியூர் ஆகும்.

722. கள்ள மதித்த கபாலம்
கைதனி லேமிக ஏந்தித்
துள்ள மிதித்துநின்றாடும்
தொழிலர் எழில் மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை
விரிசடை மேல்மிளிர்கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : விஞ்சிய ஆணவமலத்தை அகழ்ந்தெடுக்கும் அருள் வண்ணத்தால் பிரமனது ஒரு தலையைக் கொய்து, அதனைக் கபாலமாகத் திருக்கரத்தில்  ஏந்தித் துள்ளி நின்ற, நடம் பயிலும் தன்மையுடைய எழில்மிகு செல்வராகிய ஈசன், வெண்மையான மண்டை ஓட்டு மாலையணிந்து, விரிந்து தாழும் சடைமுடியின்மேல் மிளிர்கின்ற பிறைச் சந்திரனைச் சூடி, பெரும்புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

723. ஆடல் இலையம் உடையார்
அருமறை தாங்கி ஆறங்கம்
பாடல் இலையம் உடையார்
பன்மை ஒருமைசெய்து அஞ்சும்
ஊடல் இலையம் உடையார்
யோகுஎனும் பேரொளி தாங்கிப்
பீடல் இலையம் உடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன், நடனக் கலையின் இலயம் (லயம்) உடையவராய், அரியதாகிய நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் ஆகிய கீதமாகிய இசை  வண்ணமும் உடையவர். விரிந்து பரந்து சிதைந்து பலவகைப்பட்ட எல்லையற்றதாயும், யாவும் ஒருங்கச் செய்யுமாறு ஏகமாயும் விளங்கும் அப்பெருமான், ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், நாசி, செவி ஆகியவை ஒன்றுக் கொன்று முரணும் தன்மையில் மேவுபவர். யோகம் என்னும் பேரொளி பரவுமாறு திகழ்ந்தும் அப்பெருமான் பெரும்புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

724. தோடுடை யார்குழைக் காதிற்
சூடுபொடி யார்அனல் ஆடக்
காடுடை யார் எரி வீசும்
கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொருள் இன்ப
நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன், ஒரு காதில் தோடும், மற்றொன்றில் குழையும் அணிந்தவர்; திருநீறு பூசியவர்; அனல் வீசும் மயானத்தில் கையில் எரியும் நெருப்பின் ஒளி வீசுமாறு ஆடுகின்றவர்; கடலால் சூழப்பெற்ற இவ்வுலகத்தை உடையவர். அடியவர்களுக்குத் தேவையான பொருளும், இன்பமும் மற்றும் உள்ள நன்மை வாய்ந்தவர். அப்பெருமான் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர்.

725. கற்றது உறப்பணி செய்து
காண்டும்என் பார்அவர் தங்கண்
முற்றிது அரிதும்என் பார்கண்
முதலியர் வேதபு ராணர்
மற்றிது அறிதுமென் பார்கண்
மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசனார்தம் அரிய பெருமைகளை நூல்கள் வாயிலாக கற்று, அவ்வழி நின்று வணங்கிப் பணிகள் ஆற்றி ஒழுகும் அன்பர் தங்கள் வயத்தனாய் மேவும் பரமர், முற்றும் அறிதற்கு அரியவர். அவர், யோக நிலையில் விளங்கும் அன்பர்களுக்கு முதற் பொருளாய்த் தோன்றி காட்சி நல்கும் வேதபுராணர்; நன்கு உணர்ந்த ஞானிகள் மனத்தில் விளங்கி ஒளிர்பவர். திருப்பணிகளும் தொண்டுகளும் ஆற்றும் அடியவர் பெருமக்களைப் பெரிதும் விரும்பும் அப்பெருமான், பெரும்புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

726. மறையுடை யார்ஒலி பாடல்
மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார்
குழகர் அழகர்நம் செல்வர்
கறையடைய யார்திகழ் கண்டங்
கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேல்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன், வேதத்தை உடையவர்; புகழ்ப் பாடல்களைத் கூறும் அன்பர்கள் திருவடியைத் தொழுது போற்றி வணங்க, குறைகளைத் தீர்ப்பவர்; அன்புடையவர்; அழகுடையவர்; நம் செல்வர்; கறை பொருந்திய கண்டத்தையுடைய திருநீலகண்டர்; கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் பெரும்புகலியூரில் விளங்குபவர்.

727. உறவியும் இன்புறு சீரும்
ஓங்குதல் வீடெளி தாகித்
துறவியும் கூட்டமும் காட்டித்
துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியம் சிந்தனை மாற்றி
வாழவல் லார்தமக்கு என்றும்
பிறவி யறுக்கும் பிரானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன்பால் அன்பின் வயப்பட்ட பக்தி உறவும், இன்பம் உறுகின்ற சிறப்பும் ஓங்கிப் பெருகும் பாங்கானது, வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற முத்தி இன்பத்தை அடைதற்கு எளிதாக்கும் என்னும் வண்ணத்தால் துறவின் வயப்பட்ட மனமும், அடியவர்கள் திருக்கூட்டத்தின் இணக்கமும் காட்டி யருள்பவன் இறைவன். அந்நிலையில் மனம் பக்குவம் அடையும் வண்ணம் துன்பமும் இன்பமும் தோற்றுவித்து, மறத்தல் என்னும் சிந்தனையை மாற்றி, எக்காலத்திலும் பரமன் சிந்தையே கொள்ளுமாறு புரிபவன் அவனே. அத்தகைய நெறியில் வாழும் பண்பினை உடையவர்களுக்கு, எத்தன்மையாலும் மீண்டும் பிறவாமையைத் தந்தருளும் பெருமான் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர் ஆவார்.

728. சீருடை யார்அடி யார்கள்
சேடர்ஒப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு
நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார்
தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை :  ஈசன், சிறந்த புகழ் உடையவர்; அடியவர்கள் போற்றும் பெருமையுடையவர்; சடை முடியில் கங்கை தரித்தவர்; திருநீறு பூசி அணியும் திருவுள்ளத்தவர்; கொன்றை மாலை தரித்தவர்; இடப வாகனத்தில் ஊர்ந்து வருபவர்; யவார்க்கும் தலைவர்; திருநாமங்கள் பல உடையவர். அப்பெருமான் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர்.

729. உரிமை யுடையடி யார்கள்
உள்ளுற உள்கவல் லார்கட்கு
அருமை யுடையன காட்டி
அருள்செயும் ஆதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலும்
கடிமலர் அண்ணலும் காணாப்
பெருமை யுடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : உள்ளத்தால் அடிமை பூண்டு உரிமை பூண்ட அடியவர்கள் நெஞ்சுள் மேவி அருமையுடையவராய் அருள்புரியும் ஆதி முதல்வராகிய ஈசன், திருமாலும் பிரமனும் காணாத பெருமையுடையவர்; அவர் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர்.

730. பிறைவள ரும்முடிச் சென்னிப்
பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை
வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினர் ஆகி
நீடுல கத்திருப் பாரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய சடைமுடியுடைய  பெரும்புலியூரில் வீற்றிருக்கும் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்த காழியில் விளங்கும் நற்றமிழ் ஞானசம்பந்தர் போற்றி வேதம் நிகர்த்ததாய் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தமது துயர் நீங்கி நிறைவான மகிழ்ச்சி கொண்ட நெஞ்சினராய் இவ்வுலகத்தில் நீண்ட வாழ்நாளைப் பெற்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

204. கடம்பூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

731. வானமர் திங்களு(ம்) நீரு(ம்)
மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத்
தேவர் தொழப்படு வானைக்
தேவர் தொழப்படு வதனைக்
கானம ரும்பிணை புல்கிக்
கலைபயி லும்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத்
தாள்தொழ வீடெளி தாமே.

தெளிவுரை : சந்திரனும் கங்கையும் மருவி விளங்கும் நீண்ட சடை முடியுடைய ஈசனை, தேன் பொருந்திய கொன்றை மலர்மாலை தரித்தவனாகிய நாதனை, தேவர்களால் தொழப்படும் பெருமானை, கானில் விளங்கும் பிணையோடு ஆண் மான்கள் பயில்கின்ற கடம்பூரில் வீற்றிருக்கும் பரமனைத் தொழுது வணங்க, வீடு பேறு எளிதில் கைகூடும்.

732. அரவினொடு ஆமையும் பூண்டு
அம்துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன்மேல்
வெண்திங்கள் சூடி விரும்பிப்
பரவும் தனிக்கடம் பூரில்
பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய
இன்ப(ம்) நமக்கது வாமே.

தெளிவுரை : அரவத்துடன் ஆமையும் அணிகலனாகப் பூண்டு விளங்குபவர் ஈசன். அவர், அழகிய துகில் கொள்ளும் உமாதேவியாரைப் பாகமாகவும், புலித்தோல் கொள்ளும் தமது இயல்பும் விரவப் பெற்று அர்த்தநாரியாகவும், வெண்திங்களைச் சூடி விளங்குபவர். அப்பெருமான், அடியவர்கள் விரும்பிப் பரவு கடம்பூரில் இடப வாகனத்தையுடையவராய் வீற்றிருப்பவர். அவருடைய திருப்பாதத்தை இரவும் பகலும் பணிந்து ஏத்த, நமக்கு இன்பம் விளையும்.

733. இளிபடும் இன்சொலி னார்கள்
இருங்குழல் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த
தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி
ஒண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான்
பொற்கழல் போற்றது நாமே.

தெளிவுரை : இனிய பண்போன்ற சொல்லுடைய மங்கையரின் கூந்தல் போன்று, வேள்வித் தீயின் புகையானது விளங்கிப் பரவும் கடம்பூரில், வெண்பிறை சூடி, நெற்றிக் கண்ணுடைய ஈசன் உமாதேவியுடன் இனிது வீற்றிருந்து புலியின் தோலை ஆடையாகப் புனைந்து மேவுபவர். அப்பெருமானுடைய பொன் போன்ற கழலைப் போற்றுவோமாக.

734. பறையொடு சங்கம் இயம்பப்
பல்கொடி சேர்நெடு மாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார்
கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாட்ல
மருவிநின்று ஆடல் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப்
பேணவல் லார்பெரி யோரே.

தெளிவுரை : பறை ஒலியும் சங்கின் ஒலியும் ஆரவாரித்து ஓங்க, பலவகையான வண்ணக் கொடிகளையுடைய நெடிய மாடங்களில், மை முதலான வண்ணங்களைத் தீட்டிய வேல் போன்ற அழகிய கூர்மையான கண்களை உடைய மகளிர் நடனம் புரியும் ஒலி சேரும் கடம்பூரில், வேதம் ஒலிக்க, பாடலுக்கு ஏற்ப ஆடல் புரியும் பிறைசூடிய சடையுடைய ஈசனைப் பெருமக்கள் போற்றுகின்றனர்.

735. தீவிரி யக்கழல் ஆர்ப்பச்
சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள்
நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த
கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார்
பழியொடு பாவம் இலாரே.

தெளிவுரை : நெருப்புப் போன்ற சிவந்த சடையானது விரியவும், கழல் ஒலிக்கவும், யாங்கணும் செந்தீயானது பரவி எரியும் இடுகாட்டில் நாக்குகளை நீட்டியும் கூந்தலை விரித்தும் பேய்க் கணங்கள் நகை செய்து மகிழுமாறு நடனம் புரிபவன் சிவபெருமான். அப் பெருமான், சோலைகளில் விளங்கும் கொன்றை மலர் சூடி, நெற்றிக் கண்ணுடையவனாய்க் கடம்பூரில் விளங்க, புகழ்ப் பாடல்களைப் பாடிப் போற்றும் அடியவர்கள், பழியும் பாவமும் அற்றவர்கள் ஆவார்கள்.

736. தண்புனல் நீள்வயல் தோறும்
தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண்டு ஏறக்
கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறுடை யானைப்
பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார்
பாவம் இலாதவர் தாமே.

தெளிவுரை : குளிர்ந்த நீர் விளங்கும் வயல்களில் தாமரை பூத்துத் திகழ, அதன் மீது அன்னப் பறவைகள் வாசம் செய்யவும், கண்களுக்கு இனிய விருந்தாக விளங்கும் சோலையில் வண்டுகள் சுழன்று அமர்ந்து தேன் துளிர்க்கவும் திகழும் கடம்பூரில் வீற்றிருக்கும் உமாதேவியைக் கூறுடைய சடைமுடியுடைய ஈசனை இசையுடன் போற்றிப் பாடுபவர்கள், பாவமற்றவர்கள் ஆவர்.

737. பலிகெழு செம்மலர் சாரப்
பாடலொடு ஆடல் அறாத
கலிகெழு வீதி கலந்த
கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான்
ஒண்ணுத லாள்உமை கேள்வன்
புலியதள் ஆடையி னான்றன்
புனைகழல் போற்றல் பொருளே.

தெளிவுரை : பூசைக்குரிய செம்மையான மலர்கள் திகழ்ந்து மல்க, பாடலும் ஆடலும் விளங்கும் ஒலி மிக்க வீதிகளும், மேகம் தவழும் வயல்களும் சூழ்ந்த கடம்பூரில் வீற்றிருக்கும் கங்கையைச் சடை முடியில் தேக்கி வைத்து, புலியின் தோலினை ஆடையாகக் கொண்டு உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசனின் திருக்கழலைப் போற்றுதல், பயன் தரும் உண்மையான பொருளாம். இது பிறவி எடுத்ததன் பயன் ஈசன் திருவடியை வணங்குதல் என உணர்த்தப் பெற்றது.

738. பூம்படு கிற்கயல் பாயப்
புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளும்
கண்கவ ரும்கடம் பூரில்
மேம்படு தேவியொர் பாக(ம்)
மேவிஎம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித்
திசைதொழத் தீய கெடுமே.

தெளிவுரை : அழகிய நீர்நிலையில் கயல் பாயவும், புள்ளினங்கள் திரிந்து செல்லவும், மூங்கில் போன்ற மெல்லிய தோள்களையுடைய மகளிர் விளங்கும் கடம்பூரில் வீற்றிருக்கும் ஈசனை, உமாதேவியுடன் விளங்கும் பெருமானே என வாழ்த்தி மலர் தூவி அருச்சித்துத் தொழ, தீயன யாவும் கெட்டழிந்து நீங்கும்.

739. திருமரு மார்பில் அவனும்
திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா
எரிஉரு வாகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த
கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார்
வானுல கம்பெறு வாறே.

தெளிவுரை : திருமகளை மார்பில் உடைய திருமாலும், திகழ்ந்து விளங்கும் சிறப்பான வண்ணமலராகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும், அறிய முடியாதவாறு தீப்பிழம்பாகிய ஈசன், கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணன் அழுந்து மாறு திருப்பாதத்தால் அடர்த்த கண்ணுதலான் ஆவார். அவர் கடம்பூரில் வீற்றிருக்க, அவரைப் போற்றிப் பாடுபவர்கள், வானுலக வாழ்வைப் பெறும் பேறுடையவர்கள் ஆவார்கள்.

740. ஆடை தவிர்த்துஅறம் காட்டும்
அவர்களும் அம்துவர் ஆடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார்
சொல்லினும் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும்
விகிர்தனம் வேத முதல்வன்
காட தனில்நட மாடும்
கண்ணுத லான்கடம் பூரே.

தெளிவுரை : ஆடைகளைத் தவிர்த்துத் திகம்பரர்களாய் விளங்கி அறநெறியைக் காட்டுபவர்களும், அழகிய துவராடை உடுத்தியவர்களும் ஆகிய புறச் சமயத்தினர் நல்ல நெறிக்குரிய சொற்களைச் சொல்லாதவர்கள். அவ்வாறு சொல்லினும் அவை மெய்ம்மையுடைய ஞானம் ஆகாது. பலவாறாகத் திருவேடங்கள் தாங்கி அருள்புரியும் விகிர்தனாகியும், நம் வேத முதல்வனாகியும், முதுகாட்டில் (மயானம்) ஆடும் ஈசனை, கடம்பூரில் வீற்றிருக்கும் கண்ணுதலானைக் கண்டு தொழுமின்.

741. விடைநவி லுங்கொடி யானை
வெண்கொடி சேர்நெடு மாடம்
கடைநவி லுங்கடம் பூரிற்
காதல னைக்கடற் காழி
நடை நவில் ஞானசம் பந்த(ன்)
நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார்
பழியொடு பாவம் இலாரே.

தெளிவுரை : இடபத்தைக் கொடியாக உடைய ஈசன், வெண்மையான வண்ணக் கொடிகள் சேர்மாடங்களையடைய கடம்பூரில் மகிழ்ந்து வீற்றிருப்பவன். அப் பெருமானைக் காழி நகரின் ஞானசம்பந்தர் நன்மை விளங்குமாறு ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பழியும் பாவமும் அற்றவராய்த் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

205. திருப்பாண்டிக்கொடுமுடி (அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

742. பெண்ணமர் மேனியி னாரும்
பிறைபுல்கு செஞ்சடை யாரும்
கண்ணமர் நெற்றியி னாரும்
காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும்
இமையவர் ஏத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவரும், பிறைச் சந்திரனைச் சூடிய செம்மையான சடையுடையவரும், நெற்றிக் கண் உடையவரும், காதில் குழை அணிந்து விளங்குபவரும் எண்குணத்தையுடையவரும், தேவர்களால் போற்றப்படுபவரும், இசை மேவும் பாடலில் விளங்கும் இறைவரும், பாண்டிக் கொடுமுடியில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்.

743. தனைக்கணி மாமலர் கொண்டு
தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்
நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : மலர்கொண்டு, திருத்தாளைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு, வினையானது பகை கொண்டு தீமை புரியாதவாறு காத்து அருள்புரிபவர் ஈசன். தேவர்களும் வித்தியாதரர்களும் நெஞ்சில் நினைத்துப் போற்ற, துயர் தீர்ப்பவர் அப் பெருமான். அவர், உமாதேவியார் அச்சங் கொள்ளுமாறு, பருத்த துதிக்கையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தி, விளங்கும் பாண்டிக்கொடுமுடியில் மேவும் ஈசனே.

744. சடையமர் கொன்றையி னாரும்
சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
பொறிகிளர் பாம்படைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பாண்டிக்கொடிமுடியில் வீற்றிருக்கும் ஈசன் சடைமுடியில் கொன்றை மலர் சூடியவர்; மணம் கமழும் திருவெண்ணீறு அணிந்தவர்; பூத கணங்கள் புடைசூழ விளங்குபவர்; படம் விரித்தாடும் பாம்பினை இடுப்பில் கச்சையாகக் கட்டியுள்ளவர்; இடபக் கொடியுடையவர்; ஒளிமிக்க மழுவும், மூன்று இலைகளையுடைய சூலமும் படைக்கலனாகக் கொண்டு விளங்குபவர்.

745. நறைவளர் கொன்றையி னாரு(ம்)
ஞாலமெல் லாம்தொழுது ஏத்தக்
கறைவளர் மாமிடற் றாரும்
காடரங்காக்கனல் ஏந்தி
மறைவலர் பாடலி னோடு
மண்முழ வம்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் ஈசன், தேன் மணக்கும் கொன்றை மாலை அணிந்தவர்; உலகமெல்லாம் தொழுது போற்றும் வண்ணமாக நஞ்சருந்திய நீலகண்டத்தினர்; சுடுகாட்டினை அரங்கமாகக் கொண்டு நெருப்பினைக் கரத்தில் ஏந்தி, மறை திகழும் பாடலும் மண்ணால் ஆன முழுவதும் குழலும், மொந்தையும் இசைத்து முழங்கப் பறை ஒலிக்கவும் விளங்குபவர்.

746. போகமும் இன்பமும் ஆகிப்
போற்றியென் பார்அவர் தங்கள்
ஆகம் உறைவிட மாக
அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமும் திங்களும் சூடி
நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : ஈசன், தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிப்போனும் பேரின்பமும் ஆகியவன்; போற்றித் தொழுகின்ற அடியவர்கள் தேகத்தைக் கோயிலாகக் கொண்டுள்ளவன். அப்பெருமான் கொன்றை மலரும் நாகமும் சந்திரனும் சூடி, உமாதேவியை ஒரு பாகத்தில் இருத்தி உகந்தவர். அவர் பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

747. கடிபடு கூவிள மத்தம்
கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரம் செற்ற
பொருசிலை யென்னுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு
மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : நறுமணம் விளங்கும் வில்வம், ஊமத்தம் ஆகியவற்றைக் கமழ்கின்ற சடையின்மேல் தரித்தவராய் முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கிய மேருமலையை வில்லாக உடையவராய்த் திகழ்பவர் ஈசன். அப் பெருமான், வடிவுடைநாயகி என்னும் நாமம் கொண்ட அம்பிகையுடனாகி நன்மணம் பொலிய உலகில் தோன்றி, விளக்கும் எல்லா வடிவிற்கும் காரணமாகி விளங்குகின்ற திருக்கோலத்தை உடையவராகி, பாண்டிக் கொடுமுடியில் வீற்றிருப்பவர்.

748. ஊனமர் வெண்டலை யேந்தி
உண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது
சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைகள் ஆலும்
காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பிரம கபாலம் கையில் ஏந்தி, உண்பதற்கு எனப் பிச்சை கொண்டு உழல்கின்ற ஈசன் தேன் போன்ற மொழிபயிலும் உமாதேவியைத் திருமேனியில் பாகங்கொண்டு, சோலைகளில் மயில்கள் ஆடக் காவிரியின் அழகிய கரையின் மீது பால்போன்ற திருவெண்ணீற்றுத் திருமேனியராக விளங்கும் அவர், பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

749. புரந்தரன் தன்னொடு வானோர்
போற்றியென்று ஏத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாரும்
காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : தேவேந்திரன் மற்றும் வானவர்களும் ஈசனைப் போற்றித் துதிக்கின்றனர். அந்நிலையில் ஆற்றல் மிக்க இராவணன் கயிலை மலையை எடுக்க, அவனை அடர்த்த அப்பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் இருத்தித் திருநீலகண்டராய் விளங்கி, கரிய அகில் கட்டைகளும், பலவிதமான மணிகளும் உந்திக் கரையில் சேர்க்கும் காவிரியின் பக்கம் மருவிய பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருப்பவர் ஆவார்.

750. திருமகள் காதலி னானும்
திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்அவர் காணாப்
பேரழல் ஆகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து
வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : திருமகளின் நாயகனாகிய திருமாலும் பெருமை மிக்க தாமரை மலரின் மீது விளங்கும் பிரமனும் காணாதவாறு பேரழல் ஆகிய ஈசன், மணம் மிகுந்த சந்தன மரங்களை உந்தித் தள்ளிக் கரையில் சேர்க்கும் காவிரியின் பக்கத்தில் மணிகள் கொழிக்கும் நீர்த்துறையின்கண் விளங்கும் பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருப்பவர் ஆவார்.

751. புத்தரும் புந்தியி லாத
சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார்
வேடம் பலபல வற்றால்
சித்தரும் தேவரும் கூடிச்
செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பௌத்தர்களும் சமணர்களும் பொய்யுரை அன்றி மெய்ம்மைத் தவத்தைப் புகலாதவர் ஆவர். பற்பலவாறு திருக்கோலத்தை உடைய சித்தரும் தேவரும் கூடியும் செழுமையான புதுமலர் கொண்டு தூவிப் போற்றியும் பணிந்து ஏத்தும் பெருமையுடையவர் பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் இறைவன் ஆவார். அவரை வணங்குமின்.

752. கலமல்கு தண்கடல் சூழ்ந்த
காழியுற் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப்
பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்தும்
சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தையு ராகி
நன்னெறி யெய்துவர் தாமே.

தெளிவுரை : மரக்கலங்கள் மல்கிய கடல் சூழ்ந்த சீகாழிப் பதியில் மேவும் ஞானசம்பந்தர், பயன் மிகுந்த பிரம கபாலத்தை ஏந்திய பெருமானாகிய ஈசனின் பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலத்தைச் சொற்களில் சிறப்பான பாடலாகச் சொல்லிய இத்திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள் துயர் நீங்கப் பெறுவார்கள்; நலம் திகழும் சிந்தையுடையவர்களாய் மகிழ்ச்சியுற்றவர்கள் ஆவார்கள்; நன்னெறியாகிய ஞான மார்க்கத்தை அடைந்தவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

206. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

753. பிரமனூர் வேணுபுரம் புகலி
வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னம்
சிரபுரம் புறவம் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவயம்
உள்ளிட்டங்கு ஆதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக்
கழுமலம் நாம் பரவும் ஊரே.

தெளிவுரை : பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு பெருநீராக, விளங்கும் கடலில் மிதந்த தோணிபுரம், சிறப்பான பூந்தராய், பொன்னென அழகு மிக்க, சிரபுரம், புறவம், சண்பை, அரன் மகிழ்ந்து பொலியும் குளிர்ச்சி மிகுந்த சீகாழி, கொச்சைவயம் ஆகிய பெயரால் சேர்ந்து ஆதியாக விளங்குகின்ற பரமனுடைய ஊர் பன்னிரண்டு பெயர்களாய் விளங்கும் கழுமலம். அது நாம் பரவி இருக்கின்ற ஊர் ஆகும்.

754. வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு
வெங்குரு வெள்ளத் தோங்கும்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச்
சிரபுரம் புறவம் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை
வயம் சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும்
கழுமலர் நாம் கருது மூரே.

தெளிவுரை : வேணுபுரம், பிரமபுரம், புகலி, பெருமைமிகு, வெங்குரு, பிரளய வெள்ளத்தில் ஓங்கி விளங்கும் தோணிபுரம், பூந்தராய், தூய்மையான தீர்த்த மகிமை உடைய சிரபுரம், புறவம், சீகாழி, வளைந்த ஆறு சூழ்ந்த கொச்சைவயம், சண்பை எனப் பெயர் தாங்கி நுண்மையான செல்வமாகவும் பேரோங்கும் சொல்வமாகவும் உலகத்தவர் ஏத்தும் கழுமலம் நாம் கருதி இருக்கும் ஊர்

755. புகலி சிரபுரம் வேணுபுரம்
சண்பை புறவம் காழி
நிகரில் பிரமபுரம் கொச்சைவய(ம்)
நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குரு வோடு அந்தண்
தராய் அமரர் பெருமாற்கு இன்பம்
பகரு நகர்நல்ல கழுமல நாம்
கைதொழுது பாடும் ஊரே.

தெளிவுரை : புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், சீகாழி, நிகர் இல்லாத பிரமபுரம், கொச்சைவயம், பிரளய காலத்தில் நீரின் மீது மிதந்த தொன்மையான ஊராகிய தோணிபுரம், அகன்ற தன்மையில் விளங்கும் வெங்குரு, என்னும் பெயர்களுடன் குளிர்ச்சி பொருந்திய பூந்தராய், தேவர் பெருமானாகிய ஈசனுக்கு விருப்பத்தைத் தரும் பக்தியில் சிறந்தோங்கும் நகராகிய நல்ல கழுமலம், நாம் கைதொழுது பாடிப் போற்றும் ஊர்.

756. வெங்குருத் தண்புகலி வேணுபுரம்
சண்பை வெள்ளம் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய்
தொகுபிரம புரம் தொல் காழி
தங்கு பொழிற் புறவம் கொச்சை
வயந்தலைபண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடிமேல் ஏற்றான்
கழுமலம் நாம் கருதும் ஊரே.

தெளிவுரை : வெங்குரு, புகலி, வேணுபுரம், சண்பை, பிரளயகால வெள்ளத்தில் மிதந்து ஒளிரும் தோணிபுரம், பூந்தராய், பிரமபுரம், சீகாழி, பொழில் சூழ்ந்து விளங்கும் புறவம், கொச்சைவயம், பிரமனது சிரத்தைக் கொண்ட மூதராகிய சிரபுரம், எனக் கொண்டு விளங்கும் கங்கை தரித்த சடை முடியுடைய ஈசனின் கழுமலம், நாம் கருதும் ஊர்.

757. தொன்னீரிற் றோணிபுரம் புகலி
வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரந் தராய்
பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவம் கொச்சை
வயம்சிலம்ப னகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண்
கழுமலம் நாம் புகழும் ஊரே.

தெளிவுரை : பழைமையாய்ப் பிரளயகாலத்தில் மிதந்த  தோணிபுரம், புகலி, வெங்குரு, மன்னுயிர்களின் துயர் தீர்க்கும் சீகாழி, இனிய பாங்குடைய வேணுபுரம், பூந்தராய், பிரமபுரம், எழில் மிகுந்த சண்பை, நன்மைகள் பொலியும் அழகிய புறவம், கொச்சைவயம், சிரபுரம் எனவாகி நல்ல பொன் வண்ணத்தில் மிளிரும் சடை உடைய நாதனின் கழுமலம் நாம் புகழ்கின்ற நமது ஊர்.

758. தண்ணந் தராய்புகலி தாமரையான்
ஊர்சண்பை தலைமுன் ஆண்ட
வண்ண னகர்கொச்சை வயந்தண்
புறவம்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குரு நல் வேணுபுரம்
தோணிபுர மேலால் ஏந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாம்
கைதொழுது கருதும் ஊரே.

தெளிவுரை : குளிர்ச்சியான பூந்தராய், புகலி, பிரமபுரம், சண்பை, சிரபுரம், கொச்சைவயம், புறவம், சீகாழி, தேவலோகத்தின் சீருடைய வெங்குரு, வேணுபுரம், தோணிபுரம் என மேன்மையாய் விளங்கும் கண்ணுதலானின் நல்ல கழுமலம், நாம் தொழுது கருதும் ஊர்.

759. சீரார் சிரபுரமும் கொச்சைவயம்
சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி
வெங்குருவொடு அந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந்
தோணிபுரம் என்றென்று உள்கிப்
பேரான் நெடியவனு(ம்) நான்முகனும்
காண்பரிய பெருமான் ஊரே.

தெளிவுரை : சீர் பொருந்திய சிரபுரம், கொச்சைவயம், சண்பை, புறவம், நல்லவை எஞ்ஞான்றும் குறைவின்றி விளங்கும் பூந்தராய், பிரமபுரம், புகலி, வெங்குரு, அழகிய சீகாழி, சிறப்பான கழுமலம், வேணுபுரம், தோணிபுரம் என எக் காலத்திலும் நினைத்து ஏத்தப் போற்றும் பெருமையுடைய திருமாலும் பிரமனும் காண்பரிய ஈசன் கோயில் கொண்டு விளங்கும் ஊர் ஆகும்.

760. புறவம் சிரபுரமும் தோணிபுரம்
சண்பைமிகு புகலி காழி
நறவ மிகு சோலைக் கொச்சை
வயந்தராய் நான்மு கன்றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம்
விசயன் மேலம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான்றன்
கழுமலம் நாம் சேரும் ஊரே.

தெளிவுரை : புறவம், சிரபுரம், தோணிபுரம், சண்பை, புகலி, சீகாழி, தேன் மணக்கும் சோலை சூழ்ந்த கொச்சை வயம், பூந்தராய், பிரமபுரம், அருளாற்றல் வாய்ந்த வெங்குரு, வேணுபுரம் எனப் பெயர் தாங்கி, அர்ச்சுனனைப் பொருது அருள் செய்தும், இராவணனை நெரியுமாறு, எண்குணங்களில் ஒன்றாகிய முடிவில் ஆற்றல் உடைமை என்னும் தன்மையால், அடர்த்த ஈசன் விளங்கும் கழுமலம் நாம் சேர்ந்து மேவும் ஊர்.

761. சண்பை பிரமபுரம் தண்புகலி
வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமும் கொச்சை
வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலம்சீர் வேணுபுரம்
தோணிபுர(ம்) நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை
வியப்பழித்த விமலன் ஊரே.

தெளிவுரை : சண்பை, பிரமபுரம், புகலி, வெங்குரு, சீகாழி, குறைவற்ற பண்புடைய சிரபுரம், கொச்சைவயம், பூந்தராய், புறவம், மண்ணுலகில் மன்னுயிர்களுக்கு நண்பு பூண்டு நன்மை செய்ய வல்ல கழுமலம், சிறப்புடைய வேணுபுரம், தோணிபுரம் என்ப பயர் வழங்கி நிற்க, சமணர் சாக்கியர் தம் பெருமை குறையுமாறு அருள்புரியும் ஈசன் விளங்குகின்ற ஊர், எமது ஊராகும்.

762. செழுசலிய பூங்காழி புறவம்
சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரான் நன்னகரம் தோணிபுரம்
கெச்சைவயம் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவொடு ஓங்குதராய்
வேணுபுர மிகுநன் மாடக்
கழுமலம் என்று இன்னபெயர் பன்னிரண்டும்
கண்ணுதலான் கருதும் ஊரே.

தெளிவுரை : செழுமை மிகுந்த சீகாழி, புறவம், சிரபுரம், சிறப்பான புகலி, பிரமபுரம், தோணிபுரம், கொச்சை வயம், சண்பை, மேலோங்கும் சீருடைய வெங்குரு, ஓங்குயரும் பூந்தராய், வேணுபுரம் நல்ல மாடங்கள் கொண்ட கழுமலம் எனப் பன்னிரண்டு பெயர்கள் கொண்டு விளங்கும் ஊர் நெற்றியில் கண்ணுடைய ஈசன் கருதும் ஊர். அதுவே நாம் விளங்கும் ஊராகும்.

763. கொச்சை வயம்பிரம னூர்புகலி
வெங்குருப் புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார்
சிரபுர நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந்
தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான்
கழுமலம் நாம் அமரும் ஊரே.

தெளிவுரை : கொச்சைவயம், பிரமபுரம், புகலி, வெங்குரு, புறவம், சீகாழி, நாள்தோறும் விழாப் பொலிவு ஓயாது விளங்கும் பழைமையான சிரபுரம், சண்பை, விரும்புவதற்கு இனிமையான பூந்தராய் வேணுபுரம், தோணிபுரம் எனவாகி நம்மீது வினைவழி நேரும் பிணி, மூப்பு, இறப்பு, பிறப்பு முதலான அச்சங்களைத் தீர்த்துப் பேரின்பத்தை நல்கி அருளும் பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கும் கழுமலம் நாம் இருக்கும் ஊர் ஆகும்.

764. காவி மலர்புரையும் கண்ணார்
கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப்
பத்தமையால் பனுவல் மாலை
நாவில்நலம் புகழ்சீர் நான்மறையான்
ஞானசம் பந்தன் சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில்
எண்ணுதலை விருப்பு ளாரே.

தெளிவுரை : கருங்குவளை மலர்கள் விளங்குகின்ற தண்மை சூழ்ந்த கழுமலத்தின் பெயரைப் பன்னிரண்டு என்னும் சிறப்புடையதாகப் பரவிய இப்பாடல்களைப் பக்தியுடன் பரவி ஏத்தி, நான்மறையாளனாகிய ஞானசம்பந்தர் சொன்ன வழி, இசையுடன் ஓதுபவர்கள் தேவர்களுக்கு இணையாவார்கள்.

திருச்சிற்றம்பலம்

207. திருக்குறும்பலா (குற்றாலம்) (அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

765. திருந்த மதிசூடித் தெண்ணீர்
சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற்
காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ்
சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடம்சூழ்
தண்சாரற் குறும்ப லாவே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைப் பொருந்துமாறு சூடி, தெளிந்த நீராகிய கங்கையைச் சடைமுடியில் கரந்து, உமாதேவியைப் பாகமாகத் திருமேனியில் கொண்டு , இடுகாட்டில் இருக்கத் தகுந்த திருவேடத்தைக் கொள்ளாதவராகி விளங்கும் செல்வர் வீற்றிருந்து இடம் யாது என வினவில், நறுமணம் கமழும் சோலையில் வண்டுகள் யாழ் போன்று இமையெழுப்ப, குருந்த மலர்கள் நல்மணம் பரப்ப, குன்றின்பால், சூழ்ந்த குளிர்ச்சியான சாரலில் திகழும் குறும்பலா என்னும் தலம் ஆகும்.

766. நாட்பலவும் சேர்மதியும் சூடிப்
பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவும் தானுடைய அம்மான்
இடம்போலும் அந்தண் சாரல்
கீட்பலவும் கீண்டு கிளை கிளையன்
மந்திபாய்ந்த உண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன்
உண்டு உகளும் குறும்ப லாவே.

தெளிவுரை : சந்திரனைச் சடையின் மீது சூடி, திருவெண்ணீறு பூசி அணிந்து மேவும் நம்பன், நம்மை ஆட்கொண்டு விளங்கும் ஈசன், அப் பெருமான் திகழும் இடம், அழகிய சாரலில் பெண் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிச் செல்லவும், வளைந்த கிளைகளில் உள்ள பலாவின் சுவை மிகுந்த கனியை உண்டு குதிக்கும் ஆண் குரங்குகளும் உள்ள குறும்பலா போலும்.

767. வாடல்தலைமாலை சூடிப்
புலித்தோல் வலித்து வீக்கி
ஆடல் அரவசைத்த அம்மான்
இடம் போலும் அந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத்
தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
கோடல் மணங்கமழும் குன்றிடம் சூழ்
தண்சாரற் குறும்ப லாவே.

தெளிவுரை : மண்டை ஓடுகளை மாலையாகக் கோர்த்து சூடி, புலித்தோலை அழுத்திக் கட்டி ஆடுகின்ற பாம்பினையும் கட்டியுள்ள ஈசன் வீற்றிருக்கும் இடம், அழகிய சாரலில் பாடும் பெண்வண்டு, மலர்களை நன்கு விரியச் செய்ய, நன்கு விரிந்து மகரந்தப்பொடிகள் சிந்தவும், பசும் பொன்னும் உந்தித் தள்ளி, வெண்காந்தள் மலரின் நறுமணத்துடன் குன்று சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த அருவி சூழ்ந்த குறும்பலா போலும்.

768. பால்வெண் மதிசூடிப் பாகத்தோர்
பெண்கலந்து பாடி யாடிக்
காலன் உடல் கிழியக் காய்ந்தார்
இடம் போலும் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க் குவளை கண்டிறக்க
வண்டுஅரற்று நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்சை பேடையொடு
ஆட்டயரும் குறும்ப லாவே.

தெளிவுரை : பால்போன்ற வெண்மையான சந்திரனைச் சூடி, உமாதேவியை ஒரு பாகத்தில் சேர்த்துப் பாடியும் நடனம் புரிந்தும், கூற்றுவனுடைய உடலைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்த ஈசன் விளங்குகின்ற இடமானது, கற்கள் சூழ்ந்த மலையில் கருங்குவளை மலர்கள் மலர்ந்து விளங்க, வண்டுகள் ஒலித்துப் பாடும் நெடிய குளிர்ந்தசாரலில் அழகிய மயில்கள் தன் பெண் மயில்களுடன் ஆடல் புரியும் குறும்பலா போலும்.

769. தலைவான் மதியம் கதிர்விரியத்
தண்புனலைத் தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்ததி
இடம் போலு(ம்) முதுவேய்சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன்
கொழித்திழியு மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியு மாங்கனியும்
தேன்பிலிற்றும் குறும்ப லாவே.

தெளிவுரை : மேலான வானத்தில் விளங்கும் சந்திரனின் குளிர்ந்த கதிர்கள், விரியவும், கங்கை விளங்கவும், முடியில் தாங்கி, உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி ஏற்ற மூர்த்தி விளங்குகின்ற இடம், முதிர்ந்த மூங்கில்கள் சூழ்ந்த மலைப் பகுதியில் நீர் சொரியப் பசும்பொன் கொழிக்கும் அருவிகள் மல்கி வீழும் சாரலில் கலை வாழையும் மாங்கனியும் தேன் பெருக ஓங்கும் குறும்பலா போலும்.

770. நீற்றே துரைந்திலங்கு வெண்ணூலர்
தண்மதியர் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தார்
இடம்போலும் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏனம் இவையோடு
அவை விரவி இழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக்
குயில் பயிலும் குறும்ப லாவே.

தெளிவுரை : ஈசன், திருநீறு நன்கு பொருந்தி விளங்க அணிந்தவர்; முப்புரி நூல் தரித்தவர்; குளிர்ந்த சந்திரனைச் சூடியவர்; நெற்றியில் அக்கினியைக் கண்ணாக உடையவர். கூற்றுவனின் கொட்டம் சிதைந்து அழியுமாறு உதைத்து மாளச் செய்தவர். அப் பெருமான் விளங்கும் இடம், ஆண் பன்றியும், பெண் பன்றியும் திரிந்து பூஞ்சாரலில் இருக்க, தேன் வண்டினங்கள் இசையெழுப்ப, அவ்வினிய இசை கேட்டுக் குயில்கள் இசைபாடும் குறும்பலா போலும்.

771. பொன்தொத்த கொன்றையும் பிள்ளை
மதியும் புனலும்சூடிப்
பின்தொத்த வார்சடையெம் பெம்மான்
இடம்போலும் பிலயம்தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி
மணி கொழித்து வயிரம் உந்திக்
குன்றத்து அருவி அயலே
புனல்ததும்பும் குறும்ப லாவே.

தெளிவுரை : பொன்னை ஒத்த கொன்றை மலரும் இளமையான சந்திரனும் கங்கையும் சூடிய சடையுடைய ஈசன். பிரளய காலத்திலும் அழியாது நிலைபெற்று விளங்கும் மலையில், முழவம் போன்ற ஒலியும், மாணிக்கமும் வயிரமும் உந்திக் கொழிக்கும் அருவியும் திகழும் குறும்பலா போலும், பிலயம் தாங்கி  பிரளயக் காலத்தில் நிலைத்து விளங்கும் குற்றாலம் என்னும் தலபுராணச் சிறப்பு இவண் உணர்த்தப் பெற்றது.

772. ஏந்து திணி திண்டோள் இராவணனை
மால்வரைக்கீழ் அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவர்
இடம்போலும் சாரற்சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து
மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும்
உடன் வணங்கும் குறும்பலாவே.

தெளிவுரை : கயிலை மலையை ஏந்திய உறுதியான தோள்களை உடைய இராவணனை, அப் பெரிய மலையின்கீழ் அடர்த்துத் திருப்பாத மலரால் ஊன்றி, அழகும் அமைதியும் தரவல்லது என்னும் சிறப்புடைய திருவெண்ணீறு அணிந்த சைவர்  ஈசன் வீற்றிருக்கும் இடமானது, மழைச் சாரலில் அழகிய மணம் மிக்க வேங்கை மலரின் பூங்கொத்துக்களை முறித்து, மத்தகத்தில் விளங்குமாறு ஏந்தி பெண் யானையும் ஆண் யானையும் வணங்குகின்ற குறும்பலா போலும்.

773. அரவின் அணையானு நான்முகனும்
காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க்கு
இடம்போலும் விரிபூஞ்சரால்
மரவம் இருகரையு மல்லிகையும்
சண்பகமு  மலர்ந்து மாந்தக்
குரவ முறுவல்செய்யும் குன்றிடம் சூழ்
தண்சாரற் குறும்ப லாவே.

தெளிவுரை : பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் காணுதற்கு அரிய அண்ணலாகி, சடைமுடியில் சந்திரனைச் சூடும் ஈசனுக்கு இடமாவது, விரிந்து மலர்ந்த பூக்கள் விளங்கும் சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம், குரவம் ஆகிய மலர்கள் திகழக் குன்று சூழ்ந்த குளிர்ந்த நீர் நிலை உடைய குறும்பலா போலும்.

774. மூடிய சீவரத்தர் முன்கூறுண்டு
ஏறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார்
இடம் போலும் கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ
னீள்கழைமேல் நிருத்தம் செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக்
கைமறிக்கும் குறும்ப லாவே.

தெளிவுரை : துவராடை நன்கு அணிந்த சாக்கியர்களும் மற்றும் சமணர்களும் தம் கொள்கை ஈடேறாதவாறு செய்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, கற்களால் சூழப் பெற்ற மலையில் நீண்டு உயர்ந்த மூங்கில் வளைந்து இருக்குமாறு பாயும் ஆண் குரங்கு, அதன்மீது ஏறிக் கூத்து ஆட அங்கு உள்ள வேடுவமக்கள் குய்ய் என்ற ஒலியை எழுப்புமாறு கைகளை வாயின் கண்கொண்டு செல்கின்ற குறும்பலா போலும்.

775. கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா
மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவு நான்மறையான்
ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாடல் இரை பத்தும்
வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல
நல்வினைகள் தளரா அன்றே.

தெளிவுரை : பூஞ்சோலைகள் கொண்டு விளங்கும் குறும்பலா என்னும் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இடப வாகனத்தையுடைய அண்ணலாகிய ஈசன் திருவடியைப் பரவும் நான்மறைவல்ல ஞானசம்பந்தர் சொல்ல, பேரின்பம் நல்கும் இத் திருப்பதிகத்தை ஓதுபவர்களும், சொல்லக் கேட்டு மகிழும் அன்பர்களும், தம்பால் உள்ள தீய வினைகள் யாவும் விலகிச் செல்ல, நல்வினைகள் பெருகப் பெற்றவர்கள்.

திருச்சிற்றம்பலம்

208. திருநணா (அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு மாவட்டம்)

776. பந்தார் விரல்மடவாள் பாகமா
நாகம்பூண்டு ஏறது ஏறி
அந்தார் அரவணிந்த அம்மான்
இடம்போலும் அந்தண்
வந்தார் மடமந்தி கூத்தாவ
வார்யாழில் வண்டு பாடச்
செந்தேன் தெளியொளிரத் தேசமாங்
கனியுதிர்க்கும் திருநணாவே.

தெளிவுரை : பந்து பொருந்தும் அழகிய விரல்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, நாகத்தை ஆபரணமாகக் பூண்டு, இடப வாகனத்தில் ஏறி, அழகிய மாலையாக, அரவத்தை அணிந்து விளங்கும் ஈசன் வீற்றீருக்கும் இடமானது, அழகிய குளிர்ச்சி பொருந்திய சாரலில் வந்த குரங்குகள் கூத்து ஆட, நீண்டபொழிலில் வண்டு பாட, செம்மையான தேன் துளிர்த்துப் பெருகச் சுவை மிகுந்த கனி நன்கு பழுத்துத் தானாகவே உதிரும் திருநணா என்னும் தலம் போலும்.

777. நாட்டம் பொலிந்திலங்கு நெற்றினான்
மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டும் துயர்அறுக்கும் எம்மான்
இடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தரும்அருவி வீழும்
விடை காட்ட முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும்
திரைசேர்க்கும் திருநணாவே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் பொலிந்து விளங்கும் கண்ணுடையவன்; வீணையைக் கரத்தேந்தி மீட்டும் இனியவன்; மன்னுயிர் ஈட்டிச் சேர்க்கும் வினையின் வழி நேரக்கூடிய துன்பத்தைத் தீர்ப்பவன். அத்தகைய தலைவனாகிய ஈசன் விளங்குகின்ற இடமானது, இலைகள் அடர்த்தியாக விளங்கும் சோலைகள் மலிந்த காட்டில், மலைப் பகுதியிலிருந்து வேகமாக விழும் அருவியின் ஓசையும் மூங்கிலில் இருந்து முத்து மணிகள் அடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் சிறப்பும் உடைய திருநணா போலும்.

778. நன்றாங்கு இசைமொழிந்து
நன்னுதலான் பாகமாய் ஞாலமேத்த
மின்தாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க்கு
இடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்திரைகள் மோத
மயிலாலும் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்கள் ஏத்தி
அடிபணியும் திருந ணாவே.

தெளிவுரை : நன்மையும் நன்னெறியும் துலங்குமாறு சாம வேதம் முதலான நான்கு வேதங்களையும் கொண்டு விளங்கி, உலகத்திளுள்ளோர் ஏத்தி வணங்குமாறு, மின்னல் போன்ற செஞ்சடையுடைய விகிர்தனாகிய ஈசருக்கும் உரிய இடமாவது, நறுமணம் கமழும் மலையில் குன்று போல் உயர்ந்த வலிமையான அலைகள் மோத, மயில்கள் தோகை விரித்து ஆடும் சாரலில் செவ்வையுடன் சென்று வானவர்கள் ஏத்தித் திருவடியைப் பணியும் திருநணா போலும்.

779. கையில் மழுவேந்திக் காலிற்
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்கு
இடம்போலு(ம்) மிடைந்து வானோர்
ஐயவரனே பெருமான்
அருளென் றென்று ஆதரிக்கச்
செய்ய கமலம் பொழிதேன்
அளித்தியலும் திரு நணாவே.

தெளிவுரை : திருக்கரத்தில் மழுப்படை ஏந்தி, திருப்பாதத்தில் சிலம்பு அணிந்து, யானையின் தோலை முழுமையாகத் திருமேனியில் போர்த்து மேவும் விகிர்தருக்கு இடம் என்பது, வானவர்கள் நெருங்கி வந்து, ஐயனே ! அரனே ! பெருமானே ! அருள்வாயாக என்று விரும்பி ஏத்த, செந்தாமரையிலிருந்தும், பொழிலில் இருந்தும் தேன் பெருகித் திகழும் திருநணா என்னும் பதியாகும்.

780. முத்தேர் நகையான் இடமாகத்
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தார்
இடம்போலும் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியால்
இசைமுரல ஆலத் தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார்
வினைகெடுக்கும் திரு நணாவே.

தெளிவுரை : முத்துப் போன்ற பற்கள் கொண்ட உமா தேவியை இடப் பாகத்தில் கொண்டு, திருமார்பில் முப்புரி நூல் பூண்டு, கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரைச் சடையில் வைத்த ஈசன் வீற்றிருக்கும் இடமானது, தேனை உண்ட களிப்பால் வண்டு இசை பாட விளங்கி, மன்னுயிரின் தீவினையைத் தீர்க்கும் திருநணா போலும்.

781. வில்லார் வரையாக மாநாக
நாணாக வேடம் கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கு
இடம்போலும் புலியும்மானும்
அல்லாத சாதிகளும் அங்கழல்மேற்
கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா அருநெறிக்கே செல்ல
அருள்புரியும் திருந ணாவே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டு திருக்கோலம் தாங்கிப் புன்மையான முப்புரத்தின் அசுரர்களை எரித்த ஈசனார்க்கு உரிய இடமாவது புலியும் மானும் பகைமை நீங்கியும், மற்றும் அந்நெறியில் இல்லாத மற்ற விலங்கினங்கள் திருவடியைத் தொழுது வணங்கவும், அடியவர்கள் இறைவனை வணங்கச் செல்லும் பாதையில் குறுக்கீடு நேர்தல் அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் என்று கருதி வேறு பாதையினை வகுத்துக்கொள்ளும் விலங்கினங்களும் உடைய திருநணா போலும்.

782. கானார் களிற் றுரிவை மேல்மூடி
ஆடரவொன்று அரைமேற் சாத்தி
ஊனார் தலையோட்டில் ஊணுகந்தான்
தானுகந்த கோயில் எங்கும்
நானா விதத்தால் விரதிகள்நல்
நாமமே ஏத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண்ட அடியார்
அடிவணங்கும் திருந ணாவே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்தத் திருமேனியில் போர்த்து, ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டி, பிரம கபாலம் ஏந்திப் பலியேற்று உணவைக் கொண்டு மகிழ்ந்த ஈசன் வீற்றிருக்கும் கோயிலானது, எல்லா இடங்களிலும் பலவாறு விரதங்களை மேற்கொள்ளும் அன்பர்கள் திருநாமங்களைப் பக்தியுடன் ஏத்தி வாழ்த்தவும் அடியவர்கள் மலர் கொண்டு போற்றித் திருவடி வணங்குகின்ற திருநணா என்னும் பதியாகும்.

783. மன்னீர் இலங்கையர்தம் கோமான்
வலிதொலைய விரலால் ஊன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை உண்டார்க்கு
இடம் போலு(ம்) முனைசேர் சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால்
விழிகுறைய வழியு முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து
கரியொளிக்கும் திருந ணாவே.

தெளிவுரை : இலங்கையின் கோனாகிய இராவணனுடைய வன்மை அழியுமாறு, திருப்பாத மலரால் ஊன்றி, கடலில் தோன்றிய நஞ்சினை அருந்திய ஈசன் வீற்றிருக்கின்ற இடமானது, சிங்கத்தின் விலங்குத் தன்மை குறையவும் யானையின் சேவைத் தன்மை ஒளிரவும் உள்ள திருநணாவாகும்.

784. மையார் மணிமிடறன் மங்கையோர்
பங்குடையான் மனைகள் தோறும்
கையார் பலியேற்ற கள்வன்
இடம்போலும் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி
அளந்தானும் போற்ற ளன்னிச்
செய்யார் எரியாம் உருவம்
உறவணங்கும் திருந ணாவே.

தெளிவுரை : ஈசன், திருநீலகண்டம் உடையவன்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; பிரம கபாலம் ஏந்தி மனைகள்தோறும் பலியேந்திய பெருமானாய்ச் சென்று முனிபத்தினிகள் நெஞ்சில் நின்றவன். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம் என்பது, பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவனாய் நின்று, பின்னர் சோதிப் பிழம்பாய் உருவம் கொண்டு விளங்கி நிற்க வணங்கும் திருநணா ஆகும்.

785. ஆடை ஒழித்தங்கு அமணே
திரிந்துண்பார் அல்லல் பேசி
மூடும் உருவம் உகந்தார் உரை
அகற்று மூர்த்தி கோயில்
ஓடு நதி சேரு(ம்) நித்திலமு(ம்)
மொய்த்தகிலும் கரையிற்சாரச்
சேடர் சிறந் தேத்தத் தோன்றி
ஒளிபெருகும் திருந ணாவே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பொருந்தாத உரைகளை அகற்றி, மேவும் மூர்த்தியாகிய ஈசன் விளங்கும் கோயிலானது, ஓடுகின்ற ஆற்றிலிருந்து முத்துக்களும், அகில் மரங்களும் கரையில் சார, பெருமை மிக்க சிவஞானிகள் போற்றிப் புகழொளி பெருகும் திருநணா என்னும் பதியாகும்.

786. கல்வித் தகத்தால் திரைசூழ்
கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரு
ஞானசம் பந்தன் எண்ணும்
சொல்வித் தகத்தால் இறைவன்
திரு நணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தால் மொழிவார்
பழியிலர்இம் மண்ணின் மேலே.

தெளிவுரை : உறுதி பயக்கும் பெருமையால் விளங்குகின்ற சூழ்ந்த கடல் நகராகிய சீகாழியில் கவுணியர் சீர் மரபில் நல்ல ஞானத்தால் இனிது உணர்ந்த ஞானசம்பந்தர், கருதி மொழிந்த சொற் பெருமையினால் ஈசனின் திருநணா என்னும் தலத்தை ஏத்திய இத்திருப்பதிகத்தை உறுதி பூண்ட அன்பினால் மொழிய வல்லவர்கள், இப் பூவுலகில் எத்தகைய பழிக்கும் ஆளாக மாட்டார்கள்.

திருச்சிற்றம்பலம்

209. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

787. விளங்கிய சீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவரும் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரம்வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயம்
கொச்சைகழு மலமென்றின்ன
இளங்குமரன் றன்னைப் பெற் றிமையவர்தம்
பகையெரிவித்த இறைவ னூரே.

தெளிவுரை : பெருமையுடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, சோலை வளம் பெருகும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், களங்கமில்லாத சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலர் எனப் பெயர்கள் தாங்கிய ஊரில், குமாரக் கடவுளைத் தோற்றுவித்துத் தேவர்களுடைய பகைவராகிய அசுரர்களை வாட்டிய இறைவன் வீற்றிருக்கின்றார்.

788. திருவளரும் கழுமலமே கொச்சை
தேவேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவம் சிலம்பனூர்
காழிதகு சண்பை யொண்பா
உருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல்விடமது உண்டணிகொள்
கண்டத் தோன் விரும்பும் ஊரே.

தெளிவுரை : செல்வம் வளரும் கழுமலம், கொச்சை வயம், வேணுபுரம், பிரமபுரம், புறவம், சிரபுரம், சீகாழி, சண்பை, வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம் எனப் பெயர்கள் தாங்கிய ஊர், தேவர்கள் வெருவி அஞ்ச, கடல் விடத்தை உட்கொண்டு நீலகண்டனாக விளங்கும் ஈசன் விரும்புகின்ற ஊர் ஆகும்.

789. வாய்ந்தபுகழ் மறைவளரும் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்த புறவந் திகழும் சண் பைஎழில்
காழியிறை கொச்சையம் பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவது
அரனாலும் அமரும் ஊரே.

தெளிவுரை : புகழ் விளங்கும் மறைவளரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், திகழ்கின்ற சண்பை, எழில் மிகுந்த சீகாழி, இறைமையுடைய கொச்சைவயம், பொன்வேய்ந்த மதிலைக் கொண்ட கழுமலம், தேவர்கள் பணிந்து ஏத்தும் பிரமபுரம், வேணுபுரம், கலைமலிந்த புகலி, வெங்குரு என வழங்கப் பெறும் அவ்வூர் அரன் நாள்தோறும் அமர்ந்து விளங்கும் ஊராகும்.

790. மாமலையாள் கணவன் மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழும் கழுமலமே
கொச்சை தேவேந் திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம் விறற்
சிலம்பனூர் காழிசண்பை
பாமருவு கலையெட்யெட்டு உணர்ந்தவற்றின்
பய(ன்) நுகர்வோர் பரவும் ஊரே.

தெளிவுரை : பெருமை கொண்டு திகழும் உமாதேவியின் நாயகனாகிய ஈசன் மகிழும் வெங்குரு, சிறப்புமிக்க புகலி, பூந்தராய், தேணிபுரம், உயர்ந்து விளங்கும் பாதுகாப்பினை உடைய மதில் திகழும் கழுமலம் கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், பொலிவு உடைய புறவம், விறல் மிக்க சிரபுரம், சீகாழி, சண்பை எனத் திகழும் ஊர் அறுபத்து நான்கு கலைகள் உணர்ந்த அறிஞர்கள் பயனை நுகர்வோராகி ஈசனை வணங்கிப் போற்றும் ஊர் ஆகும்.

791. தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமல மெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தம் கோனூர் வென்றித்
திரைச் சேரும் புனற் புகலி வெங்குருச்
செல்வம் பெருகு தோணி புரஞ்சீர்
உறைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
உலகத்தில் உயர்ந்த ஊரே.

தெளிவுரை : பூவுலகத்தில விளங்கும் தேவர்களாகிய பூசுரர்கள் எனப்படும் அந்தணர்கள் பணிந்து போற்றும் சண்பை, இனிமை பெருகும் சீகாழி, கொச்சைவயம், ஒளிகொண்டு விளங்கும் இம் மண்ணுலகில் நறுமணம் சேர்த்து மேவும் கழுமலம், மெய்ம்மையுணர்ந்த பிரமன் பூசித்த பதியெனும் பிரமபுரம், வேணுபுரம், நீர் அலைகள் சேரும் புகலி, வெங்குரு, செல்வம் பெருகும் தோணிபுரம், புகழ்ச்சொல் விளங்கிப் பரவும் பூந்தராய், சிரபுரம், புறவம் என்று வழங்கப்பெறும் ஊர், உலகத்தில் உயர்ந்து விளங்குகின்ற ஊராகும்.

792. புண்டரிகத்து ஆர்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசை யோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலநற்
கொச்சைவா னவர்தம் கோனூர்
அண்டயனூர் இவைஎன்பர் அருங்கூற்றை
உதைத்துகந்த அப்பனூரே.

தெளிவுரை : தாமரை மலர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம், சிரபுரம், சீகாழி, சண்பை, எண்திமைகளிலிருந்தும் இறைஞ்சி ஏத்தும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், சிறப்பான தேனை உறிஞ்சும் வண்டுகள் அமர்கின்ற பொழில் மல்கும் கழுமலம் நல்ல கொச்சைவயம், வேணுபுரம், அண்டுதல் செய்து அயன் பூசித்துப் பேறு பெற்ற பிரமபுரம் ஆகிய பெயர்களைத் தாங்கிய ஊர் என்பர், கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்து உகந்த எம் தந்தையாகிய ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

793. வண்மைவளர் வரத்துஅயனூர் வானவர்தம்
கோனூர் வண் புகலிஇஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோர்இறைஞ்சு
சண்பை வியன் காழிகொச்சை
கண்மகிழும் கழுமலம்கற் றோர்புகழும்
தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியும் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலும் ஊரே.

தெளிவுரை : வண்மை பெருகும் வரங்களைப் பெற்ற பிரமன் பூசித்து விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, திங்கள் ஒளி பரவும் வெங்குரு, ஞானிகள் ஏத்தும் சண்பை, பெருமை திகழும் சீகாழி, கொச்சை வயம், தலத்தின் மகிழ்ச்சியெனப் பேறு கொண்டு விளங்கும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம், பூந்தராய், புகழ்மிக்க பண்ணின் இசை பெருகும் சிரபுரம், பார்புகழும் புறவம் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவது ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

794. மோடிபுறம் காக்குமூர் புறவம்சீர்
சிலம்பனூர் காழிமூதூர்
நீடியலும் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரம் கமலநீடு
கூடியயந் ஊர்னளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரம்கூடப் போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
செற்றமலைச் சிலையனூரே.

தெளிவுரை : துர்க்கையன்னை மேவி வீற்றிருந்து காக்கும் புறவம், சீர்மிக்க, சீகாழி, சண்பை, கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், வெங்குரு, புகலி, பூந்தராய் தோணிபுரம் என்னும் பெயர்கள் கொண்டு விளங்குகின்ற ஊரானது போர்புரியும் நோக்கத்தில் உழன்ற அசுரர்களின் திரிபுரங்களை எரித்த, மேருமலையை வில்லாகக் கொண்ட ஈசனின் ஊராகும்.

795. இரக்கமுடை இறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் றன்னூர்
நிரக்கவரு புனற் புறவ நின்றதவத்து
அயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக் கரவாப் புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழிகொச்சை
அரக்கன் விறல் அழித்தருளி கழுமலம்அந்
தணர் வேதம் அறாதவூரே.

தெளிவுரை : கருணாலயனாக விளங்கும் இறைவனுடைய ஊர் என்பது, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், நீர்வளம் மிக்க புறவம், தவத்தின் பயனாய் மேவி விளங்குகின்ற பிரமன் பூசித்த பிரமபுரம், தேவர்கோன் ஏத்தும் வேணுபுரம், வரங்களைக் கரவாது வழங்கும் புகலி, வெங்குரு, மாசு அடையாத சண்பை சீகாழி, கொச்சைவயம், இலங்கையின் வேந்தனாகி இராவணனை விரலால் ஊன்றி ஆணவத்தை அழித்து, அருள் புரிந்த கழுமலம் ஆகிய பன்னிரண்டு பெயர்களும் கொண்ட ஊர் ஆகும். இத்திருத்தலம் அந்தணர்கள் ஓதும் வேதவொலியை எஞ்ஞான்றும் கொண்டு விளங்கும் சிறப்புடையது.

796. மேலோதும் கழுமல மெய்த் தவம் வளரும்
கொச்சைஇந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரம் திகழ்புறவம்
சிலம்பனூர் செருச்செய்தன்று
மாலோடும் அயனறி யான் வண்காழி
சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே.

தெளிவுரை : மேன்மையாய் ஓதும் புகழுடைய கழுமலம், மெய்ம்மையாகிய முத்தியின்பத்தை நாடும் தவம் பெருகும் கொச்சைவயம், வேணுபுரம், மெய்ம்மை நூல்களாகிய வேதம் முதலான ஞான நூல் ஓதும் சிறப்பு மிக்க பிரமபுரம், நுண்மையான மெய்ஞ்ஞானம் மிளிரும் வெங்குரு, புகலி, பூந்தராய், தூய்மையான தீர்த்த மகிமையுடைய தோணிபுரம், திகழ்ந்து விளங்கும் புறவம், சிரபுரம், தருக்கம் செய்த திருமாலும், பிரமனும் காணுதற்கு அறியாத தகைமையாளனாகிய ஈசனின் சீகாழி, சண்பை என்னும் பன்னிரண்டு திருப்பெயர்கள், கொண்ட இவ்வூர் உலகத்தவர் வாழ்த்தி வணங்கும் ஊர் ஆகும்.

797. ஆக்கமர்சீர் ஊர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலம் அன்பான்ஊர்
ஒக்கம்உடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரம் ஒண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புறந்தரனூர்
புகலிவெங் குருவும் என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம்அறியா
வகைநின்றான் தங்கும் ஊரே.

தெளிவுரை : ஆக்கத்தை நல்கும் சீர்மிக்க ஊரினை, சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம், அன்பினனாகிய ஈசன் ஊர் எனவாய் உயர்ந்த நிலை கொண்டு விளங்கும் தோணிபுரம், பூந்தராய், சிரபும், புறவம், பக்தியுடன் பிரமன் மகிழ்ந்து பூசித்த பிரமபுரம், வேணுபுரம், புகலி வெங்குரு என்று போற்றுவர். இத்தகைய ஊர் சாக்கியரும் சமணரும் அறியாத வகையால் ஈசன் வீற்றிருக்கும் ஊராகும்.

798. அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுர மணிநீர்ப் பொய்கை
புக்கரஞ்சேர் புறவம்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சை வயம்
வேணுபுரம் அயனூர் மேவிச்
சக்கரஞ்சீர்த் தமிழிவிரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவம்செய் தோரே.

தெளிவுரை : வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், பொய்கை விளங்கும் புறவம், சீர்மிக்க சிரபும், புகழ் விளங்கும் சீகாழி, சண்பை, தொன்மை மிகுந்த வள்ளன்மேவும் கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம் என வழங்கப் பெறும் பன்னிரண்டு பெயர்களைப் பொருந்தப் பெருமையுடன் தமிழ் விரும்பும் ஞானசம்பந்தர் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

210. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

799. பூமகனூர் புத்தேளுக்கு இறைவனூர்
குறைவிலாப்புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம்
பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
புகழ்ச் சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்த நுதற் கண்ணுவனூர்
கழுமலம் நாம் கருதும் ஊரே.

தெளிவுரை : தாமரை மலரில் விளங்கும் பிரமன் பூசித்த பிரமபுரம், வேணுபுரம், குறைவு இல்லாத வளம் பெருகி ஓங்கும் புகலி, உலகில் திருமகளின் செல்வச் சிறப்புடைய வெங்குரு, நல்ல தோணிபுரம், பூந்தராய், மதில் விளங்கிப் பாதுகாவல் மேவும் சிரபுரம், சீர்மிகும் புறவம், நிறைபுகழ்மேவும் சண்பை, சீகாழி, மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணுடைய ஈசனின் ஊராகிய கழுமலம், நாம் மனத்திற் கருதி மேவும் ஊர் ஆகும்.

800. கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த்
தோணிபுரம் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதராய்
உலகாரும் கொச்சை காழி
திருத்திகழும் சிரபுரம்தே வேந்திரனூர்
செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவம் சண்பைசடை
முடியண்ணல் தங்கும் ஊரே.

தெளிவுரை : சிவஞானம் மிக்க மறையவர்கள் சேர்ந்து விளங்குகின்ற கழுமலம், மெய்ம்மையாய் நிலைத்து ஓங்கும் தோணிபுரம், பொன் அனைய அழகிய மாடங்கள் கொண்டு திகழும் வெங்குரு, புகலி, ஓங்கும் சிறப்பு உடைய பூந்தராய், உலகில் பொருந்தி விளங்கும் கொச்சைவயம், சீகாழி, திருமகள் வாசம் புரியும் சிரபுரம், வேணுபுரம், பிரமபுரம், தெய்வத் தருவாகிய கற்பகம் போன்ற தருக்கள் விளங்கும் பொழில் உடைய புறவம் சண்பை ஆகிய பெயர்களையுடைய ஊர் சடை முடியுடைய ஈசன் வீற்றிருக்கும் ஊராகும்.

801. ஊர்மதியைக் கதுவஉயர் மதிற்சண்பை
ஒளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
தோணிபுரம் கற்றோர் ஏத்தும்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப்
புறவம் அயன் ஊர்பூங்கற்பத்
தார் மருவும் இந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை தரித்தோன் ஊரே.

தெளிவுரை : வானில் ஊர்ந்து திகழும் சந்திரனைப் பற்றும் உயர்ந்த மதில் கொண்ட சண்பை, ஒளிர்ந்து மேவும் சீகாழி, கொச்சைவயம், மேகம் தவழும் பொழில் சூழ்ந்த கழுமலம், தோணிபுரம், கற்றோர் ஏத்தும் புகழ் பொலிந்த பூந்தராய், சிரபுரம், புறவம், பிரமபுரம், கற்பக மரங்கள் மருவும் வேணுபுரம், புகலி, வெங்குரு எனப் பன்னிரண்டு திருப்பெயர் கொண்டது கங்கை தரித்த ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

802. தரித்தமறை யாளர்மிகு வெங்குருச் சீர்த்
தோணிபுரும் தரியார் இஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
தராய்புகலி இமையோர் கோன்ஊர்
தெரித்த புகழ்ச் சிரபுரம்சீர் திகழ்காழி
சண்பை செழு மறைகள் எல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோன்
ஊர்உலகில் விளங்கும் ஊரே.

தெளிவுரை : மறைவல்லவர்கள் மிகுந்த வெங்குரு, சீர் கொண்ட தோணிபுரம், பகைவராகிய முப்புரம் அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்த ஈசன் வீற்றிருக்கும் கழுமலம், கொச்சைவயம், பூந்தராய், புகலி, வேணுபுரம், புகழ் விளங்கும் சிரபுரம், சீர்திகழும் சீகாழி, சண்பை, மறை புகழும் புறவம், பிரமபுரம் எனப் பெயர் தாங்கும் இவை, உலகில் நன்கு விளங்குகின்ற ஊர் ஆகும்.

803. விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுர(ம்) மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழில் தோணி புரங்காழி
எழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
சிரபுரம் வன் னஞ்சம் உண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலம்
காமன்னுடலம் காய்ந்தோன் ஊரே.

தெளிவுரை : நனி விளங்குகின்ற பிரமபுரம், பூந்தராய் சண்பை, வேணுபுரம், மேகத்தைத் தீண்டும் உயர்ந்த கமுக மரங்கள் சூழ்ந்த தோணிபுரம், சீகாழி, எழில் மிக்க புகலி, புறவம், சிறப்பின் வளம் கொழிக்கும் கொச்சைவயம், வெங்குரு, பெருமைபெறும் சிரபுரம், கொடிய நஞ்சினை உண்டு கறையுடைய கண்டம் உடைய ஈசனின் புகழ்சேர் கழுமலம் என வழங்கும் ஊர், மன்மதனை எரித்த ஈசன் வீற்றிருக்கும் ஊர் ஆகும்.

804. காய்ந்துவரு காலனையன்று உதைத்தவனூர்
கழுமலமாத் தோணிபுரம் சீர்
ஏய்ந்தவெருங் குருப்புகலி இந்திரனூர்
இருங்கமலத்து அயனூரின்பம்
வாய்ந்தபுற வம்திகழும் சிரபுரம்பூந்
தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
பகைகெடுத்தோன் திகழும் ஊரே.

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் நோக்கில் சினந்து வந்த காலனை உதைத்த ஈசன் ஊரானது, கழுமலம், பெருமை பெறும் தேணிபுரம், சீர்மிகுந்த வெங்குரு, புகலி, வேணுபுரம், பிரமபுரம், பேரின்பம் வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சைவயம், சீகாழி, சண்பை எனப் பன்னிரண்டு பெயர்கள் கொண்டதாகும். அத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், குமாரக் கடவுளைத் தோற்றுவித்துத் தேவர்களுக்குப் பகையாகிய அசுரர்களை அழித்த பெருமான் ஆவார்.

805. திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயம்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ் சீர்ச் சிரபுரம்வெங்
குருவெம் போர் மகிடற் செற்று
நிகழ் நீலி நின்மலன்றன் னடிஇணைகள்
பணிந்துலகில் நின்றவூரே.

தெளிவுரை : நன்று திகழும் மாடமாளிகைகள் மலிந்த சண்பை, பூந்தராய், பிரமபுரம், சீகாழி, புகழ் மிகுந்த தோணிபுரம், வேணுபுரம், கொச்சைவயம், புறவம், தேவர்கள் புகழ்ந்தேத்தும் புகலி, கழுமலம், சீர்மிகுந்த சிரபுரம், வெங்குரு எனும் பெயர்களைத் தாங்கி, மகிடனைத் செற்று ஈசன் திருவடிகளைப் பணிந்து விளங்கி காளி நின்று விளங்கும் ஊர், அதுவே.

806. நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி
சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்கும்ஊர் சிரபுரம்பூந்
தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
தாங்காக்க மிக்க ஊரே.

தெளிவுரை : மதில்கள் சூழ்ந்து விளங்கும் வெங்குரு, தேணிபுரம், வேணுபுரம், கழுமலம், கொச்சைவயம், உயர்ந்து விளங்கும் சீகாழி, சண்பை, வளர்ந்து ஓங்கும் புறவம், துர்க்கா தேவி காத்து விளங்கும் சிரபுரம், பூந்தராய், புகலி, வேணுபுரம், வெற்றியினை வழங்கும் பிரமபுரம் என்னும் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டு விளங்கும் ஊர், ஐம்பூதங்களும் நன்மை வழங்கிக் காக்கும் ஊராகும்.

807. மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வம்சண்பை காழிகொச்சை
தொக்க பொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள் பொழில் வேணுபுர மதிற்புகலி
வெங்குருவல் லரக்கன் திண்டோள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதும் ஈடு
அழித்துகந்த எம்மான் ஊரே.

தெளிவுரை : பிரமபுரம் விளங்கும் புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், பொழில் திகழும் கழுமலம், தூய்மையுறு தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வேணுபுரம், மதில் திகழும் புகலி, வெங்குரு எனத் திருப்பெயர்களைக் கொண்டது இராவணனுடைய இருபது தோளும் பத்துத்தலையும் வலிமை கெடுமாறு செய்து உகந்த ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

808. எம்மான்சேர் வெங்குருசீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பில் ஓர்புறவம் கொச்சை புரந்
தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியன்
ஊர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியஎம் மிறைவன் ஊரே.

தெளிவுரை : எம் தலைவனாகிய ஈசன் வீற்றிருக்கும் வெங்குரு, சிரபுரம், கழுமலம், புகலி, பொய்ம்மையற்றதும் மாண்புடையதும் ஆகும் புறவம், கொச்சை வயம், வேணுபுரம், தோணிபுரும், போர் புரியும் நோக்கில் பகைத்து வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட பரமனின் சீகாழி, பிரமபுரம், பூந்தராய், சண்பை, எனப்பெயர் பூண்டது  திருமாலும் பிரமனும் உணராத வகையில் தழலாய் விளங்கிய எம் இறைவன் விளங்கும் ஊர் ஆகும்.

809. இறைவனமர் சண்பையெழிற் புறவம்அயன்
ஊர்இமையோர்க்கு அதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரம் சீர்க் காழிவளர்
கொச்சைக்கழு மலம் தேசின்றிப்
பறிதலையோடு அமண்கையர் சாக்கியர்கள்
பரிசுஅறியா அம்மான் ஊரே.

தெளிவுரை : இறைவன் உறையும் சண்பை, எழில் மிகும் புறவம், பிரமபுரம், வேணுபுரம், புகழ் மிகுந்த புகலி, வெங்குரு, தோணிபுரம், நற்குணம் பொருந்தி விளங்கும் பூந்தராய், நீர்வளம் சிறக்கும் சிரபுரம். சீர்பொலியும் சீகாழி, வளரும் இயல்பு சேர்ந்த கொச்சைவயம், கழுமலம் எனப்பன்னிரண்டு பெயர்களையுடையது, சமணர்களும் சாக்கியர்களும் மெய்த்தன்மை அறியாத ஈசன் விளங்கும் ஊர் ஆகும்.

810. அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம் வெங்
குருக்கொச்டச புறவம் அம்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மான்ஒன் றியஞான சம்பந்தன்
தமிழ் கற்போர் தக்கோர் தாமே.

தெளிவுரை : ஈசன் வீற்றிருக்கும் கழுமலம், சிறப்புடைய சிரபுரம், வெங்குரு, கொச்சைவயம், புறவம், ஆழகிய பொலிவும் மெய்த் தன்மையுடைய பெருமையும் கொண்டு ஒளிரும் புகலி, சீகாழி, தோணிபுரம், வேணுபுரம், ஈசன் சிறந்து மேவும் சண்பை, பூந்தராய், பிரமபுரம் என வழியுறும் பெயர் உடைமையினைக் கோமூத்திரி என்னும் சித்திரக் கவியின் இயல்பால் அந்தாதியாகப் பரமன் பால் ஒன்றிய ஞானசம்பந்தர் சொல்லியவாறு ஓதுபவர்கள் தக்கவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

211. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

811. விண்ணியங்கு மதிக்கண்ணியான் விரியும்சடைப்
பெண்ணயங்கொள் திருமேனியான் பெருமான் அனல்
கண்ணயங்கொள் திருநெற்றியான் கலிக்காழியுள்
மண்ணயங்கொள் மறையாளர்ஏத்து மலர்ப்பாதனே.

தெளிவுரை : விண்ணில் இயங்கும் சந்திரனைத் தரித்துள்ள ஈசன், விரிந்த சடையுடையவனாய், உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு மேவும் பெருமான் ஆவார். அவர், நெற்றியில் நெருப்புக் கண்ணுடைய பெருமானாய், ஆரவாரத்துடன் பெருமை பூண்டுவிளங்கும் சீகாழிப் பதியில், இப் பூவுலகத்தின் நன்மையைக் கருதி, வேதங்கள் ஓதி, வேள்விகள் இயற்றும் மறையவர்கள் ஏத்தும் திருப்பாதம் உடையவர்.

812. வலிய காலனுயிர் வீட்டினான் மடவாளொடும்
பலிவிரும்பியதொர் கையினான் பரமேட்டியான்
கலியைவென்ற மறையாளர்தம் கலக்காழியுள்
நலியவந்தவினை தீர்த்துகந்த எந் நம்பனே.

தெளிவுரை : ஈசன், மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த வலிமையான காலனுடைய உயிரை, உதைத்து வீழ்த்தியவன்; உமாதேவியைப் பாகமாகக் கொண்ட பிரம கபாலம் ஏந்திப் பலியை விரும்பி ஏற்ற கரத்தை உடையவன்; மேலான பரம் பொருளாகத் திகழ்பவன். அந்த ஈசன், வறுமை முதலான துன்பங்களை வீழ்த்தி வென்ற அந்தணர்கள் நனி விளங்கும் எழுச்சியும் ஆரவாரமும் கூடித் திகழும் சீகாழியில், இப் பிறவியில் நலியச் செய்ய வேண்டும் என்று விதிக்கப் பட்ட பிராரத்த கன்மத்தைத் தீர்த்து மகிழ்ந்த எம் நாதன் ஆவார்.

813. சுற்றலாநற் புலித் தோல் அசைத்து அயன்வெண்டலைத்
துற்றலாயதொரு கொள்கையான சுடுநீற்றினான்
கற்றல்கேட்டல் உடையார்கள் வாழ் கலிக்காழியுள்
மற்றயங்குதிரள் தோள்எம்மைந்தன் அவனல்லனே.

தெளிவுரை : அரையில் புலித் தோலைச் சுற்றிக் கட்டி, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி உணவு கொள்ளும் குறிக்கோள் உடைய ஈசன், திருவெண்ணீற்றினைத் திருமேனியில் நன்கு பூசியவன். கற்றலும் கேட்டலும் உடைய பெருமக்கள் வாழ்கின்ற, விழாக்கள் பெருகும் சீகாழியில், உறுதியான ஒளி திகழும் திரண்ட தோள் உடைய எம் அழகனாகிய அப்பெருமான் யாவர்க்கும் நல்லன்.

814. பல்லயங்குதலை யேந்தினான் படுகானிடை
மல்லயங்குதிரள் தோள்கள் ஆர நடமாடியும்
கல்லயங்குதிரை சூழநீள் கலிக்காழியுள்
தொல்லயங்குபுகழ் பேணநின்ற சுடர்வண்ணனே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்திச் சுடுகாட்டில் உறுதி வாய்ந்த தோள்கள் ஆர வீசி நடம் புரிந்து, உறுதி மிக்க கரையின் மீது அலை வீசிச் சூழ விளங்கும் விழாப்பொலிவு மிக்க சீகாழிப் பதியுள், தொன்மைப் புகழ் பேண நின்று விளங்குபவன், சுடர் வண்ணனாகிய ஈசன்.

815. தூநயங் கொள்திரு மேனியிற் பொடிப்பூசிப்போய்
நாநயங்கொள்மறை யோதிமாது ஒருபாகமாக்
கானங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுள்
தேனயங்கொள்முடி யான்ஐந்து ஆடியசெல்வனே.

தெளிவுரை : தூய அன்பின் வடிவமாகிய திருமேனி உடையவனாகிய ஈசன், திரு நீறு பூசி, நாவின் இனிமை தோன்ற வேதங்களை ஓதி, உமாதேவியாரை ஒரு கூறாகக் கொண்டு, சோலைகளின் சிறப்பும், நல்ல நீர் நிலைகளும், நறும்புகழ் மணக்கும் திருவிழாக்களும் மல்கி விளங்கும் சீகாழியில் வீற்றிருக்கும் மேலான விருப்பத்தை யுடையவராகி, பசுவிலிருந்து பெறப்படும் பால் தயிர் முதலானவற்றை அபிடேகமாகக் கொள்பவன்.

816. சுழியி லங்கும்புனல் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழும்தண்கலிக் காழியுள்
பழியி லங்குந்துயர் ஒன்றிலாப்பர மேட்டியே.

தெளிவுரை : நீர்ச் சுழிகளை யுடைய கங்கையாள் சடையில் விளங்கி நிற்க, உமாதேவியை உடலின் ஒரு கூறாகக் கொண்டு மகிழ்ந்த பெருமான், உப்பங்கழிகள் இலங்கும் கடல் சூழ்ந்த சீகாழியில், பழிக்கப் படும் துயர் ஏதும் இல்லாத பரம் பொருளாகியவன்.

817. முடியிலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ
வடியிலங்குங் கழல் ஆர்க்கவே அனலேந்தியும்
கடியிலங்கும் பொழில் சூழுந்தண் கலிக்காழியுள்
கொடியிலங்கும் இடை யாளொடுங் குடிகொண்டதே.

தெளிவுரை : மேலான சீரிய சிந்தை கொண்டு முனிவர் பெருமக்கள் தொழுது போற்றத் திருவடியில் பொலியும் கழல்கள் ஆர்த்து ஒலிக்க, அனலை ஏந்தி நடம் புரியும் ஈசன், மணம் மிகுந்த பொழில் சூழ்ந்த காழியில் கொடி போன்ற மென்மையான இடையுடைய உமாதேவியாரொடு வீற்றிருக்கும் இறைவனே ஆவான்.

818. வல்லரக்கன் வரைபேர்க்கவந் தவன்தோள்முடி
கல்லரக்கிவ் விறல் வாட்டினான் கலிகாழியுள்
நல்லொருக்கிய தொர் சிந்தையார் மலர்தூவவே
தொல்லிருக்கும் மறை யேத்துகந்து உடன்வாழுமே.

தெளிவுரை : வன்மையுடைய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் போர்க்க, அவன் தோளையும் முடியையும் வாட்டிய பரமன், காழி நகரில் ஒருமித்த நல்ல சிந்தனை யுடைய அடியவர்கள் மலர் தூவிப் போற்றவும், தொன்மையான, இருக்கு முதலான நான்கு வேதங்களும் ஏத்தி நிற்கவும் உடனாக இருந்து மகிழ்கின்றனன்.

819. மருவுநான்மறை யோனுமா மணிவண்ணனும்
இருவர் கூடிஇசைந்து ஏத்தவே எரியான்றனூர்
வெருவ நின்றதிரை யோதம் வார் வியன்முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர் கலிக்காழியே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் சேர்ந்து விரும்பிப் போற்றித் தொழுது நிற்கப் பெரிய சோதிவடியாய் நின்ற ஈசன் விளங்குகின்ற ஊரானது, கடலின் அலைகள் வீசி நிற்க, அதன் ஓதத்தின் வழியாகச் சங்குகளும் முத்துக்களும் வயல்களில் சேரும் காழி நகர் ஆகும்.

820. நன்றியொன்றும் உணராத வன்சமண் சாக்கியர்
அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான்
கன்று மேதியினம் கானல்வாழ் கலிக்காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே.

தெளிவுரை : மனிதப் பிறிவியினைத் தந்து உதவிய நன்றியினை, நன்மையினை, அறியாத சமண் சாக்கியர் நன்றல்லாதனவற்றைக் கூறினும், அவற்றை ஏற்றுக் கொள்ளாத ஈசன், எருமைகள் தம் கன்றுகளுடன் கடற்கரைச் சோலையில் வாழும் தன்மைøயுடைய காழியில் பெருமையுடன் கோயில் கொண்டு விளங்கும் இடபவாகனத்தினனாய் வீற்றிருப்பவன்.

821. கண்ணுமூன்றுமுடை யாதிவாழ் கலிக்காழியுள்
அண்ணலந்தண்ணருள் பேணிஞான சம்பந்தசொல்
வண்ணமூன்றுந்தமி ழிற்றெரிந் திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல் புகழாளரே.

தெளிவுரை : முக்கண்ணுடைய பெருமானாகிய ஈசன் விளங்கி வீற்றிருக்கின்ற விழாப் பொலிவு மிக்க சீகாழிப் பதியில் அண்ணலாரின், குளிர்ச்சி பொருந்திய அருளைப் போற்றி, ஞானசம்பந்தர் சொல்லிய இத் திருப்பதிகத்தை வண்ண மிகும் இசைகொண்டு பாடும் அடியவர்கள், விண்ணுலகமும், மண்ணுலகமும் விரிந்து பெருகும் சிறந்த புகழுடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

212. அகத்தியான் பள்ளி (அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

822. வாடிய வெண்டலை மாலை சூடியமங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்கு மாகநிவந்தெரி
ஆடியெம் பெரு மான்அகத்தி யான்பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கு இல்லை யாம்பாவமே.

தெளிவுரை : தலை யோட்டினை மாலையாகச் சூடி மயானத்தின் கொள்ளி எரியே விளக்காக அமைய, ஆடும் எம் பெருமான் வீற்றிருக்கும் அகத்தியான் பள்ளியைப் பாடுபவர்களுக்கும் சிந்திப்பவர்களுக்கும் எத்தகைய பாவமும் இல்லை.

823. துன்னங் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றணினான்
மன்னும் கொன்றைமத மத்தம்சூடி னான்மாநகர்
அன்னம்தங்கு பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியை
உன்னஞ்செய்த மனத் தார்கள்தம் வினையோடுமே.

தெளிவுரை : நன்கு தைத்த கோவண ஆடையுடைய ஈசன், திருவெண்ணீற்றை முற்றுமாகத் தோயப் பூசி விளங்குபவன்; சிறப்பான கொன்றை மலரும் ஊமத்த மலரும் சூடியவன். அப்பெருமான் வீற்றிருக்கும் பெருமை மிக்க சூடியவன். அப்பெருமான் வீற்றிருக்கும் பெருமை மிக்க நகரானது, அன்னப் பறவைகள் தங்கி இருக்கும் பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளி என்னும் தலம். அத்திருத்தலத்தை மனத்தால் நினைத்தவர்கள் வினையாவும் விலகிச் செல்லும்.

824. உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்துண்பதும்
கடுத்துவந் தயற் காலன்றன்னை யும்காலினால்
அடுத்ததுவும் பொழில் சூழகத்தி யான்பள்ளியான்
தொடுத்ததுவும் சர(ம்) முப்புரம் துகளாகவே.

தெளிவுரை : அகத்தியான் பள்ளி என்னுத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், உடுத்தியது, புலித்தோல் ஆடை; உண்பது, கபாலம் ஏந்திப் பிச்சை எடுத்துப் பெற்ற உணவு; கடுத்துச் சினந்தது, கூற்றுவனை; தொடுத்தது, முப்புரத்தை எரிக்கின்ற சரம்.

825. காய்ந்ததுவும் அன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பயந்ததுவும் கழற்காலனைப் பண்ணினான் மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமாவான்மகள் ஒருபாகமே.

தெளிவுரை : மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த ஈசன், காலனைப் பாய்ந்து, திருக்கழலால் உதைத்தவன்; வேதங்களை விரித்து ஓதியவன்; பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டு விளங்குபவன். அப்பெருமான் திருமேனியில் பொருந்திப் பாகமாகக் கொண்டு விளங்குவது இமவான் மகளாகிய உமாதேவியே ஆகும்.

826. போர்த்ததுவும் கரியின்னுரி புலித்தோலுடை
கூர்த்த தோர்வெண் மழுவேந்திக் கோளரவம்மரைக்
கார்த்ததுவும் பொழில் சூழகத்தி யான்பள்ளியான்
பார்த்ததுவும் மரணம்படர் எரிமூழ்கவே.

தெளிவுரை : ஈசன், யானையை அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்; கூர்மையான மழுப்படை ஏந்தியவன்; அரவத்தை அரையில் கட்டியவன். அப்பெருமான் மேகம் அடர்ந்து திகழும் பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் விளங்குபவன். அவன் பார்த்து எரித்தது முப்புர அசுரர்களின் மதில்கள் ஆகும்.

827. தெரிந்ததுவும் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவுமுன் னெழிலார் மலர் உறைவான்தலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே.

தெளிவுரை : ஈசன், கணை தொடுத்து முப்புரத்தை எரியுமாறு செய்தனன். அப்பெருமான் எழில்மிக்க தாமரை மலரில் விளங்கும் பிரமனின் ஒரு தலையை அரிந்தனன். பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் அப்பரமன், உமையவளை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன்.

828. ஓதியெல்லாம் உலகுக்கொரு ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவாரவர் துயர்தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான்அகத்தி யான்பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.

தெளிவுரை : வேதங்களை விரித்து ஓதியவனாய் உலகில் ஒப்பற்ற ஒளிப்பொருளாய், மெய் சோதியாய் விளங்கும் பெருமான், தொழுபவர்கள் துயர் தீர்த்திடும் ஆதிக்கடவுளாய் அகத்தியான் பள்ளியில் வீற்றிருப்பவன். அப்பெருமானை நெறி முறையாகத் தொழுபவர்கள் வினை யாவும் நீங்கும்.

829. செறுத்ததுவும் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்
ஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.

தெளிவுரை : தக்கனுடைய, தீய வேள்வியைத் தடுத்ததும், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியதும், மலரில் உறையும் பிரமன் சிரத்தைக் கொய்ததும், அகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசன் அருட் செயலாகும். அவன் இராவணனின் இருபது தோளையும் வலிமை இழக்கச் செய்தவன் ஆவான்.

830. சிரமும்நல்லமதி மத்தமும் திகழ்கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தி யான்பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.

தெளிவுரை : மண்டையோட்டு மாலை, சந்திரன், ஊமத்தம்பூ, கொன்றைமலர், அரவம் ஆகியன தரித்த சடையுடைய ஈசன் விளங்கும் அகத்தியான் பள்ளியை, பிரமனும் திருமாலும் தேடிய பெருமையைப் பரவிட, மேல் பதிந்த வினை தீரும்.

831. செந்துவராடையி னாரும் வெற்றரையேதிரி
புந்தியிலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமினும் வினை யானவை சிதைந் தோடுமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பேசும் பேச்சுக்கள் பொய்ம்மொழியாதல் கண்டு, எங்கள் பிரானாகிய அந்தணன், அகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனை சிந்தை செய்மின். உமது தீய வினை யாவும் நீங்கி அழியும்.

832. ஞாலமல்குந் தமிழ் ஞானசம் பந்தன் மாமயில்
ஆலும் சோலை புடைசூழ் அகத்தி யான்பள்ளியுள்
சூல நல்ல படையான் அடி தொழு தேத்திய
மாலை வல்லார் அவர்தங்கள் மேல்வினை மாயுமே.

தெளிவுரை : ஞாலத்தில் பெருமையுடன் விளங்கும் தமிழ் ஞானசம்பந்தன், சிறந்த மயில்கள் ஆடும் சோலை சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டுள்ள சூலத்தை நற்படையாகக் கொண்ட ஈசன் திருவடியைத் தொழுது ஏத்திய இத்திருப் பதிகத்தை ஓதவல்லவர்கள் மேல், தங்கியுள்ள வினையாவும் தீரும்.

திருச்சிற்றம்பலம்

213. அறையணிநல்லூர் (அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

833. பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலை நீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழுவார்களே.

தெளிவுரை : பெருமை யுடைய சிவஞானிகளாகிய பெரியோர்களும், அஞ்ஞானம் அழிதலுற்றுத் தீமை தரும் மலங்களும் வினைகளும் அற்றதாக விளங்கும் வீடு பேறு கண்டு உயர்ந்தவர்களும், வீழ்ச்சி யடையாத நித்தியத் துவத்தில் விளங்குபவர்கள் ஆவார்கள். அத்தகைமை பூண்டு திகழ்பவர்கள், வெண்மதி சூட, வேதம் விரித்து, சுடலை நீறணிந்து, ஆர் அழல் ஏந்தி ஆடுகின்ற ஈசன் வீற்றிருக்கும் அறையணி நல்லூரை அழகிய கரங்களால் கூப்பித் தொழுவார்கள்.

834. இலையி னார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
நிலையி னாலொரு காலுறச் சிலையினான்மதில் எய்தவன்
அலையி னார்புனல் சூடிய அண்ணலார் அறை யறிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.

தெளிவுரை : இலை போன்ற வடிவத்தையுடைய சூலத்தை ஏந்தி, இடபவாகனத்தை வாகனமாகக் கொண்டு மகிழ்ந்து ஏறித்தேவர்கள் தொழுது போற்ற விளங்கும் பரமன், வாயுதேவன் ஒரு கணையில் விளங்கி நிற்குமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புர அசுரர்களின் மதில்களை எரித்தவன். அப்பெருமான், அலைகள் பெருகி மேவும் கங்கையைச் சடைமுடியில் சூடி அண்ணல் ஆவார். அவர் வீற்றிருக்கும் அறையணி நல்லூரைத் தலையினால் தொழுது வணங்குபவர்கள், ஓங்கி உயர்வார்கள்; தடுமாற்றம் என்னும் ஐயறவு நீங்கப் பெற்றவர் ஆவார்கள்.

835. என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி உச்சியான்
பின்பினாற் பிறங்கும் சடைப்பிஞ்ஞகன் பிறப்பிலியென்று
முன்பினார் மூவர் தாம்தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு
அன்பினார்அறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.

தெளிவுரை : ஈசன், எலும்பு மாலையணிந்தவர்; பகைவர்களை எரிக்கும் சூலப்படை உடையவர்; பொலிந்து விளங்குகின்ற பெருமை மிக்க சந்திரனை உயர்வாகக் கொண்ட சடைமுடியில் சூடியிருப்பவர்; பின் புறமாகத் தாழ்ந்து விளங்கும் ஒளிர்கின்ற சடையுடையவர்; பிஞ்ஞகனாய்  பிறப்பிலயாய்த் திகழ்பவர்; வலிமை மிக்க மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் தொழப்பெறும் முக்கண் மூர்த்தி. அத்தகைய பெருமானுக்கு அன்புடையவர்களாகிய அடியவர்கள், அவன் எழுந்தருளி இருக்கும் அறையணிநல்லூரைக் கைகூப்பித் தொழுவார்கள்.

836. விரவுநீறு பொன் மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண்டு உறுதி பேணுவது அன்றியும்
அரவு நீள்சடைக் கண்ணியார் அண்ணலார் அறையணி நல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப் பறையும் தாம்செய்த பாவமே.

தெளிவுரை : பொன்போன்ற அழகிய திருமார்பில் நன்கு விளங்குமாறு திருநீறு விரவிப் பூசிய வேதியன், கொடிய விடத்தை அமுதம் என விரும்ப உட்கொண்டு தேவர்களின் அச்சத்தைப் போக்கி உறுதி காட்டியவராய், நாகத்தை நீண்ட சடையின்கண் தரித்து விளங்கும் அண்ணலார் ஆவார். அப்பெருமான் வீற்றிருக்கும் அறையணிநல்லூரைப் பரவி வணங்கும் அன்பர்கள் பழியற்றவர்களாய் விளங்கி, பாவமும் நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

837. தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாம்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயனல் அங்கையாய்அறையணிநல்லூர்
மேயினார்தம் தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

தெளிவுரை : தீயினைப் போன்று பிரகாசமாய்ச் சிவந்து ஒளிரும் திருமேனியுடைய பெருமானே ! தேவர்கள் தொழுது  போற்றும் தேவன் நீவிர் ! கொன்றை மாலை சூடிய நாதனே ! அழகிய கரத்தில் அனல் ஏந்திய ஈசனே ! அறையணிநல்லூரில் மேவி அடியவர்களுடைய தொல்வினையைத் தீர்த்தருள் புரிந்த இறைவனே ! கொடிய காலனைப் பாய்ந்த திருக்கழலை உடைய பரமனே ! தேவரீருடைய திருவடியைப் பணிகின்றனன். அருள்புரிவீராக.

838. விரையினார் கொன்றைசூடியும் வேக நாகமும் வீக்கிய
அரையினார் அறை யணிநல்லூர் அண்ணலார் அழகாயதோர்
நரையினார் விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினால்உயர்ந் தார்களும் உரையினால்உயர்ந் தார்களே.

தெளிவுரை : மணம் பெருகும் கொன்றை மலர்சூடியும், வேகமாகப் பரவும் நஞ்சுடைய நாகமும் கட்டிய அரையினையுடைய ஈசன், அறையணி நல்லூரில் விளங்கும் அண்ணலார் ஆவார். அப்பெருமான் அழகுடைய வெள்விடையை வாகனமாக உடையவர். அத்தகைய பரமனைப் புகழ்மிக்க சொற்களால் பாடியும் போற்றியும் உயர்ந்த அடியவர்களும் நற்புகழ் விளங்கப் பெற்றுப் பெருமை உற்றவர் ஆயினர்.

839. வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய உரிவை போர்த்து அரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலார் அறையணி நல்லூர்
வாரமாய் நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.

தெளிவுரை : வேதம் விரித்தநாதராகியவரும், அழகரும் ஆகிய ஈசன், யானையின் தோலையுரித்து இரத்தமாகிய ஈரம் கலந்த அதனைப் போர்வையாகக் கொண்டவர். அவர், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; பாம்பினை ஆரமாகப் பூண்டு திகழ்பவர். அத்தகைய அண்ணலார் அறையணி நல்லூரில் வீற்றிருக்க, அன்பு கெழுமிய நெஞ்சினராய்ப் போற்றும் அடியவர்கள் கொடிய வினையாவும் நீங்கப் பெற்றுத் துன்பம் அற்றவராய் இருந்து மகிழ்ந்து விளங்குவார்கள்.

840. தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடுஎழில் ஆமைபூண் அண்ணலார் அறையணிநல்லூர்
நக்கனார்அவர் சார்வலால் நல்குசார்விலோ நாங்களே.

தெளிவுரை : தக்கன், செய்த தீயநோக்குடைய வேள்வியைத் தகர்த்த ஈசன், நீண்டு தாழ்ந்த சடை முடியுடையவன்; சூரியனை வலக் கண்ணாகவும், சந்திரனை இடக்கண்ணாகவும் அக்கினியை நெற்றிக் கண்ணாகவும் உடையவன்; வேதம் விரித்து ஓதியவன்; முனிவர் பெருமக்கள் தொழும் மாண்பினன்; எலும்பு மாலையும் ஆமையும் ஆபரணமாகப் பூண்டு திகழும் அண்ணல். அப்பெருமான் அறையணி நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன். கோவண ஆடை தரித்து மேவும் அப்பரமனைச் சார்ந்து இருத்தலைத் தவிர எமக்கு வேறு புகலிடம் இல்லை.

841. வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப் பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமாம் இவைஇவை தேறி யின்புறில்
ஐய மேற்றணும் தொழிலராம் அண்ணலார் அறையணி நல்லூர்
சைவனாவர் சார்வலால் யாதும் சார்விலோ(ம்) நாங்களே.

தெளிவுரை : ஈசன், வெம்மை தரக்கூடிய நோய் முதலான எவ்விதக் குறையும் இல்லாதவர்; தீமை அற்றவர்; தாம் மேற்கொண்ட செய்யும் திருவிளையாடலே அலங்காரமாகக் காண்பவர். அப்பெருமான் செய்யும் தொழில் யாதாகி விளங்கும் எனத் தேறி மகிழ்ந்தால், கபாலம் ஏந்திப் பலி கொண்டு திரிகின்றவராய் உணவு ஏற்ற தொழிலுடையார் எனல் ஆகும். அத்தகைய அண்ணலார் அறையணிநல்லூரில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவரைச் சார்பு கொண்டு உய்வது அல்லாது வேறு யாதும் புகலிடமாகக் கொள்கிலாதவர்கள் நாங்கள்.

842. வாக்கியம்சொல்லி யாரொடும் வகையலா வகை செய்யமின்
சாக்கியம்சமண் என்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலார்அறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாம்செய்த பாவமே.

தெளிவுரை : வார்த்தைகளால் பொருந்தப் பேசும் தன்மையில் இசைந்து நன்மையல்லாத செயல்களைப் புரியாது விடுக. சாக்கியம் சமணம் என்னும் கொள்கை வழி செல்லற்க. மூன்று மதில்களைப் பொடியாக்கி மழுவாகிய கூரிய படைக்கலத்தை ஏந்திய அண்ணலார் வீற்றிருக்கும் அறையணிநல்லூரில் மேவும் இறைவனை இன்றியமையாப் பொருளாகப் பெற்றிருப்பிராயின் செய்த பாவம் யாவும் கெடும்.

843. கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம் அமர்தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம் பந்தனல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண் மூர்த்திகள் தாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.

தெளிவுரை : உப்பங்கழிகளும் கடற்சோலைகளும் சூழ்ந்த கழுமலம் என்னும் தொன்மையான நகரில் விளங்கும் பெருமையுடையதும், பழித்துக் கூறும் தன்மை யற்றதும் ஆகிய வேதம்வல்ல ஞானசம்பந்தரின் நன்மை திகழும் பண்பின் வயத்தால் விளங்கும் சொல்திரட்சியுடைய இத்திருப் பதிகத்தை ஓதுபவர்கள் அறையணி நல்லூரில் விளங்கும் முக்கண் மூர்த்தியின் திருவடியைத் தொழுது போற்றும் அடியவர் தம்மொடு சிவலோகத்தைச் சார்ந்த வீற்றிருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

214. திருவிளநகர் (அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

844. ஒளிர்இளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண ஆடையர்
குளிர்இளம்மழை தவழ்பொழில் கோலநீர்மல்கு காவிரி
நளிர்இளம்புனல் வார்துறை நங்கைககங்கையை நண்ணினார்
மிளிர்இளம்பொறி அரவினார் மேயதுவிள நகராரே.

தெளிவுரை : ஒளிர்ந்து விளங்கும் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய ஈசன், கோவணத்தை ஆடையாக உடையவர்; மழை தாங்கிய மேகம் போல் குளிர்ந்த பொழில் மல்கும் காவிரியின் துறையைக் காட்டியவர்; கங்கையைத் தரித்தவர்; ஒளி திகழும் படத்தையுடைய அரவத்தை உடையவர். அப் பெருமான் மேவி விளங்கும் இடமாவது விளநகர் ஆகும்.

845. அக்கரவ்வணி கலனென அதனொடுஆர்த்ததொ ராமைபூண்டு
உக்கவர்சுடு நீறணிந்த ஒளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

தெளிவுரை : எலும்பும் அரவமும் அணிகலனாகக் கொண்டு, அதனொடு ஆமை ஓட்டினைப் பொருத்தி, மயானத்தில் விளங்கும் சாம்பலைப் பூசி விளங்குபவர் சிவபெருமான். புனித தீர்த்தமாக விளங்கும் காவிரியில் நீராடித் துயர் நீங்கும் தன்மையில் திருவெண்ணீறு அணியும் அடியவர்கள் வழிபாடு செய்ய அப்பெருமான் விளநகர் என்னும் பதியில் மேவி வீற்றிருப்பவர்.

846. வாளிசேர்அடங் கார்மதில் தொலைநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல்கடல் நஞ்சுடன்
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடினர்
மீளியேறுகந் தேறினார் மேய்துவிள நகரதே.

தெளிவுரை : அடங்காது பொருத பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அம்பினால் எய்து எரித்துச் சாம்பலாக்கி, நறுமணம் திகழ விளங்கும் உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு அமர்ந்த ஈசன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டராகவும், ஒளிவீசும் சடை முடி உடையவராகவும் விளங்குபவர். அப் பெருமான் விளநகரில் மேவி வீற்றிருப்பவர்.

847. கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினர் நோயிலார்பிறப்பும்இலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன், காற்றும் நெருப்பும் கொண்டு எரியும் மயாத்தில் ஒலிக்கும் கழல் அணிந்து ஆடுபவர்; கையில் சூலப்படை உடையவர்; முப்புரி நூல் அணிந்த திரு மார்பினர்; மும்மலமும் அற்றநின்மலர்; பிறவி கொள்ளும் தன்மை இல்லாதவர்; பெருமை கொண்டு விளங்கும் குற்றமற்ற நீல மணிமிடற்றினர்; சடையின்மேல் வெண்பிறை தரித்தவர். அப்பெருமான் மேவி வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

848. பன்னினார் மறைபாடினார் பாயசீர்ப் பழம் காவிரித்
துன்னுதண்துறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
சென்னி திங்களைப் பொங்கராக் கங்கை யோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன் வேதங்களை ஆய்ந்து விரித்தவர்; காவிரியின் துறை காட்டிய, துறை காட்டும் வள்ளல் என்னும் திருநாமம் தாங்கியவர்; தாய நெறி பெறும் முகத்தான், சென்னியில் சந்திரனை, பொங்கி எழும் அரவத்தோடு கங்கையும் உடன் சேர்த்துத் தரித்தவர்; ஒளிரும் முப்புரி நூலைத் திருமார்பில் உடையவர்; அப்பெருமான் வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

849. தேவரும்அம ரர்களும் திசைகள் மேலுள தெய்வமும்
யாவரும்அறி யாததோர் அமைதியால் தழல் உருவினார்
மூவரும்அவர் என்னவு(ம்) முதல்வரும்இவர் என்னவும்
மேவரும் பொருள் ஆயினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : தேவர்களும் அமரர்களும், அட்டதிக்குப் பாலர்களும், மற்றும் யாவரும் அறியாத தன்மை உடையவர் சிவபெருமான். அவர் சலனம் இன்றி அமைதியாக விளங்கும் தழல் போன்றவர். மும்மூர்த்திகளும் அப்பெருமானே என்று போற்றவும், யாவர்க்கும் முதல்வராகி விளங்குபவர் அப்பரமனே எனவும், மேவுதற்கு அரிய பொருளாகத் திகழ்பவர். அவர் மேவி வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

850. சொல்தருமறை பாடினார் சுடர்விடும்சடை முடியினார்
கல்தருவடம் கையினார் காவிரித்துறை காட்டினார்
மல்தருதிரள் தோளினார் மாசில் வெண்பொடிப் பூசினார்
வில்தருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன், நன்மொழி தரும் வேதத்தை விரித்தவர்; சுடர் மிகுந்த சடை முடியுடயவர்; செபமாலை கையில் கொண்டு விளங்குபவர்; காவிரியில் துறையைக் காட்டிய துறை காட்டும் வள்ளல்; ஒளி திகழும் உறுதியான தோளினர். எக்காலத்திலும் மாசு கொள்ளாத சிறப்புடைய திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; ஒளி விளங்கும் நீலகண்டத்தை உடையவர். அப் பெருமான் வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

851.படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவார் அரவு அரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னும்பொன்புரி நூலினார்
மிடல்தரும்படை மழுவினார் மேயதுவிள நகரே.

தெளிவுரை : ஈசன், விரிந்து படர்ந்த சடை முடியுடையவர்; தமது திருவடியைப் பரவித் தொழும் அடியவர்கள் அடர்த்து வருத்தும் பணிகள் கெடுமாறு அருள் புரியும் கருணையாளர்; அரவத்தை அரையில் கட்டியவர்; மலையின் பிளப்பிலிருந்து தோன்றும் ஒளி தரும் மணிகளைப் போன்ற கண்டத்தை உடையவர்; மின்னி ஒளிரும் முப்புரி நூலினைத் திருமார்பில் தரித்தவர்; வலிமை மிக்க மழுப்படையைக் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் மேவி வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

852. கையிலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார்
பையிலங்கு அரவு அல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்குஒளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் மீற்றினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன், திருக்கையில் சூலப்படை உடையவர்; புலித்தோலினை ஆடையாகக் கொண்டும் யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டும் விளங்குபவர்; மயானத்தில் கரிந்த உடல்களின் ஊடே ஆடுபவர்; படம் விரித்தாடும் அரவம் அன்ன அல்குல் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; கறை கொண்டும், ஒளி கொண்டும் திகழும் மாசு இல்லாத மணிமிடற்றுடையவர், திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர். அப்பெருமான் வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

853. உள்ளதன்றனைக் காண்பன்கீழ் என்ற மாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மேல் என்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் உள்ள ஈசனை, கீழ் நோக்கிச் சென்று காண்பன் எனப் பெருமை மிக்க மணிவண்ணனாகிய திருமாலும், மேல்நோக்கிச் சென்று காண்பன் எனத் தாமரை மலரின்மேல் விளங்கும் அண்ணலாகிய பிரமனும் முனைந்தும் காணாதவராய் நிற்க, ஒளிரும் சடை முடியுடைய ஈசனாகிய அப் பெருமான் பேரொளி விளக்கமாக விளநகரில் வீற்றிருப்பவர் ஆவர்.

854.மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநூல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுதுய ரம்இலர் தூநெறிபெறு வார்களே.

தெளிவுரை : மென்மையான சிறகுகளையுடைய வண்டு யாழ் போன்ற இசையெழுப்பும் விளநகர் என்னும் துறை மேவிய, பிறைச் சந்திரனைச் சூடிய அண்ணலாகிய ஈசனை, சண்பையில் மேவும் ஞானசம்பந்தர் புகழ்மிகுந்த இன்பம் திகழும் தமிழாற் சொன்ன இத்திருப்பதிகத்தை ஏத்தி உரைப்பவர்கள், வினையிலிருந்து நீங்கப் பெற்றுத் துன்பமும் துயரமும் அற்றவராய், தூயதாகிய சைவ நெறியில் நன்கு விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

215. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

855. பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சுதோய்ச் சட்டவுண்டு
சிவனதாள் சிந்தியாப் பேதைமார்
போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்து
ஏறிய காள கண்டன்
அவனது ஆரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! மேல்மூச்சு வாங்கி, நாக்கு வறட்சி கொண்டு, சொற்கள் குழறி நா எழாமல், பஞ்சில் நீர் தோய்த்து வார்த்துத் தொண்டை நனையுமாறு உள்ள மரண காலத்தில் சிவபெருமான் திருவடியைச் சிந்திக்காத பேதையர் போன்று நாணுதல் கொண்டனையே ! கவனத்துடன் பாய்ந்து செல்லக் கூடிய இடபத்தை வாகனமாக உகந்து ஏறிய நீலகண்டனாகிய ஈசனின் ஆரூரைச் சென்றடைந்து உய்யலாம். எனவே நீ மயங்கி நின்று அஞ்சற்க.

856. தந்தையார் போயினார் தாயரும்
போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம்
வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தண்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல்நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! தந்தையானவரும் மறைந்தனர். தாயரும் மறைந்தனர். இந்நிலையில் தாமும் இம் மண்ணுலகத்தில் நிலைத்து இருப்பது என்று இல்லாது, போக வேண்டும் என்னும் கொள்கையில் உயிரையும் உடபைலயும் கூறுபடுத்தும் கால தூதர்கள் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். இந் நிலையில் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று மனத்தால் கருதுகின்றனை ! அழகிய குளிர்ச்சி மிக்க ஆரூர் பதியைத் தொழுது வணங்கி உய்வாயாக ! மையங் கொண்டு அஞ்சற்க.

857. நிணங்குடர் தோல்நரம்பு என்புசேர்
ஆக்கைதான் நிலாயதன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றநீங்
காதுஎனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
வைகலும் மனங்கொடு ஏத்தும்
அணங்கன்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : உடலானது, சதை, குடல், தோல், நரம்பு, எலும்பு ஆகியன சேர்ந்து நிலவும் தன்மையால் அத்தன்மையுடைய குணத்தின் வயப்படுவதன்றிக் குற்ற இயல்பு நீங்காது எனக் கருதுகின்ற நெஞ்சமே ! மனம் தளர்ச்சியுற்றுக் குலுங்கி வருந்தினையே ! நீமையல் கொண்டு அஞ்சற்க ! வானவர்களும், அசுரர்களும் நாள்தோறும் மனம் ஒருமித்து வணங்கி ஏத்தும் ஈசனார் விளங்குகின்ற ஆரூரைத் தொழுது உய்தி பெறுக.

858. நீதியால் வாழ்கிலை நாள்செலா
நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளுநாள்
இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னார் தருமனும்
வருணர்கள் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! எந்த நெறியில் வாழ வேண்டுமோ அந்த நெறியில் வாழ்க்கை கொள்கிலை. வாழ்நாளானது வீணாகப் பயன் இன்றிக் கழிக்கின்றது. உடற்பிணிகளும் துன்பங்களும் நாள்தோறும் வருத்துகின்றன. ஆதலால் இத்துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பம் அடைகின்ற நான் எப்போது காண இயலும் என்று ஏங்குகின்றனை ! நீ மையல் கொண்டு அஞ்சுதல் வேண்டாம். கின்னரர், தருமன், வருணர் முதலானோர் ஏத்தும் முக்கண்ணுடைய ஆதி மூர்த்தியாகிய ஈசன் வீற்றிருக்கும் ஆரூரைத் தொழுமின். உய்தி பெறலாம்.

859. பிறவியால் வருவன கேடுள
ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பநீங்
காதுஎனத் தூங்கி னாயே
மறவன்நீ மார்க்கமே நண்ணியனாய்
தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! பிறவி எடுத்தலால் வருவது யாவும் கேடு தரக்கூடியது. ஆதலால் பேரின்பம் வேண்டுமாயின் யாவற்றையும் துறந்து நிற்கவேண்டும் என்ற மனதில் கொண்டு சோர்வு கண்டனை ! அத்தகைய சோர்வு தேவையில்லை. நீ ஈசனை மறவாமையாகிய சன்மார்க்க நெறியில்  நின்றனை. புனித நீராகிய கங்கை தரித்த சடை முடியுடைய ஈசன் விளங்குகின்ற ஆரூர் தொழுது உய்தி பெறுவாயாக.

860. செடிகொள் நோய்ஆக்கை யைம்பாம்பின்
வாய்த் தேரை வாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத்து இன்புற
லாம்என்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்து
அன்பராய் ஏத்து முக்கண்
அடிகள்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே

தெளிவுரை : நெஞ்சமே ! குற்றமும் பிணியும் உடையது இவ்வுடம்பு. இவ்வுடம்பின்வழி இன்பம் பெறலாம் என்று கருதினை போலும் ! அது, ஐந்து தலைப் பாம்பின் வாயில் தேரையானது சிக்கி இருக்க, அது தன் வாயின் இடையில் வண்டினைப் பற்றி மகிழ்கின்றது. அந்த வண்டானது தான், தேரையின் வாயால் பற்றப்பட்டு அழியும் தன்மையில் உள்ளோம் என்னும் நிலையயும் உணராது, பூவில் விளங்கும் தேனைச் சுவைத்து இன்புறுமாறு உள்ளது. பின்னால் விளையும் துன்பத்தை எண்ணிப்பாராது வாழ்க்கை நடத்தும் இத்தேகத்தைப் பெரிதாகக் கருதினை ! வானவர்கள் தலை தாழ்த்திப் பணிந்து அன்பராய் விளங்கி ஏத்தும் முக்கண்ணுடைய அடிகளாகிய ஈசன் மேவும் ஆரூரினைத் தொழுது உய்தி பெறுக; அஞ்சற்க.

861. ஏறுமால் யானையே சிவிகையந்
தளகம்ஈச் சோப்பி வட்டின்
மாறிவாழ் உடம்பினார் படுவதோர்
நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர் தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! பெருமை மிக்க யானை, பல்லக்கு ஆகியவற்றில் ஏறிச் செல்லும் இத்தேகம் பாது காப்புடையதாகக் கருதிப் பிணி முதலானவற்றால் நெந்தும் உடை மாற்றுவதுபோல மாற்றப்பட்டுப் பிறவியின் துன்பத்துக்கு ஆட்படுகின்றனையே. துன்பம் தரும் இந்த தேகத்தைப் பெரிதாகக் கருதி மையல் கொண்டு அஞ்சுகின்றனையே ! உமாதேவியரைப் பாகமாகக் கொண்டு செஞ்சடையில் சந்திரனைச் சூடியும், கங்கையைத் திருமுடியில் தரித்தும் உள்ள ஈசன் விளங்கும் ஆரூரைத்தொழுது உய்தி பெறுவாயாக.

862. என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
சுவர்எறிந்து இதுநம் மில்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்
பொல்லாமை யான்முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாயதலார்
குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! எலும்பினாலும், கொழுத்த சதையினாலும் மண்சுவர் போன்று வீசப்பட்ட இவ்வுடம்பு நமது இல்லமாக உள்ளது. புன்மையான புலால் நாற்றமும் உடைய இத்தேகம், தோலால் போர்க்கப் பெற்று ஒன்பது வாயில்களைக் கொண்ட தாய் இருக்கின்றது. இவ் உடம்பைப் பாதுகாப்பதிலும், அதற்கு அநித்திய இன்பத்தை ஊட்டுதலும் கொண்டு விளங்குகின்றனை. அவ்வாறு செய்தல் உய்வதற்கு உரிய வழியன்ற. அன்பனாகிய ஈசன் கோயில் கொண்டு விளங்கும் ஆரூர் பதியைத் தொழுது உய்தி பெறுவாயாக.

863. தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
புத்திரர் தாரமென்னும்
பந்தம்நீங் காதவர்க்கு உய்ந்துபோக்
கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
சோதியார் வேதகீதர்
எந்தைஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொடு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! தந்தை, தாய் உடன் பிறந்தார், புத்திரர், மனைவி என்று விளங்குகின்ற பந்தபாசங்கள் கொண்டுள்ளவர்களுக்கு, உய்தி பெறும் வழியில்லை என்று கருதுவாயாக. திருநீறு பூசியணிந்த ஆதி மூர்த்தியும் சோதியும் வேத கீதமும் ஆகிய எந்தை ஆரூர் அண்ணலைத் தொழுது உய்தி பெறுக.

864. நெடிய மால் பிரமனு(ம்) நீண்டுமண்
ணிடந்தின்ன நேடிக் காணாப்
படிய னார் பவளம்போல் உருவனார்
பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
மணியணி கண்டத்து எண்டோள்
அடிகள்ஆரூர் தொழுது உய்யலா(ம்)
மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! திருமாலும், பிரமனும் தேடியும் காணாத உலகம் முழுமையாக விளங்கிய பவளம் போன்ற செந்நிறத்தினை உடைய ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, திங்கள் பதிந்த சடையுடையவராய், நீலகண்டத்தினராய், எண்தோள் உடையவராய் விளங்குகின்ற ஆரூரைத் தொழுக ! உனது மயக்கம் அழிந்தொழியும் அஞ்சற்க.

865. பல்லிதழ் மாதவி யல்லிவண்
டியாழ்செயும் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதுஎரி யாடும்எம்
ஈசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார்
ஓதநீர் வைய கத்தே.

தெளிவுரை : பல இதழ்களையுடைய மாதவி, அல்லி ஆகிய பூக்களில் உள்ள தேனை உறிஞ்சும் வண்ணம், விளங்குகின்ற அண்ணலாய், நல்லவற்றை நல்லவாறே மொழிந்த ஞானசம்பந்தர், ஆரூரில் வீற்றிருக்கும் எரியாடும் ஈசனை ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், கடலால் சூழப்பெற்ற இவ்வுலகத்தில் தீமையேதும் அணுகப் பெறாதவராய் வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

216. திருக்கடவூர்மயானம் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

866. வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் உசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம் பெருமான்

தெளிவுரை : சிறப்பு மிக்க வேதத்தை அழகுற விரித்தவர் பெருமான். அவர் பிறைச் சந்திரனைச் சூடியவர்; மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு எய்தவர்; எறிந்து வீசப்பெறும் படை உடையவர்; கருமையான கண்டத்தை உடையவர்; கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர்; பெருமை மிக்க இடப வாகனத்தில் அமர்ந்து வருபவர். அப்பெருமான் எம்பெருமானாகிய அடிகள் ஆவார்.

867. மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளேறு ஏறிச் செல்வம்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; மழுவாட் படையை வலக்கரத்தில் கொண்டு திகழ்பவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; கடவூர் மயானம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவர்; அப்பெருமான், வெண்மை நிறம் கொண்ட இடபத்தில் ஏறி அமர்ந்த அடியவர்களுக்குச் செல்வத்தை வழங்க வருபவர். எமது பெருமானாகிய அப்பரமன் அழகிய திருக்கரத்தில் மான் ஏந்தித் திகழ்பவர் ஆவார்.

868. ஈடல்இடபம் இசைய ஏறி மழுவொன்று ஏந்திக்
காடதுஇடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவம் உடையார் அவர்எம் பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், இணையில்லாத இடப வாகனத்தில் விரும்பி ஏறி விளங்கி மழுப்படை ஏந்தி மயானத்தை இடமாக உடையவர். அவர் கடம்பூர் மயானத்தில் அமர்ந்தவர். அப்பெருமான், பாடலும் இசைக்கருவிகளும் பயிலக் கூத்தும் புரிபவர். எமது பெருமானாகிய அவர் ஆடுகின்ற அரவத்தை உடைய அடிகள் ஆவார்.

869. இறைநின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு டையார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், முன் கையில் வளையல் அணிந்து, எக்காலத்திலும் இளமையுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; வேத மொழிகளை நன்கு விரித்து அருள்பவர்; தெளிந்த ஞானிகளின் மனத்தின்கண் வீற்றிருப்பவர்; அடர்த்தியான பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தில் அமர்ந்து திகழ்பவர். எமது பெருமானாகிய அவர் பிறை விளங்கும் சடையுடைய அடிகள் ஆவார்.

870. வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், வெள்விடை மீது அமர்ந்திருப்பவர்; ஒரு காதில் தோடு அணிந்திருப்பவர்; துள்ளுகின்ற பெண் மானைக் கரத்தில் ஏந்தி இருப்பவர். சுடர்விட்டு ஒளிரும் பொன்போன்ற அழகிய சடையானது அசைய விளங்குபவர்; கரத்தில் கபாலம் ஏந்திக் கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். எமது பெருமானாகிய அவர் இளம்பிறைச் சந்திரனைச் சூடிய அடிகள் ஆவார்.

871. பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர்மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையர் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன் பொன்போன்ற தாதுக்களை உதிர்த்து மணம் கமழும் அழகிய கொன்றை மாலை புனைந்தவர்; இடப வாகனத்தை உயர்த்திக் கொடியாக ஏந்தியவர்; இடபத்தையே வாகனமாக உடையவர்; கன்றுகள் உடைய ஆவினங்கள் சூழ்ந்த சோலைகளைக் கொண்ட கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். எமது பெருமானாகிய அவர் பின்புறத்தில் தாழ்ந்து நீண்டு விளங்கும் சடையுடையவராகிய அடிகள் ஆவார்.

872. பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், உலக பாசங்களிலிருந்தும் பந்தங்களிலிருந்தும் மன்னுயிர்களை மீட்டு அருள்புரிபவர்; பரிவுடன் விளங்கும் அடியவர்களுக்கு அமுதம் போன்று விளங்கிய பேரின்பத்தைத் தரவல்லவர்; மனம் நிரம்பும் வகையில் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; கம்பீரமாக விளங்கும் இடபவாகனத்தின் மேல் அமர்ந்து காட்சி தருபவர்; நீலகண்டத்தை உடையவர்; கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். எமது பெருமானாகிய அவர், குருமூர்த்தமாக விளங்கி உபதேசம் செய்யும் அடிகள் ஆவார்.

873. செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமேல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : இராவணன் அலறுமாறு விரலால் கயிலை மலையை ஊன்றி அடர்த்த ஈசன் கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். வேறு எப்பொருளுக்கும் ஒப்புமை கூறப் படாதவகையில் குற்றமில்லா வெள்ளி மலை போன்று திகழும் இடபத்தில் ஏறி வருகின்ற அடிகள், எமது பெருமான் ஆவார்.

874. வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனும் தேர்ந்துங் காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திய ஈசன், வளர்ந்த சடையுடையவர்; இடப வாகனத்தை உடையவர்; மான் தோலை உடுத்தியவர்; அப்பெருமான் கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர்; திருமாலும், பிரமனும் தேடியும் காணவொண்ணாத பெருமானாய் விளங்கும் அவ்வடிகள், எமது பெருமான் ஆவார்.

875. தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீயகருமம் சொல்லும் சிறுபுன்தேரர் அமணர்
பேய்பேய்என்ன வருவார் அவர்எம் பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், தூய்மையான இடப வாகனத்தின் மேல் வருபவர்; பகைவருடைய மூன்று மதில்களை எரியுமாறு செய்தவர். அவர் கடவூர், மயானத்தில் வீற்றிருப்பவர். பேய் பேய் எனத் தீய செயல்களைப் பற்றிப் பேசும் சமணரும் தேவரும் அஞ்சுமாறு வருகின்ற அவர், எமது பெருமானாகிய அடிகளே ஆவார்.

876. மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னு(ம்)மயானம் அமர்ந்த
அரவம்அசைத்த பெருமான் அகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

தெளிவுரை : மரவம் என்னும் மரங்களின் பொழில் சூழ்ந்த கடவூரில், மன்னும் மயானத்தில் வீற்றிருக்கும் ஈசனை விரிவாக அறியுமாறு பரவும் முறையில் சொல்லிய ஞானசம்பந்தர் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் பரவி நினைப்பவர்கள் வினைகள் நீங்கப்பெற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

217. வேணுபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

877. பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியொடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : பூத கணங்களைப் படையாகக் கொண்டு விளங்கும் பெருமானே ! நீவிர் கொன்றை மாலையை அணிந்தவர்; வேதங்கள் ஒலிக்கவும், உம்பர்களும் வானவர்களும் போற்றிப் பரவவும், கடல் அலைகளின் ஆரவார ஒலியுடன் இணைந்து நிற்க, நறுமணம் கமழும் மலர்களால் தேவரீரின் திருப்பாதத்தைத் தொழுகின்றனர். நீவிர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு வீற்றிருக்கின்றீர்.

878. சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணம்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுஎனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் சுடுகாட்டில் மேவினீர் ! கோவணத்தையும் தோலையும் உடுத்தியவர் ஆயினீர்! உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குகின்றீர் ! திருக்கரத்தில் மழு என்னும் படையை ஏற்றுள்ளீர். நீவிர் வேணுபுரத்தினைப் பதியாகக் கொண்டவர்.

879. கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோடு இளஅரவம் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேந்தப்
பங்கயம்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : தேவரீர், கங்கையைச் சடை முடியில் சேர்த்தீர் ! காலனை முன் சென்று செற்று வீழ்த்தினீர் ! சந்திரனும், நாகமும் திருமுடியில் வைத்து மகிழ்ந்தீர் ! உமாதேவியை ஒரு பாகம் கொண்டு விளங்குகின்றீர் ! வேதவிற்பன்னர்கள் நிறைந்து ஏத்த, தாமரை மலர்கள் திகழ்ந்து விளங்கும் வேணுபுரத்தில் வீற்றிருப்பவர் ஆயினீர்.

880. நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.

தெளிவுரை : தேவரீர், கங்கை தரித்த சடை முடியின்மீது நீண்டு ஒளிரும் பிறைச் சந்திரனும், பாம்பும், கொன்றை மலரும் ஊமத்தம் பூவும் விளங்குமாறு சூடியிருந்து சிறப்பு மிக்க மாறிகைகளில் விளங்கும் மகளிர் வாழ்த்தி வணங்க வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு கலந்துள்ளீர்.

881. ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : கரும்பாலைகள் விளங்கவும் குளிர்ந்த கழனிகள் திகழவும் தேனை உட்கொண்ட வண்டுகள் கோயில் சென்று வழிபாடு செய்து போற்றவும், தேவரீர், உமாதேவியுடனாகக் கொண்டு வேணுபுரத்தினைப் பதியாகக் கொண்டு விளங்குகின்றீர்.

882. மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்து
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

தெளிவுரை : தேவரீர், நவரத்தினங்கள் போன்று மிளிரும் பெருமை மிக்க மலையின் மீது உமாதேவியினை உடனாகக் கொண்டு மகிழ்ந்திருந்தும், கோவண ஆடை உடுத்தியும் சுடுகாட்டில் ஆடல் செய்தும், இனிய பணியாற்றும் அந்தணர்கள் போற்றுமாறு வேணுபுரத்தின் திருக்கோயிலே இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றீர்.

883. நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் றனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழகார் வேணுபுரம் அமரும்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாக் கொண்டீரே.

தெளிவுரை : தேவரீர், நீலகண்டத்தையுடையவர்; நீண்ட சிவந்த சடையுடையவர்; அழகிய இடப வாகனத்தை உடையவர்; கொடிய காலனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்தவர்; நீர்வளம் மிக்க கழனிகளின் அழகு மிக்க வேணுபுரத்தில் விளங்கும் அழகிய கோயிலில் வீற்றிருப்பவர்.

884. இரைமண்டிச் சங்கேறும் கடல்சூழ்தென் னிலங்கையர் கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைமண்டிப் பேரோதம் கலந்தெற்றும் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய முடி நெரியுமாறு திருப்பாதத்தால் கயிலை மலையை ஊன்றிய தேவரீர், பெரிய அலைகளால் கரையை ஏற்றும் கடல் சிறப்பு உடைய கவின்மிகு வேணுபுரத்தில் வீற்றிருந்து அருள்புரிபவர் ஆவீர்.

885. தீயோம்பு மறைவாணர்க்கு ஆதியாம் திசைமுகன்மால்
போயேங்கி இழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையான் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரம் செழும்பதியாத்  திகழ்ந்தீரே.

தெளிவுரை : வேள்வித் தீ ஓம்பும் மறைவர்களுக்கு முதல்வனாகிய பிரமனும், திருமாலும், வானத்தில் உயர்ந்து சென்றும், பூமியில் குடைந்து சென்றும் காணுதற்கு அரியவராகிய திருவடியை உடைய தேவரீர், பாய்மரக்கலங்கள் கடல் அலைகளால் மோதும் தன்மையால் விளங்குகின்ற தலமாயும், உயர்ந்து ஓங்கும் பதியாகவும் திகழும் வேணுபுரத்தில் வீற்றிருக்கின்றீர்.

886. நிலையார்ந்த உண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.

தெளிவுரை : ஈசனே ! சமணரும் சாக்கியரும் கூறும் உரையைப் பேணாது தேவரீரின் திருவடியைச் சரண் என்று போற்றும் அடியவர்கள் நன்கு விளங்குமாறு வேணுபுரத்தில் ஆட்கொண்டு விரும்பி வீற்றிருப்பவர் நீவீர்.

(இத் திருப்பதிகத்தில் இறுதிப் பாட்டு கிடைக்கவில்லை.)

திருச்சிற்றம்பலம்

218. திருத்தேவூர் (அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

887. பண்ணலாவிய மொழியுமை பங்கன்எம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தஎம்அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாக உடைய எமது பெருமான், தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரனால் போற்றப்படும் விமலன்; இடப வாகனத்தை உடையவன்; தெளிந்த நிலவினைத் தொடுகின்ற. மாளிகைகளையுடைய தேவூரில் வீற்றிருக்கும் ஈசன். அப் பெருமானுடைய திருவடியைச் சரணம் என்று யாம் அடைந்தனர். எனவே, அல்லல் ஏதும் இல்லாதவர் ஆனோம்.

888. ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தனர் அல்லல் ஒன்றிலமே.

தெளிவுரை : உலகத்தில் உள்ளவர்கள் யாவரும் உய்திபெற வேண்டும் என்று, மலைமேல் சோதி வடிவாய்ச் செல்லும் வானவனாகிய சூரியன் போற்றித் துதிக்க மகிழ்ந்த பரமன், நீர்வளம் மிக்க தாமரை போன்ற அழகிய முகமலர் கொண்ட மகளிர் விளங்கும் தேவூரில் வீற்றிருக்க, ஆதியாகிய ஈசனில் திருவடியை வணங்கினவர்களானோம். அதனால் எமக்கு அல்லல் இல்லை.

889. மறைக ளால்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறவு கொண்டஅக் காலனைக் காய்ந்தஎங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பெருவயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : வேதங்கள் நன்கு ஓதி வழிபாடு செய்து வந்த மார்க்கண்டேயரைக் கொல்ல வேண்டும் என்னும் சினத்தைக் கொண்டு நின்ற காலனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்த எமது கடவுள், வாளைகளும் சேல்களும் சேற்றில் திகழப் பெருவயல்களையுடைய தேவூரில் அறவாளனாகிய ஈசன் திருவடியை நாம் அடைந்தனம். அதனால் எமக்குத் துயர் இல்லை.

890. முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னிட யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

தெளிவுரை : முத்தி நலம் அருளும் பரமன், பலி ஏற்றிட ஊர்தோறும் திரியும் பாங்கினனாய், பித்தனாய், சிவந்த சடையுடைய பிஞ்ஞகனாய், தன்னுடைய அடியவர்களுக்குச் சித்தத்தில் நின்று அருள்பவனாய் விளங்கும் ஈசன், சந்திரனைத் தொடும் அளவு உயர்ந்து விளங்கும் தேவூரில் வீற்றிருக்கும் அத்தன் ஆவான். யாம் அப்பெருமானுடைய திருவடியை அடைந்தனம். அதனால் துயரம் ஏதும் இல்லாதவர் ஆயினம்.

891. பாடுவாரிசை பல்பொருள் பயன்உகந்த அன்பால்
கூடுவார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடுவார்பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடுவானடி யடைந்தனம் அல்லல் ஒன்றுஇலமே.

தெளிவுரை : போற்றி பாடும் அன்பர்கள், பலவிதமான பொருள்களை ஆய்ந்து அவை யாவும் மெய்ம்மை ஆகாதன எனத் தேர்ந்து, ஈசனே மெய்ம்மை பயக்கக் கூடியது எனக் கொண்டு கூடுபவராய் விளங்கி, அப்பெருமானையே துணையாகப் பற்றி, வேறு பற்றிலராய் மேவித் திகழ்கின்றனர். பற்றப்படும் பொருளாய் இருந்து யாவராலும் தேடப்பெறும் ஒண்பொருளாகிய ஈசன், செறிந்த பொழில் சூழ்ந்த தேவூரில் வீற்றிருந்து நடம் புரிபவன். யான் அப்பெருமான் திருவடியை அடைந்தனம். அதனால் துயரம் யாதும் இல்லாதவர் ஆனோம்.

892. பொங்குபூண் முலைப்புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்
அங்கணன்றனை அடைந்தனம் அல்லல்ஒன்று இலமே.

தெளிவுரை : மலைமகளாகிய உமாதேவியைப் பாகமாக உடையவனாகியும், கங்கையை, வளர்கின்ற சடையின் மீது வைத்துச் சந்திரனைச் சூடியவனும் ஆகிய தீ வண்ணம் போன்ற சிவந்த நிறத்தையுடைய கடவுள், தென் தேவூரில் விளங்கும் கருணாலயன். அப் பெருமானை யாம் அடைந்தனம். அதனால் துயரம் தீர்ந்தவர் ஆயினோம்.

893. வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன்றிலமே.

தெளிவுரை : கொடிய அசுரர்களாகிய முப்புர அசுரர்களின் கோட்டைகள் எரிய, தனது புய வலிமையினால் மேரு மலையை வளைத்த ஈசன், அழகிய தமிழ்க் கலையில் வல்லவர்கள் மேவும் தேவூரில் அன்பனாய் வீற்றிருக்க, அப் பெருமானுடைய செம்மையான அடியை அடைந்தனம். ஆதலால், யாம் அல்லல் தீர்ந்தவரானோம்.

894. தருவு யர்ந்தவெற்பு எடுத்தஅத் தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிரல்நெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநல் தென்றல்வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : மரங்கள் உயர்ந்து விளங்கிய மலையினைப் பேர்த்த இராவணன் நெரியுமாறு கயிலையை ஊன்றி, அவன் வெருவுமாறு அடர்த்து, பின்னர் நெகிழ்வு கொண்டு , கருணை வயத்தனாய் மந்திர வாள் தந்து அருள் புரிந்த ஈசன், வீதிகளி தென்றல் காற்று உலவி, மகிழ்வினைத் தருகின்ற தேவூரில், நாகத்தை அணியாகத் தரித்துள்ளவன். அப் பெருமானை யாம் அடைந்தனம். எனவே எமக்குத் துயரம் இல்லை.

895. முந்திக் கண்ணனும் நான்முக னும்அவர் காணா
எந்தை திண்டிறள் இருங்களிறு உரித்தஎம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லல் ஒன்றிலமே.

தெளிவுரை : திருமாலும், நான்முகனும் காணாதவர்களாகிய எந்தையாகிய ஈசன், திண்மையான திறத்தை உடைய பெரிய யானையின் தோலை உரித்த பெருமான். நல்ல செந்து என்னும் இசையை வண்டு எழுப்ப விளங்கும் தேவூரில் அப்பெருமான் அந்தி வண்ணம் எனப்படும் சிவந்த திருமேனியனாய்த் திகழ்பவன். அப்பெருமானை யாம் அடைந்தனம். அதனால் யாம் துயரம் அற்றவர் ஆனோம்.

896. பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநம் செஞ்சடைக் கடவுள் தென்தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : புத்தரும், தவக் கோலம் பூண்ட சமணரும் பல நாள் கூறி வைத்த சொற்கள் யாவும் பிழையுடையது எனத் தேர்ந்த, சிவந்த சடைமுடியுடைய கடவுள் விளங்கும் அழகிய தேவூரில் வீற்றிருக்கும் ஈசனை அடைந்தனம். கங்கையைச் சடை முடியில் தரித்த அப் பெருமானை அடைக்கலமாகச் சார்ந்தமையால் எமது துயரம் தீர்ந்தது.

897. அல்லல் இன்றிவிண் ணாள்வர்கள் காழியார்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.

தெளிவுரை : காழிநகரின் நாதனாய், நல்ல செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தர், எல்லையற்ற புகழ் மல்கிய எழில் திகழும் தேவூரில் வீற்றிருக்கும் தொன்மை திகழும் பரமனை, சிவனைச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், அல்லல் இன்றி விளங்கி விண்ணுலகத்தில் சிறப்புடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

219. கொச்சைவயம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

898. நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
நெடுமாவுரித் தநிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூறு உருக்கொள்
திகழ்தேவன் மேவுபதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை
விழவோசை வேதவொலியின்
சாலநல் வேலை யோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சைவயமே.

தெளிவுரை : நீலகண்டத்தையுடைய ஈசன், சினந்து வந்த யானையின் தோலை உரித்து விளங்கியவன். அப்பெருமான், நிகரற்ற பெருமையுடைய சேல் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாகத் திகழ்பவர். அவர் மேவுகின்ற பதியானது, வேல் போன்ற நீண்ட கண்களையுடைய மங்கையர்கள் விளையாடும் ஓசையும், அந்தணர்கள் வேதத்தைக் கூறும் ஒலியுடன் கடலலைகளின் ஓசையும் கலந்து தருகின்ற மாட வீதிகள் கொண்டுள்ளதாய், தோரணங்களுடன் திகழும், கொச்சை வயம் என்னும் நகர் ஆகும்.

899. விடையுடை யப்பன்ஒப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கைதிங்கள்
தகவைத்த சோதி பதிதான்
மடையிடை அன்னம்எங்கும் நிறையப் பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கை யாளர் மறையோர்கள் என்றும்
வளர்கின்ற கொச்சை வயமே.

தெளிவுரை : இடப வாகனத்தை உடைய எம் தந்தையாகிய ஈசன், ஒப்பற்ற நடனத்தை ஆட வல்ல விகிர்தன். திருவடிவத்தைக் கொண்டு விளங்கும் விமலனாகிய அப்பெருமான், சடை முடியில் வெள்ளெருக்க மலரும், கங்கையும், சந்திரனும் பொருந்துமாறு வைத்துச் சோதி வடிவாய்த் திகழ்பவன். அப்பெருமான் விளங்குகின்ற பதியானது மடைகளின் இடையில் அன்னப் பறவைகள் சேர்ந்து இருக்கத் தாமரைகள் விளங்கும் வயல்களில் பறந்து சென்று தங்கக் கொடைத் தன்மை உடையவர்களும் மறையவர்களும் என்றும் வளர்ந்து பெருகுகின்ற கொச்சைவயம் ஆகும்.

900. படஅரவாடு முன்கை யுடையான் இடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்ட லைக்கை பலிகொள்ளும் இன்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞை வண்டு மதுவுண்டு பாடு
நளிர்சோலை கோலுகனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே.

தெளிவுரை : படம் விரித்து ஆடும் அரவத்தைக் கையில் அணிந்துள்ள ஈசன் துன்பத்தைக் களைவிக்கும் எங்கள் பரமன் ஆவான். அப் பெருமான் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி ஏற்கும் இன்பத்தைக் கண்டவன். அவன் தமது பதியாக வேர் கொண்டு விளங்குவது, மயில்கள் நடனம் ஆட, வண்டு மதுவுண்டு இசைபாடும் குளிர்ந்த சோலை விளங்கவும், பொற்குடத்தில் ஏறி நாகணவாய்ப் பறவை நன்றாக வேதங்களை ஓதுகின்ற பாங்குடையதும் ஆகிய கொச்சைவயம் ஆகும்.

901. எண்டிசை பாலர்எங்கும் இகலிப்புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூபமோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வருநீரபொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயும்ஓசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே.

தெளிவுரை : எட்டுத் திக்குகளிலிருந்தும் அன்பர்கள் போந்து, சிந்தையில் அன்பு உடையவர்களாய் ஒளிமிக்க தீபங்கள் ஏற்றியும், மாலை சாற்றியும், தூபங்களின் மணங்கமழவும் பணிந்து போற்றுகின்றனர். அத்தகைய பரமன் விளங்கும் பதி, காவிரியின் வண்டல் மண் சேரவும், வயல்களில் வாளை மீன்கள் குழுமி விளங்கவும், ஆழமாக உள்ள பள்ளங்களில் தண்ணீர் விழும் ஓசையும் சேர, நீண்ட மட்டைகளை உடைய தென்னை வளரும் கொச்சை வயம் ஆகும்.

902. பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடு தோழமைக் கொள்பகவன்
இனியன அல்லவற்றை இனிதாக நல்கும்
இறைவன்னிடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள்ஓமம்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சைவயமே.

தெளிவுரை : இமாசல அரசனுக்கு மருகனாகிய ஈசன் குபேரனொடு தோழமை கொள்ளும் இறைவன் ஆவான். இனிமை அற்றதையும் இனிமையாக நல்குமாறு செய்யும் அப் பரமன் கோயில் கொண்டு விளங்குகின்ற இடமானது, தவ வேந்தர்களாகிய முனிவர் பெருமக்கள் மிகுந்தும், ஓமம் செய்து முனியவர் பெருமக்கள் மிகுந்தும், ஓமம் செய்து வேள்வித் தீயை வளர்க்கின்ற மறைவல்ல அந்தணர்கள் கூடித் திகழ்ந்தும் வேள்வி புரிய, அப் புகையானது நிலவின் ஒளியை மறைக்கின்ற வகையில் வானை மறைத்துத் திகழும் கொச்சைவயம் ஆகும்.

903. புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்த ணாளர் கலைமேவு சிந்தை
உடையார்நி றைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவு கொச்சை வயமே.

தெளிவுரை : ஈசன், புலித்தோலையும் கோவணத்தையும் உடுத்துகின்ற ஆடையாக உடையவன். அப் பெருமான், நலிவினைத் தொகுத்துச் செய்த முப்புர அசுரர்களை, நினைத்த மாத்திரத்தில் எரித்துச் சாம்பலாக்கியவன். அவன் நலம் திகழ வீற்றிருக்கும் இடமானது, துன்பங்கள் யாதும் உலகில் நேராதவாறு அந்தணர்கள் சிந்தை கொண்டு வேதம் ஓத, மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் உடைய கொச்சைவயம் ஆகும்.

904. மழைமுகில் போலுமேனி அடல்வான் அரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொடு
உடனாடி மேய பதிதான்
இழைவலர் அல்குல் மாதர் இசைபாடி யாட
விடுமூசல் அன்ன குமுகின்
குழைதரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே.

தெளிவுரை : இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு, கயிலை மலையை எடுத்த பிழைக்காகத் திருப்பாதத்தால் ஊன்றிய, பேய்க் கணத்துடன் மயானத்தில் ஆடிய ஈசன் மேவும் பதியானது, மகளிர் இசை பாடி ஆட விளங்கும் கொச்சைவயம் ஆகும்.

905. வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய
முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரை செந்நெல் நடுவேயிருந்து
இறைதேர போது மதுவில்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் காண முடியாதவாறு சோதியாகிய ஈசன் பதியானது, நண்டு என்னும் இரையை உண்ண, நாரை நெல் வயலிடை இருந்து அதனை நோக்க, தேன் விளங்கும் தாமரையுடன் குமுதமும் மலர்ந்து விளங்கும் வயல்களையுடைய கொச்சை வயம் ஆகும்.

906. கையினில்உண்டு மேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தின் உடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாடவல்ல
விகிர்தத்து உருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறாரமிக்க
குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே.

தெளிவுரை : கையில் உணவு ஏந்தி உட்கொண்டும், துவர்ஆடை உடையவராயும் உள்ள சமணர், சாக்கியர்கள் மெய்ம்மை உரையாத வண்ணத்தில், திருவிளையாடல் புரியவல்ல ஈசன், வேறுபாடு காட்டும் செம்மையாகக் காட்சி தரும் விமலராகி வீற்றிருக்கின்ற இடமானது, படம் கொண்ட நாகத்தின் பற்கள் போன்று குரவம் என்னும் பூக்கள் மலரவும் வயல்களில் நீல மலர்கள் விரியவும் நறுமணம் கமழும் கொச்சைவயம் ஆகும்.

907. இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயில்மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர் போய்
அறைகழல் ஈசன்ஆளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே.

தெளிவுரை : இறைவனை, இணை கூற முடியாத ஒளி மேனியுடைய நாதனை, பிரளய காலத்தில் ஏழு உலகங்களும் மறைந்தாலும், அழியாமல் நிலைத்து விளங்கும் கொச்சைவயம் மேவும் ஈசனை, குறைவில்லாத ஞானம் மேவும் இனிமை மிக்க ஞானசம்பந்தர் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், ஈசன் ஆளுகைக்கு உகந்த சிவலோகத்தில் மேவி அழகுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் இரண்டாம் திருமறை »
temple news
1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் இரண்டாம்  திருமறையில் திருஞான ... மேலும்
 
temple news
220 திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar