Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம் இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » இரண்டாம் திருமறை
இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2011
02:09

1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் இரண்டாம்  திருமறையில் திருஞான சம்பந்தர் பாடிய  1331 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

137. பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. செந்நெல் அங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

தெளிவுரை : நெல் வளமிக்க வயல்கள் சூழ்ந்து விளங்கி செழிப்பினைத் தருகின்ற பூந்தராய் என்னும் பதியில் வெண்துகிலில் செம்மை நிறம் கொண்ட பவளம் பதிந்ததைப் போன்றும், புன்னை மலர்கள் விளங்கும் தன்மையைப் போன்றும், தேவர்கள் முடியின் மிசை தோயும் செம்மைக்கழல் உடைய பெருமானே ! சிவந்த சடையில் வெண்மையான பிறைச் சந்திரனும் பாம்பும் பொருந்த வைத்த பாங்கு என்கொல்  ? சொல்வீராக.

2. எற்று தெண்டிரை யேறிய சங்கினொடு இப்பிகள்
பொன்தி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.

தெளிவுரை : கடல் அலைகள் மூலமாகக் கரையில் மோதி வந்த சங்குகளும் சிப்பிகளும் பொன்போன்ற தாமரை மலர்கள் சூழ மேவும் பூந்தராய் என்னும் பதியில் உள்ள பொய்கையில் விளங்க, அத்தகைய பதியில் சூழப்போந்து தேவர்கள் தொழுது ஏத்தும் பொன் போன்ற கழலையுடைய பெருமானே ! இடப வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பது சிறப்புடையதாகுமோ ! சொல்வீராக.

3. சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பதே.

தெளிவுரை : சங்கும் பவளமும் முத்தும் தாங்கி வரும் அலைகளைச் சேர்க்கும் திரைகடல் வளம் பெருக்கும் பூந்தராய் என்னும் பதியின்கண் விளங்கும் பெருமானே ! அஞ்ஞானத்தால் உயர்ந்து நின்று பொருதல் செய்த யானையில் தோலை உரித்து உகந்து போர்த்து உமையவளைக் கூறு எனக் கொண்டு தேகத்தோடு உடனாகி அர்த்தநாரி ஈசுவரனாக விளங்கிய மாண்பினைச் சொல்வீராக.

4. சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம் ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மரவும் தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

தெளிவுரை : நல்ல பாதுகாப்புப் பொருந்திய மதில்களும், பூக்கள் நறுமணம் கமழ அளிக்கும் உயர்ந்த பொழில்களும் உடைய பூந்தராய் என்னும் பதியில் சந்திரனும் அரவும் விளங்கும் சிவந்த சடையுடைய பெருமானே ! மன்மதன் சாம்பலாகுமாறு கண் சிவந்தது எதற்கு ? விளம்புவீராக !

5. பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாள்தொறும் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையின் னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.

தெளிவுரை : பள்ளத்தில் இருக்கும் நீரில் வாழும் மீனை இரையாகக் கொள்ளும் நாரையானது, வாசம்புரியும் பொழில் சூழ்ந்திருப்பது பூந்தராய் என்னும் பதி. அப்பதியின்கண் துள்ளுகின்ற மானைக் கரத்தில் ஏந்தி விளங்கும் பெருமானே ! பெருவெள்ளமாக மேவும் கங்கையைச் சிவந்த சடையின்கண் வைத்த ஆற்றல்தான் என்னே ! விளம்புவீராக.

6. மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கெலாம்
போதிலங்கம லம்மது வார்புனல் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணிவீர்சொலீர்
காதில் அங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.

தெளிவுரை : நாட்டியக் கலையில் பெருமை பெற்றுத் திகழும் மங்கையர் நடனம் புரிய, அழகிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாயும் நீர் வளம் மிக்க சிறப்புடையது பூந்தராய் என்னும் பதி. அப்பதியின் கண் பேரொளி காட்டும் திருமேனியில் வெண்ணீறு அணிந்து விளங்கும் பெருமானே ! ஒரு காதில் அழகிய குழையும் மற்றொன்றில், அணிகலனாகத் தோடும் அணிந்து இருக்கும் தன்மைதான் யாது ! விளம்புவீராக.

7. வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்துஅருள் ஆக்கிய ஆக்கமே.

தெளிவுரை : கூடி வாழும் இனத்தைச் சேர்ந்த ஆண் குரங்குகளும் பெண் குரங்குகளும், சோலைகளில் உள்ள தருக்கன் தரும் கனிகளைச் சுவைத்து, பெருக உண்ணும் வளம் உடைய பதி பூந்தராய். அத்தகைய பதியின்கண் இடப வாகனத்தில் விளங்கும் அடிகேள் ! தன்முனைப்பு கொண்ட அரக்கனின் ஆற்றலை ஒடுக்கி அருளாக மாறச் செய்த ஆக்கம் தான் என்னே ! விளம்புவீராக.

8. வரிகொள் செங்கயல் பாய்யுனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடி உமைக்கண் டிலாமையே.

தெளிவுரை : அழகிய கயல்கள் பாயும் நீர்வளமும் உயர்ந்த மதில்களையுடைய மாடமாளிகைகளும் விளங்கும் பூந்தராய் என்னும் பதியில், வேதாகமங்களை விரித்து விளங்கும் பெருமானே ! திருமாலும் பிரமனும் உம்மைத் தேடியும் கண்டிலாத தன்மை எதன் பொருட்டு ! விளம்புவீராக.

9. வண்டல்அங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனல்
புண்டரீகமலர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.

தெளிவுரை : நிலவளம் சேர்க்கும் உரம்மிக்க வண்டல் மண் உடைய கழனிகளும், மடையில் வாளை மீன்கள் திகழ விளங்கும் நீர்வளமும், தாமரை மலர்கள் பெருக்கும் தேன் சுவையும் உடைய பூந்தராய் என்னும் பதியில், தொண்டர்கள் வந்து வணங்கிப் போற்றும் அருட்கழல் உடைய பெருமானே ! சமணர்களும் சாக்கியர்களும் பொருளல்லாதவற்றை உரைப்பது என்னே ! விளம்புவீராக.

10. மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாயப்ப
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைபப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே.

தெளிவுரை : சுறாமீன் விளங்கும் கடலின் மணல் சேரும் சோலைகளையுடைய புகலியின் ஞானசம்பந்தன், எழில்மிகு பூந்தராய் என்னும் திருநாமம் தாங்கிய பதியின் இறைவரைப் பரவிப் போற்றிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள், தீவினை யாவும் நீங்கப் பெற்றவராயும் நல்வினை நாடிச் சேரப்பெற்றவராயும் திகழ்வர்.

திருச்சிற்றம்பலம்

138. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

11. விண்டெ லாமலர் அவ்விரை
நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை
பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வும்சுடர்
போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி
பாடல் பயின்றதே.

தெளிவுரை : போதுகள் நன்கு விரியவும், வண்டுகள் அதனை வட்டமிட்டு விருப்பத்துடன் தேன் அருந்தி மகிழ்ந்து இசை பாடவும் உள்ள வலஞ்சுழியில், தொண்டர்கள் கூடிப் பரவிப் போற்ற, சுடர் மிகும் ஒளியாய் விளங்கும் பெருமானே ! பிரம கபாலம் ஏந்திப் பலியேற்கத் தேர்ந்து, பாடலும் கூறி ஆற்றியது என்னே ! விளம்புவீராக.

12. பாரல் வெண்குரு கும்பகு
வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை
தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வன்னகு
மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுலகு
ஒக்க உழன்றதே.

தெளிவுரை : நீண்ட அலகுகளையுடைய வெண்ணிறக் கொக்கும் நாரையும், நீர் அலையின்கண் இரையை நாடுகின்ற வளம் மிக்க வலஞ்சுழியில், தலைமாலையுடன் விளங்கும் பெருமையுடையவரே ! பிரம கபாலம் ஏந்தி உலகிடைப் பலியேற்று அலைந்தது எதற்கு ? விளம்புவீராக.

13. கிண்ண வண்ணமல ருங்கிளர்
தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம்
வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய்
பூசவல் லீர்சொலீர்
விண்ணவர்தொழ வெண்டலை
யிற்பலி கொண்டதே.

தெளிவுரை : கிண்ணம் போன்று குழிந்த வடிவத்தை உடைய வண்ணத் தாமரையின் தாதுக்கள் நுண்மையான பொடி மணலின்மீது பரவ, அவ் வண்ணக் கலவையின்மீது அன்னப் பறவைகள் தங்குகின்ற  சிறப்பினையுடையது வலஞ்சுழி. அத்தகைய பதியில் விளங்கும் வெண்பொடியைத் திருமேனியில் பூசும் வல்லமையுடைய பெருமானே ! தேவர்கள் எல்லாம் தொழுது வணங்குமாறு கபாலம் ஏந்தி, பலியேற்றது எதற்கு ? விளம்புவீராக.

14. கோடெ லாநிறை யக்குவ
ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண
நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாம்உடை யிர்சிறு
மான்மி யீர்சொலீர்
நாடெ லாம்அறி யத்தலை
யில்நறவு ஏற்றதே.

தெளிவுரை : நீர்க் கால்வாய்களின் கரையில் உள்ள குவளை மலர்களின் நறுமணம், நீரில் மணக்கும் வளம் பொருந்திய வலஞ்சுழியில் எல்லாவிதமான பெருமைகளும் கொண்டு விளங்கும் பெருமானே ! மானைக் கரத்தில் ஏந்தி விளங்குபவரே ! நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அறியுமாறு, கபாலம் கொண்டு பிச்சை ஏற்றுத் திரிந்தது எதற்கு ? விளம்புவீராக.

15. கொல்லை வென்றபுனத் திற்குரு
மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம்
வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை
யாள் ஒளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி
கொண்டுழல் செல்வமே.

தெளிவுரை : புறக்கடலைப் பகுதியின்கண் விளங்கும் வண்ணமிகும் சிறப்பான மணிகளைப் பொடி மணலில் விரவி வைக்கும் அன்னப் பறவைகள் திகழும் வலஞ்சுழியில், முல்லை யொத்த முறுவல் நகையுடைய பெருமானே ! சிறுமையுடைய கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிவது செழுமையாகுமோ ! விளம்புவீராக.

16. பூச நீர்பொழி யும்புனற்
பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர்
தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி
கொள்வது இலாமையே.

தெளிவுரை : பூசத் திருநாளில் அபிடேகப் பெருமை கொள்ளும் காவிரித் தீர்த்தமானது நீராடுவோருடைய இடர் தீர்க்கும் சிறப்பினையுடைய வலஞ்சுழியில், ஒளியும் செல்வமும் உடைய நன்னீராக விளங்கும் பெருமானே ! மானைக் கரத்தில் ஏந்திய ஈசனே ! பலரும் ஏசுமாறு பிச்சையேற்பது இன்மை பற்றியதோ ! விளம்புவீராக.

17. கந்த மாமலர்ச் சந்தொடு
காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வார்இடர்
தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு
வாம்அடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுஉல
கிற்பலி கொள்வதே.

தெளிவுரை : மணம் மிகுந்த மலர்களும் சந்தன மரங்களும், கரிய அகிலும் சேர வரும் தீர்த்த மகிமை பொருந்திய நீரில் (காவிரி) குடைந்து நீராடி, மகிழும் அடியவர்தம் இடர் தீர்க்கும் வலஞ்சுழியில், அந்தமும் ஆதியுமாகி நடுவும் ஆகியவர் நீவிரே ஆவீர். அத்தகைய அடிகேள் ! மன்னுயிர்க்கே உரிய பந்தம் கொள்வதைப் போன்று உலகில் பலி கொள்வது என்னே ! விளம்புவீராக.

18. தேனுற்ற நறு மாமலர்ச்
சோலையில் வண்டினம்
வானுற்ற நசை யாலிசை
பாடும் வலஞ்சுழிக்
கானுற்ற களிற் றின்னுரி
போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற்ற தலை கொண்டுலகு
ஒக்க உழன்றதே.

தெளிவுரை : தேனும் நறுமணமும் கொண்ட மலர்களை உடைய சோலையில் வண்டுகளின் இனம் பேருவகை கொண்டு இசை பாடும் வலஞ்சுழியில், யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொள்ளும் வல்லமை உடையவராய் விளங்கும் பெருமானே ! கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்தி, பிறரைப் போன்று உழன்றது என்னே ! விளம்புவீராக.

19. தீர்த்த நீர்வந்து இழிபுனற்
பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வார்இடர்
தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை
அன்றுஅடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி
கொள்வதும் சீர்மையே.

தெளிவுரை : புண்ணிய தீர்த்தங்கள் பல வந்து கலக்கப் பெற்ற புனிதமாகியதும் இத் திருத்தலத் தீர்த்தமாக விளங்குவதும் ஆகிய காவிரியில், பன்மலர்கள் சேர்ந்து நறுமணம் கமழ்ந்து விளங்க, அதில் நீராடுபவர்களுடைய இடர் தீர்க்கும் வலஞ்சுழியின்கண், ஆர்த்து வந்த அரக்கனாகிய இராவணனை அடர்த்த பெருமானே ! புகழ்மிக்க பிரமனுடைய கபாலம் ஏந்திப் பலி கொள்வதும் புகழ்க்குரியதே ! விளம்புவீராக.

20. உரம னும்சடை யீர்விடை
யீர்உமது இன்னருள்
வரம னும்பெற லாவதும்
எந்தை வலஞ்சுழிப்
பிரம னும்திரு மாலும்
அளப்பரி யீர்சொலீர்
சிரம்எ னுங்கல னிற்பலி
வேண்டிய செல்வமே.

தெளிவுரை : பெருமைமிக்க சடையுடையவரே ! இடப வாகனத்தை உடையவரே ! வலஞ்சுழி நாதரே ! எமது தந்தையே ! உம்மிடம் வரம்பெறுதல் சிறப்பானது. பிரமனும் திருமாலும் அளப்பதற்கு அரிய பெருமானே ! பிரம கபாலம் ஏந்தி வேண்டிய செல்வம்தான் யாது கொல் ? விளம்புவீராக.

21. வீடு ஞானமும் வேண்டுதி
ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாவதும்
எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்த
செந்தமிழ் கொண்டுஇசை
பாடு ஞானவல் லார்அடி
சேர்வது ஞானமே.

தெளிவுரை : முத்திப் பேறும் அதனை அடைவதற்கு உரிய ஞானமும் வேண்டுவீராயின், அது உணவைத் தவிர்த்து, விரதங்கள் மேற்கொள்வதால் ஆவது அன்று. உடல் வாட்டம் ஞானத்தை நல்காது, எந்தை யாகிய சம்பந்தரது செம்மை மிகுந்த இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடும் ஓதுவாமூர்த்திகளிடம் பொருந்தி இருப்பது ஞானமாகும்.

திருச்சிற்றம்பலம்

139. திருத்தெளிச்சேரி (அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

22. பூவ லர்ந்தன கொண்டுமுப்
போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு
மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு
கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது
போலுநும் பான்மையே.

தெளிவுரை : நன்கு மலர்ந்த மலர்களைக் கொண்டு மூன்று காலங்களிலும் தேவர்கள் உம்முடைய பொற்கழலை வணங்குமாறு அணிமிகும் தெளிச்சேரி என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமானே ! உலகினைத் தன் கருணை வயத்தால் காத்தருளுகின்ற உமாதேவியோடு பன்றியின் பின்னால் வேடுவத் திருக்கோலம் ஏற்று நின்ற பான்மை, விந்தையதே.

23. விளைக்கும் பத்திக்கு விண்ணவர்
மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத
திகழ்தெளிச் சேரியீர்
வளைக்கும் திண்சிலை மேல்ஐந்து
பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை எங்ஙன
நீர்கண்ணிற் காய்ந்ததே.

தெளிவுரை : ஈசனார்மீது பக்தி எழுதல் காரணமாகத் தேவர்களும், பூவுலக மாந்தர்களும் தொழுகின்றனர். அடியவர்களின் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களைத் தந்தருளி, மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! உறுதியுடன் வில்லை வளைத்து ஐந்து விதமான மலர்கணை நெற்றிக் கண்ணால் எரித்தது எங்ஙனம் ஆனது !

24. வம்ப டுத்த மலர்ப்பொழில்
சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி
சைத் தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல
விடை மிசைக் கூர்மையோடு
அம்ப டுத்தகண் ணாளொடு
மேவல் அழகிதே.

தெளிவுரை : மணம் மிகுந்த மலர்ப்பொழில் சூழ, நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! கொம்பு உடைய அழகிய இடபத்தின் மீது, கூரிய அழகிய திருவருள் நோக்குடைய உமாதேவியுடன் மேவிய அழகுதான் என்னே !

25. காரு லாம்கடல் இப்பிகண்
முத்தம் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய
தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட
வைப்பிடம் இன்றியே
வாரு லாமுலை யாளையொர்
பாகத்து வைத்ததே.

தெளிவுரை : மேகம் தவழும் கடலில் இருந்து சிப்பிகள் வெளிப்பட்டுக் கரையில் முத்துக்களைக் கொழிக்கவும், தேர் செல்லும் அகன்ற நெடிய வீதிகளையுடையதும் ஆகிய தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! எழுச்சி கொண்டு பிச்சை ஏற்கும்போது, உமாதேவியைத் தங்குமாறு செய்யத் தகுந்த இடம் வேறு இன்றி உமது பாகமாகக் கொண்டு இருக்கச் செய்தது தான் என்னே !

26. பக்க நுந்தமைப் பார்பதி
யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில்
சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை
மால்செய்து வெளவவே
நக்க ராயுலகு எங்கும்
பலிக்கு நடப்பதே.

தெளிவுரை : உமாதேவியார், உம்மைப் பக்கத்தில் இருந்து பூசிக்க, மதிதவழ் மதில் சூழ்ந்த தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! தாருகவனத்து மாதர்கள் நின்பால் பேதலித்து மயக்கம் கொண்டு கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விழுமாறு மெலியச் செய்து, அவர்களைக் கவரும் வகையில் ஆமையற்றவராய் உலகெங்கும் பிச்சையேற்று நடந்தது தான் என்னே !

27. தவள வெண்பிறை தோய்தரு
தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடம்
திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென
வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙன
நீர்கையிற் காயந்ததே.

தெளிவுரை : அழகிய வெண் பிறைச் சந்திரன் தோழும் பொழில் சூழவும், மணிமாடங்கள் திகழவும் உள்ள தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! குவளைக் கண்ணியாகிய உமாதேவியார் துண்ணென்று திகைக்க, வந்து தாக்கிய யானையைத் திருக்கரத்தினால் மாய்த்தது எங்ஙனம் நிகழ்ந்தது !

28. கோட டுத்த பொழிலின்
மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின்
மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்தமலர்க் கண்ணினாள்
கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை
என்கொல்நீர் சூடிற்றே.

தெளிவுரை : மலர்க் கொம்புகள் மல்கும் பொழிலில் குயிலின் இசை பெருக, பெருமை மிக்க நாட்டு வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் வேள்வி புரிதல், வேதகீதங்கள் பாடுதல், திருவிழாக்கள் நடத்துதல் போன்றனவும், மிகுந்து மேவும் தெளிச்சேரியின்கண் வீற்றிருக்கும் பெருமானே ! கங்கை என்னும் நங்கையை, இதழ் கொண்டு விளங்கும் கொன்றை தரித்த செஞ்சடையில் பொருந்துமாறு சூடியது என்கொல் ?

29. கொத்தி ரைத்த மலர்க்குழ
லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை
சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல
அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித்
திட்டதும் பாதமே.

தெளிவுரை : கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக் கொடி போன்ற நுண்மைöõன இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே ! பிரமதேவனால் வரம் பெற்று, உயர்ந்த படைகள் கொண்ட இராவணின் வலிமை பொருந்திய தலைகள் பத்தும், அதனை இரட்டித்தவாறு ஆகிய இருபது கரங்களும் நெரியுமாறு செய்து, அருள் புரிந்தது உமது திருப்பாதமே !

30. காலெ டுத்த திரைக்கை
கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல
ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙனம்
ஓருருக் கொண்டதே.

தெளிவுரை : கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கும் நீரை அள்ளி வீச, கானலும் சேல் என்னும் மீன்கள் பாயும் வயல் வளமும் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே ! திருமால் உமது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்தி நிற்குமாறு, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம் !

31. மந்தி ரந்தரு மாமறை
யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர்
சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய
ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித்
தீர்ஓர் சதிரரே.

தெளிவுரை : வேத மங்திரங்களைக் கூறும் அந்தணர்கள், தவம் மிக்கவர்கள், செந்து என்னும் இசையின் வகையாய்ப் பக்தியின் வழி மொழி நவிலும் மாதர்கள் ஆகியோர் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே ! பயனற்றவனாகிய சாக்கியர், சமணர் ஆகியோரின் செயலை நீக்குவித்த ஈசனே, நீரே வித்தகர் !

32. திக்கு லாம்பொழில் சூழ்தெளிச்
சேரிஎம் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம்
பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ
இருப்பவர் சொல்லிலே.

தெளிவுரை : எட்டுத் திக்கிலும் பொழில் சூழ விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் எமது செல்வமாகிய பரமனை, எக் காலத்திலும் மிக்க விளங்கும் காழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், புகழ்மிக்க தேவர்கள் சூழ விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

140. திருவான்மியூர் (அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

33. கரையு லாங்கட லிற்பொலி
சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக
ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுலகு
ஆளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுடன்
ஆகிய மாண்பதே.

தெளிவுரை : கடலின் அலைகள் வலிமையாக வீசி, சங்குகளும், முத்துச் சிப்பிகளும், மீன்களும் திரண்டு விளங்கும் சிறப்புடையது, திருவான்மியூர் என்னும் பதி. அப்பதியின்கண் வீற்றிருந்து உலக்தைப் புரந்தருளும் பெருமானே ! மலைமகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராகவும் அர்த்தநாரியாகவும் விளங்கும் ஈசனே ! அவ்வாறு விளங்குவதன் பொருள் யாதுகொல் ? விளம்புவீராக.

34. சந்து யர்ந்தெழு காரகில்
தண்புணல் கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர
வும்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம்பு
ஆர்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிறம்
ஆக்கிய வண்ணமே.

தெளிவுரை : சந்தனமும் அகிற் புகையும், குளிர்ந்த தூய நீரும் கொண்டு பூசித்தும், தியானித்தும் பரவிப் போற்றியும், மனம் வாக்கு காயத்தால் வழிபடும் அடியவர்கள் மிகுந்த சிறப்புடையது, திருவான்மியூர். அப்பதியின்கண் அழகிய கழலும், சிலம்பும் ஒலிக்க விளங்கும் பெருமானே ! அந்தியின் வண்ணம் போன்று, செம்மையான வண்ணத்துடன் உமது திருமேனியின் நிறமானது கொள்ளச் செய்தது எதன் பொருட்டு ? விளம்புவீராக.

35. கான யங்கிய தண்கழி
சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில்
சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கமர் ஆடையி
னீர்அடி கேள்சொலீர்
ஆனை யங்கவ்வுரி போர்த்தனல்
ஆட உகந்ததே.

தெளிவுரை : கடற்கரைச் சோலையும் உப்பங்கழியும் சூழும் கடற்புறத்தில் தேன் பொழியும் பசுஞ்சோலையும் சூழ விளங்குவது திருவான்மியூர். அப்பதியின்கண், தோலாடையை அங்கத்தில் நயந்து அணிந்த அடிகேள் ! யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டதும், நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரிந்து உகந்ததும் யாதுபற்றி ! விளம்புவீராக.

36. மஞ்சு லாவிய மாடம
திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி
லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிருள் ஆடல்
உகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க்கு
இன்னருள் வைத்ததே.

தெளிவுரை : மேகம் தவழும் உயர்ந்த மாட மாளிகைகளும், செம்மையான நூல்களைக் கற்றுத் தேர்ந்து, அதன் பொருளுணர்ந்த பெருமக்களும் விளங்குகின்ற பதி, திருவான்மியூர். ஆங்கு நள்ளிருளின்கண் ஆடல் உகந்து புரியவல்ல பெருமானே ! தீமை பயக்கும் கொடிய நஞ்சினை உட்கொண்டு தேவர்களுக்கு இனிமையான நல்லருளைப் புரிந்த மாண்புதான் யாதுபற்றியது ! விளம்புவீராக.

37. மண்ணி  னிற்புகழ் பெற்றவர்
மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி
லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி
தைத் தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை
வைத்த வியப்பதே.

தெளிவுரை : பூவுலகத்தில் கற்பென்னும் ஆற்றல் கொண்டு விளங்கும் மங்கையர்கள் பயிலும் இடமாகவும், நெடியவனவாயும் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய மதில்கள் கொண்டதும் ஆகிய, திருவான்மியூர் என்னும் பதியின்கண் வீற்றிருந்து, பிட்சாடனராகத் திரியும் கோலத்தை ஏற்ற பெருமானே ! வானத்தில் திகழும் வெண்பிறையைச் செஞ்சடையில் வைத்து மிளிர்ந்த அதிசயம் தான் யாது ? விளம்புவீராக.

38. போது லாவிய தண்பொழில்
சூழ்புரி சைப்புறம்
தீதில் அந்தணர் ஓத்தொழி
யார்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர்
பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி
யூட்டிய மொய்ம்பதே.

தெளிவுரை : மலர் அரும்புகள் மிக்க விளங்கும் குளிர்ந்த பொழில்களைச் சூழ்ந்து மதில்கள் விளங்கவும், எவ்விதமான மாசும் கூறமுடியாத அந்தணர்கள் ஓய்தல் இன்றி தேவங்களை ஓதும் பெருமை பெற்ற திருவான்மியூரில் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் பெருமானே ! முப்புரத்தை எரியூட்டிய வல்லமையை விளம்புவீராக.

39. வண்டி ரைத்த தடம்பொழி
லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கடல் ஓதமல்
குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந்து ஏத்திய
தொல்கழ லீர்சொலீர்
பண்டு இருக்கொரு நால்வர்க்கு
நீர்உரை செய்ததே.

தெளிவுரை : வண்டுகள் ரீங்காரம் செய்து விளங்கும் அகன்ற பொழிலின்கண் கடலலைகளின் ஓதம் பெருகிக் குளிர்ச்சியை நல்கும் திருவான்மியூரின் கண், திருத்தொண்டர்கள் கூடி அர அர என்று பேரொலி எழுப்பி நின்னைப் போற்றிப் பரவும் கழலின் மாட்சிமையுடைய பெருமானே ! பண்டைய நாளில் தட்சணாமூர்த்தியின் வடிவத்தில் விளங்கி சனகாதி முனிவர்களாக விளங்கிய நால்வர்க்கு இருக்கு முதலான நான்கு வேதப் பொருள்களையும் உணர்த்தி உரை செய்தது யாதுகொல் ! விளம்புவீராக.

40. தக்கில் வந்த தசக்கிரி
வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த்
தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்
தீர்அருள் என்சொலீர்
பக்க மேபல பாரிடம்
பேய்கள் பயின்றதே.

தெளிவுரை : தகுந்த நெறியில்லாத இராவணனுடைய பத்துத் தலைகளும் நலிந்து திக்குகள் தோறும் முறையிட்டு அலறும்படி அடர்த்த பெருமானே ! திருவான்மியூரின்கண் உமாதேவியுடன் உடனாகி வீற்றிருப்பவரே ! பலவகையான பூத கணங்கள் புடைசூழவும் பேய்கள் கூத்தாடவும் விளங்குவதன் காரணம் அருளிச் செய்து விளம்புவீராக.

41. பொருது வார்கடல் எண்டிசை
யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல்
குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கும்
அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொடு உழன்றுகந்து
இல்பலி யேற்றதே.

தெளிவுரை : கடல் அலைகள் கரையில் மோதிப் பெருஞ் செல்வத்தை வழங்கவும், புகுழ் பெருகவும் உள்ள திருவான்மியூரின்கண், வேதத்தில் கூறப்படும் பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும், அறிதற்கு எட்டாதவராக விளங்கும் பெருமானே ! இடபவாகனத்தில் மீது இவர்ந்து, உகந்து, தாருக வனத்து மாதர்களின் இல்லந்தோறும் சென்று பலி÷ற்றது யாது காரணம்பற்றியது ? விளம்புவீராக.

42. மைத ழைத்தெழு சோலையின்
மாலைசேர் வண்டினர்
செய்த வத்தொழி லாரிசை
சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய
மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர்
கட்டுரைக் கின்றதே.

தெளிவுரை : மேகம் தவழும் தன்மையில் அடர்ந்த பசிய சோலைகளில் பூத்த மலர்களின் மாலைகளில் வண்டினம் ஒலிக்கவும், வேதங்கள் கூறும் மறையொலியின் இசை பெருகவும் உள்ள திருவான்மியூரின்கண், திருமேனியில் வெண்பொடி பூசி விளங்கும் பெருமானே ! சமணர் சாக்கியர் பொய்யுரை பகர்வது யாது பற்றி ? விளம்புவீராக.

43.மாதொர் கூறுடை நற்றவ
னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள்
செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண்
ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு
வானுலகு ஆள்வரே.

தெளிவுரை : உமாதேவியைக் கூறுடைய நற்றவன் ஆன, திருவான்மியூரில் விளங்கும் ஆதியாகிய எம் பெருமானை, அருள் செய்யும் பொருட்டு வினாவுரையாக ஓதும் காழியின் ஞானசம்பந்தனின் இப்பதிகத்தை ஓதுபவர்கள் வானுலகை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

141. திருஅனேகதங்காவதம் (அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

44. நீடன் மேவுநிமிர் புன்சடை
மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை
யாலொர் கலாவழல்
ஆடன் மேவுமவர் மேயஅ
னேகதங் காவதம்
பாடன் மேவு மனத் தார்வினை
பற்றறுப் பார்களே.

தெளிவுரை : நீண்டு மேவும் மெல்லிய சடையின் மீது பிறைச் சந்திரனைச் சூடி, வேதமுறையில் விதித்தபடி ஆடல் புரியும் தன்மையால், கரத்தில் விளங்கும் நெருப்பானது சுழல அனேகதங்காவதம் என்னும் மலையின்கண் மேவும் ஈசனை விரும்பி இசைப் பாடலால் துதித்துப் போற்றும் அடியவர்களுடைய வினைப்பற்றானது அறுந்து வீழும்.

45. சூலம் உண்டுமழு உண்டவர்
தொல்படை சூழ்கடல்
ஆலம் உண்டபெரு மான்றன்
அனேகதங் காவதம்
நீலம் உண்டதடங் கண்ணுமை
பாக நிலாயதோர்
கோலம் உண்டள வில்லை
குலாவிய கொள்கையே.

தெளிவுரை : ஈசனார்க்குத் தொன்மை வாய்ந்த படையாகச் சூலமும் மழுவும் உண்டு, அத்தகைய பெருமான், ஆலகால விடத்தினை உண்டு அனேகதங்காவதத்தில் வீற்றிருக்கின்றார். நீலோற்பல மலரைப் போன்ற கண்ணுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு அழகிய திருகோலம் கொண்டு விளங்கும் அப்பெருமான், அளவற்ற அன்புடன் பெருந்துபவராவர்.

46. செம்பி னாருமதில் மூன்றெரி
யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி
அனேகதங் காவதம்
கொம்பி னேரிடை யாளொடும்
கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமம்நவி லாதன
நாவென லாகுமே.

தெளிவுரை : செம்பு எனும் உலோகத்தில் ஆன மூன்று மதில்களை எரிக்குமாறு, திருமால் அம்பாகவும், அக்கினி தேவன் அதன் முனைப் பகுதியாகவும் விளங்கி நிற்க மேருமலையை வில்லாகக் கொண்டு விளங்கும் பரமன் அனேகதங்காவதம் என்னும் பதியில் கொம்புபோன்ற இடையுடைய உமாதேவியுடன் மேவி, இடப வாகனத்தில் விளங்கும் நம்பன் ஆவர். அப் பெருமானுடைய திருநாமத்தை நவிலாத நாவானது நாவெனலாகாது.

47. தந்தத் திந்தத்தடம் என்றரு
வித்திரன் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு
மாசறு திங்களார்
அந்தம் இல்லஅளவுஇல்ல
அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி
வார்க்கிட மாவதே.

தெளிவுரை : தம் தத்திம் தத்தண்தம் எனும் ஓசையின் குறிப்புத் தோன்ற அருவிகள் மலைச் சாரலிலிருந்து வீழ, வெங்கதிரும் மாசற்ற திங்களும், எல்லையும், அளவும் அற்றுத் திகழும் அனேகதங்காவதம் என்னும் திருத்தலம், எந்தை ஈசன் திருவெண்ணீறு பூசி விளங்குகின்ற இடமாகும்.

48. பிறையு மாசில்கதி ரோன்அறி
யாமைப் பெயர்ந்துபோய்
உறையும் கோயில் பசும்பொன்
னணியா சும்பார்புனல்
அறையும் ஓசை பறைபோலும்
அனேகதங் காவதம்
இறையெம் மீசன் எம்மான்
இடமாக உகந்ததே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும் குற்றமில்லாத கதிரவனும் கோயிலின்மீது பரவிச் செல்லுதலைத் தவிர்த்துப் பெயர்ந்து விலகிப் பக்கம் சூழ்ந்து செல்ல, நீர்த்துளிகள் வீழும் ஓசையானது பறையொலித்தல் போன்று விளங்கும் அனேகதங்காவதம் என்னும் பதியை, எம் ஈசன் இடமாக உகந்து விளங்குபவர்.

49. தேனை யேறுநறு மாமலர்
கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல்
அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண
ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள்
செய்வதும் வானையே.

தெளிவுரை : தேன் விளங்கும் நறுமலர் கொண்டு திருவடியில் சாற்றி வணங்குபவர்களே ! யானைகள் ஏறும் மலைச் சாரலையுடைய அனேகதங்காவதம் என்னும் தலத்தில் விளங்கும் ஈசன்பால் சேரும் உயர்ந்த நெறியானது, பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் பூசனைப் பொருள்களாகிய பால், தயிர், நெய் முதலான பஞ்சகவ்வியம் கொண்டு பூசனை ஆற்றுவதாகும். அவ்வாறு ஆற்றுதல் சிறப்பினைத் தரும்.

50. வெருவி வேழமிரி யக்கதிர்
முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழவயி ரங்கொழி
யாவகில் உந்திவெள்
அருவி பாயுமணி சாரல்அ
னேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல்
சேர்வது வாய்மையே.

தெளிவுரை : அனேகதங்காவதம் என்னும் மலையில் அருவி பாயும் நிலையைக் கண்டு யானை வெருவி அஞ்சி ஓடவும், அருவியின் வாயிலாக மலையிடைப் பிறந்த சுடர் முத்தும், வயிரமும், அகிலும், ஓய்வின்றிப் பெருகிக் கொழிக்கவும் விளங்குகின்றது. அத்தகைய இடத்தில் வீற்றிருக்கும் பெருமான் கழல் சேர்வதுதான் மேலானது.

51. ஈரம் ஏதும்இல னாகி
எழுந்த இராவணன்
வீரம் ஏதும்இல னாக
விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பது அணிவான்றன்
அனேகதங் காவதம்
வாரம் ஆகிநினை வார்வினை
யாயின மாயுமே.

தெளிவுரை : உள்ளத்தில் அன்பு சிறிதும் இல்லாதவனாய் எழுச்சியுற்ற இராவணன், விவேகம் இன்மையின் காரணமாகவும் தினவுகொள்ளும் தன்மை மட்டும் உடைமையால் வீரம் சிறிதும் இல்லாதவனாய் ஆக்கிய கயிலைமலை நாயகனாகிய சிவபெருமான் பாம்பினை மாலையாக அணிபவன். அப்பெருமானுடைய திருத்தலமாகிய அனேகதங்காவதம் என்னும் பதியின்பால் அன்பு பூண்டு நினைப்பவர்தம் வினை யாவும் மாயும்.

52. கண்ணன் வண்ணமல ரானொடும்
கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணம்அறி யாமை
எழுந்ததோர் ஆரழல்
அண்ணல் நண்ணும்அணி சாரல்
அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணம்உடை யார்வினை
யாயின நாசமே.

தெளிவுரை : திருமால், வண்ணத் தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனோடு சேர்ந்து, பிறரால் தாழ்மையாக நினைக்கப்படுமாறு அணியாமையுடன் இருக்க, நெருப்புப் பிழம்பு போல் எழுந்து பேரொளியாகிய அண்ணலான ஈசன், நண்ணுகின்ற அழகிய சாரல் அனேகதங்காவதம் ஆகும். அதனை நாடும் எழில் மிக்கவர்தம் வினை யாவும் அழியும்.

53. மாப தம்மறி யாதவர்
சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு
மாந்துழல் வார்கள்தம்
ஆப தம்மறி வீருளி
ராகில னேகதங்
காப தம்அமர்ந் தான்கழல்
சேர்தல் கருமமே.

தெளிவுரை : சிறப்பான பதவிகளைப் பற்றி அறியாதவர்களும், தொடக்க நிலையில் கற்கும் தன்மையுடையவர்களும், சாக்கியர்களும், இகழப்படுமாறு நின்று, தினவின் வயப்பட்டுத் திரிபவர்கள் ஆவர். விரைவில் கைவரப் பெறும் நற்பதம் வாயத்தலை அறிந்து கொள்ள வேண்டும் என்று விழைவீராயின், அனேகதங்காவதம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற ஈசன் திருக்கழலை வணங்குதல் இன்றியமையாதது எனத் தெளிவீராக.

54. தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய
தோணிபு ரத்திறை
நல்லகேள் வித்தமிழ் ஞானசம்
பந்தனல் லார்கண்முன்
அல்லல் தீரவுரை செய்த
அனேகதங் காவதம்
சொல்ல நல்லஅடை யும்மடை
யாசுடு துன்பமே.

தெளிவுரை : ஊழிக் காலத்திலும் நிலைத்திருக்கும் தொன்மை மிக்க தோணிபுரத்தின் இறைவனால் அருளப்பெற்ற நல்ல வேதம் வல்ல, இனிமை மிக்க ஞானசம்பந்தன், ஈசன்பால் வழிபாடு செய்யும் நல்லோர் முன்பு, தமிழ் உரை கொண்டு அலலல் தீர்க்கின்ற தன்மையில் அனேகதங்காவதம் என்னும் திருத்தலத்தைப் பற்றயதான இத்திருப்பதிகத்தைச் சொல்பவர்களுக்கு, நல்லன யாவும் வந்து அடையும். வருத்தம் தருகின்ற துன்பம் அடையாது.

திருச்சிற்றம்பலம்

142. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

55. கோடல்கோங் கங்குளிர் கூவிள
மாலை குலாயசீர்
ஓடுகங் கையொளி வெண்பிறை
சூடும் ஒருவனார்
பாடல் வீணைமுழ வங்குழல்
மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : வெண்காந்தள் மலர், கோங்கு, வில்வமாலை ஆகியவை தரித்துக் கங்கையும் வெண்பிறைச் சந்திரனும் சூடி விளங்கும் ஒப்பற்றவராகிய ஒருவர், இசைப் பாடலும் வீணையின் நாதமும், முழவு, புல்லாங்குழல், மொந்தை ஆகியனவும் இசைய பண்ணோடு பொருந்துகின்ற நடனம் புரிய வல்லவர். அவர் ஐயாற்றை இடமாக உடைய தலைவன் ஆவார்.

56. தன்மை யாரும்அறி வார்இலை
தாம்பிறர் என்கவே
பின்னு முன்னுஞ்சில பேய்க்கணம்
சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பவர்
சுடலைப்பொடி பூசுவர்
அன்னம் ஆளுந்துறை யானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசனாரின் மெய்த்தன்மையை யாரும் அறிபவர்கள் இல்லை. அவர், பிறர் ஏளனம் செய்யுமாறு முன்னும் பின்னும் பேய்க் கணங்கள் சூழத் திரிபவர்; கந்தல் ஆடையைக் கோவணமாக உடுப்பவர்; சுடலையில் மல்கும் சாம்பலைப் பூசுபவர். அப்பெருமான், அன்னப் பறவைகள் ஒலித்து ஆடும் துறையுடைய ஐயாற்றை இடமாக உடைய தலைவன் ஆவார்.

57. கூறு பெண்ணுடை கோவணம்
உண்பது வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை
மார்பில் அணிகலம்
ஏறும் ஏறித் திரிவர்இமை
யோர்தொழுது ஏத்தவே
ஆறு நான்கும்சொன் னானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், சந்தோவிசிதி, கற்பசூத்திரம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தம் ஆகிய ஆறு அங்கங்களும் விரித்தவராகிய ஐயாறுடைய ஐயன், உமாதேவியைக் கூறாக உடையவர்; கோவணத்தை உடையாகக் கொண்டவர்; உண்கின்ற கலனாகக் கபாலம் உடையவர். இதனை ஒரு மாறுதலுக்குக்கூட யாரும் கொள்பவர் இல்லை. மார்பில் ஆமையோடும், பாம்பும், பன்றியின் கொம்பும் அணிகலமாகக் கொண்டுள்ள இப்பெருமான், தேவர்கள் வாழ்த்தித் தொழுமாறு இடப வாகனத்தில் ஏறித் திரிபவர்.

58. பண்ணில் நல்லமொழி யார்பவ
ளத்துவர் வாயினார்
எண்ணில் நல்லகுணத் தாரினை
வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம்
வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : பண்கலந்து பாடும் தமிழிசைவல்ல மகளிர் எண்ணரும் நற்குணத்தினராய், வேலினைவென்ற கூர்மையான விழி நோக்குடையவராய், ஈசன் அருள் வண்ணமும் ஆற்றல் வண்ணமும் பாடி, வேத கீதம் பாட, அதனை இசைப் பிரியனாய்ச் செவிமடுத்து உகந்தவர், ஐயாறுடைய தலைவன் ஆவர்.

59. வேன லானை வெருவவுரி
போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி
சூடிய மைந்தனார்
தேனெய் பால்தயிர் தெங்கிள
நீர்கரும் பின்தெளி
ஆனஞ்சு ஆடுமுடி யானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : உமாதேவியும் அச்சம் கொள்ளுமாறு வெம்மைமிகும் சீற்றத்துடன் வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்து, வானைக் கிழித்துச் செல்லும் சந்திரனைச் சடை முடியில் சூடிய அழகனார், தேன், நெய், பால், தயிர், தென்னை இளநீர், கரும்பின் சாறு, எனவும் ஆவின் பஞ்சகவ்வியமும் ஐயாற்றை இடமாக உடைய தலைவன் ஆவார்.

60. எங்கும் ஆகி நின்றானும்
இயல்புஅறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும்
மதிசூடு மைந்தனும்
பங்கமில் பதினெட் டொடு
நான்குக்கு உணர்வுமாய்
அங்கம் ஆறும்சொன் னானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் வியாபித்துப் பரவி அண்டமாய் விளங்குபவனும், அவ்வாறு உடையதன்மையில் விளங்கும் பொருளாகி, அறியப் படாதவளாயும் திகழும் உமையவளை, ஒருபாகமாகக் கொண்டுள்ள ஈசன் வெண்பிறை சூடிப் பதினெட்டு புராணங்களும், நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், ஆகியவற்றின் உணர்வாகவும், பொருளாகவும் விளங்கி, விரித்தவனாகியும் திகழ்பவன், ஐயாற்றை இடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவார்.

61. ஓதி யாரும்அறி வாரிலை
ஓதி உலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச்
சேதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண்
ணோடுஎரி காற்றுமாய்
ஆதி யாகிநின் றானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசன், யாராலும் ஓதப்பெற்று மன்னுயிர்களை அறிவது இல்லை. தானே அவற்றுக்கு ஓதி அறிவிப்பவன். உயிர்களையும் தானாகவே அறிபவன் அவன். யாண்டும் சோதியாய் நிறைந்துள்ள பெருமானாய்ச் சூரிய, சந்திர, அக்கினி ஆகிய சுடர்களுக்கும் சோதி தருபவனாய், வேதவடிவினனாய் ஆகி, விண்ணாகி, மண்ணோடு நெருப்பும் காற்றுமாகி, யாவற்றுக்கும் ஆதியாகி நின்றவன் ஐயாறு உடைய தலைவன்.

62. குரவ நாண்மலர் கொண்டடி
யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில
தொண்டர் வியப்பவே
பரவி நாள்தொறும் பாடநம்
பாவம் பறைதலால்
அரவம் ஆர்த்துகந் தானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : அன்றலர்ந்த குராமரத்தின் பூக்களால் அடியவர்கள நீறணிந்து பூசிக்கவும், தொண்டர்கள் நாள்தோறும் புகழ்ப் பாடல்களைப் பாடவும், நம் பாவம் நீங்கப் பெற அரவம் அணிந்து மகிழ்ந்தவன் ஐயாற்றின்கண் வீற்றிருக்கும் தலைவன் ஆவன்.

63. உரைசெய் தொல்வழி செய்தறி
யாஇலங் கைக்குமண்
வரைசெய் தோளடர்த் துமதி
சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட
பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசனை வழிபடுதல் வேண்டும் என்கிற தொன்மையான வழியறிகிலனாய், மலையெடுத்த இராவணின் தோளை அடர்த்த பிறை சூடியாகிய அழகனார், காவிரியின் வடபால் உள்ள கரையில், ஆடையினை அரையில் கட்டியவனாய் விருப்பத்துடன் ஐயாற்றினை இடமாகக் கொண்டு விளங்கும் தலைவர் ஆவர்.

64.மாலும் சோதி மலரானும்
அறிகிலா வாய்மையான்
காலங்காம்பு வயிரங்
கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந்து ஈன்று
பவளம் திரண்டதோர்
ஆல நீழலு ளானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசன், திருமாலும் பிரமனும் அறிதற்கு இயலாத பெருமையுடையவன்; சிறப்பான துகிலை உடையவன்; பொற்கழல் மாண்பினன்; பவளம் போன்று செவ்வொளியானவன்; ஆல நீழலில் உள்ளவன்; அப்பெருமான் ஐயாற்றை இடமாகக் கொண்ட தலைவன்.

65. கையில் உண்டுழல் வாரும்
கமழ்துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்தழல் வாரும்
உரைப்பன மெய்பல
மைகொள் கண்டத்தெண் டோள்முக்க
ணான் கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : கையின்கண் உணவை ஏந்தி உண்ணும் தன்மையுடையவரும், துவர் ஆடையைப் போர்த்திக் கொண்டுள்ளவரும் ஆகிய வேற்றி நெரியினர் உரைக்கும் கருத்துக்கள் பொய்யன்று. மை போன்ற கரிய கண்டத்தைக் குறிக்கும் திருநீல கண்டனாகவும், எட்டுத் தோள்களையுடைய பெருமானும், மூன்று கண்களைக் கொண்டுள்ளவனும் ஆகியவன் பரமன். அப்பெருமான் திருவடியைப் போற்றி வாழ்த்த ஐயங்களைத் தீர்த்துத் தெளிடு செய்பவன். அத்தகைய சிறப்புடைய பெருமான் ஐயாற்றை இடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்.

66. பலிதி ரிந்துகழல் பண்டங்கள்
மேயவை யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடற்
காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ்
பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய
சீர்பெறு வார்களே.

தெளிவுரை : பலியேற்பதற்காகத் திரிந்து உழன்று பண்டரங்கம் என்னும் திருக்கூத்தைப் புரிந்து மேவிய ஐயாற்றினை, வேதம் ஓதி இன்னல்கள் யாவும் தீருமாறு செய்த தகைமைசார்ந்த காழிப்பதியின் அறக்காவலனாகிய, அரநாமத்தைச் சந்தம் மல்க ஒலிக்கும் ஞானசம்பந்தனின் ஒளிமிக்க சிவஞானத் தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வளம் மிக்க விண்ணவர் உலகத்தில் சிறப்பான புகழைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

143. திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

67. வன்னி கொன்றைமத மத்தம்
எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
மாக உகந்ததே.

தெளிவுரை : வன்னிப் பத்திரம், கொன்றை மலர், ஊமத்தம் மலர், எருக்கம் பூ, வில்வம் ஆகியவற்றைப் பொன் போன்று ஒளிரும் சடையின் மீது, பொலியுமாறு செய்த பழம் பொருளாய் விளங்கும் புராணனார், என்னை ஆளாகக் கொள்ளவும், அப்பெருமானுக்கு யான் உடைமையாக இருக்கவும், வண்டினங்கள் தென்ன என்று இசை செய்யும் திருவாஞ்சியம் என்னும் பதியினை இடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவர்.

68. கால காலர்கரி கானிடை
மாநட மாடுவர்
மேலர் வேலைவிடம் உண்டிருள்
கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன்
னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி
கோயில் நயந்ததே.

தெளிவுரை : ஈசர், இயமனாகிய காலனுக்குக் காலனாக இருப்பவர்; மயானத்தில் சிறப்பான நடனம் ஆடுபவர்; முற்படுகின்ற எப்பொருளுக்கும் மேலானவராக விளங்குபவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு கருமையான மிடற்றினை உடையவர். உலகு எலாம் வந்து பணியுமாறு மாலை மதிதோயும் மாடங்களையுடைய திருவாஞ்சியம் என்னும் பதியில் அப்பெருமான் கோயில் கொண்டு விளங்குபவர்.

69. மேவில் ஒன்றர் விரிவுற்ற
இரண்டினர் மூன்றுமாய்
நாவில் நாலர்உடல் அஞ்சினர்
ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய
மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர்
தம்மடி யார்கட்கே.

தெளிவுரை : ஈசன் ஒப்பற்ற ஒருவனாய் விளங்கி எல்லாவற்றிலும் ஒன்றி இருப்பவர்; விரிந்து பரந்து இரட்டித்த தன்மையாயும் சிவம் சக்தி என்னும் இரண்டின் வகையாயும் இருப்பவர்; இச்சை, ஞானம் கிரியை என்று வழங்கப்பெறும் மூன்றும் ஆகுபவர்; நான்கு வேதங்களையும் விரிப்பவர்; பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்தும் உடலாகக் கொண்டு விளங்குபவர்; வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆகுபவர்; ஏழுவகையான ஓசை தருகின்ற சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச,ரி,க,ம,ப,த,நி) எனத் திகழ்பவர்; எண்குண்த்தனாகிய இயற்கை உணர்வினனாதல், தூய உடம்பினனாதல். இயற்கை உணர்வினனாதல், முற்றுணர்தல், இயல்பாகவே பாங்களிலிருந்து நீங்குதல், பேரருளுடைமை. முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை என்னும் எட்டுக் குணங்களை உடையவர். அவர் திருவாஞ்சியம் என்னும் பதியின்கண் மேவிய செல்வராக விளங்கித் தமது திருவடியைத் தொழும் அடியவர்களின் பாவத்தைத் தீர்த்துப் பழியைப் போக்குபவர் ஆவர்.

70. சூலம் ஏந்திவளர் கையினர்
மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர்
பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு
குந்திரு வாஞ்சியம்
ஆலம் உண்டஅடி கள்ளிட
மாக அமர்ந்ததே.

தெளிவுரை : ஈசன், சூலப் படையைத் திருக்கரத்தின் கண் ஏந்தியவர்; அருள்வழங்கும் கையினர்; திருமேனியில் மணம் மிக்க திருவெண்ணீறு பொருந்துமாறு பூசி விளங்குபவர்; வேதங்களை விரித்து மன்னுயிர்களுக்கு ஞானமும், தெளிவும் வழங்குபவர்; ஆசாரம் பெருகுகின்ற புகழால் விளங்கும் திருவாஞ்சியம் என்னும் பதியில் ஆலம் அருந்தி தேவர்களைக் காத்து அருள் புரிந்த அடிகளாக விளங்கி வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

71. கையி லங்குமறி யேந்துவர்
காந்தள்அம் மெல்விரல்
தையல் பாகம்உடை யார்அடை
யார்புரம் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற்
றார்திரு வாஞ்சியத்து
ஐயர் பாதம்அடை வார்க்குஅடை
யாஅரு நோய்களே.

தெளிவுரை : ஈசனார், கையில் மான் ஏந்துபவர்; காந்தன் போன்று மென்மையான விரல்களையுடைய உமையவளை ஒரு பாகமாக உடையவர்; நன்னெறியை நாடாதவராய்ப் பகைமை கொண்ட முப்புரத்தின் அசுரர்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; சிவந்த திருமேனியராக உள்ள தன்மையில் நஞ்சினைத் தேக்கிய கரிய வண்ணம் பொருந்திய கண்டத்தை உடையவர். அப்பெருமான் திருவாஞ்சியம் என்னும் பதியில் வீற்றிருப்பவர். தலைவராகிய அவர்தம் திருவடியைச் சார்ந்து வணங்கிப் போற்றுகின்றவர்களுக்கு, நீங்குவதற்கு அரியதாகிய பிறவி போய் முதலானவை சாராது.

72. அரவம் பூண்பர்அணி யும்சிலம்பு
ஆர்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர்
நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின்
றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்த மட மாதொடு
நின்றஎம் மைந்தரே.

தெளிவுரை : ஈசனார், நாகத்தை ஆபரணமாகப் பூண்டு இருப்பவர்; திருப்பாதத்தில் சிலம்பு அணிந்து, அது ஆர்த்து ஒலி எழுப்ப விரும்பிப் பிச்சை ஏற்பவர்; அச்செயல் மேவுதலையொட்டி எவ்வகையான நாணமும் கொள்ளாதவர். உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் அழகியராகிய அப்பெருமான், தன் திருநாமத்தைக் கூறிப் போற்றி வழிபடுபவர்களின் வினை தீர்த்து அருள்புரியத் திருவாஞ்சியம் என்னும் பதியின்கண் வீற்றிருக்கின்றனர்.

73. விண்ணி லானபிறை சூடுவர்
தாழ்ந்து விளங்கவே
கண்ணி னால்அநங் கன்னுட
லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல்
கும்திரு வாஞ்சியத்து
அண்ண லார்தம்மடி போற்றவல்
லார்க்கு இல்லை அல்லலே.

தெளிவுரை : விண்ணில் விளங்கி ஒளி தந்து வலம் பெறும் சந்திரனைச் செஞ்சடையில் சூடி விளங்கும் ஈசனார், மன்மதனை நெற்றிக் கண்ணினால் எரித்துச் சாம்பல் ஆக்கியவர்; பண்ணுடன் இசைந்த பாடல்கள் எக் காலத்தும் போற்றி வளர மல்கும் திருவாஞ்சியத்தின்கண் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமானுடைய திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களுக்கு எக் காலத்திலும் துன்பம் இல்லை.

74. மாட நீடுகொடி மன்னிய
தென்னிலங் கைக்குமன்
வாடி ஊடவரை யால்அடர்த்து
அன்று அருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய
மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை
பற்றுஅறுப் பார்களே.

தெளிவுரை : உயர்ந்த மாடமாளிகைகளும் நீண்ட தோரணம் முதலான கொடிகளும் சிறப்பாக விளங்கிய தென்னிலங்கையின் மன்னவனாகிய இராவணன், மனத்தின்கண் உள்ள தெளிவு மறைந்து வாட்டம் உற, அதனால் சினங்கொண்டு மலையை எடுக்க, அந்த மலையினால் அவ் அரக்கன் வதைப்பட்டு பக்தி வயத்தினால் வேண்டுதல் செய்யுமாறு அடர்த்தவர் ஈசன். பின்னர் அவர் அருள்புரிந்து ஆட்கொண்டு, நீண்ட ஆயுளும், வாட்படையும் வழங்கியவர். அப்பெருமான், அர்ச்சுனருக்குப் பாசுபதம் என்னும் தெய்வ அத்திரத்தை வழங்குவதற்காக, வேட்டுவ வடிவத்தைக் கொண்டவர். அவர் திருவாஞ்சியம் என்னும் பதியின் மேவி நம்மைக் காப்பவர். அத்தகைய ஈசனை, உள்ளார்ந்த மனத்துடன் பாடிப் போற்ற வினையும் பற்றும் நீங்கும்.

75. செடிகொள் நோயின்அடை யார்திறம்
பார்செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டக
லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடுஅயன் ஏத்தநின்
றார்திரு வாஞ்சியத்து
அடிகள் பாதம்அடைந் தார்அடி
யார்அடி யார்கட்கே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் போற்றித் துதித்து வணங்கும் இறைவராகிய திருவாஞ்சியம் என்னும் பதியில் மேவும் அடிகளை - வாஞ்சி நாதேஸ்வரரை வணங்கும் அடியவர்களைப் போற்றும் பெருமக்கள், நோய் அற்றவராய், உறுதி படைத்தவராய் விளங்குவார்கள். அவர்களுடைய தீவினையானது தாமே நீங்கப்பெறும்; இயமனின் துன்பம் அணுகாது; வீடு பேறும் கைகூடும்.

76. பிண்டம் உண்டுதிரி வார்பிரி
யுந்துவர் ஆடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்பல
பொய்யிலை எம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில்
சூழ்திரு வாஞ்சியத்து
அண்ட வாணன்அடி கைதொழு
வார்க்கு இல்லை அல்லலே.

தெளிவுரை : பேருணவு கொண்டு திரிந்து தருக்கம் புரியும் உரைகள் மெய்ம்மையாகாதன. பொய்மையற்றவராகிய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியம் என்னும் பதியில் வீற்றிருந்து அண்டம் முழுவதிலும் வியாபித்து இருக்க, அப் பெருமானைக் கைதொழுது வணங்குபவர்களுக்குத் துயரம் இல்லை.

77. தென்றல் துன்றுபொழில் சென்றணை
யும்திரு வாஞ்சியத்து
என்று நின்றஇறை யானை
உணர்ந்துஅடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம்
பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம்உடை யார்அடை
வார்உயர் வானமே.

தெளிவுரை : இனிமையான தென்றல் காற்று மருவி விளங்குகின்ற பொழிலின்கண் சென்று திகழும் திருவாஞ்சியத்தில், எக்காலத்திலும் வீற்றிருக்கும் இறைவனை ஞானத்தால் நன்கு உணர்ந்து திருவடியைப் போற்றி உரைக்கப் பெற்ற ஞானசம்பந்தர் செந்தமிழ்த் திருப்பதிகத்தை ஒன்றிய உள்ளத்தினராய் ஏத்துபவர்கள், உயர்ந்ததாகிய வீடுபேறு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

144. திருச்சிக்கல் (அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

78. வானு லாவுமதி வந்துல
வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல்
கும்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண்
ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை
யாயின நையுமே.

தெளிவுரை : வானில் மகிழ்ந்து உலவுகின்ற சந்திரன் வந்து உலவும் தன்மையுடைய அகன்று உயர்ந்த மாளிகையும் மதில்களும், தேன் சொரியும் மலர்ச் சோலைகளும் பெருகி விளங்கும் சிக்கல் என்னும் பதியில், மன்மதனை, நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்துக் சாம்பலாக்கிய வெண்ணெய்ப் பெருமான் திருவடியைச் சார்ந்து, அத்திருவடியையே அறியக்கூடிய மெய்ஞ்ஞானமாக நினைப்பவர்தம் வினை யாவும் நைந்து அழியும்.

79. மடங்கொள் வாளைகுதி கொள்ளு
மணமலர்ப் பொய்க்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர்
மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு
மானடி மேவி
அடைந்து வாழும்அடி யார்அவர்
அல்லல் அறுப்பரே.

தெளிவுரை : வாளை மீன் துள்ளிக் குதிகொள்ளும் மணம் தரும் மலர்கள் உடைய பொய்கை சூழவும், ஈசனே உறுதிப்பொருள் என நவிலும் மாமறையாளர்கள் பெருகி விளங்கவும் திகழும் சிக்கல் என்னும் பதியில் நீலகண்டனாக விளங்கும் வெண்ணெய்ப் பெருமானின் திருவடியைப் பொருந்தி வாழும் அடியவர்கள் துன்பம் அற்று விளங்குவார்கள்.

80. நீல நெய்தல்நில விமல
ருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வள
மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர்
பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழல் ஏத்தநம்
பாவம் பறையுமே.

தெளிவுரை : நீல வண்ணமுடைய நெய்தல் பூக்கள் நிலவும் சுனையும், நீண்ட சேல்கள் (மீன்), மகிழ்ச்சிப் பெருக்கத்தில் விளங்கும் நீர்வளம் மிக்க கழனிகளும் மல்கிய சிக்கல். இத் தலத்தில் மேல் நெடுங்கண்ணி என்னும் திருப்பெயர் தாங்கி வீற்றிருக்கும் உமா தேவியை உடனாகக் கொண்டுள்ள வெண்ணெய்ப்பிரான் என்னும் திருநாமம் தாங்கியுள்ள ஈசன் திருக்கழலை ஏத்தி வழிபட, நம் பாவம் யாவும் நீங்கி மறைந்துவிடும்.

81. கந்த முந்தக் கைதைபூத்துக்
கமழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல்
கும்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்
பிரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின
தேய்வது திண்ணமே

தெளிவுரை : நறுமணத்தை முந்திப் பரவச் செய்யும் தாழை பூத்து விளங்கும் பொழிலின்கண், வண்டானது செந்து என்னும் இசையை எழுப்பி இனிமை திகழ விளங்கும் பதி சிக்கல் ஆகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வெண்ணீற்றண்ணலாகிய வெண்ணெய்ப் பிரான் நறுமணம் கமழும் திருக்கழலைச் சிந்தித்து வணங்குபவர்கள், வினையாயின யாவும் தேய்ந்து அழிவது உறுதி.

82. மங்குல் தங்கும் மறை  யோர்கண்மா
டத்தய லேமிகு
தெங்கு துங்கப்பொழிற் செல்வமல்
கும்திகழ் சிக்கலுள்
வெங்கண் வெள்ளேறுடை வெண்ணெய்ப்
பிரானடி மேவவே
தங்கு சேற்சர தந்திரு
நாளும் தகையுமே.

தெளிவுரை : மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில் மறையவர்கள் விளங்கவும், தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்து விளங்கும் சோலைகள் செல்வம் கொழித்துத் திகழவும் இருப்பது சிக்கல். இத் திருத்தலத்தின்கண் இடப வாகனத்தில் விளங்கும் வெண்னைப் பிரான் திருவடியைத் தரிசித்து வணங்க, மெய்ம்மை திகழும் செல்வம் நிலைபெற்று ஓங்கும்.

83. வண்டி ரைத்தமது விம்மிய
மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு
கும்வயற் சிக்கலுள்
விண்டி ரைத்தமல ராற்றிகழ்
வெண்ணெய்ப் பிரானடி
கண்டி ரைத்துமன மேமதி
யாய்கதி யாகவே.

தெளிவுரை : வண்டுகள் ஒலிப்பதனால் தேன் துளிர்க்கும் செழுமை மிக்க மலர்கள் திகழும் பொய்கை சூழ, தெளிந்த நீரானது வயல்களில் சென்று பாயும் சிக்கல் என்னும் தலத்தில், திருமால் பூசித்த மலராய் திகழும் வெண்ணெய்ப் பிரான் என்னும் திருநாமம் தாங்கிய ஈசனின் திருவடியைத் தரிசித்து வணங்கி, மனமே ! மக்கட் பிறவியின் சிறப்பினை நன்கு அறிந்து நற்கதி அடைவாயாக.

84. முன்னுமா டம்மதில் மூன்றுட
னேஎரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை ஒன்று
செலுத்திய சோதியான்
செந்நெல் ஆரும்வயற் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடி
உன்னி நீடும்மன மேநினை
யாய்வினை ஓயவே.

தெளிவுரை : உயர்ந்த, மதில்களையுடைய முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு, கொடிய கணை ஒன்று செலுத்திய சோதி வடிவானவன், செந்நெல் பெருகும் வயல் வளம்மிக்க சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் ஆவார். அப்பெருமானை, மனமே ! நன்கு தியானித்து வணங்கி மகிழ்க. அது வினையை நீக்கும்.

85. தெற்றலாகிய தென்னிலங்
கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு
தோள்கள் நெரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை
யாயின ஓயவே.

தெளிவுரை : இடறிய தன்மையில் கயிலையைப் பற்றி இராவணனுடைய முடிகள் பத்தொடு தோள்களும் நெரிபட்டுக் கலங்குமாறு அடர்த்த இறைவன், நம் சிக்கல் வெண்ணைப் பிரான் ஆவார். அப்பெருமான் திருவடியை உற்று, மனமே ! நினைத்து வணங்குக. அது உன் வினையைத் தீர்க்கும்.

86. மாலி னோடுஅரு மாமறை
வல்ல முனிவனும்
கோலி னார்குறு கச்சிவன்
சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ்
சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப்
பறையுநம் பாவமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஈசனைக் காணவேண்டும் என்று முயன்றனர். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டும் காண்கிலாராய் அயர்ந்தனர். அப்பெருமான் சிக்கல் என்னும் திருத்தலத்தில் விளங்கும் வெண்ணெய்ப் பிரான் ஆவார். அப் பெருமானைப் பால் அபிடேகம் செய்து பூசித்தும் மலர் கொண்டு தூவிப் போற்றியும் வணங்க நம் பாவம் நீங்கும்.

87. பட்டை நற்றுவர் ஆடையி
னாரொடும் பாங்கிலாக்
கட்ட மணகழுக் கள்சொல்
வினைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு
மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி
மின்பணி போகவே.

தெளிவுரை : துவராடை கொண்ட சாக்கியரும் சமணரும் உரைசெய்யும் பாங்கற்ற சொற்களைக் கருதாது சிக்கல் என்னும் தலத்தில் வீற்றிருந்தும் அருள்புரியும் மறைவல்லராகிய ஈசன் திருவடியையே பணிமின். பிணிக்கப்பட்டுள்ள நோய், வினை முதலான தீயவை அனைத்தும் நீங்கும்.

88. கந்த மார்பொழில் காழியுண்
ஞானசம் பந்தநல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடிச்
சந்த மாச்சொன்ன செந்தமிழ்
வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு
மானடி மேவரே.

தெளிவுரை : நறுமணம் மிக்க பொழில் திகழும் சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன் பூம்பொழில் திகழும் சிக்கல் என்னும் தலத்தில் மேவும் வெண்ணெய்ப் பெருமான் திருவடியை தண்மை மிக்க செந்தமிழால் சந்த இசை பரவச் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், திருவெண்ணீறு தரித்த எந்தைபிரானாகிய ஈசன் திருவடியாகிய முத்திப் பேற்றினை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

145. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

89. களையும் வல்வினை யஞ்சல்நெஞ்
சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தான்உயர்
மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கிஎய்
தான்மதுத் தும்பிவண்டு
அலையும் கொன்றையந் தார்மழ
பாடியுள் அண்ணலே.

தெளிவுரை :  நெஞ்சமே ! கொடிய வினையின் காரணமாக உண்டாகும் துன்பத்தை எண்ணி அஞ்சற்க. ஈசனை வணங்காது பகைமை கொண்ட முப்புரத்து அசுரர்களை, உயர்ந்த பெருமை மிக்க மேருமலையை நல்ல வில்லாக அமைத்து வளைத்துக் கொடிய சரத்தினைத் தொடுத்து அழித்த ஈசன், வண்டுகள் சூழும் கொன்றை மாலையுடைய மழபாடியுள் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமான் வினையின் உபாதையை நீக்க வல்லவர்; அவரை வணங்கி மகிழ்க என்பது குறிப்பு.

90. காச்சி லாதபொன் னோக்கும்
கனவயி ரத்திரள்
ஆச்சி லாத பளிங்கினன்
அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னால்உமக்கு ஆவதென்
பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ
பாடியை வாழ்த்துமே.

தெளிவுரை : நெருப்பில் இட்டுக் காய்த்து வடிக்கப்படாத பொன்னோடு சேரும் கனத்த வயிரத் திரட்சி போன்று, குற்றம் இல்லாத தன்மையில் பளிங்கு போன்றவனாகிய ஈசன், பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர் எனப்படும் பஞ்சகவ்வியம், மகிழ்ந்து ஆடியவன். பயனற்ற சொற்களை மொழிவதனால் ஆவது ஏதுமில்லை. எனவே, பேதைமை கொண்டு காலத்தை வீணாக்காமல் இறைவனைப் பேணி வழிபடுக. வாசம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த மழபாடியைப் போற்றி வாழ்த்துவீராக.

91. உரங்கெ டுப்பவன் உம்பர்கள்
ஆயடர் தங்களைப்
பரங்கெ டுப்பவ னஞ்சை
உண்டுபக லோன்றனை
முரண் கெடுப்பவன் முப்புரந்
தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ
பாடியுள் வள்ளலே.

தெளிவுரை : தக்கன் செய்த யாகத்தில் பங்கேற்ற தேவர் முதலானோரின் வலிமையை வீரபத்திரர் திருக்கோலத்தால் அடர்த்தவன் ஈசன். அப்பெருமான், சூரியனுடைய பற்கள் உகுக்குமாறு செய்தவன்; முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியவன்; ஆங்கு நிலவிய மூன்று அசுரர்களுக்கு வரங்கொடுத்து அருள் புரிந்த பெருமான் ஆவன், மழபாடியுள் வீற்றிருக்கும் வள்ளல்.

92. பள்ளம் ஆர்சடை யிற்புடை
யேயடை யப்புனல்
வெள்ள மாதரித் தான்விடை
யேறிய வேதியன்
வள்ளன் மாமழ பாடியுண்
மேய மருந்தினை
உள்ள மாதரி மின்வினை
யாயின ஒயவே.

தெளிவுரை : சடை முடியின் இடையில் மேவும் பள்ளத்தில் கங்கையைத் தரித்த வேத நாயகராகிய வள்ளல் மழபாடியுள் மேவி விளங்கும் மருந்தாவார். அப்பெருமானை உள்ளம் ஒன்றி தியானிக்க வினை யாவும் செயலற்றதாகி நீங்கும்.

93. தேனு லாமலர் கொண்டுமெய்த்
தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன்
ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு
மாமழ பாடியெங்
கோனை நாள்தொறும் கும்பிட
வேகுறி கூடுமே.

தெளிவுரை : தேன் விளங்கும் மலர்கொண்டு மெய்த்தேவர்களும், சித்தர்களும் பால் நெய் முதலான பஞ்சகவ்வியம் கொண்டு பூசனை செய்யப்படுபவனாகிய பால் போன்ற திருநீற்று மேனியராகிய ஈசன், வானநாடர்கள் கை தொழுது போற்றும் சிறப்பு மிக்க மழபாடியில் விளங்குகின்ற எம் தலைவர். அப்பெருமானை, நாள்தோறும் கும்பிட்டுப் போற்ற, அப்பெருமானின் திருவடிப் பேறு கைகூடும்.

94. தெரிந்த வன்புர மூன்றுடன்
மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர்
தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை ஒன்றுடை
யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை
யாயின் போகுமே.

தெளிவுரை : முற்றும் உணர்ந்தவனாகிய ஈசன், முப்புரங்களை மாயச் செய்த ஆற்றலையுடைய பரமன். அப்பெருமான், தன்னை அன்புடன் தொழுகின்ற அடியவர்களுடைய மனத்தில் நிறைந்து வீற்றிருப்பவன். மேருமலையை வில்லாக வரித்த இறைவன். அப்பெருமான், மழுவாடீசராகத் திருப்பெயர் தாங்கி இருக்க, அவன் கருணை வளத்தை நன்கு நெஞ்சில் இருத்தி பக்தியுடன் கைதொழுக. உமது வினைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

95. சந்த வார்குழ லாள்உமை
தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக்
கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ
பாடிம ருந்தினைச்
சிந்தி யாஎழு வார்வினை
யாயின தேயுமே.

தெளிவுரை : நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு கூறாக உடைய எம் தந்தை, இமைக்காத முக்கண்ணுடையவராகிய எம்பெருமான், அழகராய் அழகிய பொழில் சூழந்த மழபாடியில் வீற்றிருக்கும் வைத்தியநாதர். அவரைச் சிந்தையில் பதித்துத் தியானிப்பவர் வினை யாவும் அற்றொழியும்.

96. இரக்கம் ஒன்றும் இலான்இறை
யான்திரு மாமலை
உரக்கை யால்எடுத் தான்தனது
ஒண்முடி பத்திற
விரல்த லைந்நிறு வியுமை
யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ
பாடியுள் வள்ளலே.

தெளிவுரை : பக்தி ஏதும் இல்லாதவனாய், இறைவனாகிய சிவபெருமானுடைய திருமலையாகிய கயிலையை, வலிமை மிகுந்த கையால் எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும், துன்புறுமாறு. தம் தலை விரலாகிய பெருவிரலால் ஊன்றி உமாதேவியோடு விளங்கிய இருப்பவர், வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் மேவும் வள்ளலாகிய பரமன் ஆவார்.

97. ஆலம் உண்டுஅமு தம்
அமரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய
மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத்
தார்களும் சார்விட
மால யன்வணங் கும்மழ
பாடியெம் மைந்தனே.

தெளிவுரை : ஆலகால விடத்தைத் தான் உட்கொண்டு, அமுதத்தைத் தேவர்கள் அருந்துமாறு அருள் புரிந்த அண்ணலாகிய ஈசன், இயமனின் உயிர் வீழ்த்திய நீலகண்டர் ஆவார். அத்தகைய அழகர், பக்தி செய்யும் நற்பண்பு நிறைந்த அடியவர்ளும், தவத்தின் ஆற்றல் மிக்க தவயோகிகளும் சார்ந்து திருமாலும், பிரமனும் வணங்கும் மழபாடியில் வீற்றிருப்பவர்.

98. கலியின் வல்லம னும்கருஞ்
சாக்கியப் பேய்களும்
நலியு நாள்கெடுத் தாண்டவென்
னாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ
வும்பல ஓசையும்
மலியு மாமழ பாடியை
வாழ்த்தி வணங்குமே.

தெளிவுரை : வன்மை பொருந்திய சமணர்களும் சாக்கியர்களும் நலிவு செய்து துன்புறுத்திய காலத்தில், அதனைத் தடுத்து ஆட்கொண்ட என் தலைவனார் வாழ்கின்ற பதியாகிய, தானம், இசை, முழவு முதலான ஓசைகள் பெருகிய சிறப்புப் பொருந்திய மழபாடியைப் புகழ்ந்து போற்றுவீராக.

99. மலியு மாளிகை சூழ்மழ
பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற்
காழிக் கவுணியன்

(இப்பாட்டு முற்றுப் பெறவில்லை.)

தெளிவுரை : மாட மாளிகைகள் சூழும் மழபாடியுள் விளங்கும் வள்ளலாகிய ஈசனைப் போற்றியவர் வலிமை மிக்க பெரிய மதில் சூழ் கடற்கரையுடைய காழியில் மேவும் கவுணியக் கோத்திர மரபில் தோன்றிய ஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்

146. திருமங்கலக்குடி (அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

100. சீரி னார்மணி யும்அகில்
சந்தும் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி
வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங்
கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டியர்ச் சிக்க
இருந்த புராணனே.

தெளிவுரை : புகழ் மிக்க மணிகளும், அகில், சந்தனம் ஆகியனவும் செறிந்த மலையிலிருந்து வாரிக் கொண்டு வரும் காவிரியின் நீர் பெருகி மிளிர்வது மங்கலக்குடி. முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் காவிரியாற்றில் இருந்தவாறு தமது திருக்கரங்களால் புனித நீர் கொண்டு பூசித்துப் போற்ற இருந்த புராணர் இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் ஆவர்.

101. பணங்கொள் ஆடரவு அல்குல்நல்
லார்பயின்று ஏத்தவே
மணங்கொள் மாமயில் ஆலும்
பொழில்மங் கலக்குடி
இணங்கி லரமறை யோர்இமை
யோர்தொழுது ஏத்திட
அணங்கி னோடுஇருந் தான்அடி
யேசரண் ஆகுமே.

தெளிவுரை : படங்கொண்ட அரவம் போன்ற அல்கும் உடைய மகளிர், நாள்தொறும் ஏத்திச் சிறப்புற, மயில்கள் அசைந்து ஆடும் பொழில்கள் விளங்கும் தலம் மங்கலக்குடி. ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனைத், தேடியும் நெருங்கமுடியாத வேதத்தினை ஓதும் அந்தணர்களும், தேவர்களும் தொழுது ஏத்தி, உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் அப்பெருமானது திருவடியைத் தஞ்சம் அடைவீராக.

102. கருங்கை யானையின் ஈருரி
போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாமண மார்பொழில்
சூழ்மங் கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி
னான்அடி அன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை
யாயின வீடுமே.

தெளிவுரை : கரிய வலிமை மிக்க வஞ்சனையுடைய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்ட பரமன் மணம் மிக்க பொயில் சூழும் மங்கலக்குடியில் வீற்றிருப்பவர். ஆங்கு கொன்றை மலர் தரித்து விளங்கும் அப்பெருமானை அன்புடன் விரும்பி ஏத்த வல்லவர்களின் வினை யாவும் அழியும்.

103. பறையி னோடொலி பாடலும்
ஆடலும் பாரிடம்
மறையி னோடுஇயல் மல்கிடு
வார்மங் கலக்குடிக்
குறைவி லாநிற வேகுணம்
இல்குண மேஎன்று
முறையி னால்வணங் கும்அவர்
முன்னெறி காண்பரே.

தெளிவுரை : வாத்தியங்கள் முழங்க, பூத கணங்கள் பாடவும் ஆடவும் செய்து மகிழவும், மறைவல்ல அந்தணர்கள் இயல்பினராய் வேதகீதங்களை ஓதவும் விளங்கும் பதி மங்களக்குடி. இத் திருத்தலத்தின்கண் குறைவில்லாத நிறைவாகவும் குணங் கடந்த நிற்குணனாகவும் விளங்கும் பரிபூரணனே என்று ஈசனைப் போற்றி வழிபடும் பக்தர்கள், உயர்ந்த நெறியைக் காண்பவர்கள் ஆவர்கள்.

104. ஆனில் அம்கிளர் ஐந்தும்
அவிர்முடி ஆடிஓர்
மானில் அங்கையி னான்மணம்
ஆர்மங் கலக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை
யானுயர் பாதமே
ஞான மாகநின்று ஏத்தவல்
லார்வினை நாசமே.

தெளிவுரை : பசுவின் வாயிலாக அழகுடன் தோன்றும் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்று வழங்கும் ஐந்தும் கொண்டு பூசனை ஏற்று மானைக் கரத்தில் ஏந்தி விளங்கும் ஈசன், மணம் கமழும் மங்கலக்குடியில் கபாலம் ஏந்தி இருக்க, அப்பெருமானின் திருப்பாதமே அடையப் பெறுகின்ற ஞானமாகக் கொண்டு ஏத்துபவர்களுடைய வினையானது நீங்கிச் செல்லும்.

105. தேனு மாய்அமு தாகிநின்
றான்தெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல்
லான்மங் கலக்குடி
கோனை நாள்தொறும் ஏத்திக்
குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறும்
உய்யும் வகையதே.

தெளிவுரை : ஈசன், தெளிந்த சித்தம் உடையவர்களுக்குத் தேனாகவும் அமுதமாகவும் விளங்குபவன்; ஞான வெளியாகவும் விளங்குபவன். சந்திரனைச் சூடியுள்ள அப்பெருமான், மங்கலக்குடியின்கண் தலைவனாய் விளங்க, நாள்தோறும் ஏத்திப் போற்றுபவர்களுக்கு, அவர்கள் உய்யும் வகையில், ஊனமாக இருக்கும் குறைபாடுகள் யாவும் நீங்கும்.

106. வேள்ப டுத்திடு கண்ணினன்
மேருவில் லாகவே
வான ரக்கர் புரமெரித்
தான்மங் கலக்குடி
ஆளும் ஆதிப் பிரானடி
கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறும்
குற்றமில் லார்களே.

தெளிவுரை : மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணுடைய பரமன், மேரு மலையை வில்லாகக் கொண்டு கொடிய அரக்கர்களாகிய முப்புரத்து அவுணர்களை எரித்த மங்கலக்குடியில் ஆதிப் பிரானாக வீற்றிருந்து அருளாட்சி புரிபவன். அப் பெருமானுடைய திருவடிகளை வணங்கி ஏத்த நவக்கிரகங்களாலும், விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) முதலியவற்றாலும் உண்டாகும் தீமைகள் நீங்கும்; மனம், மொழி, மெய் ஆகியவற்றாலும் உண்டாகும் குற்றத்தினையும் இழைக்க மாட்டார்கள்.

107. பொலியு மால்வரை புக்கெடுத்
தான் புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத்
தான்மங் கலக்குடிப்
புலியின் ஆடையி னான் அடி
யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக
வல்லவர் காண்மினே.

தெளிவுரை : பொலிவுடன் திகழ்ந்து விளங்கும் பெருமை மிக்க கயிலையை அடைந்து அதனை எடுத்த இராவணன், நலிந்து ஞான்று புகழ்ந்து ஏத்திட வலிமையும், மந்திரவாளும், நீண்ட வாழ்நாளும் கொடுத்த பரமன், புலித்தோல் ஆடை தரித்து மங்கலக்குடியில் வீற்றிருக்கின்றனன். அப்பெருமானுடைய திருவடியை ஏத்திப் பரவும் புண்ணியர்கள் சிறந்ததாகிய முத்திப் பேற்றை எளிதாக வாய்க்கப் பெறும் வல்லவர் ஆவர்.

108. ஞான முன்படைத் தானளிர்
மாமலர் மேலயன்
மாலும் காண்வொ ணாஎரி
யான்மங் கலக்குடி
ஏல வார்குழ லான்ஒரு
பாகம் இடங்கொடு
கோல மாகிநின் றான்குணம்
கூறும் குணமதே.

தெளிவுரை : உலகினைப் படைத்த பிரமனும், திருமாலும் காணமுடியாத சோதிப் பிழம்பாகிய பரமன், மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்தில் இடங்கொண்டு மங்கலக்குடியில் அழகுடன் வீற்றிருப்பவன். அப் பெருமானின் சிறந்த புகழைக் கூறுவது, மன்னுயிர்க்குரிய நற்பண்பாகும்.

109. மெய்யின் மாசினர் மேனி
விரிதுவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர்
சேர்மங் கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற்
கங்கை செறி சடை
ஐயன் சேவடி யேத்தவல்
லார்க்கு அழ காகுமே.

தெளிவுரை : உடலின் மாகம் துவராடையும் கொண்டு மேவும் பிற சமயத்தவர்தம் பொய்யுரைகளை ஒதுக்கி நீக்குகின்ற புண்ணிய மாந்தர்கள் சேர்ந்து விளங்கும் மங்கலக்குடியில், சிவந்த திருமேனியராய்ச் செழுமையான கங்கை செறிந்த சடையுடையவராய், விளங்கும் தலைவராகிய ஈசன் சேவடியை ஏத்த வல்லவர்களுக்கு, அழகு கைவரப் பெறும்.

110. மந்த மாம்பொழில் சூழ்மங்
கலக்குடி மன்னிய
எந்தை யைஎழி லார்பொழிற்
காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு
ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லார்இமை
யோர்முதல் ஆவரே.

தெளிவுரை : மந்த மாருதம் (மென்காற்று) திகழும் பொழில் சூழும் மங்கலக்குடியில் வீற்றிருக்கும் எந்தை ஈசனை, எழில் மிக்க பொழில் திகழும் சீகாழிப்பதியின் காவலன் சிந்தை செய்து திருவடிக்குச் சேர்த்திடும் விருப்பத்துடன் ஏத்த வல்லவர்கள், தேவர்தம் முதல்வனாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

147. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

111. நல்லானை நான்மறை யோடியல் ஆறங்கம்
வல்லானை வல்லவர் பால்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொல்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குளது இன்பமே.

தெளிவுரை : நல்லதெல்லாம் ஆகி நின்று புரிபவனை, நான்கு மறைகளோடு அதன் ஆறு அங்கங்களும் நன்கு விரித்தானை, ஆற்றல் பொருந்திய வேதங்களை ஓத வல்லவர்களாகிய மறையவர்பால் விளங்கும் வாய்ச் சொல்லாக விளங்குபவனை, சீகாழிப் பதியினைத் தனது இடமாக உள்ள ஈசனை, ஏத்தி நின்று வழிபடும் அடியவர்களுக்கு இன்பம் எக் காலத்திலும் நிலைத்து இருக்கும்.

112. நம்மானை மாற்றி நமக்கரு ளாய்நின்று
பெம்மானைப் பேயுடன் ஆடல்பு ரிந்தானை
அம்மானை அந்தணர் சேரும் அணிகாழி
எம்மானை யேத்தவல் லார்க்கு இடர் இல்லையே.

தெளிவுரை : நமக்குப் பிறவியின்வழி மானமாய் இருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகியனவற்றை நீக்கிப் பேரருளாய் நிலைத்துள்ள ஈசன் பேய்க்கணங்களுடன் ஆடல் புரிபவன். அந்தணர்கள் எல்லாரும் சேர்ந்து வேதம் ஓதி வழிபடுகின்ற அப்பெருமானை ஏத்திப் பரவுபவர்களுக்கு இடர் ஏதும் இல்லை.

113. அருந்தானை அன்புசெய்து ஏத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதியர் ஓதம்இடை காழி
இருந்தானை யேத்துமி னும்வினை யேகவே.

தெளிவுரை : தனக்கென்று உண்ணும் பொருள் ஏதும் இல்லாதவனை, அன்பு செய்யாதவர்பால் பொருந்தாதவனை, பொய்யடிமை பூண்டவர்க்குப் புதியவனாய் இருப்பவனை, வேதியர்கள் ஓதுகின்ற காழிப் பதியில் மேவும் ஈசனை, நும்வினை யாவும் விட்டு விலகுமாறு வணங்குவீராக.

114. புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : புற்றாகியும் புற்றில் வாழும் அரவத்தை அரையில் சுற்றியவனாகவும் தொண்டு செய்து விளங்கும் தன்முனைப்பு அற்றவர்பால் பொருந்துபவனை, வேதம் ஓதும் அந்தணர்கள் விளங்கும் காழிப்பதியில் விளங்கிப் பற்றாய் இருந்து அருள் புரியும் பெருமானாகிய ஈசனைப் பற்றி வழிபடுபவர்களுக்குப் பாவம் இல்லை.

115. நெதியானை நெஞ்சிடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமி னும்வினை பாறவே.

தெளிவுரை : அரிய செல்வனாயும், நெஞ்சில் தியானம் செய்பவருக்கு உள்நின்று உணர்த்தி விதிப்பவனாயும், தேவர்கள் எல்லாம் தொழும் நெறியாயும், மேகம் தவழும் பொழில் சூழும் காழிப்பதியில் மேவும் ஈசனாயும் விளங்கும் பெருமானைப் பாடிப் போற்றி வணங்குமின். நும் வினை யாவும் அழிந்து துன்பம் நீங்கும்.

116. செப்பாள மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பாளை வார்கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்ட செம் மேனியனாய்த் திருக்கழலை நினைத்து வணங்கி மகிழும் அடியவர்கள்பால் விளங்கி, அவர்களுடைய விழைவிளை ஏற்று அருள் புரிபவன், கடலலையின் ஓதம் நிலவும் காழிப்பதியின் மெய்ப்பொருள் ஆகிய பரமன். அப்பெருமானை வழிபடும் மாந்தர்கள், புகழ் பெற்றவர் ஆவார்கள்.

117. துன்பானைத் துன்பம் அழித்தருள் ஆக்கிய
இன்பானை ஏழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.

தெளிவுரை : எப்பொருளும் ஆகும் தன்மையில் துன்பமும் அத்தகைய துன்பத்தைத் தீர்க்கும் இன்பமும் ஆகி, ஏழிசையின் வடிவாகியும், பேணும் அடியவர்தம் அன்பில் உறைபவனாய், அழகிய பொழில்கள் விளங்கம் காழி நகர் மேவிய சிவனை நண்ணி வணங்குபவர்கள் வினை யாவும் அழிந்துவிடும்.

118. குன்றானைக் குன்றெடுத் தான்புய நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடும் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.

தெளிவுரை : எக்காலத்திலும் குறைவு படாதவனாய்க் குன்றுபோல் உறுதியாக விளங்குபவன் ஈசன். அப்பெருமான், கயிலையைப் பெயர்த்த இருபது தோள் உடைய இராவணனைப் பெருவிரலால் அடர்த்து அன்புடைய பக்தனாக்கி வென்றவன்; திருமாலும் பிரமனும் தன்னைத் தேடி அலையுமாறு செய்தவன்; உமாதேவியோடு சீகாழிப் பதியில் நன்று எல்லாம் ஆகி அருள் செய்பவன். அத்தகைய பெருமானை அடைந்து வணங்குக.

119. சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னான்அடி கூறுமே.

தெளிவுரை : வாதம் புரிவதில் தொய்வும் வீழ்ச்சியும் ஏற்படும் நிலையிலும் பழித்துக் கூறும் சாக்கியர் முதலானோர் சொற்களைக் கேட்டு, வெகுண்டு எழுதல் வேண்டாம். பூ எனச் சிறப்புடன் திகழும் கொன்றை மலரைச் சூடிய இறைவன், நீர்வளம் மிக்க காழிப்பதியின் ஈசனாய் விளங்குபவன். அப்பெருமானை வணங்குவதும் அவன் திருப்புகழைப் போற்றி மகிழ்வதும் கொள்கையாகக் கொள்ளுக. அது எல்லா நன்மைகளும் தரும் என்பது குறிப்பு.

120. கழியார்சீர் ஓதமல் கும்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை உகந்துள்கித்
தழியார் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கண் மூவுல கும்பெறு வார்களே.

தெளிவுரை : உப்பங்கழிகள் உடையதும் சீரான கடல் அலைகளின் ஓதம் கொண்டதும் ஆகிய சீகாழியில் நீக்கமற நிறைந்து கோயில் கொண்டுள்ள இறைவனை, மகிழ்ச்சியுடன் உருகித் தழைக்கும் அன்பு விளங்க ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தை இனிமையுடன் மொழிபவர்கள், மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் ஆகிய மூன்று உலகத்தின் கண்ணும் உள்ள சிறப்பினைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

148. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

121. மறையானை மாசிலாப்புன் சடைமல்குவெண்
பிறையானைப் பெண்ணொடுஆணா கியபெம்மானை
இறையானை ஏர்கொள்கச்சித் தருவேகம்பத்து
உறைவானை யல்லது உள்காது எனது உள்ளமே.

தெளிவுரை : வேத வடிவானவனை, மாசில்லாத சடையின்கண் வெண்பிறை சூடியவனை, பெண்ணும் ஆணும் ஆகி விளங்கும் அர்த்தநாரியாகிய பெருமானை, இறைவனை, அழகு பொருந்திய கச்சியில் (காஞ்சிபுரம்) திருவேகம்பம் என்று வழங்கப்பெறும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஏகம்பநாதனை அல்லாது எனது உள்ளம் வேறு நினைக்காது.

122. நொச்சியே வன்னிகொன்றை மதிகூவிளம்
உச்சியே புனைதல்வேடம் விடையூர்தியான்
கச்சியே கம்பமேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமினும்மேல் வினைநையுமே.

தெளிவுரை : நொச்சி, வன்னி ஆகிய பத்திரங்களும், கொன்றை மலரும், வெண்பிறைச் சந்திரனும், வில்வஇதழும் திருமுடியில் புனைந்த திருக்கோலத்துடன், இடப வாகனத்தில் காட்சி நல்கும் கச்சி ஏகம்பன் நீலகண்டனாக விளங்குபவன். அப் பெருமானை விரும்பித் தொழுமின் ! நும் வினை நைந்து அழியும்.

123. பாராரு முழவமொந்தை குழலியாழொலி
சீராலே பாடலாடல் சிதைவில்லதோர்
ஏரார்பூங் கச்சியேகம் பனையெம் மானைச்
சேராதார் இன்பமாய அந்நெறிசேராரே.

தெளிவுரை : உலகத்தில் சிறந்து நிலவும், முழவு, மொந்தை குழல், யாழ் ஆகியவற்றுடன் இறைவன் புகழ்மிக்க பாடல், ஆடல் ஆகியன, விதியிலிருந்து சிதைவுபடாது அவ்வவ் இயல்பிற்கு ஏற்றவாறு சிறந்து ஓங்கும் கச்சியில் விளங்கும் ஏகம்பப் பெருமானை நாடித் துதியாதவர், பேரின்ப நெறி சேரும் சிறப்பற்றவர்; ஏகம்பனைத் தொழுபவர் சிறப்படைவர் என்பதாம்.

124. குன்றேய்க்கு நெடுவெண்மாடக் கொடிகூடிப்போய்
மின்தேய்க்கு முகில்கள் தோயும் வியன்கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீரான் மலியேகம்பம்
சென்றேய்க்கும் சிந்தையார் மேல் வினைசேராவே.

தெளிவுரை : குன்றினை நிகர்த்த வலிமையான உயர்ந்த மாடமாளிகைகளில் விளங்கும் கொடியானது, மின்னல்கள் ஒளிரும் மேகங்களில் பொருந்தும் பெருமை உடைய கச்சியுள், சிறப்பால் பெருகும் புகழ் மிக்க ஏகம்பம் சென்று வழிபடும் உள்ளம் ஒன்றிய அடியவர்கள் மேல் வினையானது எக்காலத்திலும் அணுகாது.

125. சடையானைத் தலைகையேந்திப் பலிதருவார்தம்
கடையேபோய் மூன்றும்கொண்டான் கலிக்கச்சியுள்
புடையேபொன் மலருங்கம்பைக் கரையேகம்பம்
உடையானை யல்லது உள்காது எனதுள்ளமே.

தெளிவுரை : சடை முடியுடையவனை, அழகிய கரத்தில் பிரம கபாலம் ஏந்தித் தாருகவனத்து முனி பத்தினிகள் கடைவாயிலில் நின்று அவர்களிடம் உடல் பொருள் ஆவி என மூன்றினையும் கொண்டு கச்சி நகருள் கொன்றை மலரும் கம்பை நதிக்கரையில் விளக்கும் ஏகம்பநாதனை அல்லாது எனது நெஞ்சமானது வேறு எதனையும் நாடாது.

126. மழுவாளோடு எழில்கொள்சூலப் படைவல்லார்தங்
கெழுவாளோர் இமையர் உச்சி உமையாள்கங்கை
வழுவாமே மல்குசீரால் வளர்ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்மேல் வினைதுன்னாவே.

தெளிவுரை : மழுவும் வாளும் சூலமும் படையாகக் கொண்டுள்ள ஈசன், பெருமை மிக்க ஒளிபொருந்திய மலையரசன், மகளாகிய உமையவளும், கங்கையும் விளங்கவும் சீர்மல்கும் ஏகம்பத்தில் வீற்றிருக்க, தவறாமல் அப் பெருமானைத் தொழுபவரே சிறப்புடையவர். அத்தகையோர்பால் வினையானது நெருங்காது.

127. விண்ணுளார் மறைகள்வேதம் விரித்தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல்வார் கரிகாலனை
நண்ணுவார் எழில்கொள்கச்சி நகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே.

தெளிவுரை : உயர்ந்து விளங்கும் மறைகளாகிய வேதத்தை விரித்து ஓதுவார்கண் விளங்கும் ஈசன், காலனைத் திருக்கழலாய் உதைத்து வெற்றி கண்டவர். கச்சி நகரில் ஏகம்பத்தின்கண் மேவிய அப்பெருமானை நண்ணி வணங்குபவர்கள் எழில் பெறுவார்கள். அப் பெருமான் பூசனைப் பொருள்கள் கொண்டு ஆடும் சிறப்பு அலங்காரமாகத் திகழ்வதாகும்.

128. தூயானைத் தூயவாயம் மறையோதிய
வாயானை வாளரக்கன் வலிவாட்டிய
தீயானைத் தீதில்கச்சித் திருவேகம்பம்
மேயானை மேவுவார்என் தலைமேலாரே.

தெளிவுரை : ஈசன், தூயவன்; தூய்மையாகிய சிறந்த மறையை விரித்த பெருமையுடையவன்; இராவணனுடைய வலிமையை வீழ்த்தியவன்; தீயினைக் கரத்தில் ஏந்தியவன்; தீமை அறுத்து விளங்கும் கச்சித் திருவேகம்பத்தில் விளங்குபவன்; அப்பெருமானைச் சார்ந்து வணங்குபவர்கள், நான் உயர்வாகக் கருதக் கூடியவர்கள் ஆவர்.

129. நாகம்பூண் ஏறதுஏறல் நறுங்கொன்றைதார்
பாகம்பெண் பலியும்ஏற்பர் மறைபாடுவர்
ஏகம்ப(ம்) மேவியாடும் இறையிருவர்க்கு
மாகம்பம் அறியும் வண்ணத் தவனல்லனே.

தெளிவுரை : ஈசனார், நாகத்தை அணிகின்ற ஆபரணமாக உடையவர்; இடப வாகனத்தில் ஏறுபவர்; மணம் பொருந்திய கொன்றை மாலையுடையவர்; உமா தேவியைப் பாகமாக உடையவர்; கபாலம் ஏந்திப் பிச்சை கொள்பவர்; வேதம் விரித்து ஓதுபவர்; திருவேகம்பத்தில் மேவி விளங்கும் இறைவர். அப்பெருமான், திருமால், பிரன் ஆகிய இருவருக்கும் அறிந்து கொள்ளும் வண்ணம் அற்றவராய் பெரிய தீப்பிழம்பு அணைய தூண்போன்று நெடிது ஓங்கியவர் ஆவார்.

130. போதியார் பிண்டியார்என்று இவர்பொய்ந்நூலை
வாதியா வம்மினம்மா வெனுங்கச்சியுள்
ஆதியார் மேவியாடுந் திருவேகம்பம்
நீதியால் தொழுமினும் மேல்வினை நில்லாயே.

தெளிவுரை : பௌத்தர்களும் சமணர்களும் கூறும் பொய்ந்நூலை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரியாது வம்மின். பெருமையும் வளமையும் உடைத்தெனப் போற்றப்பெறும் கச்சியுள், முழுமுதற்பொருளாயும் ஆதிப்பிரானாயும் மேவி, நடம்பயிலும் திருவேகம்ப நாதரை நியதிப்படி தொழுமின். நுமக்கு வினையானது சாராது.

131. அந்தண்பூங் கச்சியேகம் பனையம்மானைக்
கந்தண்பூங் காழியூரன் கலிக்கோவையால்
சந்தமே பாடவல்ல தமிழ்ஞானசம்
பந்தன்சொற் பாடியாடக் கெடும்பாவமே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி மிக்க கச்சியில் அழகிய தலைவனாக விளங்கும் ஏகம்பப் பெருமானை, வாசனை கமழும் அழகிய சீகாழி என்னும் ஊரில் விளங்குபவனாய் ஒலிமாலையாம் சொல் மாலையைச் சந்தம் மல்கப் பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன் பாடி இத் தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடித் தன்னை மறந்து ஆடும் அன்பர்களுக்குப் பாவமானது கெடும்.

திருச்சிற்றம்பலம்

149. திருக்கோழம்பம் (அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்

132. நீற்றானை நீள்சடைமேல் நிறைவுள்ளதோர்
ஆற்றானை அழகமர்மென் முலையாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பமேவிய
ஏற்றானை யேத்துமின் நும்இடரேகவே.

தெளிவுரை : திருவெண்ணீறு பூசிய பெருமானை, நீண்ட சடையின் மீது கங்கை தரித்தவனை, உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனை, குளிர்ச்சியான பொழில் திகழும் கோழம்பம்மேவிய இடப வாகனனை ஏத்தி வழிபடுமின். உம் இடர் தீரும்.

133. மையான கண்டனைமான் மறியேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்பமேவிய
செய்யானைத் தேனனெய்பாலுந் திகழ்ந்தாடிய
மெய்யானை மேவுவார்மேல் வினைமேவாவே.

தெளிவுரை : கரிய கண்டத்தை உடையவனை, மான் ஏந்திய கரத்தையுடையவனை, மணம் கமழும் சோலை சூழ்ந்த கோழம்பம் மேவிய செம்மேனியுடைய நாதனைத் தேனும், நெய்யும், பாலும் திகழப் பூசனை கொள்ளும் திருமேனியுடைய ஈசனை நாடி வணங்குவர்பால் வினை நாடாது.

134. ஏதனை ஏதமிலா இமையோர் தொழும்
வேதனை வெண்குழை தோடு விளங்கிய
காதனைக் கடிபொழிற்கோ ழம்பமேவிய
நாதனை யேத்துமினும் வினைநையவே.

தெளிவுரை : ஏதப்பொருளாய் இருப்பதற்குக் காரணப்பொருளாகிய ஈசனை, குற்றமில்லாத யோகியர் தொழும் வேதப் பொருளாகியவனை, வெண்குழையும் தோடும் விளங்கும் காதினனை, மணம் கமழும் பொழில்களையுடைய கோழம்பம் என்னும் பதியில் மேவிய நாதனை ஏத்தி வழிபடுமின். நும் வினை யாவும் நைந்து அழியும்.

135. சடையானைத் தண்மலரான் சிரமேந்திய
விடையானை வேதமும்வேள் வியுமாயநன்கு
உடையானைக் குளிர்பொழில்சூழ் திருக்கோழம்பம்
உடையானை உள்குளின்உள் ளங்குளிரவே.

தெளிவுரை : சடையுடையவனை பிரம கபாலம் ஏந்திய இடப வாகனனை, வேதமும் வேள்வியும் ஆகிய நன்மை உடையவனை, குளிர்ச்சியான பொழில் சூழ்ந்த திருக் கோழம்பம் என்னும் பதியுடையவனை மனதாரப் போற்றுமின். அவ்வாறு செய்தால் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.

136. காரானைக் கடிகமழ்கொன் றையம்போதணி
தாரானைத் தையலொர்பால் மகிழ்ந்தோங்கிய
சீரானைச் செறிபொழிற்கோ ழம்பமேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர்ஒல்கவே.

தெளிவுரை : மேகம் போன்று குளிர்ந்து அருள்பவனை, மணம் கமழும் கொன்றை மலரை மாலையாக உடையவனை, உமாதேவியை ஒரு பாகமாக மகிழ்ந்து ஓங்கிய சிறப்புடையவனை, பொழில் சூழும் கோழம்பம் என்னும் கோயிலை இடமாகக் கொண்டவனை ஏத்தி வணங்குமின். உமது இடர் யாவும் கெடும்.

137. பண்டாலின் நீழலானைப் பரஞ்சோதியை
விண்டார்கள் தம்புரமூன் றுடனேவேவக்
கண்டானைக் கடிகமழ்கோ ழம்பங்கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளங்குளிரவே.

தெளிவுரை :  பண்டைய நாளில் சனகாதி முனிவர்கள் நால்வர்க்கு உபதேசம் செய்யும் பொருட்டு ஆலமர நீழலில் அமர்ந்த பெருமானை, பரஞ்சோதியை, பகைவராகிய முப்புர அசுரர்களும் கோட்டைகளும் ஒருசேர உடனே எரியுமாறு செய்தவனை, கோழம்பத்தைக் கோயிலாகக் கொணடவனைப் போற்றி வாழ்த்த உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

138. சொல்லானைச் சுடுகணையால் புரமூன்றுஎய்த
வில்லானை வேதமும்வேள் வியும்ஆனானைக்
கொல்லானை யுரியானைக்கோ ழம்பமேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர்நையவே.

தெளிவுரை : ஈசன், மந்திரச் சொல்லாக விளங்குபவன்; அக்கினி என்னும் கணைதொடுத்து முப்புரங்களை எய்து எரியுமாறு செய்த வில்லை உடையவன்; வேதமும் வேள்வியும் ஆனவன்; கொல்லும் தன்மை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்; கோழம்பம் என்னும் கோயிலின்கண் விளங்கும் நல்லவன். அப்பெருமையுடைய பரமனை நும் இரை நைந்து கெடும்பொருட்டு ஏத்தி வழிபடுக.

139. விற்றானை வல்லரக்கர் விறல்வந்தனைக்
குற்றானைத் திருவிரலாற் கொடுங்காலனைச்
செற்றானைச் சீர்திகழுந் திருக்கோழம்பம்
பற்றதனைப் பற்றுவார்மேல் வினைபற்றாவே.

தெளிவுரை : விற்படை கொண்ட அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை, அவன் செயல் கூடாதவாறு தடுத்து அடர்த்தும், கொடிய காலனைத் திருப்பாதத்தால் செற்று அழித்தும், சீர் திகழும் திருக்கோழம்பம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் ஈசனைப் பற்றாகக் கொண்டு வணங்குபவர்களுக்கு, வினையானது சாராது. வினையே துன்பத்திற்குக் காரணமாக இருப்பதால் வினை இல்லாத நிலையில் இம்மையில் துன்பமற்ற வாழ்வும், மறுமையில் சிவப்பேறாகிய பேரின்ப வாழ்வும் கைகூடும் என்பதாம்.

140. நெடியானோடு அயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டங்க வேடம் பழின்றானைக்
கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறியாத வகையில் நின்ற வடிவினனை, பண்டரங்கம் எனப்படும் கூத்துக் சூரிய வேடம் தாங்கினவனை நறுமணம் கமழும் கோழம்பம் மேவி இடபக் கொடியுடைய ஈசனைப் போற்றி வாழ்த்துமின், நும் உள்ளமானது மகிழும்.

141. புத்தரும் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தவர் தண்பொழிற் கோழம்ப மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

தெளிவுரை : புத்தரும் சமணரும் பேசும் சொற்கள் ஏற்கப்பெறும் பேச்சு ஆகாது. கொத்தாக மலர் தரும் குளிர்ந்த பொழில்கள் கொண்டு பெருமை மிகுந்து விளங்கும் கோழம்பம் மேவிய கடவுளை ஏத்துமின். உமது துன்பம் யாவும் தீரும்.

142. தண்புனல் ஓங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை
விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : குளிர்ந்த நீர்வம் கொண்ட, சீகாழி நகரில் நட்டு மிக்க ஞானசம்பந்தன், பொழில்சூழ் கோழம்பம் மேவிய ஈசனைப் பாடிய இத் திருப்பதிகத்தைப் பண்ணொடு பாடவல்லவர்களுக்கு, உலகில் எத்தகைய பாவமும் அணுகாது.

திருச்சிற்றம்பலம்

150. திருவெண்ணியூர் (அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

143. சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை யிற்பலி கொண்டுஊரும்
விடையானை விண்ணவர்தாம்தொழும் வெண்ணியை
உடையானை அல்லதுஉள் காதுஎனது உள்ளமே.

தெளிவுரை : சடை முடியுடையவனை, வெண்திங்களும், சிவந்த கண்களையுடைய பாம்பும் உடையவனை, உடைந்த தலையாகிய பிரம கபாலம் கொண்டு இடப வாகனத்தில் வருபவனை, தேவர்கள் தொழுது போற்றும் வெண்ணி என்னும் பதியில் வீற்றிருந்து அருள் வழங்கும் நாதனாகிய ஈசனை அல்லாது எனது உள்ளம் பிறவற்றை நினைக்காது.

144. சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டஎம்
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை வேதியர் தாம்தொழும் வெண்ணியை
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

தெளிவுரை : சோதி வடிவானவனை, வெண்மையான திருநீறு அணிந்த ஆதியை, ஆதியும் முடிவும் இல்லாத வேதநாயகனை, வேதம் ஓதும் மறையோர் தொழுது போற்றும் வெண்ணிநானை, அறத்தின் நாயகனாகிய ஈசதன நினைத்துப் போற்றுபவர்கள்பால், வினையானது நிற்காது.அத்தகைய பெருமக்கள் துன்பம் அற்று விளங்குவார்கள்.

145. கனிதனைக் கனிந்தவ ரைக்கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவர் ஏதுமி லாதாரே.

தெளிவுரை : நினைத்துப் போற்றும் அடியவர்கள் நெஞ்சில் கனிபோன்று சுவையாக விளங்குபவனை, உள்ளம் அன்பினால் கனிந்து போற்றும் பக்தர்கள் நெஞ்சிற் கலந்து ஆட்கொள்ளும் இறைவனை, மூவுலகங்களும் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் மூர்த்தியை, நனிசிறந்து மேவும் ஈசனை, நல்லொழுக்கமும் சீலமும் மிக்க ஞானிகள் தொழுகின்ற வெண்ணியில் மேவும் இனிமையாய் அருள் வழங்கும் பரமனை ஏத்தி வழிபடுபவர், குற்றம் அற்றவராய் விளங்குவார்கள்.

146. மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவரைக் கலந்து ஆளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்தன்றை
ஏத்தாதார் என்செய்வார் ஏழையப் பேய்களே.

தெளிவுரை : முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் டவளங்கும் தொன்மையுடையவனை, மூன்று உலகங்களுக்கும் ஒப்பற்ற மூர்த்தியாகிக் காத்தருள் புரியும் கடவுளை, உண்மையான அன்புடையவராய்க் கனிந்து உருகும் மனத்தினர்தம் உள்ளத்தில் கலந்து அடியவர்களாக்கி மகிழ்ந்து அருள் நாதன்தன்னை ஏத்தாதவர் என் செய்வாரோ ! கீழ்மைத்தனம் மிக்க பேய்களாய்த் திரிபவர் ஆவரே !

147. நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை ஓயுமே.

தெளிவுரை : சோதி வடிவினனாய், நிறைபுனலாகிய கங்கை சூழ, நீண்ட கொன்றைமாலை சூடி, உமாதேவியை ஒருபாகமாகக் கொண்ட புகழ் மிக்க ஈசன், பெருமை திகழும் வெண்ணி என்னும் தலத்தில் வீற்றிருப்பவன். அப் பெருமானைத் தியானம் செய்து வணங்குபவர் வினை, செயலற்றதாகிக் கெடும்.

148. முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கம் இலாத விளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : முத்து, வயிரம், மாணிக்கம் என்று உயர்ந்த தன்மையுடைய செல்வமாகக் திகழும் ஈசன், அணையா விளக்கெனவாய், எல்லாப் பொருள்களும் தோன்றி வெறிப்படுவதற்குரிய வித்தாகித் தேவர்கள் தொழுது போற்றும் வெண்ணியில் விளங்குகின்றான். அக் கடவுளை வணங்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை.

149. காய்ந்தானைக் காமனை யும்செறு காலனைப்
பாயந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாம்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

தெளிவுரை : மன்மதனை எரித்துக் காலனை வீழ்த்திப் பெரிய தோற்றமுடைய யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்திக் கொண்டவன், தேவர்கள் தொழுது வணங்கும் சிறப்பு மிக்க வெண்ணியில் வீற்றிருக்கும் ஈசன். அக் கடவுளை நினைத்து வழிபடுபவர்களிடம் வினையானது சேராது.

150. மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசுஅழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை எழிலமர் வெண்ணிஎம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவர் ஆற்றல் உடையாரே.

தெளிவுரை : அகந்தையால் பகைமை கொண்டு கயிலை மலையை மதியாது பெயர்த்த இராவணனுடைய வனப்பு அழியுமாறு தோள்களையும் முடிகளையும் துன்புறுத்தியவன், எழில் மேவும் வெண்ணியில் விளங்கும் இறைவன். அப்போது அவ்வரக்கன், எம் தலைவனே ! காப்பாற்றுவீராக என்று கலங்கி அழுது வேண்டி முறையிட, குற்றத்தைப் பொறுத்து அருள் புரிந்தவன் பரமன். அப் பெருமானைப் போற்றி வணங்குபவர்களுக்கு எல்லாவிதமான ஆற்றலும் கைவரப் பெறும்.

151. மண்ணினை வானவ ரோடு மனிதர்க்கும்
கண்ணினைக் கண்ணணு நான்முக னுங்காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : ஈசனுடைய எட்டு மூர்த்தங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகியவற்றுள், முதலாவதாகக் கூறப்படும் மண்ணாக விளங்கி, தேவர்களுக்கும் பூவுலகத்தவர்களுக்கும் கண்ணாக இருப்பவன் ஈசன். அப்பெருமான் கண்ணனாகிய திருமாலும், நான்முகனாகிய பிரமனும் காணுதற்கு ஒண்ணாத நிலையில் விண்ணென உயர்ந்து ஓங்கியவன். அவன், தேவர்கள் தொழும் வெண்ணியில் வீற்றிருக்கும் அண்ணல், அப்பெருமானை அடைந்து வணங்குவோர்க்குத் துன்பம் ஏதும் இல்லை. இம்மையில் நலமுடன் வாழ்வார்கள் என்பது குறிப்பு.

152. குண்டரும் குணமிலாத சமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்தவல் லார்துயர் தோன்றாவே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் இடக்கான சொற்கள் கண்டு சினங்கொள்ளேல், பகைவராகிய முப்புராரிகளை வென்ற ஈசன் விளங்கம் வெண்ணி என்னும் திருத்தலத்தில் திருத்தொண்டராய் விளங்கி அப் பெருமானை வணங்குபவர்களுக்கு எக் காலத்திலும் துயரம் இல்லø.

153. மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை
உருவாரும் ஒண்தமிழ் மாலை இவைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

தெளிவுரை : மணம் நிறைந்த சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் பெருகும் வெண்ணியில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றி, ஒளிமிக்கதாக உரைத்த இத்தமிழ் மாலையைச் சொல்லவல்லவர்கள் பொருந்தி விளங்கும் சிவலோகத்தில் சார்ந்து மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

151. திருக்காறாயில் (அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

154. நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்தொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே என்பவர் ஊனமி லாதாரே.

தெளிவுரை : கங்கை தரித்த பெருமானே ! நீண்ட சடையின் மீது வரிசையாக உள்ள கொன்றை மாலையை உடையவனே ! தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமன் தொழுது போற்றும் பெருமை உடையவனே ! சிறப்புமிக்க திருக்காறாயில் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஈசனே ! என்று போற்றி வணங்கும் அடியவர்கள், குறைபாடு ஏதும் இன்றி உலகில் நன்கு விளங்குவார்கள். வினைத் துன்பம் இல்லை என்பது குறிப்பு.

155. மதியானே வரியர வோடுடனச் மத்தம்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாம்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்ந்திருக் காறாயில்
பதியானே என்பவர் பாவமி லாதாரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய பெருமானே ! அழகிய அரவமும், ஊமத்த மலரும் தரித்துள்ளவனே ! மன்னுயிர்களுக்கு ஊழின்வழி விதிக்கும் கர்த்தராக இருப்பவனே ! வேதவிதிப்படி விளங்கம் அந்தணர்கள் தொழுது போற்றும் செல்வனே ! நீர்வளமும், வயல் வளமும் பெருகிச் சூழ்ந்த திருக்காறாழயில் என்னும் பதிக்கு உரிய ஈசனே ! என்று போற்றி வணங்கும் அடியவர்கள், பாவம் சாராது உலகில் நன்கு திகழ்வார்கள். வினையின் உபாதை இல்லை என்பதாம்.

156. விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்பும்சீர்
மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே என்பவர் ஏதமி லாதாரே.

தெளிவுரை : வானாகிய பெருமானே ! தேவர்கள் தொழும் சிறப்புடைய மண்ணுலகம் ஆகியவனே ! பூவுலகத்தில் வாழ்கின்ற உயிக்கெல்லாம் கண்ணாக விளங்கும் பரம்பொருளே ! மணம் பொருந்திய பொழில் சூழந்த திருக்காறாயில் என்னும் பதியின்கண் கருதி வீற்றிருக்கும் ஈசனே என்று போற்றி வணங்கும் அடியவர்கள், குற்றமற்றவராய் விளங்குவார்கள்.

157. தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்கு அணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே என்பவர் மேல்வினை மேவாவே.

தெளிவுரை : தாயாக விளங்கும் பெருமானே ! தந்தையும் ஆகி விளங்குபவனே ! நல் மனத்துடன் கூடிய அடியவர்களுக்கு அண்மையில் இருந்து அருள் புரியும் நாதனே ! மற்றையோர்க்கும் சேய்மையில் விளங்கிப் புரந்தருள் செய்யும் பரமனே ! புகழ்மிக்க திருக்காறாயில் என்னும் பதியில் மேவும் ஈசனே என்று போற்றித் துதிக்கும் அடியவர்கள்பால், வினையானது மேவாது.

158.கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே என்பவர் மேல்வினை நில்லாவே.

தெளிவுரை : வேத சாத்திரங்களாகிய பெருமானே ! அழகுமலிந்த செம்பொற் கயிலாய மலையாய் விளங்குபவனே ! பகைமை பூண்டு வெகுண்டு எழுந்த முப்புரத்தை மாய்த்து எரித்த மேரு மலையை வில்லாக உடையவனே ! புகழ் மிக்க திருக்காறாயில் என்னும் பதியில் நிலையாகி விளங்கும் ஈசனே என்று, போற்றி வணங்குபவர்களிடம் வினையானது நிற்காது. வினை சார்தல் இன்றி, தானே மறைந்து விலகும் என்பது குறிப்பு.

159. ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடரவு
ஏற்றானே ஏழுல கும்இமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே என்பவர் மேல்வினை நில்லாவே.

தெளிவுரை : யாவும் ஆகி விளங்கும் பெருமானே ! கங்கை தரித்த சிவந்த சடையும் ஆடுகின்ற அரவும் ஏற்று விளங்கும் நாதனே ! ஏழு  உலகத்தவர்களும். யோகியர்களும் துதித்துப் போற்றப்படும் பரமனே ! பொழில் திகழும் திருக்காறாயில் என்னும் பதியில் விளங்கும் திருநீற்றனாய் மேவும் ஈசனே என்று, போற்றி வழிபடும் அடியவரகள் மீது, வினை சார்ந்து நிற்காது.

160. சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வார்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழந்திருக் காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல்வினை ஆடாவே.

தெளிவுரை : பல பிறவிகள் வாயிலாகச் சேர்ந்த தீயவினைகள் யாவும் அற்று நீங்கும்படி செய்த பெருமானே ! தேவர்களால் ஏத்திப் புகழப்படும் தேவனே ! போற்றிவழிபடும் மேன்மையுடைய முனிவர்களுக்கு எவ்விதமான இடரும் நேராதவாறு காத்தருளும் பரமனே ! வயல் வளம் பெருகும் திருக்காறாயில் என்னும் தலத்தின்கண் நிறைந்து விளங்கும் ஈசனே என்று, பரவும் அடியவர்கள்பால் வினையானது செயலற்றதாகும்.

161. கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தான÷ யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே என்பவர் மேல்வினை யாடாவே.

தெளிவுரை : மார்க்கண்டேயர் உயிரைக் கவர வந்த காலன் உயிரைக் காலால் உதைத்துக் கவர்ந்த நாதனே ! கயிலாயம் எடுத்த இராவணனுக்குத் துன்பமும் நன்முனிவர்களுக்கு இடர் கெடுத்தும் விளங்கும் பரமனே ! ஒளி திகழும் திருக்காறாயில் என்னும் திருத்தலத்தில் பொருந்தி விளங்கும் ஈசனே என்று, பரவி வணங்குபவர்களிடம் வினையானது செயலற்றதாகும்.

162. பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே எழில்திக ழும்திருக் காறாயில்
உறைவானே என்பவர் மேல்வினை யோடுமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனை உடையவனே ! போற்றிப் பரவும் பாடலுடன் இன்னிசையாய் விளங்கும் மறையவனே ! திருமாலும் நான்முகனும் அறியாதவனாயச விளங்கிய இறைவனே ! எழில் திகழும் திருக்காறாயில் என்னும் தலத்தில் உறையும் ஈசனே என்று, பரவிப் போற்றும் அடியவர்பால், சார்ந்துள்ள வினையானது நீங்கி அழியும்.

163. செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாரும் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

தெளிவுரை : சமணர் முதலானோர் சொற்கள் பயன் அற்றவையாகும். மணம் கமழும் பூம்பொழில் சூழ்ந்த திருக்காறாயில் என்னும் தலத்தில் குடியிருக்கும் செம்மையுடைய சீலர்களுக்கு ஆணவம் முதலான குற்றங்கள் இல்லை.

164. ஏய்ந்தசீர் எழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவாறு ஏத்துவார் வானுலகு ஆள்வாரே.

தெளிவுரை : பொருந்திய சிறப்பும் எழிலும் திகழ்கின்ற திருக்காறாயிலின்கண், மெய்ம்மை மிக்க வேத ஆகமங்களால் மொழியப்பட்ட புகழுக்கு உரியவனாகிய ஈசன் திருவடியைப் பரவி, அருள் நலம் வாய்க்கப் பெற்ற, நீர் வளம்மிக்க சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஏத்துவார், உயர்ந்த உலகினைப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

152. திருமணஞ்சேரி (அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

165. அயிலாரும் அம்பத னால்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாள்ஒரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : கூர்மையான, அம்பினால் முப்புரத்தை எய்து எரியுமாறு செய்து, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு மயில்கள் மருவி விளங்கும் சோலையுடைய மணஞ்சேரியில், அடியவர் பெருமக்கள் வணங்கிப் போற்ற அருள் நல்கி விளங்கும் ஈசனைப் பற்றாகக் கொண்டு, உறுதியுடன் இருப்பவர்களுக்குப் பாவம் சாராது.

166. விதியானை விண்ணவர் தாந்தொழுது ஏத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

தெளிவுரை : யாவற்றுக்கும் நெறிமுறையாகவும், விதிக்கும் விதியாகவும் விளங்கும் பெருமானை, தேவர்கள் தொழுது ஏத்தும் செல்வனை, நீண்ட சடைமுடியின் மீது சந்திரனை விளங்கமாறு செய்த பரமனை, வளம் மிக்க பொழில் சூழ்ந்த மணஞ்சேரி என்னும் பதியில் விளங்கும் ஈசனைப் பாடிப் போற்றுபவர்கள், வினையானது அழியும்.

167. எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலாய் என்னையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

தெளிவுரை : வயிற்றுணவை மட்டும் மதியாது, இறைவனைத் தியானித்து விரதம் பூண்டு இளைத்த மேனியராய்ப் பக்தியுடன் விளங்கும் அடியவர்களுக்கு இன்புறுமாறு தேன் போன்று இனிய அருள் பெருகுமாறு செய்து, என்னை ஆளாக உரிமையுடையவன் ஈசன். அப்பெருமான், உறுதி வாய்ந்த மாடங்களை உடைய மணஞ்சேரியின் மெய்ப்பொருளாக விளங்குபவன். அப் பரமனை மேவி வணங்குபவர் வினை அழியும். இது துன்பத்தை தீர்க்கும் என்பதாம்.

168. விடையானை மேலுலகு ஏழும்இப் பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : இடப வாகனத்தை உடையவனாகிய பரமனை, மேலுலகு ஏழும், இவ்வுலகம் யாவும் விரிந்து விளங்குபவனை, ஊழிக்கோலங்கள்தோறும் உள்ளதாகிய ஞானவாள் படையுடையவனை, இசைப் பண் விளங்குமாறு பொலியும் மணஞ்சேரியில் வீற்றிருக்கும் ஈசனை அடைந்து போற்றும் அடியவர்களுக்குத் துயர் இல்லை.

169. எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மாறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

தெளிவுரை : ஒளிவீசும் பூங்கொன்றை மாலையும், ஊமத்தம் பூவும் மணம் கமழும் செஞ்சடையில் நிரம்பச் சூடி, மானைக் கரத்தில் ஏந்தியவன் மணஞ்சேரியில் திட்பமாய் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானைப் போற்றிப் பாட வல்லவர்களுக்கு இடையூறு இல்லை.

170. மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.

தெளிவுரை : உயர்ந்ததாகிய வேதத்தை மொழித்தவனை, அம்மொழிக்கு உரிய விளக்கத்தை நன்கு விரித்து அருளியவனை, நன்னெறிகள் யாவும் ஆகியவனை, தேவர்கள் ஏத்திப் பரவும் மணஞ்சேரியில் விளங்கும் ஈசனைக் குறைவுபடாது ஏத்துபவர்கள் இம்மையில் இன்பம் பெறுவர். இது மறுமைக்கும் பொருந்தும்.

171. எண்ணானை எண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

தெளிவுரை : எண்ணங்களுக்கெல்லாம் கடந்து விளங்கும் பரமனை, எண்ணத்தில் பதித்து இருத்திக் காணும் புகழ்மிக்க யோகியர்களுக்கு ஞானக் கண்ணாகியவனை, முக்கண் உடையவனை, அட்ட மூர்த்தகளுள் மண் (பிரித்திவி) என விளங்குபவனை, சிறப்பான வயல்கள் சூழ்ந்த மணஞ்சேரியில் உமாதேவியைக் கூறாக உடைய ஈசனைப் புகழ்ந்து பேசுபவர்கள், பெருமக்கள் என்று சொல்லப்படும் பெரியோர் ஆவர்.

172. எடுத்தானை எழில்முடி எட்டும் இரண்டும்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.

தெளிவுரை : மலையை எடுத்தவனாகிய இராவணனுடைய பத்துத் தோள்களையும் வலியிழக்கச் செய்த பெருமானை, அழிதல் இல்லாத சிறப்பினையுடைய ஈசனை, வண்டுகள் அணுகி இசைபாடும் மணஞ்சேரி யில் விளங்கும் ஈசனை விருப்பத்துடன் பற்றி மனதாரப்  போற்றி விளங்கும் அடியவர்கள் பெரியோர்களாகத் திகழ்வார்கள்.

173. சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.

தெளிவுரை : வேத்தின் சொல்லாக விளங்கும் பெருமானை, படைப்புத் தொழில் மேவும் பிரமனும் நெடிய திருமாலும் காண முடியாத கடவுளை, ஈசன் புகழ்ப் பாடல்களைக் கருதிச் சொல்லித் துதித்து ஓங்கும் பெருமக்களும், நற்றவமாந்தர்களும் ஏத்துகின்ற மணஞ்சேரியில் எம்பெருமானே, எல்லாமாய் விளங்கும் ஈசனை ஏத்தி அவன் அடி பரவுவீராக.

174. சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாயே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் தமது உரைகள் பயனற்ற தன்மையில் ஆகுமாறு, வண்ணம் பொருந்திய செம்மையுடைய ஈசனை, வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த மணஞ்சேரியில் வாழ்பவர்கள் பற்றாகக் கொண்டிருக்க, அவர்கள்மேல் வினையானது பற்றாது.

175. கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.

தெளிவுரை : கண்ணுக்கினிய காட்சி நல்கும் காழியின் தலைவனாகிய ஈசன் கருத்து, உள்ளத்தில் பொருந்துமாறு செய்து உணர்வித்த ஞானசம்பந்தன் தமிழ் மாலை, மண்வளம் பெருகும் வயல் சூழந்த மணஞ்சேரியைப் பண்ணாரப் பொலிய, அதனைப் பாட வல்லவர்களுக்குப் பாவம் அணுகாது.

திருச்சிற்றம்பலம்

153. திருவேணுபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

176. நிலவும்புன லும்நிறை வாளரவும்
இலகுஞ்சடை யார்க்கிட மாம்எழிலார்
உலவும்வய லுக்கொளி யார்முத்தம்
விலகுங்கட லார் வேணுபுரமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும், கங்கையும், கொடிய அரவமும் விளங்கும் சடையுடைய ஈசனார்க்கு இடமாக விளங்குவது, எழில் மிக்க உழத்திய மகளிர் உலவும் வயல்களில் கடலிலிருந்து விலகிச் சென்று அடையும் ஒளிமிக்க முத்துக்களையுடைய வேணுபுரம் ஆகும்.

177. அரவார்கர வன்னமை யார்திரள்தோள்
குரவார்குழ லாள்ஒரு கூறனிடம்
கரவாதகொ டைக்கலந் தாரவர்க்கு
விரவாகவல் லார் வேணுபுரமே.

தெளிவுரை : அரவத்தைக் கரத்தில் கங்கணம் போன்று பொருந்திய ஈசன், மூங்கில் போன்ற தோளும் குராமலர் நிகர்த்த மணம் கமழும் கூந்தலும் உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடைய பெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், குறைவின்றிக் கொடை வழங்கும் வள்ளல்கள் விளங்க அத்தகையோர்க்கு நெருக்கமாகத் திகழவல்லவர்கள் வாழும் வேணுபுரம் ஆகும்.

178. ஆகம்மழ காயவள் தான்வெருவ
நாகம்முரி போர்த்தவன் நண்ணுமிடம்
போகந்தரு சீர்வயல் சூழ்பொழில்கண்
மேகந்தவ ழும் வேணுபுரமே.

தெளிவுரை : அழகிய திருமேனியுடைய உமாதேவி வெருவுமாறு, வீரத்துடன் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட ஈசன் வீற்றிருக்கின்ற இடம், மூன்று போகமும் வளங்கொழிக்கும் செழுமையான வயல்களும் ஓங்கி வளர்ந்த பொழின்கண் மேகம் தவழும் இயல்பும் உடைய வேணுபுரம் ஆகும்.

179. காசக்கட லில்விடம் உண்டகண்டத்து
ஈசர்க்கிட மாவது இன்னறவ
வாசக்கம லத்தனம் வன்திரைகள்
வீசத்துயி லும் வேணுபுரமே.

தெளிவுரை : பொன்வளம் மிக்க பாற்கடல் தோன்றிய விடத்தை உட்கொண்ட ஈசனார்க்கு இடமாக விளங்குவது, இனிய தேன் விளங்கும் தாமரை மலரில் திகழும் அன்னமானது வலிமையான அலைகள் வீசும் காரணமாகத் துயில்சாரும் வேணுபுரம் ஆகும்.

180. அரையார்கலை சேரன மென்னடையை
உரையாஉகந் தானுறை யும்இடமாம்
நிரையார்கமு கின்னிகழ் பாளையுடை
விரையார்பொழில் சூழ் வேணுபுரமே.

தெளிவுரை : நன்கு பொருந்திய மேகலையும் அன்னம் போன்ற நடையழகும் உடைய உமாதேவிக்கும், வேத சாத்திர மெய்ம்மைகளை உரைத்து மகிழும்  ஈசனார் உறையும் இடமாவது, கமுக மரங்களும் மணம் கமழும் பொழில்களும் சூழும் வேணுபுரம் ஆகும்.

181. ஒளிரும்பிறை யும்முறு கூவிளவின்
தளிருஞ்சடை மேலுடை யானிடமாம்
நளிரும்புன லின்னல செங்கயல்கண்
மிளிரும்வயல் சூழ் வேணுபுரமே.

தெளிவுரை : ஒளி தரும் பிறைச்சந்திரனும், வில்வ இதழும் சடைமேல் தரித்துள்ள ஈசனின் இடமாவது, குளிர்ந்த நீரில் வளம்மிக்க கயல்கள் (மீன்கள்) மல்கி விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

182. ஏவும்படை வேந்தன் இராவணனை
ஆவென்றல றஅடர்த் தான்இடமாம்
தாவும்மறி மானொடு தண்மதியம்
மேவும்பொழில் சூழ் வேணுபுரமே.

தெளிவுரை : தான் இருந்த நிலையிருந்தவாறு ஏவிப் பிறரை அழிக்கவல்ல படையுடைய இராவணனை, ஆ என்று அலறிக் கலங்குமாறு அடர்த்த ஈசன் விளங்கம் இடமாவது, தாவும் இளமானும் குளிர்ந்த பொழிலும் சூழும் வேணுபுரம் ஆகும்.

183. கண்ணன்கடி மாமல ரில்திகழும்
அண்ணல் இருவர்அறி யாஇறையூர்
வண்ணச்சுதை மாளிகை மேற்கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியாத இறைவன் விளங்கும் ஊரானது, வண்ணம் கொண்டு விளங்கும் மாளிகைகளின் உச்சியில் திகழும் கொடிகள் தேவலோகத்தில் பொலியும் சிறப்புடைய வேணுபுரம் ஆகும்.

184. போகம்மறி யார்துவர் போர்த்துழல்வார்
ஆகம்மறி யாஅடியார் இறையூர்
மூகம்மறி வார்கலை முத்தமிழ்நூன்
மீகம்மறி வார் வேணுபுரமே.

தெளிவுரை : சாக்கியர் முதலானோர் அறியாத நிலைகண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூற, அடியவர்கள் அத்தகையோரை நோக்காதவராய் இறைவனை நோக்கும் தன்மையராவர், அவ் இறைவன் விளங்கும் ஊர், மௌனமாக இருந்து தியானம் செய்ய வல்லவர்களும், வேதம் மற்றும் முத்தமிழ் நூல்களையும் மேன்மையாக அறிந்தவர்களும் திகழும் வேணுபுரம் ஆகும்.

185. கலமார்கடல் போல்வள மார்தருநற்
புலமார்தரு வேணு புரத்திறையை
நலமார்தரு ஞானசம் பந்தன் சொன்ன
குலமார்தமிழ் கூறுவர் கூர்மையரே.

தெளிவுரை : கடல் போன்று பெருகும் நல்ல வளந்தரும் வயல்கள் திகழும் வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவனை, நலந்திகழ் ஞானசம்பந்தன் சொன்ன மேன்மையான இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

154. திருமருகல் (அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

186. சடையாயெனு மால்சரண் நீயெனுமால்
விடையாயெனு மால்வெரு வாவிழுமால்
மடையார்குவ ளைமமல ரும்மருகல்
உடையாய்தகு மோஇவள் உள்மெலிவே.

தெளிவுரை : நீர்மடைகளில குவளைப்பூ மலரும் மருகல் என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமானே ! சடைமுடியுடைய நாதனே ! இடப வாகனத்தை உடையவனே ! உன் திருவடியே சரணம் என்ற, வெதும்பித் துயர் கொள்ளும் இப் பெண்ணின் மனவேதனை தகுமோ !

187. சிந்தாஎனு மால்சிவ னேஎனுமால்
முந்தாஎனு மால்முதல் வாஎனுமால்
கொந்தார்குவ ளைகுல வும்மருகல்
எந்தாய்தகு மோஇவள் ஏசறவே.

தெளிவுரை : கொத்தாகப் பூக்கும் குவளை மலர் விரவி நிலவும் மருகல் என்னும் பதியில் வீற்றிருக்கும் எம் தந்தையே ! சிந்தையில் கோயில் கொண்டுள்ள பெருமானே ! சிவபெருமானே ! முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே ! யாவற்றுக்கும் தலைவனாக விளங்கும் ஈசனே ! என்று மனம் கசிந்து போற்றித் தன்னை மறந்து வாடுகின்ற இப்பெண் துன்புறுதல் தகுந்ததோ ! துன்பம் தீர்த்து அருள்புரிவீராக என்பது குறிப்பு.

188. அறையார்கழ லும்அழல் வாயரவும்
பிறையார்சடை யும்உடை யாய்பெரிய
மறையார்மரு கல்மகிழ் வாய்இவளை
இறையார்வளை கொண்டெழில் வவ்வினையே.

தெளிவுரை : ஒலித்து ஆர்க்கும் வீரக்கழலும், நஞ்சுடைய அரவும், பிறைச் சந்திரன் பொருந்திய சடை முடியும் உடைய, மறைவிளங்கும் மருகலில் மகிச்சியுடன் வீற்றிருக்கும் ஈசனே ! இந் நங்கையைத் துன்புறுமாறு செய்து, கைவளை நெகிழ்ந்து விழுமாறு எழிலைக் கவர்ந்தனையே !

இது பொருந்தாது, அருள் புரிந்து இந் நங்கையின் துன்பத்தைத் தீர்ப்பீராக என்பது குறிப்பு.

189. ஒலிநீர்சடை யிற் கரந் தாய்உலகம்
பலிநீதிரி வாய்பழி யில்புகழாய்
மலிநீர்மரு கல்மகிய் வாய்இவளை
மெலிநீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.

தெளிவுரை : முழக்கம் செய்து ஆர்ப்பரித்து வரும் கங்கையைச் சடையில் ஏற்றுக் கரந்தும், உலகத்தில் கபாலம் ஏந்திப் பலியேற்றுத் திரிந்தும், பழியற்ற புகழுடன், நீர்வளம் பெருகும் மருகலில மகிழ்ந்து விளங்கும் பெருமானே ! இந்த நங்கையைத் துன்பத்தால் மெலியுமாறு ஆக்குலும் விரும்பினையே !

190. துணிநீலவன் ணம்முகில் தோன்றியன்ன
மணிநீலகண் டம்உடை யாய்மருகல்
கணிநீலவண் டார்குழ லாள்இவள்தன்
அணிநீலஒண் கண்ணயர் வாக்கினையே.

தெளிவுரை : நீலகண்டனாக மருகலில் விளங்கும் ஈசனே ! அழகிய வண்டுகள் பரவும் குழலையுடைய இப் பெண் மகள் கண்கள் அழுது அயர்வடையுமாறு புரிந்தனையே.

191. பரும்பர வப்படு வாய்சடைமேல்
மலரும்பிறை ஒன்றுடை யாய்மருகல்
புலருத்தனை யும்துயி லாள்புடைபோந்து
அலரும்படு மோஅடி யாள்இவளே.

தெளிவுரை : அடியவர்கள் பலரும் சேர்ந்து துதிக்கப்படும் பெருமானே ! சடையின்கண் வளர்கின்ற பிறைச் சந்திரனை உடைய ஈசனே ! மருகல் எனப்படும் இப்பதியில் பொழுது புலர்ந்து விடியும் அளவும் நித்திரை இன்றி நின்பக்கம் சார்ந்து இவ் அடியவள் பழிச்சொல்லுக்கு ஆட்படுதல் நன்றாகுமோ !

192. வழுவால்பெரு மான்கழல் வாழ்க எனா
எழுவாள்நினை வாள்இர வும்பகலும்
மழுவாளுடை யாய்மரு கற்பெருமான்
தொழுவாள்இவ ளைத்துயர் ஆக்கினையே.

தெளிவுரை : பெருமான் திருக்கழல் வாழ்க என்கின்ற ஒலியானது காதால் கேட்டதும் எழுந்து ஈசனை நினைத்துத் துதிப்பவளாவாள், இவ் அடியவள். சைவ நெறியிலிருந்து மாறுபடாத கொள்கை உடையவளாய் எவ்விதமான குறைபாட்டுக்கும் இடந்தராது வழிபாடு செய்பவள், இரவும் பகலும் நின்னையே நினைத்து வழிபடுபவள். மழுப்படையுடைய மருகற் பெருமானே ! இந் நங்கையைத் துயரில் ஆழ்த்தினையே !

இவ் அடியவள் துயரைத் தீர்க்க வேண்டும் என்பது குறிப்பு.

193. இலங்கைக்கிறை வன்விலங் கல்எடுப்பத்
துலங்கவ்விரல் ஊன்றலும் தோன்றலனாய்
 வலங்கொள்மதில் சூழ்மரு கற்பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.

தெளிவுரை : இலங்கைக்கு அரசனாகிய இராவணன், கயிலை மலையை எடுக்க, அருள் விளங்கும் திருப்பாத விரலை ஊன்றி அடர்த்ததும், நெரிப்பட்டு ஏதும் தோன்றாது ஈசனைப் பணிந்து போற்றித் துதிக்கலாயினன். அத்தகைய அருளாற்றல் உடைய பெருமானய், மதில் சூழ்ந்த மருகலில் வீற்றிருப்பவனே ! பூமாலை போன்று மென்மை உடைய இவ் அடியவளைத் துயருள் ஆக்கினையே !

194. எரியார்சடையும் அடியும் இருவர்
தெரியாததொர் தீத்திரள் ஆயவனே
மரியார்பிரி யாமரு கற்பெருமான்
அரியாள்இவ னைஅயர் வாக்கினையே.

தெளிவுரை : சோதி வடிவாக விளங்கும் சடை முடியும், திருவடியும்; திருமால், பிரமன் ஆகிய இருவரும் தெரிந்து கொள்ளாத வடிவில் ஒப்பற்ற தீத் திரட்சியாகிய நாதனே ! இறப்பினை அடையாதவராய் ! நின்பாத கமலத்தைப் பிரியாத சிவன் முத்தர்கள் விளங்கும் மருகலில் மேவும் நாதனே ! நின்பால் நெருக்கம் பூண்டு பக்தி செய்யும் இவ் அடியவளைத் துயரம் கொண்டவளாய் ஆக்கினையே !

195. அறிவிலசம ணும்அலர் சாக்கியரும்
நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறியேந்துகை யாய்மரு கற்பெருமான்
நெறியார்குழ லிநிறை நீக்கினையே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சிவநெறியற்றன செய்து உழன்று நிற்க, மானேந்திய கரத்துடைய மருகற் பெருமானே ! நன்னெறியுடைய இவ் அடியவளின் மன உறுதியை விலகுமாறு செய்தனையே !

196. வயஞானம்வல் லார்மரு கற்பெருமான்
உயர்ஞானம் உணர்ந்துஅடி உள்குதலால்
இயல்ஞானசம் பந்தன பாடல்வல்லார்
வியன்ஞாலமெல் லாம்விளங் கும்புகழே.

தெளிவுரை : எண்குணத்தில் வழங்கப்பெறும் தன் வயத்தினராக வல்ல மருகற் பெருமான், திருக்குறிப்பின் வழி மேவும் ஞானத்தை உணர்ந்த, அப் பெருமானின் திருவடியை நெஞ்சில் பதித்த இயல்பினால், அருள் செய்யப்பெற்ற ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், உலகில் மிக்க புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

155. திருநெல்லிக்கா (அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

197. அறத்தாலுயிர் காவல் அமர்ந்தருளி
மறத்தான்மதில் மூன்றுடன் மாண்பழித்த
திரத்தால்தெரி வெய்திய தீ வெண்திங்கள்
நிறத்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : அறக் கருணை விளங்குமாறு மன்னுயிர் களைத் துன்பத்திலிருந்து காத்தருளும் நெறியாக, மறக் கருணை விளங்குமாறு, மும்மதில்களை உடைய அசுரர்களை அழித்தவன், ஈசன். அப்பெருமான், தெளிவு எய்திய செம்மையும் வெண்மையும் உடைய வண்ணத்தானாய் நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில நிலவி விளங்கும் பரமன் ஆவன்.

198. பதிதான்இடு காடுபைங் கொன்றைதொங்கல்
மதிதானது சூடிய மைந்தனுந்தான்
விதிதான்வினை தான்விழுப் பம்பயக்கும்
நெதிதா(ன்) நெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : ஈசன் இருக்கின்ற இடம் சுடுகாடு. அழகிய கொன்றை மாலையயும், பிறைச் சந்திரனையும் சூடிய வலிமை மிக்க அழகனாய், விதிக்கப்படும் விதியாகவும், விளைவாகிய வினையாகவும், மேலானதாகிய செல்வமாகவும் விளங்கும் அப் பரமன், நெல்லிக்காவுள் நிலவி விளங்குபவன்.

199. நல்ந்தானவ(ன்) நான்முகன் றன்தலையைக்
கலந்தானது கொண்ட கபாலியுந்தான்
புலந்தான் புக ழால்எரி விண்புகழும்
நிலந்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : மன்னுயிர்களுக்கும் நலம் செய்பவன், ஈசன். அப்பெருமான், பிரமனது தலையைப் பிச்சை ஏற்கும் பாத்திரமாகக்கொண்டு பிச்சை ஏற்றவன்; பெருஞானத்தின் புகழாய் விளங்குபவன்; தேவர்கள் மற்றும் சூரியன் முதலானவர்கள் புகழ்ந்து போற்றும் தலமாகிய நெல்லிக்கா என்னும் பதியில் நிலவுபவன்.

200. தலைதானது ஏந்திய தம்மடிகள்
கலைதான்திரி காடிட நாடிடமா
மாலைதானெடுத் தான்மதில் மூன்றுடைய
நிலைதானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : கபாலம் ஏந்திய அடிகளாகிய ஈசன், மானைக் கரத்தில் ஏந்தி நாட்டிலும், சுடுகாட்டிலும் திரியும் மாண்புடையவன். முப்புரத்தையுடைய அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக எடுத்த அப் பெருமான், நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில் நிலவுபவன்.

201. தவந்தான்கதி தான்மதி வார்சடைமேல்
உவந்தான்கற வேந்தன் உருவழியச்
சிவந்தான்செயச் செய்து செறுத்துலகில்
நிவந்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : ஈசன், தவமாகவும் விளங்கி அவற்றின் முடிந்த பயனாகவும் இருப்பவன். அப்பெருமான், சந்திரனை அழகிய சடையின் மேல் தரித்து மகிழ்ந்தவன்; மன்மதனை எரிந்து சாம்பலாகுமாறு சினந்தவன்; உலகில் நெல்லிக்கா என்னும் தலத்தில் நிலவி விளங்குபவன்.

202. வெறியார்மலர்க் கொன்றையந் தார்விரும்பி
மறியார்மலை மங்கை மகிழ்ந்தவன்றான்
குறியார்குறி கொண்டவர் போயக்குறுகும்
நெறியானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : மணம் கமயும் கொன்றை மாலையை விரும்பி அணிந்தவனாய், மான்கள் விளங்கும் மலையரசன் மகளாகிய உமாதேவியை மணங்கொண்டு மகிழ்ந்தவன் ஈசன். அப்பெருமான், நற்பேறு குறித்தும் அதனைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தாலும், சூரியன் சந்திரன் முதலானவர்களும் திருமால் பிரமன் ஆகியோரும் குறியாகக் கொண்டு சென்று அடைகின்ற நெறியின் காரணத்தால், நெல்லிக்காவில் நிலவி விளங்கி இருப்பவன்.

203. பிறைதான்சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்
இறைதான்குற வாக்கயி லைமலையான்
மறைதான்புனல் ஒண்மதி மல்குசென்னி
நிறைதா னெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : பிறைச் சந்திரனை சடையில் சேர்த்தருளிய எந்தை பெருமானாகிய இறைவன் யாண்டும் மலர்ந்து விளங்கும் கயிலை மலைக்கு உரியவன். அப்பெருமான் வேதங்களும் மேலாக விளங்க, குளுமையாய் ஒளிரும் சந்திரன் பூசித்து வழிபட்டு மேன்மையின் நிறைவுடன் திகழும் நெல்லிக்காவுள் நிலவி விளங்குபவன்.

204. மறைத்தான்பிணி மாதொரு பாகந்தன்னை
மிறைத்தான்வரை யாலரக் கன்மிகையைக்
குறைததான்சடை மேற்குளிர் கோல்வளையை
நிறைத்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : நெல்லிக்கா என்னும் பதியில் நிலவும் ஈசன், உமாதேவியைப் பிணித்துக் கூறுடைய அர்த்தநாரியாகவும், மறைத்து வேறாகவும் விளங்குபவன். அப்பெருமான், குற்றம் புரிந்த இராவணனுடைய தருக்கினையும், வலிமையையும் குறைத்தும், குளிர்ந்த கங்கையைச் சடையிற் கரந்தும் விளங்குபவன்.

205. தழ்தாமரையான் வையம் தாயவனும்
கழல்தான் முடி காணிய நாணொளிரும்
அழல்தான்அடி யார்க்கரு ளாய்ப்பயக்கும்
நிழல்தா(ன்) நெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : நெருப்பின் வண்ணத்தைப் போன்ற செம்மையான தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், நெடியவனாய் ஓங்கி வையம் அளந்த திருமாலும், திருப்பாதமும் திருமுடியும் காண்பதற்கு முனைந்த நாளில் ஒளிர்ந்து ஓங்கும் தீப்பிழம்புதான் அவர்களுக்கு அருளாகி மேலோங்கியது. அப் பேரொளியே நெல்லிக்கா என்னும் தலத்தில் நிலவும் பெருமான்.

206. கனத்தார்திரை மாண்டழற் கான்றநஞ்சை
எனத்தாஎன வாங்கிஅது உண்டகண்டன்
மனத்தாற்சமண் சாக்கியர் மாண்பழிய
நினைத்தா னெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : பேரலைகள் கொண்ட பாற்கடலில், கொடிய நஞ்சு வெளிப்பட்ட ஞான்று, தேவர்கள் என் அத்தனே ! காவாய் எனத் தொழுது வேண்டி நிற்க, அதனை வாங்கி உட்கொணடு நீலகண்டனாகியவன் ஈசன். சமணரும் சாக்கியரும் தம் மாண்பு கெடுமாறு, அப்பெருமான் திருக்குறிப்பு கொண்டு நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில் நிலவி விளங்குகின்றவன்.

207. புகர்ஏதும் இலாதபுத் தேளுலகில்
நிகராநெல்லிக் காவுள் நிலாயவனை
நகராநல ஞானசம் பந்தன்சொன்ன
பகர்வார்அவர் பாவம் இலாதவரே.

தெளிவுரை : மாசு இல்லாத தேவர் உலகத்துக்கு நிகராண நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில் நிலவும் ஈசனை, எக் காலத்திலும் அழிதல் இல்லாத நலத்தினை உடைய ஞானசம்பந்ன், முன் இருத்திச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதும் அடியவர்கள், பாவம் அற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

156. திருஅழுந்தூர் (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

208. தொழுமாறுவல் லார்துயர் தீரநினைந்து
எழுமாறுவல் லார்இசை பாடவிம்மி
அழுமாறுவல் லார்அழுந் தைமறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே.

தெளிவுரை : இறைவன், நிஷ்காமியமாகத் தொழுபவர்கள், தமது துயர் தீர வேண்டும் என்னும் கருத்தில் தியானம் செய்து வணங்கி எழுகின்றவர்கள், பக்திப் பெருக்கினால் இசை பாடி உள்ளம் கசிந்து காதலாகிக் கண்ணீர் மல்கி அழுது போற்றுகின்றவர்கள், அழுந்தூர் என்னும் பதியில் விளங்கும் மறையோர் ஆகிய பெருமக்கள் வழிபாடு செய்கின்ற மாமடம் சார்ந்து வீற்றிருப்பவன் ஆவன்.

209. கடலேறிய நஞ்சமுது உண்டவனே
உடலேஉயி ரேஉணர்வே எழிலே
அடலேறுடை யாய்அழுந்தை மறையோர்
விடலேதொழு மாமட மேவினையே.

தெளிவுரை : பாற்கடலில் தோன்றி நஞ்சினை அமுதம் என உட்கொண்டு மன்னுயிர்களுக்கு உடலாகவும், உடலுள் நிலவும் உயிராகவும், அதனை இயக்கும் உணர்வாகவும், எழிலாகவும் விளங்கும் பெருமானே ! இடப வாகனத்தையுடைய ஈசனே ! அழுந்தை நகரில் மறையோர்கள் போற்றித் தொழும் தலைவனே ! மாமடத்தில் மேவி விளங்கி அருள்பவனாயினை.

210. கழிகாடல னேகனல் ஆடலினாய்
பழிபாடில னேஅவை யேபயிலும்
அழிபாடில ராய்அழுந் தைமறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே.

தெளிவுரை : சுடுகாட்டின் பகுதியில், கரத்தில நெருப்பு ஏந்தி ஆடுபவனாய், பழித்தல் அற்றவனாய் விளங்கும் ஈசனை, அவ்வாறே பழியற்ற தன்மையில் திகழும் அழுந்தை நகரில் மேவும் மறையவர்கள் அழிபாடு நேராதவாறு வழிபாடு செய்கின்றனர். அத்தகைய மாமடம் தன்னில் சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிபவன் இறைவன்.

211. வானேமலை யேஎன மன்னுயிரே
தானேதொழு வார்தொழு தாள்மணியே
ஆனேசிவ னேஅழுந் தையவர்எம்
மானேஎன மாமட மன்னினையே.

தெளிவுரை : மன்னுயிரானது ஈசனை, வானாகி விளங்குபவனே ! கயிலை மலையானே ! என்று போற்றித் தொழ விளங்கும் ஈசன், தொழுபவரை ஆட்கொண்டு அருளுகின்ற ஒளியாகவும், உயிராகவும், சிவனாகவும் அழுந்தை நகரில் விளங்கும் தலைவனாகவும் மாமடம் தன்னில் பொலிந்து விளங்குபவன்.

212. அலையார்புனல் சூழ்அழுந் தைப்பெருமான்
நிலையார்மறி யுந்நிறை வெண்மழுவும்
இலையார்படை யும்இவை யேந்துசெல்வ
நிலையாவது கொள்கென நீநினையே.

தெளிவுரை : அலைகள் விளங்கும் நீர்நிலைகள் சூழந்த அழுந்தை என்னும் நகரில் எழுந்தருளியுள்ள பெருமானே ! நிலை பொருந்திய மானைக் கரத்தில் ஏந்தி ஒளி மிக்க மழுவும் சூலமும் படையாகவும் கொண்டு, அவற்றையே நிலையாகத் தரித்து விளங்கும் திருக்குறிப்பு ஆக்கி விளங்குவாதாயினை.

213. நறவார்தலை யின்னய வாவுலகில்
பிறாவாதவ னேபிணி யில்லவனே
அறையார்கழ லாய்அழுந் தைமறையோர்
மறவாதெழ மாமட மன்னினையே.

தெளிவுரை : ஈசன், தலைமாலை அணிந்தவன்; உலகில் கருவில் வயப்படும் பிறவியற்றவன்; பிணிக்கப்படும் வினை முதலானவற்றால் ஆட்படாத நின்மலன்; ஒலிக்கும் கழலைத் திருப்பாதத்தில் அணிகலனாகக் கொண்டவன்; அழுந்தை என்னும் நகரில் மறையவர்கள் மறவாது எழுச்சியுடன் போற்றுமாறு மாமடம் தன்னில் மன்னி விளங்குபவனாயினன்.

214. தடுமாறுவல் லாய்தலை வாமதியம்
சுடுமாறுவல் லாய்சுடர் ஆர்சடையில்
அடுமாறுவல் லாய்அழுந் தைமறையோர்
நெடுமாநகர் கைதொழ நின்றனையே.

தெளிவுரை : காண வேண்டும் என்று தேடிச் செல்பவர்களுக்குக் காணப்பெறாமல் தடுமாற்றம் செய்ய வல்லவனாகிய ஈசனே ! நம் தலைவனே ! சுடர்போல் ஒளி வீசும் சடை முடியில் சந்திரனைச் சூடி மகிழும் பெருமானே ! பெருக்கெடுத்து வேகமாகச் செல்லும் ஆறாகிய கங்கையைத் தரித்த கங்காதரனே ! அழுந்தை மாநகரின்கண் விளங்கும் மறையவர்கள் கைதொழுது போற்றித் துதிக்குமாறு வீற்றிருந்து அருள்புரிபவன் ஆயினை.

215. பெரியாய்சிறி யாய்பிறை யாய்மிடறு
கரியாய்கரி காடுயர் வீடுடையாய்
அரியாய்எளி யாய்அழுந் தைமறையோர்
வெரியார்தொழ மாமட மேவினையே.

தெளிவுரை : முன்னைப் பொருட்கும் முன்னைப் பொருளாய் விளங்கும் பெரியோனாய் விளங்கும் பெருமை உடையவனே ! யாவற்றுக்கும் நுண் பொருளாய் இருப்பவனே ! பிறைச் சந்திரனை அணிந்த சந்திரசேகரனே ! மிடற்றில் கறை ஏற்ற நீலகண்டனே ! சுடுகாட்டினை இருப்பிடமாகக் கொண்ட பரமனே ! யாவருக்கும் அறியவனாகின்ற இறைவனே ! அன்பின்வழி நின்று வணங்குபவர்களுக்கு எளிமையாக விளங்குபவனே ! அன்புடைய மறையவர்கள் தொழுது போற்ற அழுந்தை நகரில் மாமடம் மேவி விளங்கியவன் ஆயினை.

216. மணிநீண்முடி யான்மலை யைஅரக்கன்
தணியாதுஎடுத் தான்உட லந்நெரித்த
அணியார்விர லாய்அழுந் தைமறையோர்
மணிமாமட மன்னி இருந்தனையே.

தெளிவுரை : மணிகள் பதித்த நெடிய கிரீடத்தையுடைய இராவணன் சினம் மிகுந்து கயிலை மலையை எடுக்க, அவன் உடலைத் திருப்பாத விரலால் நெரித்த ஈசனே ! அழுந்தை நகரில் மறையோர்தம் மணி மாமடம் பொலிந்து இருப்பதாயினை.

217. முடியார்சடை யாய்முன நாள்இருவர்
நெடியான்மல ரானிகழ் வால்இவர்கள்
அடிமேலறி யார்அழுந் தைமறையோர்
படியால்தொழ மாமடம் பற்றினையே.

தெளிவுரை : சடை முடியுடைய பெருமானே ! திருமாலும் பிரமனும் ஆகிய இவர்கள் திருமுடியும் திருவடியும் காணற்கு இயலாதவராய் விளங்கும் நின்னை, காணற்கு இயலாதவராய் விளங்கும் நின்னை, அழுந்தையில் உள்ள மறையவர்கள் வேதமுறைப்படி தொழுது போற்றுமாறு மாமடம் மேவி வீற்றிருப்பதாயினை.

218. அருஞானம்வல் லார்அழுந் தைமறையோர்
பெருஞானம் உடைப்பெரு மானவனைத்
திருஞானசம் பந்தன் செந்தமிழ்கள்
உருஞானம்உண் டாம்உணர்ந் தார்தமக்கே.

தெளிவுரை : அருமையான மறைஞானம்வல்ல மறையோர் தொழும் அழுந்தை நகரின் பெருஞானப்பிரானா விளங்கும் ஈசனை, திருஞானசம்பந்தன் செந்தமிழ் மாலைகளால் ஓதி உணர்ந்தவர்கள் உண்மையான ஞானததைப் பெற்று விளங்கியவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

157. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

219. புனலாடிய புன்சடை யாய்அரணம்
அனலாக விழித்தவ னேஅழகார்
கனலாடலி னாய்கழிப் பாலையுளாய்
உனவார்கழல் கைதொழுது உள்குதுமே.

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடையவனே ! முப்புரக் கோட்டைகள் எரிந்து சாம்பலாகுமாறு நோக்கியவனே !  நெருப்பைக் கரத்தில் ஏந்தி அழகுமிக்க ஆடல் புரிபவனே ! திருக்கழிப்பாலை என்னும் தலத்தில் மேவும் ஈசனே ! உனது அருள் பொருந்தும் திருக்கழலைப் போற்றிக் கைதொழுது தியானம் செய்கின்றனம்.

220. துணையாகவொர் தூவள மாதினையும்
இணையாக உகந்தவ னேஇறைவா
கணையார்எயில் எய்கழிப் பாலையுளாய்
இணையார்கழல் ஏத்த இடர்கெடுமே.

தெளிவுரை : தூய வளம் மிகுந்தவளாய் விளங்கும் உமாதேவியை உடனாகவும், உடலின் ஒரு கூறாக இணைத்து அர்த்தநாரியாகவும் உகந்த இறைவனே ! கணை தொடுத்து முப்புரக் கோட்டைகளை எய்து எரித்த பரமனே ! திருக்கழிப்பாலையில் மேவும் நாதனே ! நின் திருக்கழலைப் போற்றி வழிபடும் அடியவர்களுடைய துன்பம் கெடும்.

அத்தகைய அருள்வண்ணம் உடையவன் ஈசன் என்பது குறிப்பு.

221. நெடியாகுறி யாய்நிமிர் புன்சடையின்
முடியாகடு வெண்பொடி முற்றணிவாய்
கடியார்பொழில் சூழ்கழிப் பாடையுளாய்
அடியார்க்குஅடை யாஅவ லம்அவையே.

தெளிவுரை : நீண்டு அண்டமெல்லாம் பெருகி விளங்குபவனாகவும், நுணுக்கரிய நுண்ணுணர்வினனாகவும் விளங்கும் நாதனே ! சடை முடியுடைய பெருமானே ! திருவெண்ணீறு அணிந்த பரமனே ! மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் அமர்ந்தவனே ! நின்னுடைய அடியவர்களுக்கு அவலம் அடையாதவாறு அருள் புரிபவன் நீயே ஆயினை.

222. எளியாய்அரி யாய்நில நீரொடுதீ
வளிகாயம்எ னாவெளி மன்னியதூ
ஒளியாய்உனை யேதொழுது உன்னுமவர்க்கு
அளியாய்கழிப் பாலை அமர்ந்தவனே.

தெளிவுரை : யாவர்க்கும் அறிவரியனாகவும் அன்பர்க்கு எளிமையானவனாயும், அட்ட மூர்த்தலங்களுள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆக விளங்கும் பொருளாயும், தூய ஒளியாயும், உன்னையே தொயுழும் அடியவர்களுக்கு மிக்க அன்புடையவனாயும் விளங்குபவன் திருக்கழிப்பாலையில் மேவும் ஈசனாகிய நீயே ஆவன்.

223. நடநண்ணியொர் நாகம் அசைத்தவனே
விடநண்ணிய தூமிட றாவிகிர்தா
கடல்நண்ணு கழிப்பதி காவலனே
உடனண்ணி வணங்கவன் உன்னடியே.

தெளிவுரை : நடம் புரிவதை விரும்பிச் செய்து, ஆபரணமாகப் பாம்பும் அசையுமாறு செய்த பரமனே ! பாற்கடல் விளைவித்த ஆலகால விடத்தைத் தூய மிடற்றில் இருத்தி நீலகண்டனாக விளங்குபவனே ! அன்பின் முறையால் அன்றி அறிதல் ஒண்ணாத விகிர்தனே ! கடலின் கழியில் விளங்கும் திருக்கழிப்பாலை öன்னும் திருத்தலத்தில் மேவும் நாதனே ! நின் திருவடியைக் காயத்தால் பதித்து வணங்குவன்.

224. பிறையார்சடை யாய்பெரி யாய்பெரிய
மறையார்தரு வாய்மையி னாயுலகில்
கறையார்பொழில் சூழ்கழிப் பாலையுளாய்
இறையார்கழல் ஏத்த இடர்கெடுமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைத் தரித்த சடைமுடியுடையவனே ! முதற்பொருளாய் விளங்கும் பெரியோனே ! பெருமை விளங்கும் வேதத்தால் வினையும் சிறந்த வாய்மையாய் இருப்பவனே ! பொழில் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசனே ! தெய்வத்தன்மை பொருந்திய நின் திருவடியை ஏத்துபவர்கள் இடம் தீரும்.

225. முதிரும்சடை யின்முடி மேல்விளங்கும்
கதிர்வெண்பிறை யாய்கழிப் பாலையுளாய்
எதிர்கொள்மொழி யால்இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும்வினை யாயின ஆசுஅறுமே.

தெளிவுரை : முற்றிய சடை முடியின்மேல் ஒளிவிடும் வெண்பிறைச் சந்திரனைச் சூடியுள்ள பெருமானே ! திருக்கழிப் பாலையில் வீற்றிருக்கு நாதனே ! நின்ன வணங்கி நின்பால் தமது குறையைத் தெரிவித்து அவற்றை நீக்க வேண்டும் என்று கோரும் அடியவர்களின் கொடிய வினைகளும் குற்றங்களும் தாமே விலகும் தரத்ததாம்.

226. எரியார்கணை யால்எயில் எய்தவனே
விரியார்திரு வீழ்சடை யாய்இரவில்
கரிகாடலி னாய்கழிப் பாலையுளாய்
உரிதாகிவ ணங்குவன் உன்னடியே.

தெளிவுரை : அக்கினி தேவனைக் கணையாகக் கொண்டு, முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய பரமனே ! நாற்புறமும் விரிந்து பரவும் சடையுடைய பெருமானே ! இரவு காலத்தில் சுடுகாட்டில் ஆடி மகிழ்பவனே ! திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் நாதனே ! நின் திருவடியே அருள் புரிவதற்கு உரித்தானதாகக் கொண்டு நான் எப்போதும் வணங்குபவன் ஆவன்.

227. நலநாரண னான்முக னண்ணலுறக்
கனலானவ னேகழிப் பாலையுளாய்
உனவார்கழ லேதொழுது உன்னுமவர்க்கு
இலதாம்வினை தான்எயில் எய்தவனே.

தெளிவுரை : முத்தொழிலில், காக்கும் நலம் சேர் தொழிலை மேவும் திருமாலும் பிரமனும் நண்ணும் போது, தீப்பிழம்பாக மிளிர்ந் நாதனே ! திருக்கழிப் பாலையில் மேவும் நாயகனே ! முப்புரத்தை எரித்தவனே ! நின் திருவடியை நினைத்துப் போற்றுபவர்களுக்கு வினையில்லை. துன்பம் இல்லை என்பது குறிப்பு.

228. தவர்கொண்ட தொழிற்சமண் வேடரொடும்
துவர்கொண்டனர் நுண்துகில் ஆடையரும்
அவர்கொண்டன விட்டடி கள்உறையும்
உவர்கொண்ட கழிப்பதி உள்குதுமே.

தெளிவுரை : தவ வேடத்தைப் புனைந்தவராய் இருப்பினும், சமணர் சாக்கியர் கொண்ட கொள்கைகளைக் கைவிட்டுக் கடற்கரையில் உள்ள திருக்கழிப்பாலை என்னும் பதியில் உறையும் ஈசனை வணங்கித் துதிப்பீராக.

229. கழியார்பதி காவல னைப்புகலிப்
பழியாமறை ஞானசம் பந்தன்சொல்
வழிபாடிவை கொண்டடி வாழ்த்தவல்லார்
கெழியார்இமை யோரொடு கேடிலரே.

தெளிவுரை : உப்பங்கழியின் கரையில் விளங்கும் பதியாகிய திருக்கழிப்பாலையின் நாதனாகிய ஈசனை, புகலி நகரில் விளங்கும், குறைவற்ற மறை வல்ல ஞானசம்பந்தர் போற்றிய இத் திருப்பதிகம் வழிபாடு ஆகும். இதனக் கொண்டு ஈசனைப் போற்ற வல்லவர்கள் சிறப்பு மிக்க தேவர்களோடு குறைவற்று மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

158. திருக்குடவாயில் (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

230. திகழுந்திரு மாலொடு நான்முகனும்
புகழும்பெரு மானடி யார்புகல
மகிழும்பெரு மான்குட வாயின்மன்னி
நிகழும்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : பெருமையுடன் திகழும் திருமாலும், பிரமனும் புகழும் பெருமான் ஈசன். அப் பெருமானை, அடியவர்கள் போற்றிப் புகழ்ந்து மகிழ்கின்றனர். அதனால் மகிழ்ந்த பெருமானாகிய இறைவன், குடவாயில் என்னும் பதியில் விளங்கிப் பெருமை மிக்க கோயிலில் வீற்றிருக்கின்றான்.

231. ஓடும்நதி யும்மதி யோடுஉரகம்
சூடும்சடை யன்விடை தொல்கொடிமேல்
கூடுங்குழ கன்குட வாயில்தனில்
நீடும்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : கங்கையும், சந்திரனும், பாம்பும் சடையில் சூடியவன் ஈசன்; அப் பெருமான் இடபத்தைக் கொடியாகக் கொண்ட அன்பினன். குடவாயிலில் பெருமையுடன் கோயில் கொண்டு நிலவுபவன்.

232. கலையான்மறை யான்கனல் ஏந்துகையான்
மலையாளவள் பாக மகிழ்ந்தபிரான்
கொலையார்சில யான்குட வாயில்தனில்
நிலையார்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : மானையும், நெருப்பையும் கரத்தல் ஏந்திய ஈசன், மறை வல்லவன்ந மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்த பெருமான்; முப்புரத்தை எரிப்பதற்கு உடனாகிய மேருமலையை வில்லாக உடையவன்; குடவாயில் தன்னில் நிலைத்த பெருமை உடையவனாய்க் கோயில் கொண்டு வீற்றிருந்து விளங்குபவன்.

233. கலவும்சடை யான்கடு காடிடமா
நலமென்முலை யாள்நகை செய்யநடம்
குலவும்குழ கன்குட வாயில்தனில்
நிலவும்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : விரிந்து பரவும் சடையுடைய ஈசன், சுடுகாட்டை இடமாகக் கொண்டு உமாதேவி மகிழுமாறு நடம்புரியும் அன்பினன். குடவாயிலில் பெருமையுடன் கோயில் கொண்டு நிலவுபவன்.

234. என்றன்னுள மேவி இருந்தபிரான்
கன்றன்மணி போல்மிட றன்கயிலைக்
குன்றன்சூழ கன்குட வாயில்தனில்
நின்றபெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : என்னுடைய உள்ளத்தில் மேவி விளங்குகின்ற ஈசன் நீலகண்டனாய், கயிலையில் விளங்கும் அழகனாய்க் குடவாயிலில் பெருமையுடன் கோயில் கொண்டு நிலவும் பரமன் ஆவன்.

235. அலைசேர்புனலன் அனலன் அமலன்
தலைசேர்பலி யன்சது ரன்விதிரும்
கொலைசேர்படை யன்குட வாயில்தனில்
நிலைசேர் பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : அலை திகழும் புனலாகிய கங்கையைச் சடையில் தரித்தவன் ஈசன். அப்பெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியவன்; மும்மலம் அற்றவனாகிய அமலன்; பிரம கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றவன்; சர்வ வல்லமையுடையவன். மாற்றாரை விதிர்க்குமாறு நடுங்கச் செய்யும் கொடிய, வல்லமை மிக்க படைக் கலம் உடையவன்; குடவாயிலில் நிலைத்த பெருமையுடையவனாய்க் கோயில் கொண்டு நிலவுபவன்.

236. அறையார்கழலன் அழலன் இயலின்
பறையாழ்முழ வும்மறை பாடநடம்
குறையாஅழ கன்குட வாயில்தனில்
நிறையார்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : ஈசன், ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்தவன்; நெருப்பினை உடையவன். இயைய வரும் பறையின் ஒலியும், உடன் கலக்கும் முழவு, யாழ் ஆகியனவும் ஒலிக்க, வேதங்கள் இசைக்க, குறைவற்ற நடனத்தைப் புரியும் அழகனாகிய அப் பெருமான், குடவாயிலில் நிறைந்து, பெருமை விளங்கக் கோயில் கொண்டு நிலவுபவன்.

237. வரையார்திரள் தோள்அரக் கன்மடியவ்
வரையார்ஓர் கால்விரல் வைத்தபிரான்
வரையார்மதில் சூழ்குட வாயில்மன்னும்
வரையார்பெருங் கோயில் மகிழ்ந்தவனே.

தெளிவுரை : மலை போன்ற உறுதியான திரண்ட தோளையுடைய அரக்கனாகிய இராவணன் வீழ்ச்சியடையக் கயிலை மலை முழுவதும் பரவி விளங்குமாறு திருப்பாத விரலால் ஊன்றிய ஈசன், மலை போன்ற மதில் சூழ்ந்த குடவாயில் என்னும் பதியில் மலை போன்று உயர்ந்த பெருங்கோயிலில் மகிழ்ந்து வீற்றிருப்பவன்.

238. பொன்னொப்பவ னும்புயல் ஒப்பவனும்
தன்னொப்புஅறி யாத்தழ லாய்நிமிர்ந்தான்
கொன்னற்படை யான்குட வாயில்தனில்
மன்னும்பெருங் கோயில் மகிழ்ந்தவனே.

தெளிவுரை : பொன்னை ஒத்தவனாகிய பிரமனும் புயலாகிய மேகம் போன்ற வண்ணத்தவனாகிய திருமாலும், அறிய முடியாதவாறு, தனக்கு யாரும் இணைஇல்லாத நிலையுடையவனய்த், தீப்பிழம்பாக ஓங்கி உயர்ந்த ஈசன், கொல்லுதல் போன்ற வலிமையான நற் படைக்கலன்கள் விளங்க, குடவாயிலில் பொலியும் பெருங்கோயில்கண் மகிழ்ந்தவன்.

239. வெயிலின்னிலை யார்விரி போர்வையினார்
பயிலும்முரை யேபகர் பாவிகள்பால்
குயிலன்குழ கன்குட வாயில்தனில்
உயரும்பெருங் கோயில் உயர்ந்தவனே.

தெளிவுரை : பிற சமயத்தார் உரைகளில் பதியாதவனாகிய ஈசன், குழையும் அன்பினனாய்க் குடவாயிலில் உயர்ந்த பெருங்கோயிலில் உயர்ந்த பீடத்தில் விளங்குபவனாயினன்.

இது ஈசனார் இத்திருக்கோயிலில் உயர்ந்த பீடத்தில் உள்ள திருக்கோலத்தைக் குறிப்பதாயிற்று.

240. கடுவாய்மலி நீர்குட வாயில்தனில்
நெடுமாபெருங் கோயில் நிலாயவனைத்
தடமார்புக லித்தமி ழார்விரகன்
வடவார்தமிழ் வல்லவர் நல்லவரே.

தெளிவுரை : நீர்வளம் பெருகும் குடவாயிலில் பெருஞ்சிறப்புடைய பெருங்கோயிலின்கண் நிலவும் ஈசனை, புகலியில் விளங்கும் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் மேலான தமிழ் மாலைகள் சொல்ல, அதனை ஓதுபவர்கள் நல்லோர் ஆவர். இது எல்லா நன்மைகளையும் பெற்றவர் ஆதலையும் உணர்த்தும்.

திருச்சிற்றம்பலம்

159. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

241. மழையார்மிட றாமழு வாளுடையாய்
உழையார்கர வாஉமை யாள்கணவா
விழவாரும் வெணாவலின் மேவியஎம்
அழகாஎனும் ஆயிழை யான்அவனே.

தெளிவுரை : மேகம் போன்ற கரிய மிடற்றை உடைய பெருமானே ! மழுப் படையை உடைய நாதனே ! மானைத் திருக்கரத்தில் ஏற்றவனே ! உமாதேவியின் நாயகனே ! விழாக்கள் மல்கிப் பெருகும் ஜம்புகேச்சரத்தில் மேவி விளங்கும் எம் அழகனே என்று தேவியாரால், நீவிர் போற்றப்படுகின்ற பெருமான்.

242. கொலையார்கரி யின்னுரி மூடியனே
மலையார்சிலை யாவளை வித்தவனே
விலையால்எனை யாளும் வெணாவலுளாய்
நிலையாஅரு ளாய்எனு நேரிழையே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்வையாக்கிக் கொண்ட பெருமானே ! மேரு மலையை வில்லாக வளைத்த ஈசனே ! என்னை ஆட்கொண்டு நாவல் மரத்தின்கீழ் (ஜம்புகேச்சரம்) விளங்கும் நாதனே ! நிலைத்த தன்மையை அருள் புரிவீராக எனத் தேவியரால், நீவிர் போற்றப் படுபவர்.

243. காலால்உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடுநெய் யாடிய பால்வணனே
வேலாடுகை யாஎம் வெணாவலுளாய்
ஆலார்நிழ லாய்எனும் ஆயிழையே.

தெளிவுரை : திருப்பாதத்தால் காலனுடைய உயிரை வீழ்த்திய பெருமானே ! பாலும் நெய்யும் அபிடேகமாக ஏற்று ஆடிய பால்போன்ற திருவெண்ணீற்று வண்ணம் திகழுமாறு திருமேனியில் பூசி விளங்கும் ஈசனே ! சூலப் படையினைக் கரத்தில் ஏந்திய நாதனே ! ஜம்புகேச்சரத்தில் வீற்றிருப்பவனே ! கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்த நாயனே ! என்று தேவயால் போற்றப்படும் தலைவன் ஆயினீர்.

244. கறவக்கொடி கொண்டவன் நீறதுவாய்
உறநெற்றி விழித்தஎம் உத்தமனே
விறன்மிக்க கரிக்கருள் செய்தவனே
அறமிக்கது என்னும்என் ஆயிழையே.

தெளிவுரை : மீனக்கொடியுடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணை விழித்து நோக்கிய உத்தமனே ! உறுதி வாய்ந்த பக்தியுடன் பூசித்த யானைக்கு அருள் செய்த பெருமானே ! என்னுடைய அன்னை யாகும் தேவியால் அறப்பாங்குடையவனாய்ப் போற்றப்படும் நாதன் ஆயினை.

245. செங்கடபெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட்கரு ணைபெரி தாயவனே
வெங்கண்விடை யாஎம் வெண்நாவலுளாய்
அங்கத்துஅயர் வாயினள் ஆயிழையே.

தெளிவுரை : சிலந்தியாக இருந்து பூசிக்கப் செவ்வையுறு மறுமையில் செங்கண் கொண்ட சோழமன்னர்களின் சிறப்பானவனாகக் கருணையுடன் ஆக்குவித்த பெரியோனே ! இடப வாகனத்தை உடையவனே ! வெண்நாவல் மரத்தின்கீழ் விளங்கும் நாதனே ! எனப் போற்றி தேவியானவள் நின் திருமேனியின் அங்கத்தில் விரும்பித் திகழ்ந்தனன்.

246. குன்றேயமர் வாய்கொலை யார்புலியின்
தன்தோலுடை யாய்சடை யாய்பிறையாய்
வென்றாய்புர மூன்றை வெணாவலுளே
நின்றாயரு ளாய்எனு நேரிழையே.

தெளிவுரை : கயிலை மலையில் வீற்றிருப்பவனே ! புலித் தோலை உடுத்திய ஈசனே ! சடை முடி உடையவனே ! பிறைச்சந்திரனைத் தரித்தவனே ! முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கி வெற்றி கொண்ட நாதனே ! ஜம்புகேச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமானே அருள் புரிக என்று உமாதேவியாரால் போற்றப்படுபவன் நீவிர்.

247. மலையன்றெடுத் தவ்வரக் கன்முடிதோள்
தொலையவ்விரல் ஊன்றிய தூமழுவா
விலையால்எனை யாளும் வெணாவலுளாய்
அலசாமல்நல் காய்எனும் ஆயிழையே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனுடைய முடியும் தோளும் நலியுமாறு விரல் ஊன்றிய பெருமானே ! மழுப்படையைக் கொண்டுள்ளவனே ! அன்பினால் என்னை ஆட் கொள்ளும் பொருட்டு வெண்ணாவல் மரத்தின்கீழ் விளங்கும் நாதனே ! யான் வருந்தாதவாறு அருள் நலம் புரிக என்று தேவியால் ஏத்தப் பெறுபவர் நீவிர்.

248. திருவார்தரு நாரண னான்முகனு
மருவாவெரு வாஅழ லாய்நிமிர்ந்தாய்
விரையாரும் வொணாவலுள் மேவியஎம்
அரவாஎனும் ஆயிழை யாள்அவளே.

தெளிவுரை : ஆயிழையாளாகிய உமாதேவியார், நின்னை, திருமாலும் பிரமனும் காண்பதற்கு நெருங்கி வர அவர்கள் அஞ்சுமாறு தீப்பிழம்பாய் ஓங்கினை ! மணம் கமழும் வெண்நாவல் மரத்தின்கீழ் மேவி விளங்கும் அரனே ! என்று ஏத்திப் பரவும் பரமன் ஆகியவன், நீவிர்.

249. புத்தர்பல ரோடுஅமண் பொய்த்தவர்கள்
ஒத்தவ்வுரை சொல்லிவை ஓரகிலார்
மெய்த் தேவர் வணங்கும் வொணாவலுளாய்
அத்தாஅரு ளாய்எனும் ஆயிழையே.

தெளிவுரை : புத்தரும் சமணர்களும் பொய்யுரை கூறுதலும் நல்லுரைழை உணராதவரும் ஆவர். மெய்ம்மை கண்டுற் தேவர்களால் வணங்கப்பெறும் வெண்நாவல் மர நிழலில் விளங்கும் அத்தனே ! என தேவியால் ஏத்தப் பெறுபவனே ! அருள் புரிவாயாக.

250. வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனைக்
கண்ணார்கமழ் காழியர் தம்தலைவன்
பண்ணோடு இவைபாடிய பத்தும்வல்லார்
விண்ணோரவர் ஏத்த விரும்புவரே.

தெளிவுரை : வெண் நாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்கும் வேதப் பொருளாகிய ஈசனைப் பாடிய ஞானம் விளங்கும் சீகாழியின் தலைவனாகிய ஞானசம்பந்தரின் பண்ணொடு மேவும் இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், தேவர்களால் விரும்பி ஏத்தப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

160. திருநாகேச்சுரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

251.பொன்னேர்தரு மேனிய னேபுரியும்
மின்னேர்சடை யாய்விரை காவிரியின்
நன்னீர்வயல் நாகேச் சுரநகரின்
மன்னேஎன வல்வினை மாய்ந்தறுமே.

தெளிவுரை : பொன் போன்று அழகுடன் ஒளிரும் திருமேனியனே ! மின் போன்ற சிவந்த சடையுடைய பெருமானே ! மணம் மிக்கதும் வேகமாக ஓடும் நீர்ப்பெருக்கு உடையதும் ஆன காவிரியின் நன்னீர் பாயும் வயல்கள் சூழ்ந்த நாகேச்சுர நகரின்கண் விளங்கும் தலைவனே ! என்று ஈசனைப் பரவித் தொழ, நம்மைப் பற்றி, வலிந்து இடர்தரும் வினையானது மடிந்து அற்றுவிடும். வினையை அறுமாறு செய்து துன்பத்øத் தீர்க்கும் என்று உணர்த்துவதாகும்.

252. சிறவார்புர மூன்றெரி யச்சிலையில்
உறவார்கணை உய்த்தவ னேஉயரும்
நறவார்பொழில் நாகேச் கரநகருள்
அறவாஎன வல்வினை ஆசறுமே.

தெளிவுரை : சிறப்பினை இழந்தவர்களாகிய மூன்று அசுரர் புரங்கள், எரிந்து சாம்பலாகுமாறு, மேருமலையை வில்லாகக் கொண்டு, அதற்குப் பொருந்துமாறு திருமாலைக் கணையாகக் கொண்டு செலுத்தியவனே ! தேன் சொரியும் பொழில் விளங்கும் நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் அறத்தின் வடிவான வனே என வணங்கி நிற்க வன்மையுடைய வினையும், அதனால் விளையும் குற்றமும் அற்று ஒழியும்.

253. கல்லால்நிழல் மேயவ னேகரும்பின்
வில்லானஎழில் வேல விழித்தவனே
நல்லார்தொழு நாகேச் சுரநகரில்
செல்வாஎன வல்வினை தேய்ந்தறுமே.

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைப்பதற்குத் தடசணா மூர்த்தியாகிக் காட்சி நல்கிய பெருமானே ! கரும்பு வில் ஏந்திய மன்மதனுடைய எழில் மிகுந்த வடிவம் கண்ணுக்குப் புலனாகாதவாறு வெந்து சாம்பலாகும்படி நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கிய ஈசனே ! நற்குணவான்களாக விளங்கும் மாந்தர் தொழும் நாகேச்சுர நகரில் வீற்றிருக்கும் செல்வா ! என்று வணங்கித் துதிக்க, வலிய வினையானது தேய்ந்து அழியும்.

254. நகுவாண்மதி யோடுஅர வும்புனலும்
தகுவார்சடை யின்முடி யாய்தளவம்
நகுவார்பொழில் நாகேச் சுரநகருள்
பகவாஎன வல்வினை பற்றறுமே.

தெளிவுரை : மலர்ந்து ஒளி நல்கும் சந்திரனும், பாம்பும், கங்கையும் தகுந்தவாறு சடை முடியில் தரித்துள்ளவனே ! செம்முல்லை விளங்கம் பொழில் சூழந்த நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் பகவனே ! என்று வணங்கி ஏத்த, வலிய வினையின் பற்றானது அறும்.

255. கலைமான்மறி யும்கனலும் மழுவும்
நிலையாகிய கையிலா னேநிகழும்
நலமாகிய நாகேச் சுரநகருள்
தலைவாஎன வல்வினை தானறுமே.

தெளிவுரை : மான் கன்றும், நெருப்பும், மழுவும் நிலையாக விளங்குமாறு கரத்தில் ஏந்திய பெருமானே ! இம்மை நலம் நிகழ விளங்கும் நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் தலைவா ! எனத் தொழுது போற்ற, வலிமையான வினை அற்றொழியும்.

256. குரையார்கழல் ஆட நடங்குலவி
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே
நரையார்விடை யேறுநா கேச்சுரத்துஎம்
அரைசேஎன நீங்கும் அருந்துயரே.

தெளிவுரை : மலையரசன் திருமகளாகிய உமையவள் காண, ஒலியார்க்கும் கழல் அணிந்து திருநடம் புரிந்து மகிழ்ந்த பெருமானே ! வெண்மையான இடபத்தில் ஏறும் நாகேச்சுரத்துள் விளங்கும் அரசே ! என்று தொழுது போற்ற, அரியது என்று நினைக்கூடிய துயர் யாவும் நீங்கும்.

257. முடையார்தரு வெண்டலை கொண்டுலகில்
கடையார்பலி கொண்டுழல் காரணனே
நடையார்தரு நாகேச் சுரநகருள்
சடையாஎன வல்வினை தான்அறுமே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்த, தாருகாவனத்து முனிவர்கள் வீட்டு வாயிலில் நின்று பரி கொண்டு உழலும் பெருமானே ! எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கும் ஈசனே ! நல்லொழுக்கம் மிக்க சீலத்தவர் விளங்கும் நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் சடையா ! என்று அழைத்து வணங்கி ஏத்த, வலிமை மிகுந்த வினை யாவும் அழியும்.

258. ஓயாத அரக்கன் ஒடிந்தலற
நீயாரருள் செய்து நிகழ்தவனே
வாயார வழுத்துவர் நாகேச்சுரத்
தாயேஎன வல்வினை தானறுமே.

தெளிவுரை : ஆணவ மலத்தின்பால் ஓய்தல் இன்றி உறவாடிய அரக்கனாகிய இராவணன் முடிகள் இற்று அலறுமாறு, புரிந்து நிகழ்த்தினீர் ! பின்னர் நீவிரே நல்லருள் புரிந்தீர் ! அத்தகைய கருணை வயம் மேவும் பெருமானே ! நும்மை வாயார வாழ்த்திப் போற்றும் அடியவர்கள் விளங்கும் நாகேச்சுரத்துள் வீற்றிருக்கும் தாய் போன்றவனே ! என்று வணங்கித் தொழுபவர்களின் வலிமையான வினையானது அறம்.

259. நெடியானொடு நான்முக னேடலுறச்
சுடுமாலெரி யாய்நிமிர் சோதியனே
நடுமாவயல் நாகேச் சுரநகரே
இடமாவுறை வாய்என இன்புறுமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடி அலையும் ஞான்று, அனல் வீசும் தீப்பிழம்பாக நிமிர்ந்து ஓங்கிய சோதிப்பொருளே ! வயல் வளம் மிக்க நாகேச்சுர நகரினை இடமாகக் கொண்டு வீற்றிருக்கும் பெருமானே ! என்று வணங்கித் தொழ மகிழ்ச்சி உண்டாகும். இம்மையில் இன்புற்ற விளங்குவர் என்பது குறிப்பு.

260. மலம்பாவிய கையொடு மண்டையதுண்
கலம் பாவியர் கட்டுரை விட்டுலகில்
நலம்பாவிய நாகேச் சுரநகருள்
சிலம்பாஎனத் தீவினை தேய்ந்தறுமே.

தெளிவுரை : மாற்றுச் சமயத்தினரின் உரைகளை நீத்துக் கைவிட்டு, நலம் விளங்கும் நாகேச்சுர நகரில் விளங்குகின்ற பெருமானை, சிலம்பு அணிந்த நாதனே ! எனப் போற்றி வணங்கத் தீய வினைகள் யாவும் தேய்ந்து அழியும்.

261. கலமார்கடல் சூழ்தரு காழியர்கோன்
தலமார்தரு செந்தமி ழின்விரகன்
நலமார்தரு நாகேச் சுரத்தரனைச்
சொலன் மாலைகள் சொல்ல நிலாவினையே.

தெளிவுரை : மரக்கலன்கள் விளங்கும் கடல் சூழந்த தலமாகிய காழியில் விளங்கும் செந்தமிழ் விரகன் - திரு ஞானசம்பந்தன், நலம் விளங்க மேவும் நாகேச்சுர நகரின் பெருமானை, சொல் மாலையாய் அமைத்த இத் திருப்பதிகமாகிய தமிழ்ப் பாடல்களை ஓதுபவர்களுக்கு வினை இல்லை.

திருச்சிற்றம்பலம்

161. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

262. உகலியாழ்கடல் ஓங்குபாருளீர்
அகலியாவினை அல்லல்போயறும்
இகலியார்புரம் எய்தவன்னுறை
புகலியாநகர் போற்றிவாழ்மினே.

தெளிவுரை : ஒலிதிகழ் கடல் சூழ்ந்த உலகில் விளங்குபவர்களே ! பகைமை கொண்ட முப்புர அசுரர்களை மாய்த்தவனாகிய புகலி நகரில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றுக. அகலுதற்கு அரிதாகிய வினையும் துன்பமும் நீங்கம். இனிது வாழ்வீராக.

263. பண்ணியாள்வதோர் ஏற்றர்பால்மதிக்
கண்ணியார்கமழ் கொன்றைசேர்முடிப்
புண்ணியன்உறை யும்புகலியை
நண்ணும் இன்னலம் ஆனவேண்டிலே.

தெளிவுரை : இனிய நலங்கள் அடைய வேண்டும் எனக் கருதுவீராயின், விருப்பத்துடன் ஏறி இடப வாகனத்தை உடையவனாய், வெண்மதி சூடி, மணங்கமழும் கொன்றை மலரும் தரித்து விளங்கும் புண்ணியனாகிய ஈசன் உறையும் புகலியை அடைவீராக.

264. வீசுமின்புரை காதன்மேதகு
பாசவல்வினை தீர்த்த பண்பினன்
பூசுநீற்றினன் பூம்புகலியைப்
பேசுமின்பெரிது இன்பமாகவே.

தெளிவுரை : மின்னலைப் போன்று வேகமாக வீசி, மிகுந்த விருப்பத்தினை வயமாய் விளங்கிப் பற்றுகின்ற வலிய வினையைத் தீர்த்தருளும் பண்பினனாகி திருநீற்று மேனியன் விளங்குகின்ற பூம்புகலியைப் புகழ்ந்து போற்றுவீராக. பேரின்பம் கைகூடும்.

265. கடிகொள்கூவிள மத்தம்வைத்தவன்
படிகொள்பாரிடம் பேசும்பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்புகலியுள்
அடிகளை அடைந்து அன்புசெய்யுமே.

தெளிவுரை : மணம் கமழும் வில்வம், ஊமத்த மலர் ஆகியவற்றைச் சூடிய இறைவன் பூத கணங்களால் புகழப்படுபவன். திருநீற்று மேனியானாகிய ஈசனைப் புகலியின்கண் நாடி அடைந்து பக்தியுடன் தொழுவீராக.

266. பாதத்தார்ஒலி பல்சிலம்பினன்
ஓதத்தார்விடம் உண்டவன்படைப்
பூதத்தான்புக லிந்நகர்தொழ
ஏதத்தார்க்கிடம் இல்லைஎன்பரே.

தெளிவுரை : ஈசன் திருப்பாதத்தில் சிலம்பினைப் பொருந்த அணிந்தவன்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தியவன்; பூத கணங்களைப் படையாக உடையவன். அத்தகைய பெருமானின் புகலி நகரைத் தொழ, துன்பத்திற்கு இடம் இல்லை.

267. மறையினான்ஒலி மல்குவீணையன்
நிறையினார் நிமிர் புன்சடையன்எம்
பொறையினான்உறை யும்புகலியை
நிறையினால் தொழ நேசம் ஆகுமே.

தெளிவுரை : ஈசன், வேதம் ஆனவன்; இனிய ஓசை எழுப்பும் வீணை உடையவன்; நிறைவு கொண்டு மென்மையான சடையுடையவன்; என் உள்ளத்தில் உறுதி பயக்கும் வலிமையானவன்; புகலி நகரில் உறைபவன். அப் பெருமானை நிறைவாகத் தொழும் அன்பர்களுக்கு மேன்மேலும், சிவபக்தியும் மன்னுயிர் பால் நேசமும் உண்டாகும்.

268. கரவிடைமனத் தாரைக்காண்கிலான்
குரவிடைப்பலி கொள்ளும்எம்மிறை
பொருடடையுயர்த தான்புகலியைப்
பரவிடப் பயில் பாவம்பாறுமே.

தெளிவுரை : ஈசன், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் வஞ்சகருடைய மனத்தில் பதிந்து தோன்றாதவன்; இரவில் பலி ஏற்றவன்; இடப வாகனத்தில் அமர்ந்து விளங்குபவன். எமது இறைவனாகி அப்பெருமான் வீற்றிருக்கும் புகலியைப் பரவிப் போற்றித் துதிக்கப் பாவம் அழியும்.

269. அருப்பினான்முலை மங்கைபங்கினன்
விருப்பினான்அரக் கன்னுரஞ்செகும்
பொருப்பினான் பொழிலார் புகலியூர்
இருப்பினான்அடி ஏத்தி வாழ்த்துமே.

தெளிவுரை : உமாதேவியை விரும்பிப் பாகமாக உடையவனாகிய ஈசுன், இராவணனுடைய வலிமையை அழித்த கயிலை மலையை உடையவன். அப்பெருமான், பொழில் நிறைந்த புகலியை இருப்பிடமாக உடையவன். அவன் திருவடியை வணங்கிப் போற்றுவீராக.

270. மாலுநான்முகன் தானும்வார்கழற்
சீலமும்முடி தேடநீண்டெரி
போலுமேனியன் பூம்புகலியுள்
பாலதாடிய பண்பனல்லனே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் நீண்ட சீலம் மிக்க திருவடியும் திருமுடியும் தேட, நீண்டதோர் சோதிப் பிழம்பாகிய திருமேனியின் புகலி நகரில், பால் அபிடேகம் ஏற்று அருள் வழங்கும் பண்பின் மிக்கோனாக விளங்கும் ஈசன்.

271. நின்றுதுய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்றதாகவே யாவுணர்வினுள்
நின்றவன்னிக ழும்புகலியைச்
சென்றுகைதொழச் செல்வமாகுமே.

தெளிவுரை : சமணர், தேரர் சொற்கள் மதிக்கத் துகுந்தவையல்ல, நம் உணர்வில் கலந்து விளங்கும் இறைவன் வீற்றிருக்கும் புகலியை அடைந்து வணங்கச் செல்வம் பெருகும்.

272. புல்லமேறிதன் பூம்புகலியை
நல்லஞானசம் பந்தனாவினாற்
சொல்லுமாலையீ ரைந்தும் வல்லவர்க்கு
இல்லையாம்வினை இருநிலத்துளே.

தெளிவுரை : இடப வாகனத்தையுடைய ஈசனின் பூம்புகலியை, நல்ல ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்க்கு இப்பூவுலகில் வினை இல்லை.

இது, ஆகாமிய கர்மம் இல்லை என்பதும், பிராரத்த கர்மமும் இல்லாமை ஆகும் என்பதும் குறிப்பால் உணர்த்தப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

162. திருநெல்வாயில் (அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

273. புடையினார்புள்ளி கால்பொருந்திய
மடையினார்மணி நீர்நெல்வாயிலார்
நடையினார்விரற் கோவணந்நயந்து
உடையினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : மடையின்கண் தெளிந்த நீர் விளங்குகின்ற நீர்வளம் மிக்க நெல்வாயில் என்னும் பதியில் நெறிமிகும் நால்விரற் கோவண ஆடை உகந்து வீற்றிருப்பவர் உச்சிநாதேஸ்வரர்.

274. வாங்கினார்மதிண் மேற்கணைவெள்ளம்
தாங்கினார்தலை யாயதன்மையர்
நீங்குநீரநெல் வாயிலார்தொழ
ஓங்கினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : முப்புரத்தை எரித்தச் சாம்பலாக்கிக் கங்கையைச் சடை முடியில் தாங்கிய ஈசன், மேலானவர். அப் பெருமான் நீர்வளம் மிக்க நெல் வாயிலில் அடியவர் தொழ உச்ச நாதேஸ்வரராய் ஓங்குபவர்.

275. நிச்சலேத்துநெல் வாயிலார்தொழ
இச்சையாலுறை வார்எம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பினார்கவின்
இச்சையார்எமது உச்சியாரே.

தெளிவுரை : நித்தம் தொழப்பெறும் நெல்வாயில் உடையவர் விருப்பத்துடன் வீற்றிருந்து அருள் புரியும் ஈசன். அவர் பாம்பை அரையில் கட்டும் இயல்பினர்; எழில் பொருந்திய இச்சையால் மேவுபவர். அவர் உச்சி நாதேஸ்வரர் ஆவார்.

276. மறையினார்மழு வாளினார்மல்கு
பிறையினார்பிறை யோடிலங்கிய
நிறையினார்நெல் வாயிலார்தொழும்
இறைவனார்எமது உச்சியாரே.

தெளிவுரை : ஈசன், வேதமாய் விளங்குபவர்; மழுப்படையுடையவர்; பிறைச் சந்திரனை உடையவர்; பக்திப் பெருக்கினால் நெஞ்சம் நிறைவுடைவராய் வணங்கித் தொழும் திருத்தொண்டர்கள் மேவும் நெல்வாயில் என்னும் பதியில் விளங்குபவர். அவர் எமது உச்சி நாதேஸ்வரப் பெருமானே ஆவார்.

277. விருத்தனாகிவெண் ணீறுபூசிய
கருத்த னார்கனல் ஆட்டுகந்தவர்
நிருத்தன்ஆரநெல் வாயிலார்தொழும்
இறைவனார்எமது உச்சியாரே.

தெளிவுரை : மூத்து விளங்கும் விருத்தனாகித் திருவெண்ணீறு பூசிவராக விளங்கும் ஈசன், நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடுபவராய் நெல்வாயில் விளங்கி, யாவராலும் மனதாரத் தொழப்படுபவர். அவர் எமது உச்சிநாதேஸ்வரர் ஆவார்.

278. காரினார் கொன்றைக் கண்ணியார்மல்கு
பேரினார்பிறை யோடிலங்கிய
நீரினாரநெல் வாயிலார்தொழும்
ஏரினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : ஈசன், கார்காலத்தில் மலரும் கொன்றை மலரைத் தரித்துள்ளவர்; புகழ்மிக்க திருநாமங்களை உடையவர்; பிறைச் சந்திரனும் கங்கையும் தரித்த சடை முடியினை உடையவர்; நெல்வாயில் என்னும் பதியில் பொருந்தி விளங்குபவர்; யாவராலும் தொழப்பெறும் சிறப்புடையவர். அவர் எமது உச்சி நாதேஸ்வரர் ஆவார்.

279. ஆதியார்அந்தம் ஆயினார்வினை
கோதியார்மதில் கூட்டுஅழித்தவர்
நீதியாரநெல் வாயிலார்மறை
ஓதியார்எமது உச்சியாரே.

தெளிவுரை : ஈசன், ஆதியாகவும் அந்தமாகவும் விளங்குபவர்; தீமை செய்யும் மூன்று அசுரர்களின் சேர்க்கையை அழித்துக் கோட்டை மதில்களை எரித்தவர்; நற்பண்பு நிறைந்து ஆசார சீலம் பொலியும் நெல்வாயில் என்னும் பதியில் விளங்குபவர்; வேதங்களால் போற்றப்படுபவர். அவர் எமது உச்சிநாதேஸ்வரர் ஆவார்.

280. பற்றினான்அரக் கன்கயிலையை
ஒற்றினார்ஒரு கால்விரல்உற
நெற்றியாரநெல் வாயிலார்தொழும்
பெற்றியார்எமது உச்சியாரே.

தெளிவுரை : கயிலை மலையைப் பற்றிய இராவணன் தலைமுடி நன்கு நெரிந்து துன்புறுமாறு திருப்பாத மலரால் ஊன்றிய பெருமான் ஈசன். அவர் நெல் வாயில் என்னும் பதியில் யாவரும் தொழுது போற்றுமாறு வீற்றிருக்கும் எமது உச்சி நாதேஸ்வரர் ஆவார்.

281. நாடினார்மணி வண்ணனான்முகன்
கூடினார்குறு காதகொள்கையர்
நீடினார்நெல் வாயிலார்தலை
ஓடினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : தன்னைக் காண வேண்டும் என்னும் நாட்டத்தை உடைவர்களாகிய மணிவண்ணனாகிய திருமாலும், நான்முகனாகிய பிரமனும் ஒன்று சேர்ந்து தேடியும் காண முடியாதவாறு நெடிது ஓங்கிய தன்மையில் தீப்பிழம்பாக விளங்கியவர் நெல்வாயில் பொருந்தி வீற்றிருக்கும் ஈசனார். அவர் பிரம கபாலத்தைக் கையில் உடைய எமது உச்சிநாதேஸ்வரர் ஆவார்.

282. குண்டுஅமண்துவர்க் கூறைமூடர்சொல்
பண்டமாகவை யாதபண்பினர்
விண்தயங்குநெல் வாயிலார்நஞ்சை
உண்டகண்டர்எம் உச்சியாரே.

தெளிவுரை : சமணர்களும், துவராடை கொண்டுள்ள சாக்கியரும் நற்பொருளை வழங்காத கொள்கையினர். அவர்களுடைய சொற்களைக் கொள்ளற்க. உயர்ந்த சிறப்புக் கொண்ட நெல்வாயிலில் விரும்பி வீற்டருந்து, நஞ்சினை உட்கொண்டு நீலகண்டராய் விளங்கும் எம் உச்சி நாதேஸ்வரரை வணங்குவீராக.

283. நெண்பயங்குநெல் வாயில்ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்பயன் கொளப் பாடவல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே.

தெளிவுரை : ஆழ்ந்த இணக்கம் பெருகச் செய்யும் நெல்வாயில் என்னும் நகரில் விளங்கும் ஈசனைச் சீகாழிப் பதியின் திருஞானசம்பந்தன் சொல்லிய பண் வழங்கும் இத் திருப்பதிகத்தை ஓதி, பண்ணின் இசை விளங்கப் பாட வல்லவர்கள், மேலான விண்ணுலகம் வாய்க்கப் பெறுவர். அவர்கள் இம்மையில் கொள்கின்ற வேட்கைகள் யாவும் நிறைவேறும்.

திருச்சிற்றம்பலம்

163. திருஇந்திரநீலப்பருப்பபதம் (அருள்மிகு நீலாச்சல நாதர் திருக்கோயில், இந்திரநீலப்பருப்பதம், இமயமலைச்சாரல்)

திருச்சிற்றம்பலம்

284. குலவுபாரிடம் போற்றவீற்றிருந்து
இலகு மான்மழு ஏந்தும்அங்கையர்
நிலவும்இந்திர நீலபர்ப்பதத்து
உலவினான்அடி உள்க நல்குமே.

தெளிவுரை : பூத கணங்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து போற்றி துதி செய்ய, மான், மழு ஆகியவற்றை ஏந்திய அழகிய கரத்தினராய் வீற்றிருந்து, பெருமையுடன் நிலவும் இந்திர நீல மலையில் மேவும் ஈசனின் திருவடியை எண்ணித் துதிக்க, விரும்புவன யாவும் கைகூடும்.

285. குறைவிலார்மதி சூடியாடல்வண்டு
அறையுமாமலர்க் கொன்றைசென்னிசேர்
இறைவன்இந்திர நீலபர்ப்பதத்து
உறைவினான்றனை ஓதி உய்ம்மினே.

தெளிவுரை : குறைவு நீங்கி வளர்ந்து ஒளி தரும் பிறைச் சந்திரனைச் சூடி, வண்டுகள் தேனருந்தி ஒலிக்கும் கொன்றை மாலையை முடியில் அணிந்த இறைவன் இந்திரநீல பருப்பதத்தில் உறைபவன். அப்பெருமானைப் போற்றி நற்கதி அடைவீராக.

286. என்பொன்என்மணி என்னஏத்துவார்
நம்பனான்மறை பாடுநாவினான்
இன்பன்இந்திர நீலபர்ப்பதத்து
அன்பன்பாதமே அடைந்து வாழ்மினே.

தெளிவுரை : என்னுடைய பொன்னே ! மணியே ! என்று உயர்வாகப் போற்றிப் பரவப்படும் ஈசன் மறையோதும் பெருமான்; உயிர்களுக்கெல்லாம் இன்பம் தருபவன். அவ் இறைவன் இந்திர நீல பருப்பதத்தில் வீற்றிருக்கின்றான். அன்பனாகிய அப் பெருமான் திருவடியை அடைந்து வாழ்வீராக.

287. நாசமாம்வினை நன்மைதான்வரும்
தேசமார்புக ழாயசெம்மைஎம்
ஈசன்இந்திர நீலபர்ப்பதம்
கூசிவாழ்த்துதும் குணமதாகவே.

தெளிவுரை : பிறவிக்கும் பிறவியில் நேரும் துன்பத்திற்கும் காரணமாகும் வினையானது நாசமாகவும், எல்லா வினைகளும் - சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவை, தீய்ந்து அழியப் பெறுவதால் உண்டாகும் நன்மை வரவும், ஒளி மிக்க புகழும் செம்மையும் உடைய எமது ஈசன் இந்திர நீலபருப்பதத்தில் விளங்கி நிற்க, அப்பெருமானை நற்பண்பு மேவுபவராய்ச் சிறப்புடன் வாழ்த்துவீராக.

288. மருவுமான்மட மாதொர்பாகமாய்ப்
பரவுவார்வினை தீர்த்தபண்பினான்
இரவன்இந்திர நீலபர்பதத்து
அருவிசூடிடும் அடிகள் வண்ணமே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்தி, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, போற்றி வணங்குபவரின் வினை தீர்க்கும் இயல்பினனாகி, பலி ஏற்றுக் கங்கை தரித்து இந்திர நீலபருப்பதத்தில் விளங்குகின்றவர், ஈசன்.

289. வெண்ணிலாமதி சூடும் வேணியன்
எண்ணிலார்மதில் எய்தவில்லினன்
அண்ணல்இந்திர நீலபர்ப்பதத்து
உள்நிலாவுறும் ஒருவனல்லனே.

தெளிவுரை : வெண்மையான நிலவும் சந்திரனைச் சூடிய இறைவன், மனத்தால் நினைந்து போற்றாதவர்களாகி, பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை, மேருவை வில்லாகக் கொண்டு, எய்து சாம்பலாக்கியவன். அவ்வண்ணல் இந்திர நீல பருப்பதத்தில் விளங்கி மேவும் ஒருவனே அல்லவா !

290. கொடிகொள் ஏற்றினர் கூற்றுதைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்டபாம்பினர்
அடிகள்இந்திர நீலபர்ப்பதம்
உடையவாணன் உகந்த கொள்கையே.

தெளிவுரை : ஈசனார், இடபத்தைக் கொடியாக உடையவர்; காலனை உதைத்தவர்; திருநீற்றினைப் பூசிய திருமேனியர்; பாம்பினை அணிகலனாகப் பூண்டவர். அப் பெருமான் இந்திர நீலபருப்பதத்தில் விரும்பி வீற்றிருப்பவர்.

291. எடுத்தவல்லரக் கன்கரம்புயம்
அடர்த்ததோர்விர லானவனையாட்
படுத்தன்இந்திர நீலபர்ப்பதம்
முடித்தலம்உற முயலும் இன்பமே.

தெளிவுரை : மலை எடுத்த இராவணனை அடர்த்த திருவிரலால் அவனை ஆட்படுத்திய பெருமான் இந்திர நீல பருப்பதத்தில் வீற்றிருக்கும் ஈசன், அப்பெருமான் விளங்கும் திருமலையை அடைந்து வழிபடப் பேரின்பம் கையுறும்.

292. பூவினானொடு மாலும்போற்றுறும்
தேவன்இந்திர நீலபர்ப்பதம்
பாவியாஎழு வாரைத் தம்வினை
கோவியாவரும் கொல்லும் கூற்றமே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் போற்றி அடைகின்ற இடம், மகாதேவனாக விளங்கும் ஈசனார் வீற்றிருக்கும் இந்திரநீல பருப்பதம் ஆகும். அப் பெருமானை மனத்தில் எண்ணிப்  போற்றாதவர்களைக் கூற்றுவன் சினந்து துன்புறுத்துவான்.

293. கட்டர்குண்டமண் தேரர்சீரிலர்
விட்டர்இந்திர நீலபர்ப்பதம்
எட்டனை நினை யாதது என்கொலோ
சிட்டதாயுறை யாதிசீர்களே.

தெளிவுரை : சமணர்களும் பௌத்தர்களும் சீரும் சிறப்பும் விட்டவர்கள். ஈசன் விளங்கும் இந்திர நீல பருப்பதத்தை எள் பிரமாண அளவும் நினைத்துப் போற்றாது இருப்பது என்கொல் ! ஆதிமூர்த்தியாக விளங்கும் அப் பெருமானுடைய சிறப்புகள் அறிவு மயமாய்த் திகழ்வதாகும்.

294. கந்தமார்பொழில் சூழ்ந்தகாழியான்
இந்திரன்தொழு நீலபர்ப்பதத்து
அந்தம்இல்லியை ஏத்துஞானசம்
பந்தன்பாடல் கொண்டு ஓதிவாழ்மினே.

தெளிவுரை : இந்திரன் வழிபட்ட நீலபருப்பதத்தில் வீற்றிருக்கும் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை, மணம் கமழும் பொழில் சூழ்ந்த சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத் திருப்பதிகத்தை, ஆதாரமாகப் பற்றி ஓதி வாழ்வீராக.

திருச்சிற்றம்பலம்

164. திருக்கருவூரானிலை (அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

295. தொண்டெலாமலர் தூவியேத்த நஞ்சு
உண்டலாருயிர் ஆயதன்மையர்
கண்டனார்கரு வூருள்ஆனிலை
அண்டனார்அருள் ஈயும்அன்பரே.

தெளிவுரை : திருத்தொண்டர்கள் எல்லாரும் மலர் தூவி ஏத்த, மன்னுயிர்களுக்கெல்லாம் ஆருயிர் ஆகிய தன்மையராய் நஞ்சினை உண்ட கண்டத்தினராய்க் கருவூருள் விளங்கும் ஆனிலை என்னும் திருக்கோயிலுள் வீற்றிருக்கும், அண்டங்களுக்கெல்லாம் உடைவராகிய ஈசர், அருள் செய்யும் அன்பினர் ஆவர்.

296. நீதியார்நினைந்து ஆயநான்மறை
ஓதியாரொடுங் கூடலார்குழைக்
காதினார்கரு வூருள்ஆனிலை
ஆதியார்அடி யார்தம்அன்பரே.

தெளிவுரை : ஆசார ஒழுக்க சீலம் உடையவர்கள் எக்காலத்திலும் போற்றி வேதங்களை ஓதி விளங்க, அவர்களுடன் இயைந்து மேவும் ஈசன், குழை அணிந்த காதினர் ஆவர். அப் பெருமான், கருவூரில் விளங்கும் ஆனிலை என்னும் கோயிலின்கண், அடியவர்களின் அன்பினராய் வீற்றிருக்கும் ஆதிப்பிரான்.

297. விண்ணுலாமதி சூடிவேதமே
பண்ணுளார்பரம் ஆய பண்பினர்
கண்ணுளார்கரு வூருள்ஆனிலை
அண்ணலார்அடி யார்க்கு நல்லரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடி, வேதத்தின் பொருளாய் ஆகியவர், நடம் பயிலும் ஈசர். அப்பெருமான் கருவூரின் ஆனிலையில் கோயில் கொண்டு அடியவர்களுக்கு நன்மை புரிபவர்.

298. முடியர்மும்மத யானைஈர்உரி
பொடியர்பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார்கரு வூருள்ஆனிலை
அடிகள் யாவையும் ஆயஈசரே.

தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்துத் திருநீறு பூசிச் சடைமுடியுடையவராய், மன்மதனை எரித்த பெருமான். பூசையின் சிறப்பு மிக்க கருவூர் ஆனிலையில் கோயில் கொண்டுள்ள அப்பெருமான், யாவும் தாமாகும் ஈசன் ஆவர்.

299. பங்கயம்மலர்ப் பாதர்பாதியோர்
மங்கையர்மணி நீலகண்டர்வான்
கங்கையார்கரு வூருள்ஆனிலை
அங்கைஆடர வத்துஎம்மண்ணலே.

தெளிவுரை : ஈசனார், தாமரை மலர்போன்ற மென்மையான திருப்பாதம் கொண்டவர்; உமாதேவியை ஒரு பாகம் கொண்டவர்; நீலகண்டம் உடையவர்; கங்கையைச் சூடியவர். அப்பெருமான், கருவூர் ஆனிலையில், அழகிய திருக்கரத்தில், ஆடுகின்ற அரவத்துடன் விளங்கும் அண்ணல் ஆவர்.

300. தேவர்திங்களும் பாம்பும் சென்னியின்
மேவர் மும்மதில் எய்தவில்லியர்
காவலர்கரு வூருள் ஆனிலை
மூவராகிய மொய்ம்பர்அல்லரே.

தெளிவுரை : சிறப்புடைய சந்திரனும் பாம்பும் சென்னியில் மேவி விளங்கி, முப்புரத்தைச் சாம்பாலக்கிய மேருவில்லை உடைய ஈசர், காக்கும் கடவுளாய்க் கருவூருள் ஆனிலை மேவி, மும்மூர்த்திகளும் தாமேயாகும் சக்தி மிக்கவர் அல்லவா !

301. பண்ணினார்படி யேற்றர்நீற்றர்மெய்ப்
பெண்ணினார்பிறை தாங்குநெற்றியர்
கண்ணினார்கரு வூருள்ஆனிலை
நண்ணினார்நமை யாளுநாதரே.

தெளிவுரை : ஈசர், பண்ணின் இசையாயும், படியும் இடப வாகனத்தை உடையவராகவும், திருநீறு பூசியவராகவும், அங்கத்தில் உமாதேவியைப் பாகங்க கொண்டவராகவும், பிறைச்சந்திரன் தரித்தவராகவும், நெற்றிக் கண் உடையவராகவும், கருவூர் ஆனிலையில் வீற்றிருந்து நம்மை ஆட்கொண்டு அருள்புரியும் நாதராகவும் விளங்குபவர்.

302. கடுத்தவாளரக் கன்கயிலையை
எடுத்தவன்றலை தோளுந் தாளினால்
அடர்த்தவன்கரு வூருள்ஆனிலை
கொடுத்தவன்னருள் கூத்தனல்லனே.

தெளிவுரை : சினங்கொண்ட இராவணன் கயிலையை எடுக்க, அவனுடைய வன்மையான தலையும் தோளும், திருப்பாத விரலால் அடர்த்தவன், கருவூர் ஆனிலையில் வீற்றிருக்கும் நம்மையெல்லாம் ஆட்கொள்ளும் நாதராகிய ஈசன்.

303. உழுதுமாநிலத்து ஏனமாகிமால்
தொழுதுமாமல ரோனும் காண்கிலார்
கழுதினான்கரு வூருள் ஆனிலை
முழுதுமாகிய மூர்த்திபாதமே.

தெளிவுரை : பூமியைத் தோண்டிப் பன்றி வடிவில் சென்ற திருமாலும், பிரமனும, காணதவராய்ப் பேய்க் கூட்டத்தையுடைய ஈசன், கருவூர் ஆனிலையின் மூர்த்தியாய் விளங்குபவன். அப்பெருமான் திருவிடயே உலகில் யாவுமாய்த் திகழ்வதும் ஆகும்.

304. புத்தர்புன்சமண் ஆதர்பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சைவிட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூருள்ஆனிலை
அத்தர்பாதம் அடைந்துவாழ்மினே.

தெளிவுரை : புத்தர், சமணர் ஆகியோர் கூறுவதாகிய பொய்யுரைகளை ஒதுக்கி, மெய்ம்மையாய்ப் பக்தி செய்யும் அன்பர்கள் சேர்கின்ற கருவூர் ஆனிலையின் அத்தனாகிய ஈசன் திருப்பாதத்தை வணங்கி இவ்வுலகில் நலம் செறிந்த வாழ்க்கையை அடைவீராக.

305. கந்தமார்பொழிற் காழிஞானசம்
பந்தன்சேர்கரு வூருள்ஆனிலை
எந்தை யைச்சொன்ன பத்தும்வல்லவர்
சிந்தையில்துய ராயதீர்வரே.

தெளிவுரை : நறுமணம் வீசும் பொழில்கள் உடைய சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன், கருவூர் என்னும் தலத்தில், ஆனிலை என்று வழங்கப் பெறும் திருக்கோயிலின்கண் சென்று, எந்தையாகிய ஈசனைப் போற்றிச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்களின் மனத்துயர் தீரும்.

திருச்சிற்றம்பலம்

165. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

306. முன்னிய கலைப்பொருளு மூவுலகில்வாழ்வும்
பன்னிய ஒருத்தர் பழவூர்வினைவின்ஞாலம்
துன்னியிமையோர்கள் துதிசெய்துமுன்வணங்கும்
சென்னியர்விருப்புறு திருப்புகலியாமே.

தெளிவுரை : முன்னின்று ஓங்கும் கலைகளானவையும், மூன்று உலகங்களிலும் அமைகின்ற வாழ்க்கைத் தன்மையும், பொருந்த அளிக்கும் ஒரு தலைவர் விளங்கும் பழைமையான ஊர் யாது என வினவினால், இப் பூவுலகத்தை அடைந்து தேவர்கள் துதிசெய்து எதிர் நின்று வணங்க, தலையானவராய் விளங்குகின்ற ஈசன், விரும்பி வீற்றிருக்கும் திருப்புகலியாகும். இத் திருப்பாட்டு வினா உரையாதலும் காண்க.

307. வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல்சூடிப்
பண்டெரிகையாடு பரமன்பதியது என்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தொண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.

தெளிவுரை : பிறைச்சந்திரனும் கங்கையும் சடையில் விளங்குமாறு சூடி, நெருப்பைக் கையில் ஏந்தி ஆடும் பரமன், வீற்றிருக்கும் பதி என்று சொல்லப்பெறுவது, தாமரை மலரின் மணமும், சோலைகளில் உள்ள மலரின் மனமும், அலைகள் வீசும் கடலின் வளமும், பொலியும் திருப்புகலியாகும்.

308. பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவும் அந்தணன் விருப்பிடமதென்பர்
பூவணவு சோலையிருண் மாலையொதிர்கூரத்
தேவணவிழாவளர் திருப்புகலியாமே.

தெளிவுரை : ஈசர், பக்திப் பாடல்களைப் பாடும் பக்தர்களின் சிந்தையில் விளங்குபவர்; பக்தர்கள் கூடி நின்று அரவொலி முதலான நாவாரப் போற்றும் புகழ்மிகும் சொற்களில் தோய்ந்த அந்தணர் எனப் பெறும் இறைவர். அப்பெருமான், விருப்பத்துடன் வீற்றிருக்கும் இடம் என்று யாவராலும் சொல்லப்படுவது, பூக்கள் நிரம்பிய சோலையும், பெரிய மலை சாற்றித் தெய்வ வழிபாடு செய்யும் திருவிழாக்கள் நாளும் பெருகி வளரும் திருப்புகலியாகும்.

309. மைதவழு மாமிடறன் மாநடமதாடி
கைவலையினாளொடு கலந்தபதிஎன்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள்கூடித்
தெய்வமது இணக்குறு திருப்புகலியாமே.

தெளிவுரை : கருமையான வண்ணம் கொண்ட கண்டத்தை உடைய ஈசன், சிறப்பான நடனம் புரிந்து, உமாதேவியுடன் உடனாகி வீற்றிருக்கும் பதி என்று சொல்லப்படுவது, திருத்தொண்டு மிகுதியாகச் செய்து விளங்கும் சிவகணத்தவர் கூடி நிற்க, தெய்வ நலம் பெருகி இணக்கம் உறுகின்ற சிறப்புடைய திருப்புகலி ஆகும்.

310. முன்னம்இருமூன்று சமயங்களவை யாகிப்
பின்னை அருள்செய்த பிறையாளன் உறைகோயில்
புன்னையமலர்ப்பொழில்கள் அக்கின்ஒளிகாட்டச்
செந்நெல்வயலார்தரு திருப்புகலியாமே.

தெளிவுரை : ஆறு சமயங்களும் ஆகி அவற்றுக்கு அருள் செய்பவனாகிய பிறைமதி சூடும் பெருமான் உறைகின்ற கோயில், புன்னை மலர்ப் பொழில்கள் சூழந்து, சங்கு மணி போன்று ஒளிகாட்டவும், செழுமையான வயல்களும் நிறைந்த திருப்புகலியாகும்.

311. வங்கமலியுங்கடல் விடத்தினைநுகர்ந்த
அங்கணன் அருத்திசெய்து இருக்கும்இடம் என்பர்
கொங்குஅணவியன்பொழிலின் மாசுபனிமூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலியாமே.

தெளிவுரை : பாற்கடலில் தோன்றி நஞ்சினை உட்கொண்ட அழகு மிக்க முக்கண்ணுடைய ஈசன், விரும்பி வீற்றிருக்கும் இடம் என்பது, தேன் பெருகும் பெருமைமிக்க பொழிலில் பனி மூடி விளங்கத் தென்னை மரங்களிலிருந்து தேன் பெருகித் திகழும் திருப்புகலி ஆகும்.

312. நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தன் இடம்என்பர்
பல்கும் அடியார்கள் படியாரஇசைபாடிக்
செல்வ மறை யோருறை திருப்புகலியாமே.

தெளிவுரை : இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அவனே காரணகர்த்தராகிக் கொடிய வினைகள் தீர்த்து நலங்கள் ஆக்கியும் அருள்புரியும் அமுதனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் எனப்படுவது, அடியவர்கள் பல்கிப் பெருகி உலகமெல்லாம் உவந்து மகிழுமாறு இசைப் பாடல்கள் பாடவும், செல்வமாக விளங்கும் மறைவல்லவர்கள் உறையவும் திகழும் திருப்புகலியாகும்.

313. பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை அடர்த்தருளும் அண்ணல் இடம்என்பர்
நெருக்குறு கடல்திரைகள் முத்தமணிசிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலியாமே.

தெளிவுரை : விரிந்து பரவும் புகழும் பெருமையும் உடைய ஈசன், கயிலை மலையால் இராவணனை அடர்த்து அருள்புரிந்த அண்ணல் ஆவர். அப்பெருமான் விளங்கி மேவும் இடம் என்பது, கடலலைகள் முத்தும் மணிகளும் வாரிக் கொணர்ந்து, பெருமை உடைய பொழிலின்கண் வீச, பொலிந்து செல்வச் செழிப்புடன் விளங்கும் திருப்புகலி நகர் என்று சொல்வார்கள்.

314. கோடலொடுகூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன், இருவர்க்கும்
நேடஎரியாகிஇரு பாலும்அடிபேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலியாமே.

தெளிவுரை : கோடல் மலரும் பிறைச் சந்திரனும் சூடிய சடைமுடியில், ஆடுகின்ற அரவத்தை வைத்து அருள்புரியும் எம் தந்தை, திருமால் பிரமன் ஆகியோருக்குத் தீப்பிழம்பாகி, இருபக்கமும் திருவடி பேணி, விளங்கும் திருப்புகலியாகும்.

315. கற்றுமணர் உற்றுலவு தேரர்உரை செய்த
குற்றமொழி கொள்கையது இலாதபெருமானூர்
பொற்கொடி மடந்தையரு மைந்தர் புலன்ஐந்தும்
செற்றவர் விருப்புறு திருப்புகலியாமே.

தெளிவுரை : மெய் நூல்களை உரையாத மொழிகளைக் கற்ற சமணர், தேரர்கள் சொற்களை ஏற்காத கொள்கை உடையவராகிய பெருமான், விளங்குகின்ற ஊரானது, மகளிரும், ஆடவரும், புல் வழியில் மனத்தைச் செலுத்தாது வென்று, ஞானிகளாய் விளங்குகின்றவர்கள் விரும்புகின்ற திருப்புகலியாகும்.

316. செந்தமிழ்பரப்புறு திருப்புகலிதன்மேல்
அந்தமுதலாகிநடு வாயபெருமானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்தும்இசைகூர
வந்தவணம் ஏத்துமவர் வானமுடையாரே.

தெளிவுரை : தெய்வத்தைப் பற்றி இனிய செம்மையான தமிழ் உரை செய்து பரப்பும் திருப்புகலியில், அந்தமும் ஆதியும் நடுவும் ஆகிய பெருமானை, ஞானசம்பந்தன் உரைசெய்த இத்திருப்பதிகத்தால் இசையுடன் ஓதுபவர்.

திருச்சிற்றம்பலம்

166. திருப்புறம்பயம் (அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

317. மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொடு இசைந்தனது நீர்மை
திறம்பயன் உறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : மன்னுயிர்களைத் துன்புறுத்தும் கொடிய செயலைப் புரிந்த முப்புரத்தினை உடைய அசுரர் கோட்டைகளை, எரித்துச் சாம்பலாக்கிய பெருமானே ! பசுமை நிறமுடைய உமாதேவியும் செம்மை நிறம் உடைய நீவிரும் இன்புற இசைந்து, உம்முடைய தன்மையின் திறமாகிய அறப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு உரைத்தருளிய குருநாதரே ! நீவிர் புறம்பயம் என்னும் பதியின்கண் வீற்றிருந்து அருள்புரிபவராயினீர்.

318. விரித்தனை திருச்சடை அரித்தொழு குவெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரி யகாலன்
எருத்திற வுதைத்தனை இலங்கிழை யொர்பாகம்
பெருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : திருமுடியில் விளங்கும் சடை விரித்து நடம் புரிந்த நாதனே ! கங்கையைத் தரித்திருப்பவனே ! காலன் ஒடிந்து மாயுமா திருப்பாதத்தால் உதைத்த பெருமானே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு உடனாகி விளங்குபவனே ! நீவிரே புறம்பயம் அமர்ந்து திகழ்பவர்.

319. விரிந்தனை குவிந்தனை விழுங்குயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை  குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : யாவிலும் விரிந்து பெருகியும், நுண்பொருளாயும் விளங்குபவனே ! மன்னுயிர்களுக்கு வினையின் வழிப் பயன்களைச் செய்பவனாய் மேவும் முதலோனே ! குருந்த மரத்தை ஒடித்த திருமால், மோகினி வடிவமாய் விளங்க, உடன் திரிந்த அன்பனே ! மயானத்தில் நடம் புரியும் நாதனே ! நீவிரே புறம்பயம் அமர்ந்து மகிழ்ந்து விளங்குகின்றவர்.

320. வளர்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கமர் இளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுட லைநீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : வளம் பெருகும் கங்கையைச் சடையில் ஒடுங்குமாறும், இளைய பிறைச்சந்திரன் தரித்தும், இறந்தவர்களைச் சுடுகின்ற மயானத்தின் (சுடலை) நீறு பூசியும் விளங்கும் பெருமானே ! நீரே புறம்பயத்தில் வீற்றிருப்பவர்.

321. பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலையொர்பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெ ழுகொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தஇ றையோனே.

தெளிவுரை : பிறப்பொடு இறப்பும் பிணியும் இல்லாத பெருமானே ! கரும்பன்ன சொல்லி என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து விளங்கும் நாதனே ! வண்டுகள் ரீங்காரம் செய்து மலரும் கொன்றையை விரும்பிச் சூடிய இறைவனே ! புறம்பயத்தில் உள்ளவர் நீவிரே !

322. அனல்படு தடக்கையவர் எத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப்பகை யுநீயே
தற்படு சுடர்ச்சடை தனிப்பிறை யொடுஒன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : வேத நெறிப்படி வேள்வி புரியும் தகைமை உடையவரும் மற்றும் எத் தொழிலை மேற்கொள்வராயினும் உம்மை நினைத்து வழிபடுவாராயின், அவர்கள் துன்பத்திற்குக் காரணமாகிய வினையைத் தீர்ப்பவர் நீவிரே ஆவர். நெருப்புப் போன்று சுடர்விடும் சிவந்த சடையில் ஒப்பற்ற வெண்பிறைச் சந்திரனும், கங்கைøயும் திகழுமாறு உள்ள நாதரே ! நீரே புறம்பயம் அமர்ந்துள்ளீர்.

323. மறத்துறை மறுத்தவர் தவத்தடி யருள்ளம்
அறத்துறை ஒறுத்தனது அருட்கிழ மைபெற்றோர்
திறத்துள் திறத்தினை மதித்தக லநின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : மறம் தோய்ந்த கொடிய தன்னை இல்லாதவர்களும், தவத்தின்வழி நிற்கும் அடியவர்களும், தேவரீர்தம் அருளுரிமை பெற்ற சிவஞானிகளும் அவ்வவர்களின் தகுதியைப் போற்றி மதித்து அவற்றுடன் பொருந்தி விளங்கியும் வேறாகவும் உடைய நீவிர், புறம்பயம் அமர்ந்துள்ளீர் !

324. இலங்கையர் இறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைகள் அடர்த்திட லும்அஞ்சி
வலங்கொள எழுந்தவ னலங்கவி னவஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணன் கயிலை மலையின் கீழ் நெறியுற்றுக் கதறுமாறும், திரட்சியான பெரிய கரங்கள் துன்புற்று வருந்தவும் அடர்த்திட, அவ்அரக்கன் அச்சம் கொண்டு எழுந்து ஐம்புலன்களை அடக்கி வழிபடுமாறு செய்தவர் புறம்பயம் அமர்ந்த தேவரீர்.

325. வடங்கெட நுடங்குண இடந்தஇ டைஅல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்துண ரலாகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள் செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : ஆலிலையில் பள்ளி கொண்ட திருமாலும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தும் உணர இயலாதவராய்த் தீப்பிழம்பாக ஓங்கிய தேவரீர், இவ் இருவரும் வணங்கி நிற்க, அருள் புரிந்து, புறம்பயம் அமர்ந்துள்ளீர். அவர்கள் தத்தர் வாகனத்தில் பெருமை யோடு விளங்கச் செய்தவன் ஈசன் என்பது குறிப்பு.

326. விடக்கொரு வர்நன்றென விடக்கொரு வர்தீதுஎன
உடற்குடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்தவு ராவோனே.

தெளிவுரை : ஊன் நல்லது எனவும் அல்லது எனவும் கூறுகின்ற தன்மை உடையவர்களாய் விளங்குபவர்கள் உரை கொள்ளாது, உமாதேவியைப் பாகங்கொண்டு தேவரீர் புறம்பயம் அமர்ந்துளீர்.

327. கருங்கழி பெருந்திரை கரைக்குல வுமுத்தம்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழ மைஞானன்
சுரும்பவிழ் புறம்பயம் அமர்ந்தத மிழ்வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.

தெளிவுரை : உப்பங்கழியின் வாயிலாகப் பேரலைகள் முத்துக்களைக் கொண்டு கரை சேர்க்க விளங்குகின்ற கழுமலத்தின் நாதன் - தமிழின் உரிமை கொண்ட ஞானசம்பந்தன், புறம்பயம் அமர்ந்த பெருமானைப் போற்றிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பிணி அற்றவராய் இம்மையில் விளங்கி, மீண்டும் பிறவியை அடையாதவராய் வீடு பேறு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

167. திருக்கருப்பறியலூர்  (அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

328. சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்தக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : பந்த பாசங்களைத் தயக்கமின்றி அறுத்து, மனத்தின்கண் மாசு இல்லாத நற்குணங்கள் நிறைந்த அடியவர்களொடு கூடி, ஈசனைத் தொழுது போற்றும் அன்பர்களை வீடுபேறு அடையச் செய்யும் அருள்பாங்கினன் வீற்றிருப்பது, கருப்பறியலூர் ஆகும்.

329. வண்டனை செய்கொன்றையது வார்சடைகண் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டனைசெய் மும்மதிலும் வீழ்தரவொர் அம்பால்
கண்டவன்இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : வண்டுகள் சூழும் கொன்றை மலரைச் சடை முடியின்மேல் பொருந்தச் சூடி, வலிமை மிக்க அரவத்தை உடன் தரித்த விளங்குகின்ற ஈசன், இடம் பெயர்ந்து சென்று வஞ்சனையால் மன்னுலகத்தினைத் துன்புறுத்திய மூன்று கோட்டை மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு, ஓர் அம்பைச் செலுத்திய பெருமான். அப் பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

330. வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : மறையவர்கள் வேதம் ஓதவும், வேள்வி முதலான நற்செயல்கள் அந்தந்தக் காலத்தில் முறையாகப் புரியவும், மலரின் அரும்புகள் கொண்டு தூவி அர்ச்சனை கொள்ளும் தலைவன், நள்ளிருளில் நடம் புரியும் பெருமான். அதுபோது திருச்செவியில் அணிந்துள்ள குழையானது தாழ்ந்து விளங்கும் தன்மையில் விளங்க, அப் பெருமான் வீற்றிருக்கும் இடம் கருப்பறியலூர் ஆகும்.

331. மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : முற்றும் துறந்த முனிவர்கள் விளங்கும் கயிலை மலைக்கு அதிபனாகிய ஈசன், உமாதேவியை ஒரு பாகமாக உடையவன். உடம்பினை விடுத்து, மறையோனாகிய மார்க்கண்டேயனுடைய உயிரைக் கவர்ந்து செல்ல வேண்டும் என்று தொடர்ந்த காலனுடைய உயிரை மாய்க்க, ஒரு காலால் உதைத்து வென்றவனாகிய  அப் பெருமான் வீற்றிருப்து கருப்பறியலூர் ஆகும்.

332. ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமலை ஓதும்
கருத்தனவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : மனம் ஒருமித்தவளாகிய உமாதேவியை, ஒரு பாகத்தில் கொண்டு விளங்கும் ஈசன், நியதியின் தன்மையினன்; நித்தியமானவன்; நடனம் புரியும் நெறியில் யாவற்றையும் இயங்கச் செய்பவன்; முன்னைப் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாகியவன்; வேதமும் அதன்  ஆறு அங்கங்களையும் விரிவு செய்தவன்; அவற்றை ஓதும் கருத்தினனாயும் அவற்றின் பொருளாகவும் இருப்பவன். அப்பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

333. விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : தேவர்கள் துயர் தீர வேண்டும் என்னும் நோக்கத்தில், மலையரசன் மகளாகி, தேனை ஒத்த பண் மருவும் மென்மொழியினளாகிய பார்வதியை ஈசனுக்கு மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணிய மன்மதன் உடல் வெந்து எரியுமாறு நோக்கிய நெற்றிக் கண்ணுடைய பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

334. ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : ஆதிநாயகனாகிய ஈசன், திருவடியை வணங்கிப் புனித தீர்த்தத்தால் அபிடேகம் செய்து மலர் சாற்றிக் தூப தீபங்கள் ஆகியவற்றால் ஆராதித்த மார்க்கண்டேயருக்குத் தீமை செய்ய வந்த காலனை, உதைத்து அழித்த பெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும். காலனின் பிடியிலிருந்து அந்தணச் சிறுவனைக் காத்தருளிய ஐயாற்று நாதனின் அருள்வண்ணமும் உணர்த்துவதாகும்.

335. வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்தபுயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : புண்ணியம் செய்து வாய்த்த புகழ்மிக்க தேவர்களும், பூவுலக மாந்தர்களும் அஞ்சுமாறு பாய்ந்த வீரத்துடன் போர் செய்யும் இயல்புடைய இலங்கை நகரின் வேந்தனாகிய இராவணனுடைய உறுதியான அத்தனை தோள்களும் நலியுமாறு சினந்தவனாகிய ஈசன் வீற்றிருப்பது, கருப்பறியலூர் ஆகும்.

336. பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : விரிந்து பரந்து சீராகப் பெருகும் அலைகளை உடைய கங்கையைச் சடை முடியில் தரித்து மகிழுமாறு வைத்த ஈசன், இடைவிடாமல் திருமாலும் பிரமனும் தேடியும் நெருக்கம் கொள்ளாதவராய் மறைந்த பெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

337. அற்றமறை யாவமணர் ஆதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமதி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : திகம்பரர்களும் புத்தர்களும், சீரிய சொற்கள் அறியாதவர்களாய் இருக்க, அத்தகையோர் சொற்களை ஏற்காது, குற்றத்தைப் பொருட்டாகக் கொள்ளாத பெருமான், கொகுடிக்கோயிலில் உறுதியாக வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

338. நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று
வலந்தரும் அவர்க்குவிளை வாடல்எளி தாமே.

தெளிவுரை : நலன்கள் தருகின்ற நீர்வளம் மிக்க புகலியில் விளங்கும் ஞானசம்பந்தன், கலந்த அன்பினராய்க் கருப்பறியல் என்னும் தலத்தில் மேவிய ஈசனை, பலன் அளிக்கும் இத் தமிழ்ப் பதிகத்தால் ஏத்த வல்லவர்களுக்கு, வினையானது எளிதாய் மறைந்து விடும்.

திருச்சிற்றம்பலம்

168. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

339. திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புதர் இருக்கும்இடம் ஏரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்திருவை யாறே.

தெளிவுரை : செல்வம் திகழும் மலையரன் மகளாகிய உமாதேவியுடன் வீற்றிருக்கும் ஒளி வடிவானவராகிய ஈசர் அழகுதிகழ விளங்குகின்ற எழில்மிகும் கயிலையில் வீற்றிருப்பதற்கு விருப்பம் உடவய அற்புதர் ஆவர். அப்பெருமான் மேவும் இடம், மணம் கமழும் பொழில் சூழ்ந்த வள்ளல் தன்மையுயை திருவையாறு ஆகும்.

340. கந்தமர வுந்துபுகை உந்தலில் விளக்கேர்
இந்திரன் உணர்ந்துபணி எந்தையிடம் எங்கும்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்திருவை யாறே.

தெளிவுரை : நறுமணமும், தூண்டா மணி விளக்காய செம்பொற்சோதியும் ஆகி விளங்கும் ஈசனைப் பணிந்து போற்றியவன் இந்திரன். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சந்தன மரங்கள் பெருகி விளங்க, அப்பொழிலிலிருந்து வீசும் காற்றானது அடைந்து மருவும் வண்மையுடைய திருவையாறு ஆகும்.

341. கட்டுவடம் எட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகரம் இட்டவொலி தட்டும்வகை நந்திக்கு
இட்டமிகு நட்டமலை இட்டவர் இடம்சீர்
வட்டமதி லுள்திகழும் வண்திருவை யாறே.

தெளிவுரை : வடத்தைக் (வார்) கொண்டு கட்டப்பெற்ற முழவு ஒலிக்கவும், கரங்களால் தட்டித் தாள ஒலி எழுப்பவும் நந்தவேருக்கு விருப்பமான திருக்கூத்து ஆடும்பெருமான் இடமாவது, சிறப்புகள் யாவும் உள்கொண்டு ஓங்கும் வண்மை திகழும் திருவையாறு ஆகும்.

342. நண்ணியொர் வடத்திநிழல் நால்வர்முனி வர்க்கன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்திருவை யாறே.

தெளிவுரை : கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து தட்சணாமூர்த்தி திருக்கோலந் தாங்கிச், சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு அறம் உணர்த்தி, அதன் வாயிலாக எண்ணற்ற வேதப்பொருளை விவரித்து, மோனத்தாலும் சின்முத்திரை காட்டியும் உபதேசம் செய்த பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, குளிர்ந்து விளங்கும் சந்தனமும் அகிலும் தம் அலைகளால் உந்தி வரும் காவிரி கரையின் மீது அவற்றை ஈர்த்து விளங்கச் செய்யும் திருவையாறு ஆகும்.

343.வென்றிமிகு தாரகனது ஆருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடம் ஆடியிட நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்திருவை யாறே.

தெளிவுரை : தாரகாசுரன், வரபலம் கொண்டு உலகத்தைத் துன்புறுத்தி அழிவினை உண்டாக்கிய போது, பராசக்தி சினங்கொண்டு அவ் அசுரனை வதைத்து உலகினைக் காத்தருளினள். அதுபோது, தேவியின் சீற்றம் தணியமாறு, நடனம் புரிந்து மகிழ்வித்த இறைவன் விளங்கும் இடம், மலரின் மணம் சூழ்ந்து பெருகும் பொழில்கள் உடைய திருவையாறு ஆகும்.

344. பூதமொடு பேய்கள்பல பாடநடம் ஆடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதையர் இடும்பலி கொளும்பரன் இடம்பூ
மாதவி மணங்கமழும் வண்திருவை யாறே.

தெளிவுரை : பூதகணங்களுடன் பேய்க்கணங்களும் பாட, அதற்கு ஏற்ற வகையில் ஆடி, பாத முதல் முடி வரையில் ஆடுகின்ற அரவத்தை அணிகலனாகக் கொண்டு, தாருக வனத்து மாதர்கள் இடுகின்ற பிச்சைப் பொருட்களை ஏற்ற பரமன் இடமாவது, மாதவிப் பூக்களின் மணம் கமழும் வண்மைமிக்க திருவையாறு ஆகும்.

345. துன்னுகுழல் மங்கைஉமை நங்கைகளி வெய்தப்
பின்னொருத வம்செய்துழல் பிஞ்ஞகனும் அங்கே
என்னசதி என்றுரைசெய் அங்கணன் இடம்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்திருவை யாறே.

தெளிவுரை : நெருங்கி கூந்தலையுடைய உமாதேவியார் மனம் வருந்துமாறு நிகழ, அதனை ஒட்டித் தேவியான தவம் செய்து போற்ற, ஈசன் ஆங்கே எழுந்தருளி மணம் புரிந்து தேவியாகக் கொள்ளுதல் ஒரு தன்மையாயிற்று. அவ்வாறு புரியும் ஈசன் விளங்குகின்ற இடம் புகழ்மிக்க கொடையாளர்கள் திகழும் வண்மை மிக்க திருவையாறு ஆகும்.

346. இரக்கமில் குணத்தொடுஉல கெங்குநலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவர் இடம்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்திருவை யாறே.

தெளிவுரை : இரக்கம் அற்றவனாய் உலகம் எல்லாம் நலியுமாறு கொடி போர் செய்யும் தன்மையுடைய அரக்கனாகிய இராவணன் முடிகளும் தோள்களும் துன்புற்று நலியுமாறு திருப்பாத விரலால் சிறிது ஊன்றிய ஈசனார் இடம், சிறப்புகளும் தெய்வ வரபலமும் கருணைத் திறமும் ஒருசேரப் பெற்றுத் திகழும் பெருமக்கள் விளங்கும் வண்மை மிக்க திருவையாறு ஆகும்.

347. பருத்துருவ தாகிவி ணடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுலகு இடந்தவனும் என்றும்
கருத்துருவொ ணாவகை நிமிர்ந்தவன் இடம்கார்
வருத்துவகை தீர்கொள் பொழில் வண்திருவை யாறே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியஞான்று, அவர்கள் கருத்துக்கு அறியவொண்ணாத வகையாய் ஓங்கி, தீத்திரட்சியான ஈசன் இருக்கும் இடம், மேகத்திலிருந்து தருக்கள் தமக்குத் தேவையான அளவு நீரை மழை கொண்டு தருவித்து ஈர்த்துக் கொள்ளும் எழில் உடைய திருவையாறு ஆகும்.

348. பாக்கியமது ஒன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்கள் என்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவன் இடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்திருவை யாறே.

தெளிவுரை : ஈசனை வணங்கும் பாக்கியத்தை விட்டவர்கள் சமணரும் சாக்கியரும் ஆவர். அவர்களால் நோக்குதற்கு அரியவன் ஈசன். அப்பெருமான் இடம், உலகில் நீடுவளர்ந்த பொழில்கள் மேகத்தைத் தொடும் திருவையாறு ஆகும்.

349. வாசமலி யும்பொயில்கொள் வண்திருவை யாற்றுள்
ஈசனை எழிற்புகலி மன்னவமெய்ஞ் ஞானப்
பூசுரன் உரைத்ததமிழ் பத்தும்இவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.

தெளிவுரை : நன்மணம் கமழும் பொழில்கள் விளங்கும் வண்மை திகழும் திருவையாற்றுள் விளங்கும் ஈசனை, எழில் மிகும் புகலியின் மன்னவனாயும், மெய்ஞ்ஞான அந்தணனாயும் விளங்கும் ஞானசம்பந்தன் உரைத்த தமிழ்ப் பதிகம் கொண்டு ஓத வல்லவர்கள், நின்மலனாக உள்ள அப் பெருமானின் நேசம் மிகுந்த பக்தர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

169. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால், புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

350. ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தன்இடம் என்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி  வாசமீது வீசியநள் ளாறே.

தெளிவுரை : இதழ்கள் மலிந்த கொன்றை, பாம்பு, பிறைச் சந்திரன், வன்னிப் பத்திரம் ஆகியவற்றை, சிறப்புடைய சிவந்த சடையில் தரித்த அழகனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் என்பது, கோங்கு, குரவம், புன்னை ஆகிய மலர்களின் வாசனை பெருகி விளங்கும் நள்ளாறு ஆகும்.

351. விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்கும்இடம் என்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடுஇசை பாடும்அடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய் நள் ளாறே.

தெளிவுரை : வானத்தில் விளங்கும் சந்திரனும், ஒலித்து விளங்கும் கங்கையும் சடையில் தரித்துள்ள புண்ணியனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் என்பது, இறைவன் புகழ் கூறும் இசைப் பாடலும், அதற்கு ஏற்ப நடனமும் கொண்டு, அடியவர்கள் மனம் ஒருமித்துப் போற்றி வழிபாடு செய்யும் நள்ளாறு ஆகும்.

352. விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்து
உளங்கொள இருத்திய ஒருத்தன்இடம் என்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

தெளிவுரை : அன்பால் குழையும் இயல்பினனாகிய மலைமகளை ஒரு பாகமாக விரும்பி ஏற்ற இறைவன் வீற்றிருக்கும் இடம் என்று சொல்லப்படுவது, தூப, தீபங்களுடன் மலர் தூவிப் போற்றிய நளன், நாள் தோறும் வழிபட்ட நள்ளாறு ஆகும்.

353. கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிடம் என்பர்தட மூழ்கிப்
புக்கரவர் விஞ்ஞையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

தெளிவுரை : ஈசன் கொக்கின் இறகு, அரவம், வளைந்த பிறைச் சந்திரன், கோபிக்கும் நெற்றிக்கண் ஆகியவற்றை கொண்டிருப்பவர்; சிவந்த திருமேனியர். அப்பெருமான் பொருந்தி வீற்றிருக்கும் இடமாவது, பாதாளத்தில் உள்ள நாகலோகத்தினரும், வித்தியாதரர், திகம்பரர் முதலானோரும் திருநாமத்தை ஓதி அதன் பயனாய் எய்திய நள்ளாறு ஆகும்.

354. நெஞ்சமிது கண்டுகொள் உனக்கென நினைந்தார்
வஞ்சமது அறுத்தருளு மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ எழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடநள் ளாறே.

தெளிவுரை : தன்னை நினைத்துப் போற்றுபவர்கள் நெஞ்சத்தில் தோன்றி காட்சி தருபவனாகிய ஈசன், வஞ்சமாகிக் கண்ணுக்குப் புலனாகாத வினையைத் தீர்ப்பவன். புறங்காட்சி ஓடிய வானவர்கள் அஞ்சி ஈசனைத் தொழுது வேண்ட, நஞ்சினை அமுது எனக் கொண்டு அருந்தி அபயம் அளித்த அப்பெருமான் வீற்றிருக்கும் இடம், நள்ளாறு ஆகும்.

355. பாலனடி பேணஅவன் ஆருயிர் குறைக்கும்
காலனுடல் மாளமுன் உதைத்தஅரன் ஊராம்
கோலமலர் நீர்க்குடம் எடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலன் மாயுமாறு உதைத்த ஈசன் இருக்கும் ஊரானது, நன்னீர் கொண்டும் புது மலர் கொண்டும் பூசித்து, வேதத்தின் நெறிமுறையில் வாழும் மறையவர்கள் பேணுகின்ற நள்ளாறு ஆகும்.

356. நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியர னாமமும் உணர்த்திடுநள் ளாறே.

தெளிவுரை : ஈசன், நீதிமுறையாய் விளங்குபவர்; உயர்ந்த பண்புடையவர்; நீண்டு உயர்ந்த கயிலை மலையை உடையவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் வரித்து அர்த்தநாரியாகக் காட்சி தருபவர்; பரஞானமாகிய தெய்வ அறிவாகவும், அபரஞானமாகிய உலகப் பொருள்களின் கலை அறிவாகவும் விளங்குபவர்; தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக மகாதேவனாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருப்பது, அந்தணர்கள் வேள்வியை இடைவிடாது புரிந்து வேதங்கள் ஓதி, அரனுடைய திருநாம மகிமையை உணர்த்தும் நள்ளாறு ஆகும்.

357. கடுத்துவல் அரக்கன்மு(ன்) நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடமது என்பர்அளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

தெளிவுரை : தீய செயலை மேற்கொள்ளும் கொடிய எண்ணத்தால் சினம் கொண்ட அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, அவனது பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு அடர்த்த இறைவர் தமது இடமாகக் கொண்டு விளங்குவது, வண்டுகள் இசைத்து ரீங்காரம் செய்ய அதனால் மகரந்தத் தூள் உதிர்ந்து கலந்து திரட்சி கொள்ளும் சிறப்புடைய நள்ளாறு ஆகும்.

358. உயர்ந்தவன் உருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவ(ன்) நினைப்பரிய பண்பன்இடம் என்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழில் எங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

தெளிவுரை : உலகத்தை அளப்பதற்காக நெடிது உயர்ந்து ஓங்கிய - திருவிக்கிரம அவதாரமாகிய திருமாலும் உலகத்தைப் படைத்த பிரமனும், நினைப்பதற்கு அரிவனாகிய ஈசன் இடம் என்று சொல்லப்படுவது, தேவர்கள் எல்லாம், கருணைத் திறத்தினை வியந்து போற்ற, மலர்கள் பெருகும் பொழில் விளங்கவும், நன்னயமும் தருமமும் காக்கும் வேதத்தின் ஒலி திகழவும் உள்ள நள்ளாறு ஆகும்.

359. சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவம் என்னும்
பந்தனை அறுத்தருள நின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர லிப்பொழில் முழங்கியநள் ளாறே.

தெளிவுரை : சமணர், பௌத்தர் ஆகியோர் மாறுபட்ட இயல்புடையவராய், மேவும் தவத்தின் கட்டறுத்து அருள்புரியும் ஈசன் வீற்றிருக்கும் ஊர் எனப்படுவது, இனிமையான முழவின் ஒலியுடன், விழாக்களின் ஒலியும், வேத கீதங்களின் ஒலியும் பரவ, பொழில் திகழும் நள்ளாறு ஆகும்.

360. ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவனள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரை அடையாபழிகள் நோயே.

தெளிவுரை : ஆடும் இயல்புடைய அரவத்தைச் சடையில் கொண்ட ஈசன் உமாதேவியை உடனாகக் கொண்டு நாடித் தொழும் அடியவர்கள் எல்லாச் செல்வங்களையும் எய்துமாறு வீற்றிருக்கும் நள்ளாற்றினை, மாட மாளிகைகள் திகழும் சீகாழியில், விளங்கும் திருஞானசம்பந்தரின் செம்மையான திருப்பதிகத்தால் பாடிப் போற்றுபவர்களைப் பழி சாராது; அவர்கள் நோயின்றி நல்வாழ்வு பெறுவார்கள். இது பிறவி நோய் தீர்த்தலையும் குறிக்கும்.

திருச்சிற்றம்பலம்

170. திருப்பழுவூர் (அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

361. முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய அண்ணல்இடம் என்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.

தெளிவுரை : ஈசன், மலமற்ற நின்மலர்; மூன்று இலைகளையுடைய சூலப்படை உடையவர்; விரித்துச் சொல்லப்படும் தத்துவங்களை உரைக்கும் வேதம் ஆகியவர்; அன்பின் மிக்க தலைவர்; எம்மை ஆளாகப் பெற்ற அண்ணல்; அப்பெருமான் வீற்றிருக்கும் இடம், பசுமையான இலைகளை உடைய, உயர்ந்து ஓங்கிய பெரும் பொழிலின் நறுமணம் வீசவும், பக்தி பெருக வழிபடும் அடியவர்களும் சித்தர் பெருமக்களும் விளங்கும் பழுவூர் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

362. கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிடம் என்பர்
மாடமலி சூளிகையில் ஏறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.

தெளிவுரை : வெண்காந்தள், கோங்கு ஆகிய மலர்களைச் சடைமுடியில் நன்கு விளங்குமாறு சூடி, ஆடு கின்ற அரவம் வைத்த பெருமானுடைய இடம், மாளிகையின் மேல்தளத்தில் ஏறி மகளிர், ஈசன் புகழ்ப் பாடல்களைக் கவினுற இசைக்கின்ற பழுவூர் என்பர்.

363. வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய ஒருத்தர்புரி நூலரிடம் என்பர்
வேலியின் விரைக்கமலம் அன்னமுக மாதர்
பாலென மிழற்றிநடம் ஆடுபழு வூரே.

தெளிவுரை : வலிமைமிக்க முப்புரம் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஒருவர் முப்புரி நூல் அணிந்த ஈசன். அவர் வீற்றிருக்கும் இடம் தாமரை மலர்போன்ற அழகிய முகத்தையுடைய மாதர், பால் போன்ற தூய்மையான இனிய பாட்டிசைத்து நடம் புரியும் பழுவூர் என்பர்.

364. எண்ணுமொர் எழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுது லாயகட டுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.

தெளிவுரை : எண்ணும் எழுத்தும் அதை உரைக்கும் சொல்லும் ஆகி அதற்கு முதற்பொருளும் ஆகிய கடவுளாகிய ஈசன் விளங்கும் இடம் என்பது, பூவுலகில் மலை நாட்டினர் ஏத்திப் பண்ணொடு போற்றிப் பரவும் பழுவூர் ஆகும்.

365. சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாத(ன்)நமை யாளுடைய நம்பன்இடம் என்பர்
வேதமொழி சொல்லிமறை யாளர்இறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.

தெளிவுரை : மயானத்தில் நடம்புரியும் நாதன் நம்மையெல்லாம் ஆட்கொண்டு அருள் வழங்கும் ஈசன் ஆவர். அப் பெருமான் விளங்குகின்ற இடம் என்பது, அந்தணர்கள் வேத கீதங்கள் ஓதி, வேதங்களுக்கெல்லாம் தலைவனாகிய ஈசனைப் போற்றி வணங்கும் பழுவூர் ஆகும்.

366. மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர அன்றுஉரிசெய் மைந்தன்இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

தெளிவுரை : ஓரிடத்தில் சென்று பொருந்தி அழிவை ஏற்படுத்தும் மாயையும் வஞ்சனையுமுடைய முப் புரத்தை வெந்து சாம்பலாகுமாறு செய்து யானை வெருவுமாறு அடர்த்து அதன் தோலை உரித்த அழகிய வீரனாகிய ஈசன் விளங்குகின்ற இடமாவது, மடந்தையர்கள் நாகணவாய்ப் பறவையின் வாயிலாகப் புகழ்ச் சொற்கள் சொல்லுதலும் பாவையர்கள் கற்பொடு பொலிந்து மேம்படுதலும் உடைய பழுவூர் என்பர்.

367. மந்தணம் இருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்டஅகில் மட்டார்
பைந்தொழிநன் மாதர்சுவடு ஒற்றுபழு வூரே.

தெளிவுரை : ஈசனைப் புறம்பாக வைத்த தக்கனது யாகம் அழியுமாறு, வீரபத்திரர் திருக்கோலத்தில் திருவிளையாடல் புரிந்த சிவலோக நாதனாகிய ஈசன் விளங்குகின்ற இடமாவது, அந்தணர்கள் வேள்விச் சாலையில் இட்ட அகிற்புகை தேன் போன்ற இனிய சொல்லுடைய மாதர்கள் பாதங்கள் தழையப் பெருகி வந்து விளங்குகின்ற பழுவூர் என்பர்.

368. உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்று
அரக்கனை அடர்த்தருளும் அப்பன்இடம் என்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்வினை யாடுபழு வூரே.

தெளிவுரை : சிறப்பு மிக்க பாற்கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் வைத்து, இராவணனைக் கயிலை மலையில் விளங்கும் இடம், மணம் மிகுந்த பொழிலின் மீது அமர்ந்து, கனிகளை உண்டு மகிழ்ந்த குரங்கினங்கள் விரிந்து பரந்த நீர் கொண்ட வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.

369. நின்றநெடு மாலுமொரு நான்முகனு நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதிஇடம் என்பர்
ஒன்றும்இரு மூன்றுமொரு நாலும்உணர் வார்கள்
மன்றினில் இருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.

தெளிவுரை : உலகத்தை அளந்து நின்ற திருமாலும், பிரமனும், தேடவும் தோன்றாதவனாகிப் பின்னர் தழலாய் ஓங்கிய ஆதிசிவன் விளங்கும் இடம், ஒன்றென ஏகப் பொருளாய் விளங்கும் ஈசனையும், இரு மூன்று எனவாகும் ஆறு அங்கமும், நான்கு வேதமும் உணர்ந்தவர்கள் அரங்கத்தில் கூடி மகிழும் சிறப்புடையது பழுவூர் ஆகும்.

370. மொட்டையம ணாதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகண் மொழிந்தமுனி வான்றன்இடம் என்பர்
மட்டைமலி தாழையின நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.

தெளிவுரை : சமணர்களும் பௌத்தர்களும் சொல்கின்ற பொருந்தாத மொழிகளை வெறுக்கும் ஈசன் இடம், தாழை, தென்னை, பாக்கு ஆகியன செழித்து ஓங்கும் பழுவூர் என்பர்.

371. அந்தணர்கள் ஆனமலை யாளர்அவர் ஏத்தும்
பந்தமலி கின்றபழு வூர்அரனை ஆரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவணம் ஏத்துமவர் வானமுடை யாரே.

தெளிவுரை : மலை நாட்டு அந்தணர்கள் ஏத்திப் பக்தியுடன் வழிபடுகின்ற ஈசனை, நிறைவாகவும் சந்தம் மிகுந்ததாகவும், ஞானம் உணர்ந்த ஞானசம்பந்தன் சொல்லி உரைத்தவாறு ஏத்தி வழிபடுகின்றவர்கள் சிறப்புடையவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

171. தென்குரங்காடுதுறை (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

372. பரவக்கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவிற் புறங் காட்டிடை நின்றெரி யாடி
அரவச் சடை அந்தணன் மேய அழகார்
குரவப்பொழில் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : பூத கணங்கள் சூழ, இரவில் மயானத்தில் நின்று எரிகின்ற நெருப்பைக் கரத்தில் ஏந்தித் திருநடம் புரிந்து, அரவத்தைச் சடையில் கொண்டு விளங்கும் அந்தணனாகிய ஈசன் மேவி விளங்கும், அழகிய குரவ மலர் பூக்கும் பொழில் சூழ உள்ள குரங்காடு துறையைப் பரவித் தொழுது போற்ற, இடர் தரும் வலிமையான வினை யாவும் கெட்டு அழியும்.

373. விண்டார்புர மூன்றும் எரித்த விமலன்
இண்டார்புறங் காட்டிடை நின்றெரி யாது
வண்டார்கரு மென்குழல் மங்கையொர் பாகம்
கொண்டா(ன்) நகர் போல்குரங் காடுதுறையே.

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புரத்தை எரித்த விமலனாகிய ஈசன், இண்டு மிகுந்த மயானத்தில் நெருப்பேந்தி நடம் புரிந்து வண்டார்க்கு மென் குழலம்மையாகிய உமையவனை ஒரு பாகம் கொண்டு விளங்கும் நகர் குரங்காடுதுறை.

374. நிறைவில்புறங் காட்டிடை நேரிழை யோடும்
இறைவில்லெரி யான்மழு வேந்திநின்றாடி
மறையின்னொலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவில்லவன் ஊர்குரங் காடு துறையே.

தெளிவுரை : எக்காலத்திலும் நிறைவு கொள்ளாத இயல்புடைய மயானத்தில், இறவாது எஞ்ஞான்றும் எரியும் நெருப்பும் மழுவும் கரத்தில் ஏந்தி உமாதேவியோடு நடம் புரியவும், வேதங்களின் ஒலியும் வானவர்களும் அசுரர்களும் தொழுது போற்றி நிற்க, குறைவற்றவனாகிய ஈசன் விளங்குகின்ற ஊர், குரங்காடுதுறை ஆகும்.

375. விழிக்கும்நுதல் மேலொரு வெண்பிறை சூடித்
தெழிக்கும் புறக் காட்டிடைச் சேர்ந்தெரி யாடிப்
பழிக்கும்பரி சேபலி தேர்ந்தவன் ஊர்பொன்
கொழிக்கும் புனல் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : நெற்றியில் விளங்கும் நெருப்பு விழிக்கு மேல் வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி, யாவற்றையும் அடங்கச் செய்யும் மயானத்தில் நின்று, நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடல் செய்து, பிறர் பழிக்கும் தன்மையில் பிச்சை ஏற்ற ஈசன் விளங்கும் ஊர் என்பது, பொன்போன்ற சிறப்பும், செல்வமும் கொழிக்கும் புனல் வளம் பொருந்திய குரங்காடுதுறை ஆகும்.

376. நீறார்தரு மேனிய(ன்) நெற்றியொர் கண்ணன்
ஏறார்கொடி எம்மிறை ஈண்டுஎரி யாடி
ஆறார்சடை அந்தணன் ஆயிழை யாளோர்
கூறா(ன்) நகர் போல்குரங் காடு துறையே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவன்; நெற்றியில் நெருப்புக் கண் உடையவன்; இடபத்தைக் கொடியாகக் கொண்ட எம் இறைவன்; நெருப்பினைக் கரத்தேந்தி ஆடல் புரிபவன்; கங்கையைச் செஞ்சடையில் பொருந்திய அந்தணன்; உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்த நாரியாய் மேவுபவன். அப்பெருமான் விளங்கும் நகர், குரங்காடுதுறை.

377. நளிரும்மலர்க் கொன்றையும் நாறு கரந்தைத்
துளிருஞ்சுல விச்சுடு காட்டெரி யாடி
மிளிரும்அர வார்த்தவன் மேவிய கோயில்
குளிரும்புனல் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : கொன்றை மலரும், மணம் வீசும் திருநீற்றுப் பச்சையும் தரித்துச் சுடுகாட்டில் நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடல் செய்து, ஒளிரும் நாகத்தை அணிந்த ஈசன் மேவும் கோயில், குளிர்ச்சியான நீர் சூழ்ந்த குரங்காடுதுறையாகும்.

378. பழகும்வினை தீர்ப்பவன் பார்ப்பதி யோடும்
முழவம் குழல் மொந்தை முழங்குஎரி யாடும்
அழகன் அயில்மூவிலை வேல்வலன் ஏந்தும்
குழகன் னகர் போல்குரங் காடு துறையே.

தெளிவுரை : உயிரைத் தொடர்ந்து பற்றிப் பழகித் துன்பம் நல்கும் வினையைத் தீர்ப்பவன், உமாதேவியுடன், முழவும் புல்லாங்குழலும், மொந்தையொலியும் முழங்க நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடல் செய்யும் ஈசன். அப் பெருமான், கூர்மையான சூலப்படை ஏந்திய அன்பன். அவன் வீற்றிருக்கும் நகர் குரங்காடு துறை ஆகும்.

379. வரைஆர்த்து எடுத்தவ் அரக்கன்வலி ஒல்க
நிரையார்விர லால்நெரித் திட்டவன் ஊராம்
கரையார்ந்திழி காவிரிக் கோலக் கரைமேல்
குரையார்பொயில் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : கயிலை மலையை ஆரவாரித்து எடுத்த இராவணனுடைய வலிமை அழியுமாறு, ஒலி முழக்கம் செய்து அருள் வழங்கும் திருப்பாத மலரின் விரலால் நெரித்த ஈசன் விளங்குகின்ற ஊர் கரையின் சிறப்புடைய காவிரியின் அழகிய கரைமேல் செறிந்து விளங்கும் பொழில் சூழந்த குரங்காடுதுறை ஆகும்.

380. நெடியானொடு நான்முகனும்நினை வொண்ணாப்
படியாகி பண்டங்க னின்றெரி யாடி
செடியார்தலை யேந்திய செங்கண்வெற் ளேற்றின்
கொடியானகர் போல்குரங் காடு துறையே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண முடியாதவாறு விளங்கியும், நெருப்பைக் கரத்தில் ஏந்திப் பண்டரங்கம் என்னும் ஆடல் செய்தும், பிரம கபாலம் ஏந்தியும் இடபக் கொடியும் உடைய ஈசன் நகர், குரங்காடுதுறையாகும்.

381. துவராடையர் வேடமலாச் சமண் கையர்
கவர்வாய்மொ ழிகாதல் செய் யாதவன் ஊராம்
நவையார்மணி பொன்னகில் சந்தன முந்திக்
குவையார்கரை சேர்குரங் காடு துறையே.

தெளிவுரை : பௌத்தர் மற்றும் சமணர் கூறுகின்ற ஐயம் தரும் சொற்களை விரும்பாத ஈசன் ஊர், நவமணிகளும் பொன்னும் அகிலும் சந்தனமும் முந்திச் கொண்டு சேர்க்கும் குரங்காடுதுறை ஆகும். இது நகரின் செல்வ வளமும் ஈசன் புகழ் வளமும் உணர்த்துவாதாயிற்று.

382. நல்லார்பயில் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லேறுடை யான்குரங் காடு துறைமேல்
சொல்லார்தமிழ் மாலைபத் தும்தொழு தேத்த
வல்லாரவர் வானவ ரோடுறை வாரே.

தெளிவுரை : நற்பண்பாளர்கள் விளங்குகின்ற சீகாழி நகரில் மேவும் ஞானசம்பந்தர், இடப வாகனத்தை உடைய ஈசன் வீற்றிருக்கும் குரங்காடுதுறை என்னும் தலத்தின் மீது, சொற்களில் சிறப்பான தமிழ்மாலையாக உரைத்த இத் திருப்பதிகம் கொண்டு தொழுது ஏத்த வல்லார், சிறப்பான முத்திப் பேற்றினை அடைந்து ஆங்கு உள்ளவர்களோடு மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

172. திருஇரும்பூளை (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

383. சீரார் கழலே தொழுவீர் இது செப்பீர்
வாரார்முலை மங்கையொடும் உடன்ஆகி
ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காரார்கடல் நஞ்சமுது உண்ட கருத்தே.

தெளிவுரை : ஈசனாரின் சிறப்பான புகழ்க் கழலைத் தொழுபவர்களே ! உமாதேவியை உடனாகக் கொண்டு அழகிய இரும்பூளை என்னும் தலத்தை இடமாகக் கொண்ட ஈசன், பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சினை அமுது என உண்டு உயிர்களைக் காத்தருள் புரிந்த கருத்து யாது என்று உரைப்பீராக.

384. தொழலார் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார்மொழிக் கோல்வளை யோடுடன் ஆகி
எழிலார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
கழல்தான்கரி கானிடையாடு கருத்தே.

தெளிவுரை : தொழுது வணங்குதற்குரிய ஈசனார் திருக்கழலைத் தொழுது போற்றும் திருத்தொண்டர்காள் ! குழல் போன்ற இனிய மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு எழில் பெருகும் இரும்பூளை என்னும் பதியை இடமாகக் கொண்டு விளங்கும் ஈசனார் திருக்கழல், மயானத்தில் நடமாடும் கருத்து என்கொல் எனப் பகர்வீராக.

385. அன்பாலடி கைதொழுவீரறி யீரே
மின்போல் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாய் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற்புனல் வைத்த பொருளே.

தெளிவுரை : அன்புடன் ஈசனார் திருவடியைக் கைதொழுது போற்றும் அன்பரீர் ! மின்னலைப் போன்ற இடை உடைய உமாதேவியுடன் மேவி மன்னுயிர்களுக்கு இன்பம் நல்கும்முகத்தான் இரும்பூளை ! என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான், பொன் போன்ற சடையின்கண் கங்கை வைத்த சிறப்பினை ஏத்திப் பரவுவீராக.

386. நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி
இச்சித்து இரும் பூளை இடங்கொண்ட ஈசன்
உச்சித்தலை யிற்பலி கொண்டுழல் ஊணே.

தெளிவுரை : பெருமானை விரும்பித் தொழுது போற்றுகின்ற பெருமக்களே ! திருக்கச்சியில் பொலிவுடன் முப்பத்திரண்டு அறங்கள் செய்தும் பூசித்தும் மகிழும் காமாட்சியுடன், தழுவக் குழைய வீற்றிருந்து மிகுந்த இச்சையுடன் இரும்பூளை என்னும் தலத்தில் இடம் கொண்டு வீற்றிருக்கும் ஈசன் பிரம கபாலம் ஏந்தி, உணவு பலி கொள்ளும் கருத்து யாது என, நமக்கு விளம்புவீராக.

387. சுற்றார்ந்தடியே தொழுவீர் இது சொல்லீர்
நற்றாழ்குரல் நங்கையொடும் உடனாகி
எற்றே இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
புற்றாடரவோ டென்பு பூண்ட பொருளே.

தெளிவுரை : அடியார்கள் சூழ இருந்து திருவடி மலரைத் தொழுது போற்றும் சீலர்களே ! நன்று நீண்ட குழல் உடைய உமாதேவியுடன் வீற்றிருந்து இரும்பூளை என்னும் பதியில் மேவும் ஈசன் புற்றில் விளங்கும் அரவமும் எலும்பும் அணிகலனாகக் கொண்டு விளங்கும் பொருள் யாது என உரைப்பீராக.

388. தோடார்மலர் தூய்த்தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடார்குழற் சேயிழை யோடுடனாகி
ஈடா இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காடார்கடு வேடுவன் ஆன கருத்தே.

தெளிவுரை : இதழ்கள் விளங்கும் மலர்களைத் தூவி இறைவனைத் தொழுது போற்றும் திருத்தொண்டர்காள் ! அழகு திகழும் அடர்த்தியான கூந்தலை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு பெருமையாக இரும்பூளையில் வீற்றிருக்கும் ஈசன், கானகத்தில் அர்ச்சுனருக்குப் பாசுபதம் அளிக்கும் மாண்பில் வேடுவ வடிவம் கொண்ட கருத்து யாது என விளம்புவீராக.

389. ஒருக்கும்மனத் தன்பருள் ளீர்இது சொல்லீர்
பருக்கைமத வேழம் உரித்துஉமை யோடும்
இருக்கை இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அரக்கன்னுரந் தீர்த்தரு ளாக்கிய வாறே.

தெளிவுரை : மனத்தைப் புலன் வழிச் செல்ல விடாது அடக்கிக் காத்து அன்புடைய பக்தர்கள் இடையில் விளங்கும் மெய்யன்பர்களே! பெரிய துதிக்கையுடைய மதம் கொண்ட யானையின் தோலை உரித்து உமாதேவியோடு இரும்பூளை என்னும் பதியில் வீற்றிருக்கும் ஈசன், இராவணன் மலையைப் பெயர்த்தபோது அவனுடைய வலிமையை அடக்கிப் பின்னர் அவன் செயலே நல்லருள் புரிவதற்குக் காரணமாக்கிய சிறப்பு என்னே என விளம்புவீராக.

390. துயராயின நீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயிலார் கருங்கண்ணியொடும் உடனாகி
இயல்பா இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரியாகிய மொய்ம்பே.

தெளிவுரை : வினைப்பயன் காரணமாய் நேரும் துன்பம் யாவும் களையப்பெற்றுத் தொழுது மகிழும் திருத் தொண்டர்கள் ! கயல் போன்று அருள் நோக்கால் மன்னுயிர்களப் பேணிக் காக்கும் கண்கள் உடைய உமாதேவியுடன், இயல்புடன் இரும்பூளை என்னும் பதியில் வீற்றிருக்கும் ஈசன், தேடிச் சென்றவர்களாகிய திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் தீப்பிழம்பாகிய சிறப்பு என்னே ! விளம்புவீராக.

391. துணைநன்மலர் தூய்தொழுந் தொண்டர்கள் சொல்லீர்
பணைமென் முலைப் பார்ப்பதியோடுட னாகி
இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே.

தெளிவுரை : நன்மலர்களால் தூவித்தொழுது போற்றும் திருத்தொண்டர்கள் ! பார்வதி தேவியை உடனாகக் கொண்டு இணையில்லாத இரும்பூளையில் வீற்றிருக்கும் ஈசன், சமணர் சாக்கியர் ஆகியோர் சார்ந்து அணைந்து வழிபடாதவாறு ஆக்கியது என்கொல் ! விளம்புவீராக.

392. எந்தை இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
சந்தம்பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்திவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே.

தெளிவுரை : எம் தந்தையாகிய, இரும்பூளை என்னும் பதியை இடமாகக் கொண்டு வீற்றிருக்கும் ஈசன்பால், சந்தப் பாடல்கள் கொண்டு விளங்கும் சண்பை நகர் மேவிய ஞானசம்பந்தரின் செந்தண்மை கொண்ட இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், மாயையால் பீடிக்கப்படும் பந்த பாசத்திலிருந்து நீங்கியவர் ஆவர்.


திருச்சிற்றம்பலம்

173. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

393. சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ்மறைக் காட்டுரை மைந்தா
இது நன்கிறை வைத்தருள் செய்க எனக்குன்
கதவம்திருக் காப்புக்கொள்ளுங் கருத் தாலே.

தெளிவுரை : ஒன்றுக்கொன்று மாறுபாடு இன்றிப் பொருந்த விளங்கி மேவும் நான்மறை துதிசெய்து வணங்குகின்ற சிறப்புடைய பொழில் சூழந்த பதி திருமறைக்காடு. இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அழகனே ! திருக்கதவம் காப்பிடுமாறு அருள்புரிக.

394. சங்கம்தர ளம்அவை தான்கரைக்கு எற்றும்
வங்கக்கடல் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
மங்கைஉமை பாகமு மாகஇது என்கொல்
கங்கைசடை மேலடை வித்த கருத்தே.

தெளிவுரை : சங்கு, முத்து ஆகியவை கரைக்கு உந்தித் தள்ளும் வங்கக் கடல் சூழும் மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கி இருக்கக் கங்கையைச் சடைமேல் சேர்ந்து இருக்குமாறு செய்த கருத்து என்கொல் !

395. குரவம்குருக் கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
சிரமும் மல ருந்திகழ் செஞ்சடை தன்மேல்
அரவம்மதி யோடுஅடை வித்தல் அழகே.

தெளிவுரை : குராமரம், குருக்கத்தி (மாதவி), புன்னை, புலிநகக் கொன்றை ஆகியனை மருவி ஓங்கும் பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனே ! தலை மாலை அணிந்து மலர் சூடியும் திகழும் செஞ்சடையின் மீது அரவமும், சந்திரனும் பொருந்தி இருக்குமாறு செய்த அழகுதான் என்னே !

396. படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ்மறைக் காட்டுறை மைந்தா
உடலம்உமை பங்கம தாகியும் என்கொல்
கடல்நஞ்சுஅமு தாவது உண்ட கருத்தே.

தெளிவுரை : செம்பவளமும் முத்துக்களும் கொண்டு விளங்கி, அகன்ற இலைகள் கொண்ட பொழில் சூழும் மறைக்காட்டில் மேவும் ஈசனே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இருந்து பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமென உட்கொண்ட கருத்து என் கொல் !

397. வானோர்மறை மாதவத் தோர்வழி பட்ட
தேனார்பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா
ஏனோர்தொழு தேத்த இருந்தநீ என்கொல்
கான்ஆர்கடு வேடுவன்ஆன கருத்தே.

தெளிவுரை : தேவர்களும், மறைகளும், மாதவத்தை உடைய முனிவர்களும் வழிபட்ட தேன் சொரியும் பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் வீற்றிருக்கும் செல்வனே ! ஏனைய அன்பர்கள் தொழுது ஏத்த இருந்த தேவரீர், காட்டில் விளங்கும் கடுமை மிகுந்த வேடுவக் கோலம் கொண்டு விளங்கிய கருத்து என் கொல்.

398. பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மாமறைக் காடா
உலகேழுடை யாய்கடை தோறுமுன் னென்கொல்
தலைசேர்பலி கொண்டதில் உண்டது தானே.

தெளிவுரை : பல காலம் வேதங்கள் தேவரீரின் திருப்பாதங்களைப் போற்ற மலர் தூவி வழிபாடு செய்யும் சிறப்பு மிக்க மறைக்காட்டில் விளங்கும் ஈசனே ! ஏழு உலகங்களும் உடைய பெருமானே ! தாருக வனத்து முனிவர் இல்லங்கள்தோறும் சென்று பலி ஏற்று உண்டது என்கொல்.

399. வேலாவல யத்தய லேமிளிர் வெய்தும்
சேலார்திரு மாமறைக் காட்டுறை செல்வா
மாலோடயன் இந்திரன் அஞ்சமுன் என்கொல்
காலார்சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே.

தெளிவுரை : கடலால் சூழப்பட்டு அதன் பக்கத்தில் மிளிர்ந்து விளங்கியும் சேல்கள் பெருகும் நீர் வளம் கொண்டுள்ள செழிப்பு மிகுந்த மறைக் காட்டில் விளங்குகின்ற செல்வப் பெருந்தகையே ! திருமாலும், பிரமனும், இந்திரனும் அஞ்சுமாறு, காலனைப் போன்று உயிரை வாட்டுகின்ற பாணத்தை எய்யும் வில்லை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கருத்து என்கொல்.

400. கலங்கொள்கடல் ஓதம் உலாவு கரைமேல்
வலங்கொள்பவர் வாழ்த்திசைக் கும்மறைக் காடா
இலங்கையுடை யான்அடர்ப் பட்டிடர் எய்த
அலங்கல்விரல் ஊன்றி அருள்செய்த வாறே.

தெளிவுரை : மரக்கல்ங்கள் செல்லும் கடலின் கரையில் விளங்கி, வலம் வரும் அடியவர்களின் வாழ்த்தொலிகளை முழுக்குகின்ற மறைக்காட்டில் விளங்கும் பரமனே ! இராவணன் கயிலை மலையின்கீழ் இடர் உற்று துன்பம் எய்திட மலர் போன்ற திருப்பாத விரல் ஊன்றி அருள் செய்த மாண்பு என்னே !

401. கோனென்றுபல கோடி உருத்திரர் போற்றும்
தேனம்பொழில் சூழ்மறைக் காட்டுமறை செல்வா
ஏனங்கழு கானவர் உன்னைமுன் என்கொல்
வானந் தல மண்டியும் கண்டிலா வாறே.

தெளிவுரை : தலைவன் என்று பலகோடி உருத்திரர் போற்றும் தேன் சொரியும் பொழில் சூழும் மறைக்காட்டில் விளங்குகின்ற செல்வப் பெருந்தகையே ! பன்றியாகிய திருமாலும், கழுகாகிய பிரமனும் முறையே பூமியைத் தோண்டிக் குடைந்தும் வானத்தில் உயர்ந்து பறந்தும் தேவரீரைக் கண்டிலாத தன்மை என்கொல் !

402. வேதம்பல வோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும்மறைக் காட்டில் உறைவாய்
ஏதில்சமண் சாக்கியர் வாக்கிவை என்கொல்
ஆதரொடு தாமலர் தூற்றிய வாறே.

தெளிவுரை : வேதங்கள் வேள்விகள் புரிந்து திருவடியைப் பேற்ற கடல் அலைகளின் ஓதம் நிலவும் மறைக்காட்டில் விளங்குகின்ற பெருமானே ! சமணரும் சாக்கியரும் பழிச் சொற்களைக் கூறித் தூற்றுவது என் கொல்.

403. காழிந்தக ரான்தலை ஞானசம் பந்தன்
வாழிம் மறைக் காடனை வாயந்தறி வித்த
ஏழின்னிசை மாலையீ ரைந்திவை வல்லார்
வாழியுல கோர்தொழ வானடை வாரே.

தெளிவுரை : சீகாழி நகரினை உடைய, வேதத்தை உணர்ந்த ஞானசம்பந்தர், உயிர்களை வாழ வைக்கும் மறைக்காட்டு நாதனைத் தரிசிப்பதற்குத் திருக்கதவம் திறக்கப்பெறும் அருள் பெற்றுத் தரிசித்து அறிவித்த ஏழிசை மல்கும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நனி வாழ்வார்களாக; உலகத்தோர் யாவராலும் போற்றப்பெறுமாறு புகழுடன் திகழ்வார்களாக; மறுமையில் சிறப்பான வீடு பேறு அடைவார்களாக.

திருச்சிற்றம்பலம்

174. திருச்சாய்க்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

404. நித்த லுந்நிய மஞ்செய்து நீர்வலந் தூவிச்
சித்தம் ஒன்றவல் லர்க்குஅருளும்சிவன் கோயில்
மத்த யானையின் கேடும்வண் பீலியும் வாரித்
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

தெளிவுரை : நித்தமும் நியமத்துடன் பெருகி ஒழுகும் தியானமும் மந்திர உச்சாடனம் செய்து சித்தம் ஒன்றி வழிபாடு செய்பவர்களுக்கு அருள் புரியும் சிவபெருமான் விளங்குகின்ற கோயில், யானைத் தந்தமும் மயிற்பீலியும் வாரித் தந்து மேவும் காவிரி நீர் பாயும் சாய்க்காடு ஆகும்.

405. பண்த லைக்கொண்டு பூதங்கள் பாட நின்றாடும்
வெண்த லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.

தெளிவுரை : பூத கணங்கள் பண்களில் பொருந்தி விளங்கும் இசைப் பாடல்களைப் பாட, மண்டை ஓடுகள் மல்கும் சுடுகாட்டில் நின்று ஆடும் வேதநாயகனாகிய ஈசன் திருக்கோயில் மேகம் திகழ்ந்து விளங்கவும், பேரிகை போன்ற இடி முழக்கம் பரவி விளங்க, மகிழ்ந்து தண்டலை மயில்கள் ஆட விளங்கும் சாய்க்காடு ஆகும்.

406. நாறு கூவிள நாகிள வெணமதி யத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதல் மேவுசாயக் காடே.

தெளிவுரை : நறுமணம் கமழும் வில்வம் இளம்பிறைச் சந்திரன் ஆகியவற்றுடன் கங்கை சூடுகின்ற, தேவர் தலைவனாகிய சிவபெருமான் உறையும் கோயில் சுவை மிகும் தென்னை, மாமரங்களின் சோலைகளும் குலைகள் மேவும் வாழை மரங்களின் புதர்களும் பெருகி விளங்கும் சாய்க்காடு ஆகும்.

407. வரங்கள் வண்புகழ் மன்னியஎந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

தெளிவுரை : வள்ளல் தன்மையும் புகழும் விளங்குமாறு வரங்கள் தந்து பெருமையுடன் திகழும் எம் தந்தையாகிய சிவபெருமான், அன்பு கலந்து ÷ பாற்றி வழிபடுதல் செய்யாது பகை கொண்டு திரிந்த அசுரர்களின் புரங்கள் மூன்றினையும் சாம்பலாகுமாறு கணையால் எய்த பெருமான் ஆவார். அப் பரமன் கோயில் கொண்டு விளங்குவது, மரக்கலன்கள் வழியாகக் கடலில் இருந்து கரையில் பொருட்களை இறக்கிவைப்பதும் ஈட்டிய பொருள்களை மீண்டும் உப்பங்கழிகளின் வாயிலாகக் கரை சேர வைக்கும் சாயக்காடு ஆகும்.

408. ஏழை மார்கடை தோறும் இடும்பலிக்கு என்று
கூழை வாளரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை ஒண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

தெளிவுரை : தாருக வனத்தில் உறைகின்ற முனிவர்கள் இல்லந்தோறும் சென்று மாதர்கள் இடுகின்ற பிச்சை ஏற்கும் தன்மையில் அழகிய ஒளிமிக்க பாம்பினை ஆட்டுகின்ற பரமன் உறைகின்ற கோயிலானது, மான் போன்ற ஒளிமிக்க கணணும் வளையணிந்த கையும் உடைய நுளைச்சியப் பெண்கள் நீண்ட பூப்போன்ற தாழை மடல்களைக் கொய்து மகிழ்ந்து அணிந்து நறுமணம் திகழ விளங்கும் சாய்க்காடு ஆகும்.

409. துங்க வானவர் சூழ்கடல் தாம்கடை போதில்
அங்கொர் நீழல் அளித்தஎம் மான்உறை கோயில்
வங்கம் அங்குஒளிர் இப்பியு முத்து மணியும்
சங்கும் வாரித் தடங்கடல் உந்துசாயக் காடே.

தெளிவுரை : உயர்ந்த நிலை கொண்ட வானவர்கள் பாற்கடலைச் சூழ்ந்து கடைந்தபோது வெளிப்பட்ட நஞ்சின் வெம்மை கொடுமை செய்ய, அபயம் அளித்து அதனை உட்கொண்டு இனிமையளித்த ஈசன் உறையும் கோயில், வங்கக் கடலில் ஒளிர்ந்து விளங்கும் சிப்பியும் முத்தும், மணியும், சங்கும் வாரி அலைகளில் வாயிலாக உந்திச் சேரும் சாய்க்காடு ஆகும்.

410. வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதன்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்து ஊடுசாய்க் காடே.

தெளிவுரை : ஈசன், வேதத்தை விரித்து ஓதும் திருநாவினர்; வெண்மையான பளிங்கு போன்ற குழைழைக் காதில் அணிந்துள்ளவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அணிகலனாகத் திகழும் கண்டத்தை உடையவர். அப்பெருமான் உறைகின்ற கோயில், ஆடி குருக்கப் புன்னை மரத்தின் மகரந்தத் தாது கண்டு பொழிலில் மறைந்து நின்று ஊடுதல் கொள்ளும் சாய்க்காடு ஆகும்.

411. இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன்று எடுத்த
அரக்கன் ஆக நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.

தெளிவுரை : புகழும் பொலிவும் விளங்கி மேவும் நீண்ட கயிலை மலையைப் பற்றி ஆராவாரம் செய்து எடுத்த இராவணன் உடல் நெரித்துப் பின்னர் அவன் மனங் கசிந்து போற்ற அருள் செய்த பரமன் விளங்கும் கோயில், நறுமணம் குலவி விளங்கும் மல்லிகை, சண்பகம் மற்றும் மலர்களை வரையாது வழங்கும் தருக்கள் மிகுந்த தண்பொழில் நிறைந்த சாய்க்காடு ஆகும்.

412. மாலி னோடயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
வேலை யார்விடம் உண்டவர் மேவிய கோயில்
சேலி னேர்விழி யார்மயிலாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றமாய்க் காடே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவராகவும், எதிர் நோக்காத நிலையில் பாற்கடலில் தோன்றி விடத்தை உண்டு காத்தருள் செய்த ஈசன் மேவும் கோயில், சேல் போன்ற விழியுடைய மகளிர் மயில் போன்ற நடை கொண்டு விளங்கவும், செருந்தியும், பொன்போன்ற மஞ்சள் வண்ணம் கொண்ட மலர்கள் பூத்தொளிரும் சாய்க்காடு ஆகும்.

413. ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழந்து பொலிந்தசாயக் காடே.

தெளிவுரை : சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் பிரியமாக அறிவதற்கு அரியவனாகிய ஈசன் உறைகின்ற கோயில், மாட மாளிகைகள் சூழ்ந்து விளங்குகின்ற சிறப்புடையதும் பூக்கள் நிறைந்த தூய்மையான நீர்வளம் மிக்க குளங்களும் சூழ்ந்து விளங்கும் சாய்க்காடு ஆகும்.

414. ஏனை யோர்புகழ்ந்து ஏத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும்
ஊனம் இன்றி யுரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினிது ஆள்வர்இம் மானிலத் தோரே.

தெளிவுரை : உபமன்யு முனிவர் முதலாகப் பெருமக்கள் பலரும் புகழ்ந்து பூசித்து மகிழ்ந்த எந்தை சாய்க்காட்டு நாதனை, ஞானசம்பந்தராகிய காழியர்கோன் நவின்ற இத் திருப்பதிகத்தைக் குறைவுபடாது ஓதுபவர்கள் மறுமையில் வானவர் நாட்டில் விளங்குவார்கள்; இம்மையில் - இப்பூவுலகில் புகழுடன் எல்லா வளங்களையும் உற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

175. திரு÷க்ஷத்திரக் கோவை (பொது)

திருச்சிற்றம்பலம்

415. ஆரூர்தில்லை யம்பலம் வல்லம் நல்லம்
வடகச்சியும் அச்சிறு பாக்கநல்ல
கூரூர்குட வாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்
நீரூர்வயல் நின்றியூர் குன்றியூருங்
குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீர்ளவயல் நெய்த் தானமும்
பிதற்றாய் பிறை சூடிதன் பேரிடமே.

தெளிவுரை : திருவாரூர், தில்லையம்பலம், வல்லம், நல்லம், மேலான திருக்கச்சி, அச்சிறுபாக்கம், நன்மையின் கூர்ப்புடைய குடவாயில், குடந்தை, வெண்ணியூர், திருக்கழிப்பாலை, தென்கோடிக்கரை, பீடுடைய நீர் வளமும் வயல் வளமும் பொலியும் நின்றியூர், குன்றியூர், குருகாவூர், நாரையூர், கானப்பேரூர், வயல்விளங்கு திருநெய்த்தானம் ஆகிய தலங்கள்தோறும் எழுந்தருளியுள்ள பிறை சூடிய பெருமானைத் தன்னிலை மறந்து தியானம் செய்ம்மின்.

416. அண்ணாமலை ஈங்கோயு மத்தி முத்தாறு
அகலாமுது குன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார்கழுக் குன்றம் கயிலை கோணம்
பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணி  நின்றே
எண்ணாயிர வும்பகலும் ....................
இடும் பைக்கடல் நீநதலாம் காரணமே.

தெளிவுரை : திருவண்ணாமலை, ஈங்கோய் மலை, திருமுதுகுன்றம், கொடுங்குன்றம், திருக்கண்ணார் கோயில், திருக்கழுக்குன்றம், திருக்கயிலை, திரிகோணமலை, திருக்கற்குடி, திருக்காளத்தி, திருவாட் போக்கி, பண்ணார் மொழி மங்கையாகிய உமாதேவியை பாகமாகக் கொண்டு விளங்கும் திருப்பரங்குன்றம், திருப்பருப்பதம் ஆகிய திருத்தலங்களைப் பேணி நின்று இரவும் பகலும் எண்ணித் துதிக்கத் துயர்க் கடலிலிருந்து கரையேறுதல் ஆகும்.

417. அட்டானம்என்று ஓதிய நாலிரண்டும்
அழகன்னுறை காவனைத் தும்துறைகள்
எட்டாம்திரு மூர்த்தியின் காடொன்பதும்
குளமூன்றும் களம்அஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாள்மலை மங்கைபங்கன்
மதிக்கும்இட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூர்என் றேவிரும்பாய்
அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே.

தெளிவுரை : ஈசன், வீரட்டானம் என்ற சொல்லப்படும் திருக்கண்டியூர், திருக்கடவூர், திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி, திருவதிகை, திருக்கோவலூர், திருவழுவை திருத்தலங்களில் வீற்றிருக்கும் அழகன்; திருக்கோலக்கா, திருக்குரக்கா, திருக்கோடிக்கா, திருவானைக்கா, திருநெல்லிக்கா என்ற வழங்கப் பெறும் தலங்களில் வீற்றிருப்பவன்; அன்பில் ஆலந்துறை, திருமாந்துறை, திருபாற்றுறை, கடம்பந்துறை, பராய்த்துறை, பேணு பெருந்துறை, வெண்துறை, அரத்துறை எனத் துறைகள் எட்டும் விளங்குபவன், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, திருமறைக்காடு, திருநெறிக்காரைக்காடு, திருவாலங்காடு, திருவேற்காடு, தலையாலங்காடு எனக் காடு ஒன்பதிலும் விளங்குபவன்; குளம் என்று வழங்கப்பெறும் கடிக்குளம் முதலானன மூன்ற தலங்களிலும் விளங்குபவன்; களம் என வழங்கப்பெறும் திருவேட்களம், நெடுங்களம், திருவஞ்சைக்களம் போன்ற தலங்கள் ஐந்திலும் வீற்றிருப்பவன்; பாடி என வழங்கப் பெறும் திருஎதிர்கொள்பாடி, திருமழபாடி, திருவாய்ப்பாடி, திருவலிதாயம் (பாடி என வழங்கப்படுவது) நான்கு திருத்தலங்களிலும் வீற்றிருப்பவன்; தேன் கமழும் கூந்தலை உடைய மலைமகளைப் பாகம் கொண்டு விரும்பி வீற்றிருக்கும் பாழி என வரும் அரதைப் பெரும்பாழி முதலான மூன்றிலும் விளங்குபவன். அப்பெருமான் திருப்பாசூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க, விரும்பி ஏத்திப் பரவுபவர் தம் பாவங்கள் யாவும் விலகும்.

418. அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள்ளைப்
பொடிபூசி ஆறறி வானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
திரு நனி பள்ளிசீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான்
விரும்பும் மிடைப் பள்ளிவணி சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி
உணராய்மட நெஞ்சமே உன்னி நின்றே.

தெளிவுரை : ஈசன், அறத்தின் இடமாக உள்ள அகத்தியான்பள்ளியில் திருநீறு பூசி விளங்குபவன்; கங்கை தரித்துத் திருக்காட்டுப் பள்ளியில் உறைபவன்; சிறப்பை அள்ளி வழங்கும் சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, சீர் பெருகு மயேந்திரப் பள்ளியில் வீற்றிருப்பவன். பிறப்பற்றவனாக விளங்கும் அப்பெருமான், கங்கையைச் சடையில் தரித்து விளங்க, ஆழிப் படை உடைய திருமால் அன்பால் திருவடி போற்றி வணங்கி நிற்க, பின்னும் பள்ளி என வழங்கப் பெறும் தலங்களில் விளங்கும் திருத்தலங்களை உணர்ந்த, நெஞ்சமே, போற்றித் திகழ்வாயாக.

419. ஆறைவட மாகற லம்பரையாறு
அணியார் பெரு வேரூர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூர் அகலாது
இவை காதலித் தானவன் சேர்பதியே.

தெளிவுரை : திருமாகறல், அம்பர்மாகாளம், திவையாறு, பெருவேளூர், இளமர், திருத்தெங்கூர், திருச்சேறை புகலூர் ஆகிய திருத்தலங்கள் ஈசன் சேர்பதியாகும்.

420. மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு
மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இனவஞ் சொல்இலா இடைமா மருதும்
இரும்பைப் பதிமாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால்விடை யான்விரும்பும்
கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலில் தஞ்சம்என் றேநினைமின்
தவமாமலம் ஆயின தானறுமே.

தெளிவுரை : வஞ்சம் கொண்ட மனத்துடையவர்கள் எதிர் நிற்பதற்கு அஞ்சி வெளியேற, அழகு பொருந்திய ஞானிகள் மிகுந்துள்ள கூடல் நகரில் விளங்கும் திருஆலவாயும் வன்மையான சொல் கலவாத சிறப்புடைய திருவிடைமருதூரும், இரும்பை மாகாளமும், வெற்றி மிக்க இடபத்தை வாகனமாகக் கொண்ட ஈசன் விரும்பி மேவும் தலமாகும். திருக்கருகாவூர், நல்லூர் பெரும்புலியூர் ஆகிய திருத்தலங்களில் அத்தன்மையில் விளங்கும் ஈசனைத் தஞ்சம் என்று நினைமின். அது சிறப்புடைய தவம் ஆகும்; மும்மலங்களும் அற்றுவிலகும்.

421. மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம
மயின் பீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம் பக்கம் கொட்டும்
கடல்ஒற்றியூர் மற்றுறை யூரவையும்
கோட்டூர் திருவா மாத்தூர்கோ ழம்பமும்
கொடுங் கோவலூர் திருக்குண வாயில்

தெளிவுரை : செல்வம் தழைக்கும் பாச்சிலாச்சிராமம், மயிண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், திருவொற்றியூர், உறையூர், கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர், திருக்குணவாயில், முதலான தலங்களில் ஈசன் விளங்குபவர்.

422. குலாவுதிங்கட் சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூர்அடி யார்வழிபா டொழியாத்தென்
புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றுஎடுத் தான்முடிதோள்
நெரித்தான்உறை கோயில்என்று என்றுநீ கருதே.

தெளிவுரை : திங்களைச் சடையில் தரித்து மகிழ விளங்கும் ஈசன், பரிதி நியமத்தில் விளங்குபவன். போற்றி வழிபடும் அடியவர்கள் ஓய்வின்றித் தொழுகின்ற புறம்பயம், பூவணம், பூழியூர் ஆகிய திருத்தலங்கள், கயிலையைப் பெயர்த்த அரக்கனின் தோளும் முடியும் நெரித்த ஈசன் உறைகின்ற திருத்தலம் என என்றென்றும் கருதுமின். நினைத்துப் போற்றி வழிபடுமின்.

423. நெற்குன்றம் ஓத் தூர்நிறை நீர்மருகல்
நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுர
நளிர்சோலையும் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றம் ஒன் றேந்தி மழை தடுத்த
கடல்வண்ணனு மாமல ரோனும் காணாச்
சொற்கென்றும் தொலைவிலா தானுறையும்
குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.

தெளிவுரை : நெற்குன்றம், திருவோத்தூர், திருமருகல், நெடுவாயில், திருக்குற்றாலம், வலம்புரம், திருநாகேச்சுரம், மாகாளம், திருவாய்மூர் என மேவும் தலங்களும் திருமாலும் பிரமனும் காணாத பெருமான் உறையும் குடமூக்கும் ஆகும் என ஏத்தித் தொழுமின்.

424. குத்தங்குடி வேதி சூடி புனல்சூழ்
குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும்
அலம் புஞ்சலந்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிம லன்உமை யோடுங்கூட
நெடுங்காலம் உறைவிடம்  என்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர்
நெடும் பொய்களை விட்டு நினைத்துய்மினே.

தெளிவுரை : குத்தங்குடி, வேதிகுடி, குருந்தங்குடி, தேவன்குடி என ஈசன் தங்கி விளங்கி மேவும் வண்மைமிகு குடி என மருவும் பதிகளும், பாவம் தீர்க்கும் மகிமை உடைய கங்கையைத் தன் சடையில் வைத்து உகந்த நித்தியன், நிமலன் உமாதேவியுடன் வீற்றிருக்கும் இடம் என்று புகலாத பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் கூறும் பொய்யுரைகளை ஒதுக்கி, ஈசனையும் அவன் மேவும் திருத்தலங்களையும் எண்ணித் தொழுது உய்வீராக.

425. அம்மானை அருந்தவ மாகிநின்ற
அமரர்பெநரு மான்பதியான வுன்னிக்
கெய்மாமலர்ச் சோலை குலாவு கொச்சைக்
கிறைவன் சிவஞானசம்பந்தன் சொன்ன
இம்மாலையீ ரைந்தும் இருநிலத்தில்
இரவும் பகலும் நினைந் தேத்தி நின்ற
விம்மாவெரு வாவிரும்பும் அடியார்
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

தெளிவுரை : அன்பின் தலைப்பட்டு அழகுடன் விளங்குபவனை, தவமாகிய தேவர் பெருமானை, பதிகள் தோறும் வீற்றிருக்கும் சிறப்பினை மனத்தால் தியானம் செய்து, கொச்சை என வழங்கப்பெறும் சீகாழியின் நாதனாகிய சிவஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை இரவும் பகலும் நினைந்து ஏத்தவல்ல அடியவர்கள், விதி செய்யும் ஆளுமையுடையவர்களாவர் - தலையானவர் ஆவர்; சிவபெருமான் திருவடித் தாமறைரயின்கீழ் விளங்கி மகிழ்ந்திருப்பர்.

திருச்சிற்றம்பலம்

176. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

426. எம்பிரான் எனக்கமுதம்
ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும்
தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த
காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
புரத்துறையும் வானவனே.

தெளிவுரை : எமது தலைவனாகிய ஈசன் எனக்கு அமுதமாக விளங்குபவர்; தன்னை வணங்கி அடைக்கலமாகுபவர்களுக்குத் தலைவர்; நெருப்பு ஏந்திய கையினர்; யானையின் தோலை உரித்தவர்; கபாலம் ஏந்திய கரத்தினர்; நீலகண்டர்; மணங்கமழும் பொழில் திகழும் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமை உடையவர்.

427. தாம்என்று மனந்தளராத்
தகுதியராய் உலகத்துக்கு
ஆம்என்று சரண் புகுந்தார்
தமைக் காக்கும் கருணையினான்
ஒம் என்று மறைபயில்வார்
பிரமபுரத்து உறைகின்ற
காமன்றன் னுடல்எரியக்
கனல் சேர்ந்த கண்ணானே.

தெளிவுரை : உலகில் நேரும் துன்பங்களைக் கண்டு துவளாது, யாவற்றுக்கும் இறைவனே காரணகர்த்தராய் இருந்து, திருக்குறிப்பின் வழியே நடைபெறும் தன்மைத்து எனத் தேர்ந்து அடைக்கலம் புகுந்தவர்களைக் காக்கின்ற கருணையுடையவர், ஈசன். அப் பெருமான் ஓம் என்று மறையவர்களால் போற்றப்படுகின்ற இறைவன். அவர் மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணுடையவராய் விளங்கிப் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

428. நன்னெஞ்சே உனைஇரந்தே
நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருக்கண்டாய்
உய்வதனை வேண்டுதியேல்
அன்னம்சேர் பிரமபுரத்து
ஆரமுதை எப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே
பார்கண்ணே பரிந்திடவே.

தெளிவுரை : நல்ல நெஞ்சமே ! நின்னை இறைவனுக்கு அடைக்கலமாக்கி, நீ உய்தி பெற வேண்டுமென்று கருதினால் அன்னப் பறவை விளங்குகின்ற பிரமாபுரத்தில் வீற்றிருக்கும் அமுதம் போன்ற ஈசனை எப்போதும் வாயார வாழ்த்தி அவன் திருக்கோலத்தைக் கண்ணாரக் காண்பாயாக.

429. சாநாளின்றி மனமே
சங்கைதனைத் தவிர்பிக்கும்
கோன்ஆளும் திருவடிக்கே
கொழுமலர்தூ வெத்தனையும்
தேனாளும் பொழிற்பிரம
புரத்துறையும் தீவணனை
நாநாளு நன்னியமம்
செய்தவன்சீர் நவின்றேத்தே.

தெளிவுரை : மனமே ! சாகும் நாள் வரும் என்று சந்தேகம் கொள்ளற்க. அதனைத் தவிர்க்கும் பெருமான் நின்னை ஆள்பவன். அவன் திருவடிக்கே வளமையான மலர் தூவி எவ்வகைத் தன்மையாலும் ஏத்துக. தேன் விளங்கும் பொழில் கொண்ட பிரமபுரத்தில் உறையும் தீவண்ணம் உடைய நாதனை நாவானது நாள்தோறும் நியமத்துடனும் ஆசார சீலத்துடனும் நவின்று ஏத்துக.

430. கண்ணுதலான் வெண்ணீற்றான்
கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான்
பிஞ்ஞகன் பேர் பலஉடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப்
பிரமபுரம் தொழவிரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை
இயல்பாக அறிந்தோமே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் கண்ணுடையவன்; திருநீற்றைப் பூசிய மேனியுடையவன்; மணம் மிக்க சடை உடையவன்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவன்; மங்கையோர் கூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவன்; பிஞ்ஞகன் முதலான பேர் ஆயிரம் உடையவன், அப்பெருமான் பெருமையுடன் உயர்வு கொண்டு விளங்கும் புகழ்மிக்க பிரமபுரத்தைத் தொழ வேண்டும் என்னும் எண்ணம் கொள்ளுதலே சிறப்பான செல்வமாகும். அதனை நாம் இயற்கையாக அறிந்தனம்.

431. எங்கேனும் யாதாகிப்
பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கே என்ற அருள்புரியும்
எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக்
குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத்து ஒளிர்மேனிச்
சங்கரன்றன் தன்மைகளே.

தெளிவுரை : எந்த இடத்தில் எவ்வகையில் பிரந்தாலும் தன்னடியார்க்கு அருள் புரியும் பெருமான், இடப வாகனத்தில் ஏறி தேன் மலர்ச் சோலை சூழ் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் சங்கு போன்று ஒளிர்கின்ற திருமேனியுடைய சங்கரன் ஆவான்.

432. சிலையதுவெஞ் சிலையாகத்
திரிபுரமூன்று எரிசெய்த
இலைநுனை வேற் றடக்கையன்
ஏந்திழையாள் ஒருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத்து
அருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வ
நீடுலகிற் பெறலாமே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த சூலப்படையுடைய ஈசன், உமாதேவியை ஒரு கூறாக உடையவன். நீர் சூழ்ந்த பிரமபுரத்தில் வீற்றிருக்கும் அருமணியைப் போன்று மேவும் அப் பெருமானைப் பணிந்து போற்ற நிலைத்த தன்மையுடைய பெருஞ் செல்வமானது இவ்வுலகில் பெறலாம். இது இம்மை நலம் சார்தலை நன்கு உணர்த்திற்று. அருளால் பெரும் செல்வம் மறுமைக்கும் நிலைக்களமாகும் என்பது குறிப்பு.

433. எரித்த மயிர் வாளரக்கன்
வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி
நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான்
உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும்
பெறுவார்தாம் தக்காரே.

தெளிவுரை : மலை எடுத்த இராவணனுடைய தோளும் தாளும் நெரித்தும், பின்னர் அருள் நல்கியும், நீறணிந்த மேனியனாகிய சிவமூர்த்தி புலித்தோலை உடையாகக் கொண்டவன். அப் பெருமான் உறைகின்ற பிரமபுரத்தை எப்போதும் மனத்தில் எண்ணித் துதிப்பவர்கள், தக்க பெருந்தகையாளர்களாக எக் காலத்திலும் திகழ்வார்கள்.

434. கரியானு நான்முகனும்
காணாமைக் கானலுருவாய்
அரியானாம் பரமேட்டி
அரவம்சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்துறையும்
திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும்
உடன்ஆள உரியாரே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண முடியாத கனலுருவாய் அரியவனாய் விளங்கும் பரமன், அரவம் பூண்ட திருமார்பினன்; மனத்திற்கும் அறிவிற்கும் தெரியாத தத்துடன்; பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான். அத்தகைய ஈசனை வணங்கித் தொழுபவர்கள் ஏழுலகத்திலும் ஆளும் உடமையுடையவர் ஆவர்.

435. உடையிலார் சீவரத்தார்
தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்தலைக்கை
மூர்த்தியாம் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும்
பொழிற்பிரம புரத்துøயும்
சடையிலார் வெண்பிறையான்
தாள்பணிவார் தக்காரே.

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் உணர்தற்கு அரியவனாகிய ஈசன் பிரம கபாலம் ஏந்திய மூர்த்தியாகிய கோலம் உடையவன். வண்டுகள் சூழ்ந்த பொழிலுடைய பிரமபுரத்தில் உறையம் அப்பெருமான் சடையில் வெண்பிறை சூடி விளங்க, அவன் திருத்தாளைப் பணிபவர்கள் எல்லாத் தகுதிகளும் உடையவராய் விளங்கவார்கள்.

436. தன்னடைந்தார்க்கு இன்பங்கள்
தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம
புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன்
மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள்
பலவடைந்தார் புண்ணியரே.

தெளிவுரை : தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு இன்பம் நல்கும் தத்துவன் பிரமபுரத்துறையும் பரமன். அப் பெருமானை முதற்கண் சார்ந்த ஞானசம்பந்தர் பொழிந்த திருப்பதிகத்தை ஓதுவல்லவர்கள் பொன்னுலகத்தை அடைந்து பெற்ற போகங்கள் யாவும் இம்மையில் பெற்றவர்களாயும், மறுமைக்குரிய நறபேற்றுக்குப் புண்ணியர்களாயும் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

177. திருசாய்க்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

437. மண்புகார் வான்புகுவர்
மனம்இளையார் பசியாலும்
கண்புகார் பிணியறியார்
கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் என வேண்டா
வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந்
தலைவன்தான் சார்ந்தாரே.

தெளிவுரை : நெடுமாட வீதிகளை உடைய சாயக்காட்டில் வீற்றிருக்கும் பெருமானைச் சார்ந்தவர்கள், மண்ணில் உளைந்து வருந்த மாட்டார்கள்; சிறப்பான வானுலகம் சென்று மகிழ்வர்; மனத்தில் வருத்தம் அடையாதவர்; பசியாலும் வருந்த மாட்டார்கள்; பிணி காணாதவர். அப்பெருமானைத் தரிசித்து மகிழ்ந்தவரும் விண்ணுலகம் சென்று நலம் பெற வேண்டும் என்னும் வரம்பு இன்றி இவ்வுலகிலேயே அனைத்தும் வாய்க்கப் பெறுவார்கள்.

438. போய்க் காடே மறைந்துறைதல்
புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக
உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே
இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும்
பெரியோர்கள் பெருமானே.

தெளிவுரை : வனத்தின்கண் மறைந்து உறையும் தன்மை உடையவனும், பூம்புகாரின் புடை விளங்கும் சாய்க்காடு என்னும் பதியில் வீற்றிருப்பவனும், இடப வாகனத்தை உடையவனும், இடுகாட்டில் இருந்து பேய்க் கூட்டத்தின் இடையில் ஆடல் புரிந்த பெருமானும், பெரியவர்கள் எல்லாரும் வணங்கிப் போற்றும் ஈசன் ஆவார்.

439. நீநாளு நன்னெஞ் சே
நினைகண் டாய் ஆரறிவார்
சாநாளும் வாழ்நாளும்
சாயக்காட்டெம் பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்பப்
புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளு நவின்றேத்தப்
பெறலாமே நல்வினையே.

தெளிவுரை : நல்ல நெஞ்சமே ! நாள்தோறும் நினைத்து இறைவனை வணங்கு. சாகின்ற நாளும், உலகில் வாழ்கின்ற நாளும் யாரும் கணக்கிட்டுக் கூற முடியாது. சாய்க்காட்டில் வீற்றிருக்கும் ஈசனுக்கு நாள்தோறும் மலர்கள் சுமந்து சென்றும் அவனுடைய புகழ் மிக்க திருநாமங்களைச் செவிகள் நன்கு கேட்குமாறும் புரிவாயாக. நாவானது நாள்தோறும் அப்பெருமான் திருநாமங்களை நவின்று ஏத்தி வழிபட, நல்வினையைப் பெறலாம்.

440. கட்டலர்த்த மலர்தூவிக்
கைதொழு மின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி
கோங்மரும் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை
முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாயக்காட்டெம்
பரமேட்டி பாதமே.

தெளிவுரை : நன்கு மலர்ந்த மலர்களைச் செருந்தி, கோங்கு முதலானவற்றைக் கொண்டு, அழகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பக்கம் சார்ந்ததுள்ள பரமேட்டியாய் விளங்கம் சாய்க்காட்டில் வீற்றிருக்கும் பெருமானின் திருப்பாத மலர்களை வழிபடுவீராக.

441. கோங்கன்ன குவிமுலையாள்
கொழும்பணைத்தோள் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான்
படர்சடைமேற் பால்மதியம்
தாங்கினான் பூம்புகார்ச்
சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினார்
எனஉரைக்கும் உலகமே.

தெளிவுரை : கோங்கு மலர் போன்ற தனங்களும், திரண்ட, மூங்கில் போன்ற தோள்களும், கொடி போன்ற மெல்லிய இடையும் உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு உகந்த பரமன், பரந்த சடையின்மேல் பால் போன்ற வெண்மையான சந்திரனைச் சூடி, பூம்புகார் நகரின் மருங்கில் விளங்கும் சாய்க்காட்டுநாதன் திருத்தாள் பணிந்து விளங்குபவர்கள், உலகில் நன்கு ஓங்கியவர்களாவார்கள்.

442. சாந்தாக நீறணிந்தான்
சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச்
செற்றுகந்தான் திருமடிமேல்
ஓய்ந்தார மதிசூடி
ஒளிதிகழு மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா
உடையானும் விடையானே.

தெளிவுரை : ஈசன், சாந்தம் தரும் திருநீற்றைக் குழைத்து அணிபவன், சாய்க்காட்டில் வீற்றிருக்கும் அப்பெருமான், மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கதடை தடித்தவன்; திருமுடியின் மீது, அச்சம் இன்றி, நன்கு விளங்குமாறு சந்திரனைச் சூடி, இருக்கச் செய்தவன். ஒளிதிகழும் மலைமகளாகிய உமா தேவியைத் தமது திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவனாகிய அவ் இறைவன், இடப வாகனத்தை உடைய ஈசனே.

443. மங்குல்தோய் மணிமாட
மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாம் கரைபொருது
திரைபுலம்பும் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின்
இசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச்
சுவர்கங்கள் பொருளலவே

தெளிவுரை : மேகம் தோயும் உயர்ந்த மணிமாடங்களும், மதிதவழும் ஒளிமிக்க நெடிய வீதிகளும், சங்குகள் கரையில் சேர்ந்து திகழ கடல் அலைகள் வீசும் சிறப்புடைய சாய்க்காட்டில் விளங்குகின்றவன், இறைவன். அப் பெருமான் தேன் அருந்திய வண்டுகள் இசை எழுப்பிச் சூழும், கொன்றை மலர் மாலை அணிந்து விளங்குபவன். அவனை வணங்குகின்ற அடியவர்கள் சொர்க்கலோகத்தைப் பெரிதாகக் கருத மாட்டார்கள்.

444. தொடலரிய தொருகணையாற்
புரமூன்றும் எரியுண்ணப்
படஅரவத்து எழிலாரம்
பூண்டான் பண்டு அரக்கனையும்
தடவரையால் தடவரைத் தோள்
ஊன்றினான் சாய்க்காட்டை
இடவகையா அடைவோம் என்று
எண்ணுவார்க்கு இடரிலையே.

தெளிவுரை : தொடுவதற்கும் அரியதாகிய ஒப்பற்ற கணையைக் கொண்டு மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, படம் கொண்ட அரவத்தை எழில் மிக்க ஆரமாகப் பூண்ட ஈசன், இராவணனுடைய மலை போன்ற தோள்கள் நெரியுமாறு அகன்று விளங்கும் கயிலை மலையால், திருப்பாத விரல் பொருந்தும் வண்ணம் ஊன்றினான். அவ் இறைவன் வீற்றிருக்கும் சாய்க்காட்டினைத் தலவாசம் கொள்வோம் எனக் கருதும் அடியவர்களுக்கு எத்தகைய இடரும் இல்லை.

445. வையநீர் ஏற்றானு(ம்)
மலர்உறையு நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும்
அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோவாச்
சாய்க்காடெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார்
தெளிவுடைமை தேறோமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அளத்தற்கு அரியவனாய் விளங்கிய பரமன், பெருமையுடன், மகளிர் புகழ்ப் பாடல்களாகக் கூறும் சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளான். அப் பெருமானைத் தெய்வமாகப் பேணி வணங்காதவர், தெளிவுள்ளவர் என்று கருத முடியாது.

446. குறங்காட்டு நால்விரற்
கோவணத்துக் கொலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும்
சாக்கியரும் அலர்தூற்றம்
திறங்காட்டல் கேளாதே
தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான்
பூம்புகார்ச் சாய்க்காடே.

தெளிவுரை : கோவண ஆடை தரித்துள்ள சமணரும் சாக்கியரும் பழச் சொற்கள் கூறினாலும், அவற்றை ஏற்காது, சிவஞானத்தில் திளைத்திருக்கும் தெளிவுடையீர் ! மயானத்தில் ஆடல் புரியும் பரமன் வீற்றிருக்கும் சாய்க்காடு சென்று வழிபட்டு எல்லாப் பேறுகளையும் அடைந்த மகிழ்வீராக.

447. நொம்பைந்து புடைத்தொல்கு
நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும்
அரவம் செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த
சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்தம் எனக்கருதி
ஏத்துவார்க்கு இடர்கெடுமே.

தெளிவுரை : சிலம்பு அணிந்த மகளிர் பந்து ஆட, மென்மையான பாதங்களை உடைய அவர்கள் குதித்தாடும் ஒலியும், அழகிய பந்தின் ஒலியும் விளங்கும், மணம் கமழும் சீகாழியில் மேவும் ஞானசம்பந்தர் தமிழ் என வழங்கப் பெறும் இத் திருப்பதிகத்தை, எனக்குப் பற்றாக விளங்கி நன்மை புரிய வல்லது எனக் கருதி ஏத்தி, பாராயணம் செய்யும் அடியவர்களின் இடர் யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

178. திருஆக்கூர்- தான்தோன்றிமாடம் (அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

448. அக்கிருந்த ஆரமும்
ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான்
தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல் கோயில்
பொய்யில்லா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : எலும்பு மாலையும், ஆடுகின்ற அரவும், ஆமையின் ஓடும் விளங்குகின்ற திருமார்பினனாகிய ஈசன், புலித்தோலை உடையாகக் கொண்டவன்; திருநீறு பூசியவன். அப் பெருமான் வீற்றிருக்கும் தொன்மையான கோயில், மெய்ந்நெறியார் விளங்குகின்ற ஆக்கூரின் தான்தோன்றிமாடம் ஆகும்.

449. நீரார வார்சடையா(ன்)
நீறுடையான் ஏறுடையான்
காரார்பூங் கொன்றையினான்
காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக்
கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல்கு ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஈசன், கங்கை தரித்த சடையுடையவன்; திருநீறு பூசியவன்; இடபத்தை வாகனமாக உடையவன்; கொன்றைமாலை சூடியவன்; அப்பெருமான் விரும்பிய தொன்மையான கோயில், மீன் வகைகளை வாயில் கவ்விய பறவைகள் கரையில் வைத்துப் பெருகும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம்.

450. வாளார்கண் செந்துவர்வாய்
மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள்
வள்ளனமையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஒளிமிக்க கண்ணும், பவளம் போன்ற வாயும் உடைய மலை அரசன் மகளாகிய உமா தேவியைப் பாகமாகக் கொண்டு, அர்த்தநாரீஸ்வரராகத் திகழும் பரமன் விளங்கும் தொன்மையான கோயில், வேளாளர்கள் வள்ளன்மை மிக்க விளங்கி, அற்றவர்களைத் தாங்கும் தாளாளர்களாய் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும்.

451.கொங்குசேர் தண்கொன்றை
மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர்
வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும்
அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : தேன் விளங்கும் குளிர்ந்த கொன்றை மாலையுடைய ஈசன், கூற்றுவன் வதைப்படுமாறு சினந்தவன்; மேலான ஒளியைத் தருகின்ற திருவெண்ணீறு தரித்தவன். அப்பெருமான் விளங்குகின்ற கோயில், வேதத்தின் ஆறு அங்கங்களும், அரிய மறைகள் நான்கும், ஐந்து வகையான வேள்விகளும் ஆற்றி ஒழுகும் சீலர்கள் உள்ள ஆக்கூரில் திகழும் தான் தோன்றிமாடம் ஆகும்.

452. வீக்கினான் ஆடரவம்
வீழ்ந்தழிந்தார் வெண்தலைஎன்பு
ஆக்கினான் பலகலன்கள்
ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில்
ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஈசன், ஆடுகின்ற அரவத்தைக் கச்சையாகக் கட்டி, இறந்தவரின் தலையும் எலும்பும் அணிகலன்களாய்க் கொண்டு, உமாதேவியைப் பாகமாக வைத்து விளங்குபவன். அப்பெருமானின் தொன்மையான கோயில், ஆம்பலும் மற்றும் அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையும் விளங்க மேவும் ஆக்கூரில் இருக்கும் தான்தோன்றிமாடம் ஆகும்.

453. பண்ணொளிசேர் நான்மறையான்
பாடலினோடு ஆடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான்
காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியம்
தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஈசன், பண்ணின் பெருமையுடன் விளங்கம் நான்மறையானவன்; பாடலும் ஆடலும் உடையவன்; அக்கினியின் ஒளி தரும் கண்ணை நெற்றியில் கொண்டு விளங்குபவன்; அப்பெருமான் விரும்பும் தொன்மையான கோயில், வானில் விளங்கும் வெண்மதி, மாடங்களில் புகுந்து தண்ணொளிகாட்டும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் ஆகும்.

454. வீங்கினார் மும் மதிலும்
வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள்
வந்திறைஞ்சும் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோடு
ஆறங்கம் பல கலைகள்
தாங்கினார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஆணவமலத்தால் வீங்கிப்பெருத்து மாயை மிகுந்த அசுரர்களின் முப்புரத்தை, மேருமலையை வில்லாகக் கொண்டு, எரிந்து சாம்பலாகுமாறு செய்து வானவர்கள் வந்து தொழுது போற்றும் ஈசனார் விளங்கும் தொன்மையான கோயில், நான்கு மறைகளும் ஆறு அங்கங்களும் வல்ல மறையவர்கள் விளங்கும் ஆக்கூரில் இருக்கும் தான்தோன்றிமாடம் ஆகும்.

455. கன்னெடிய குன்றெ டுத்தான்
தோள் அடரக் காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட
எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாள்தோறும்
பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : கல்லின் கடினம் கொண்ட நெடிய கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள் நெரியுமாறு, திருப்பாதம் ஊன்றி, அருள் புரிந்து ஆட்கொண்ட எம்பெருமானாகிய ஈசன் விளங்கும் தொன்மையான கோயில், பரமன் திருவடிக்கே நாள்தோறும் பூக்களும், அபிடேக நீர்க்குடமும் சுமக்கும் அடியவர்கள் மேவும். ஆக்கூரின் தான்தோன்றிமாடம் ஆகும்.

456. நன்மையா னாரமனு
நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றம்கேடு
இல்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்றிரந்தார்க்கு
இல்லை என்னாது ஈந்துவக்கும்
தன்மையோர் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : நன்மை செய்யும் தொழிற்கர்த்தராய் விளங்கும் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரிய தொன்மைப் பொருளாகிய ஈசன், தோற்றமும் இறுதியும் அற்றவன். அப்பெருமான் விளங்கும் தொன்மையான கோயில், இல்லை என்று வருவோர்க்கு இல்லை என்னாது வழங்குகின்ற, சான்றோர் பெருமக்கள் வாழும் ஆக்கூரின்கண் உள்ணுள, தான்தோன்றிமாடம் ஆகும்.

457. நாமருவு புன்மை
நவிற்றச் சமண் தேரர்
பூமருவு கொன்றையினான்
புக்கமரும் தொல்கோயில்
சேல்மருவு பங்கயத்துச்
செங்கழு நீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : சமணரும் தேரரும் புன்மையான சொற்களைக் கூறினும், கொன்றைமாலை சூடிய ஈசன் மருவி விளங்கும் தொன்மையான கோயில், சேல் (மீன்) மருவி தாமரைமலர்களும் குவளை மலர்களும், செங்கழுநீர்ப் பூக்களும் விளங்க நீர் வளம் மிக்க ஆக்கூரின் தான்தோன்றிமாடம் ஆகும்.

458. ஆடல் அமர்ந்தானை
ஆக்கூரிற் றான்றோன்றி
மாடம் அமர்ந்தானை
மாடஞ்சேர் தண்காழி
நாடற்கு அரியசீர்
ஞானசம் பந்தன்சொல்
பாடல் இவை வல்லார்க்கு
இல்லையாம் பாவமே.

தெளிவுரை : ஆடல் புரிவதில் விரும்பிய ஈசன் ஆக்கூரின் தான்தோன்றிமாடத்தில் அமர்ந்துள்ள பரமன். அப்பெருமானை, மாடமாளிகைகள் கொண்ட சீகாழியில் விளங்கும், நாடுதற்கு அரிய சிறப்புடைய ஞானசம்பந்தர் சொற்பாடலால் சொல்ல, அதனை ஓத வல்லவர்களுக்குப் பாவம் என்பது இல்லாமை ஆகும்; வினையாயின யாவும் தீரும் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

179. திருப்புள்ளிருக்குவேளூர் (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

459. கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தம் கதிர்மதியும்
உள்ளார்ந்த சடைமுடியெம்
பெருமானார் உறையும் இடம்
தள்ளாய் சம்பாதி
சடாயுயென்பார் தாமிருவர்
புள்ளானார்க்கு அரையன்இடம்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : தேன் விளங்கும் பூங்கொன்றை, ஊமத்த மலர்களும், ஒளிக்கதிர் வீசும் சந்திரனும் பொருந்திய சடைமுடியுடைய எம்பெருமானாகிய ஈசன் உறையும் இடம், சம்பாதி சடாயு என்னும் இரு பறவைப் பிறப்புடைய இருவரும் வழிபாடு செய்த புள்ளிருக்கு வேளூர் ஆகும்.

460. தையலார் ஒருபாகம்
சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந்து உழல்வாரோர்
அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை
மேலோடி ஈடழித்துப்
பொய்சொல்லாது உயிர்போனான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : தையல் நாயகி என்னும் திருநாமம் தாங்கிய தேவி (திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் பெயர்) ஒரு பாகத்தில் உடனாகி விளங்க, கங்கையைச் சடையில் தரித்து, பிரம கபாலம் ஏந்திப் பிச்சை எடுத்தலைத் தேர்ந்து திரிந்தவரும் வேதியரும் ஆகிய ஈசன் உறையும் இடம், மெய் புகலாத இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது, அவன்மேல் பாய்ந்து செற்றுப் பெருமையை அழித்துப் பொய் புகலாது உயிர் நீத்த சடாயு போற்றி வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

461. வாசநலம் செய்திமையோர்
நாடோறு மலர்தூவ
ஈசன்எம் பெருமானார்
இனிதாக உறையும்இடம்
யோசனைபோய்ப் பூக் கொணர்ந்துஅங்கு
ஒருநாளும் ஒழியாமே
பூசனைசெய்து இனதிருந்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : தேவர்கள் எல்லாம் நாள்தோறும் மலர் தூவி அர்ச்சனை செய்ய, எம்பெருமானாகிய ஈசன் இனிதாக உறையும் இடம் ஒரு யோசனை தெலைவில் உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து தினந்தோறும் பூக்களைக் கொண்டு வந்து சம்பாதி என்னும் புள், பூசனை செய்த புள்ளிருக்குவேளூர் ஆகும்.

462. மாகாயம் பெரியதொரு
மானுரிதோல் உடையாடை
ஏகாய மிட்டுகந்த
எரியாடி உறையுமிடம்
ஆகாயம் தேரோடும்
இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : சிறப்பான திருமேனியில் மான் தோலை உடையாகக் கொண்டு தடையில்லாதபடி நெருப்பேந்தி மயானத்தில் நடம்புரிந்த ஈசன் உறையும் ஈடம், புட்பக விமானத்தில் ஆகாய வழியாகச் சென்ற இராவணனுடைய பலத்தை அழித்த சடாயு வழிபாடு செய்த புள்ளிருக்குவேளூரே ஆகும்.

463. கீதத்தை மிகப்பாடும்
அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழுநின்ற
பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால்
வெண் மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : பக்திப் பாடல்களைப் பாடி பாதத்தையே இருப்பிடமாகக் கொண்டு போற்றும் அடியவர்கள் தொழுது வாழ்த்தும் பரஞ்சோதியாகிய ஈசன் விளங்கும் இடம், மணலைச் சிவலிங்கமாக அமைத்து சம்பாதி வேதமந்திரம் கொண்டு வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

464. திறங்கொண்ட அடியார்மேல்
தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்
உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன்றன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயுஎன்பான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : உறுதியான பற்றுக் கொண்ட அடியவர்மேல் தீவினையானது வாராதவாறு காத்தருள் புரிந்தும், சனகாதி முனிவர்களுக்குக் கல்லால மரநிழலில் வீற்றிருந்து அறம் உரைத்து அருள் புரிந்தும் விளங்கும் ஈசன் அமரும் இடம், அறநெறி நீத்து மறங் கொண்ட இராவணனைப் புறங்காணுமாறு செய்த சடாயு என்பவன் பூசித்து விளங்கும் புள்ளிருக்கு வேளூர் ஆகும்.

465. அத்தியினீர் உரிமூடி
அழகாக அனலேந்திப்
பித்தரைப் போல் பலிதிரியும்
பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப்
பலகாலந் தவம்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்தும், நெருப்பினை அழகு பொலியக் கரத்தில் ஏந்தியும், பித்தரைப் போன்று கபாலம் ஏந்திப் பலி கொண்டு பெருமான் விரும்பும் இடம், சம்பாதி என்னும் பறவை பக்தியுடன் வழிபட்டும் தவம் செய்தும் ஒன்றி விளங்கும் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

466. பண்ணொற்ற இசைபாடும்
அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கு
மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி
வாணாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : பண் ஒன்றி விளங்குமாறு இறைவன் புகழ்ப் பாடல்களைப் பாடும் அடியவர்கள், நிலைத்து மகிழ்வதற்குப் பூவுலகத்தில் விளங்கும் இம்மை நலன் மட்டுமன்றி, முத்திப் பேற்றையும் கொடுத்து அருள்கின்ற மணிகண்டனாகிய ஈசன் மருவி விளங்கும் இடம், எண்ணும் அளவின்றி முக்கோடி ஆண்டுகள் வாழ் நாளுடைய இராவணனுடைய மேனி புண் கொண்டு துன்புறுமாறு செய்து சடாயு பூசித்து விளங்கும் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

467. வேதித்தார் புரமூன்றும்
வெங்கணையாய் வெந்தவியச்
சாதித்த வில்லாளி
கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகன்என்ன
அகல்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயுஎன்பான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : பகை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை வலிமையான கணை தொடுத்து வெந்து எரிந்து சாம்பலாகுமாறு செய்த, மேருமலையை வில்லாக உடைய, நெற்றிக்கண் கொண்ட ஈசன், சார்ந்து விளங்கும் இடம், ஆதித்தன் மக்களாகிய சம்பாதி, சடாயு இருவரும் உலகில் போற்றி வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

468. கடுத்துவரும் கங்கைதனைக்
கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார்
தாம்இனிதாய் உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன்
மலங்கச் சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : சீறிப் பாய்ந்து வரும் கங்கையை, கமழும் சடையில் தளும்பிச் செல்லாதவாறு தடுத்துப் பொருந்திய எம்பெருமானாகிய ஈசன், இனிய பாங்கில் உறையும் இடம், குற்றப்படுத்திய இராவணன் புபுடைத்தவனாகிய சடாயு வணங்கி வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

469. செடியாய உடல் தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக்கு அடிமை செய்த
புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக்
கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்கு
இல்லையா மறுபிறப்பே.

தெளிவுரை : குற்றம் நேரும் தன்மையுடைய உடலைக் கொள்கின்ற பிறவியைக் களைந்தும், உடலில் தீவினையால் உண்டாகும் பிணியைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குபவன், இத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள வைத்தியநாதன். அப்பெருமான், திருநீற்றினை நன்கு மகிழ்ந்து பூசியவன். அத்தகைய பரமனுக்கு, அடிமை செய்து வணங்கிப் போற்றி புள்ளிருக்குவேளூரை, (புள், இருக்கு (வேதம்), வேள் (முருகப் பெருமான்). ஊர் (சூரியன்)), மணம் கமழும் பொழில் திகழும் சீகாழியின் கவுணியர் கோத்திரத்தின் மரபில் திகழும் ஞானசம்பந்தர் சொல்லிய, இத் திருப்பதிகத்தை விருப்பத்துடன் சொல்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

திருச்சிற்றம்பலம்

180. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

470. துன்னம்பெய் கோவணமும் தோலும் உடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.

தெளிவுரை : தைக்கப் பெற்ற கோவணத்தையும் தோலையும் உடுத்துகின்ற ஆடையாகவும், பின்னிய சடை முடியின்மேல் இளைய பிறைச் சந்திரனைச் சூடியும் அன்னப் பறவைகள் சேர்ந்து வாழும் குளிர்ந்த சோலைகள் உடைய ஆமாத்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அழகிய தலைவனாகிய ஈசனின் பொன் போன்ற திருக்கழலைப் போற்றி வணங்காதிருப்பின் குற்றம் எனக் கருதுதல் ஆகும். திருவடி பணிதல் கடமை என உணர்த்தியது.

471. கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதில்எய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்எம்
பெம்மான்என்று ஏத்தாதார் பேயரிற் பேயரே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்ட பரமனே ! பிரம கபாலம் ஏந்திய நாதனே ! முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய முக்கண்ணுடைய முதல்வனே ! என்ப பலவாறு விளங்கும் பெரும் புகழ்ச் செய்லகளைப் போற்றியுரைத்து, அழகிய சிறப்பு மிக்க மலர்ச் சோலையுடைய ஆமாத்தூரில் மேவும் அழகிய நாதரை, எம்பெருமான் என்று ஏத்தி வணங்காதவர் பேய்த் தன்மையுடைய கீழோர் ஆவர்.

472. பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.

தெளிவுரை : பாம்பினை அரையில் கட்டி, பண்டரங்கம் என்னும் திருக்கூத்து ஆடிய ஈசன், பிறைச் சந்திரனைச் சூடிய சென்னியுடையவன். அப்பெருமான் ஆம்பல் மற்றும் அழகிய பூக்கள் நிறைந்த பொய்கை உடைய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் அழகிய நாதன். அப்பரமன், விரிந்த மார்பில் திருநீறு கொண்டு விளங்க, அவனைச் சார்ந்து விளங்குதலே மெய்யான சார்பாகும். மற்றது சார்பு ஆகாது.

473. கோணாகப் பேரல்குல் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி அவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே.

தெளிவுரை : வளைத்த படங்கொண்ட நாகத்தைப் போன்ற அல்குல் உடைய வளையல் அணிந்த மாதரசி ஆகிய உமாதேவியை உடம்பில் பூண்கின்ற அழகிய அணிகலன் போன்று பாகமாகச் சேர்த்து, அப்பிராட்டியோடும், ஆண் வடிவத்தை விரும்பிப் போற்றும் பிருங்கி முனிவர் போற்ற விளங்கும் ஆமாத்தூர் என்னும் பதியில் வீற்றிருக்கும் அழகிய நாதனைக் காணாத கண்கள், உண்மையைக் காண்பதற்கு இயலாத ஊனக் கண்களே ஆகும்.

474. பாட னெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூட னெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆட னெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.

தெளிவுரை : போற்றி வணங்குகின்ற வேதம் முதலானவை புகலும் மொழிகளில் விளங்கி நிற்கும் இறைவன், கொன்றைமாலை சூடி, சூலப் படையைக் கையில் கொண்டு திருநடனம் புரியும் நெறியில் விளங்குகின்றவர் ஆமாத்தூரின் அழகிய நாதன். அப் பெருமான் விளங்கும் திருக்கோலத்தில் அமையாது, புறம்பான வேடத்திலும் அலங்காரத்திலும் இருப்பது பொருத்தமன்று.

475. சாமவரை வில்லாகச் சந்தித்து வெங்கணையால்
காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவரும் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த நெற்றிக் கண்ணுடைய ஈசன், யாவரும் சென்று வணங்கும், ஆமாத்தாரில் விளங்கும் பெருமான். தேவர்க்கும் தேவனாகிய அப்பெருமான், வானவர்களால் தொழுது வணங்கப்படுபவராவார்.

476. மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே.

தெளிவுரை : தனது நோக்கத்தில் மாறாதவனாய் மார்க்கண்டேயர் உயிரைக் கவர வந்த கூற்றுவனை வதைத்து, மலைமகளைத் தனது ஒரு பாகமாக வரித்துக் கூறாக்கி அர்த்தநாரித் திருக்கோலத்தில் விளங்கி, நெருப்பைக் கரத்தில் கொண்டு நடம் புரியும் ஆமாத்தூர் நாதனைப் போற்றிப் புகழாத நாவானது, நாவின் சிறப்பற்றது.

477. தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்றன்
நாளத திரையென்றே நம்பன்ற(ன்) நாமத்தால்
ஆளா னார்சென் றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய தோள்களைத் தனது திருப்பாதத்தால் வதை செய்த ஈசன் திருநாள் ஆதிரை. ஆதிரையான் என்று, அப் பெருமான் திருநாமத்தைச் சொல்லி, நற்பேறு பெற்ற சீலர்கள், சென்று ஏத்தி வழிபடும் ஆமாத்தூர் மேவிய நாதனையும் அப் பெருமானுடைய சிறப்புக்களையும், செவியில் கொள்ளாத செவிகள் பயனற்றிதாகும்.

478. புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளும் அவன்பெருமை ஒப்பளக்கும் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான்எம்
வள்ளல் கழல்பரவா வாழக்கையும் வாழ்க்கையே.

தெளிவுரை : கருடவாகனமும், கரத்தில் தாமரை மலரும் கொண்டுள்ள திருமாலும், தாமரை மலர் மீத விளங்கும் பிரமனும், நினைத்து ஏத்தும் பெருமை அளக்கின்ற தன்மை உடையதோ ! சேறுகொண்டு விளங்கும் வளம் மிக்க கழனிகளையுடைய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் இறைவன், எம் வள்ளல். அப் பெருமானுடைய திருக்கழலைப் பரவிப் போற்றாத வாழ்க்கையும் வாழ்க்கை ஆகாது. மக்கட் பிறவியின் பெருமை ஈசனை வணங்குதற்கு உரித்து என்பது குறிப்பு.

479. பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக்கு ஈந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்திப் பிறர் இடுகின்ற பிச்சைப் பண்டங்களை விரும்பி ஏற்ற, யானையின் தோலை உரித்துப் போர்த்து உகந்து, உமாதேவி வெருண்டு அச்சப்பட்டு நிற்குமாறு செய்த ஈசன், ஆமாத்தூரில் நித்தியனாய் வீற்றிருக்கும் பெருமான். அப் பெருமானை நினைத்துப் போற்றாத நெஞ்சம் நல்ல நெஞ்சம் எனல் ஆகாது.

480. ஆடல் அரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோடல் இரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : அரவத்தைத் தரித்த ஆமாத்தூர் நாதனை, சீகாழியில் விளங்கம், நாடுதற்கு அரிய சிறப்புடைய ஞானசம்பந்தர் திருப்பதிகமாகிய இத் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போற்ற வல்லவர்களின் பாவம் விலகும்.

திருச்சிற்றம்பலம்

181. திருக்கைச்சினம் (அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

481. தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகத்தில் வரித்தவன்; பிறைச் சந்திரனைச் சூடி சிவந்த சடை உடையவன்; நீலகண்டத்தை உடையவன்; வேதம் விரித்து இசைப்பவன்; சூலப்படை உடையவன்; வேதம் விரித்து இசைப்பவன்; சூலப்படை உடையவன்; பரந்த ஒளி திகழும் தேவேந்திரன் கைரேகை பதியப் பெற்றவன். அப்பெருமான் மேவி விளங்குகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

482. விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கு ஆடலினா(ன்) நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், கண்டத்தில் நஞ்சினை உடையவன்; உமாதேவியை ஒரு பாகம் உடையவன்; படம் கொண்ட பாம்டப அரையில் அசைத்துக் கட்டியவன்; அன்பொடு பற்றி நில்லாது பகைத்த முப்புர அசுரர்களை அழித்தவன்; திருநடனம் புரிந்து ஆடல் புரிபவன்; வேதத்தில் வல்ல அந்தணர்கள் கூறும் பாடலில் தோய்ந்து விளங்கபவன்; மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவன். அப்பெருமான் உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

483. பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியும் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி ஆடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், நான்கு மறைகளானவன்; கொன்றை மலர் மாலையும் அரவமும் சூடியவன்; வெண்பிறைச் சந்திரனும், திருநீற்றுப் பச்சையும் தரித்து, அழகிய கையில் நெருப்பு ஏந்தி ஆடுபவன்; மயானத்தில் ஆடல் நிகழ்த்துபவன். அப்பெருமான் உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

484. பண்டமரர்கூடிக் கடைந்த படுகடல் நஞ்சு
உண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகர மூன்றடனே வெந்தவியக்
கண்டபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சை உண்டு அருள்புரிந்த பெருமான் என்று, தேவர்கள் தொழுது ஏத்த, பகைகொண்ட மூன்று அசுரர்களின் கோட்டைகள், எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், மேவி விளங்குகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

485. தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினைஓர் கூறுடையான்
காய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்நஞ்சு உண்டு அநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், தேயந்து மெலிந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அதனைச் சூடியவன்; சிவந்த திருமேனியுடையவன்; நன்கு பூசிய திருவெண்ணீற்றினன்; உமாதேவியை ஒரு கூறாக உடையவன்; துன்புற்று அஞ்சிய நிலையில், தேவர்கள் வேண்டுதல் புரியக் கடலில் தோன்டய நஞ்சினை உட்கொண்டவன்; மன்மதனை எரித்தவன். அப் பெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

486. மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்தலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகம் உடையவன்; புகழ் விளங்கும் வேதத்தை ஓதுபவன்; கையில் பிரம கபாலம் ஏந்தியவன்; ஆடுகின்ற அரவத்தை ஆபரணமாகப் பூண்டு மகிழ்ந்தவன்; சந்திரனும், பாம்பும் அணிந்த சடைமுடியில் கங்கை தரித்தவன். அப்பெருமான் மேவி உறைகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

487. வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகத்த எம்பெருமான்
பொருகடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : அரவத்தை நாணாகவும், பெருமைமிக்க மேரு மலையை வில்லாகவும், அக்கினியைக் கணையாகவும் கொண்டு, முப்புரங்களை எரித்த எம்பெருமான், சுடுகாட்டில் இருப்பவனாய், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனாய் விளங்குபவன். அப் பெருமான் மேவி உறைகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

488. போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையாள் அஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : கொன்றை மலர் திருமுடியில் புனைந்த ஈசன், உமாதேவி அஞ்சுமாறு கயிலை மலையை எடுத்த இராவணன், முறையாக ஏத்தி நிற்க அருள் புரிந்த பெருமான். அப் பெருமான் நடனம் புரிவதில் விருப்பம் உடையவனாய் மேவி உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

489. மண்ணினைமுன் சென்றிரந்த மாலு மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவம் ஆயபிரான்
பண்ணிசையால் ஏத்தப் படுவான்றன் நெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : மாவலிச் சக்கரவர்த்தியின்பால் குறள் வடிவில் சென்று, மூன்று அடி மண் விழைந்த திருமாலும், பிரமனும் எண்ணுதற்கு அரியவனாய், சோதிப் பிழம்பாகிய பெருமான், பண்ணின் வழி மேவும் இசையால் ஏத்தப்படுபவன். அப்பெருமான், நெற்றியில் நெருப்புக்கண் உடையவனாய் மேவி உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

490. தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையால் ஏத்திப் பயின்ற இவைவல்லார்
விண்ணவராய் ஓங்கி வியனுலகம் ஆள்வாரே.

தெளிவுரை : குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த சீகாழியில் மேவும் தமிழ்ஞானசம்பந்தர், நெற்றிக்கண்ணுடைய, பெருமான் உறையும் கோயிலாகிய கைச்சினத்தை, பண்ணின் இசைவரை ஏத்தியது இத் திருப்பதிகம் இதனை ஓதுபவர்கள், தேவர்களாக ஓங்கிச் சிறந்ததாகிய அவ்வுலகில் பெருமை உடையவராய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

182. திருநாலூர்மயானம் (அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

491. பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு(ம்) மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
மாலூரும் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.

தெளிவுரை : ஈசன், தன்பால் ஊர்ந்து செல்லும் மலைக்கும் தன்மையுடைய பாம்பும், குளிர்ந்த சந்திரனும், ஊமத்த மலரும் விளங்குகின்ற செஞ்சடையின் மேல் வைத்தவன்; முப்புரிநூல் அணிந்த மார்பினன்; நாலூர் மயானத்தில் மேவும் ஈசன். அப் பெருமான் திருவடியை எண்ணி அன்பு கெழுமிய சிந்தையராய் வணங்குபவர்களுக்கு மறுபிறவி இல்லை.

492. சூடும் பிறைச்சென்னிச் சூழ்காடு இடமாக
ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகாக
நாடும் சிறப்போவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர்பால் பற்றாவாம் பாவமே.

தெளிவுரை : ஈசன், சென்னியில் பிறைச் சந்திரனைச் சூடியும், சுடுகாட்டினை இடமாகவும் கொண்டு ஆடுபவன். அப் பெருமான் உறையும் இடமான, பறை ஒலியும், சங்கொலியும் விளங்க, நாடும் சிறப்புகள் ஓய்வின்றி விளங்ககின்ற நாலூர் மயானத்தைப் போற்றிப் புகழும் சிறப்புடையவர்பால் பாவம் சேராது.

493. கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று
எல்லா அறனுரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்து நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாம் செல்லாதார் தொன்னெறிக்கே.

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு எல்லா அறங்களையும் இன்னருளால் உரைத்த பரமன் விளங்குகின்ற, நல்லோர் தொழுது போற்றும் நாலூர் மயானத்தைத் தொழுது உரையாதவர், தொன்மையான நெறியில் நில்லாதவர் எனப்படுவர்.

494. கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோல் ஆடையான்
நீலத்தார் கண்டத்தா(ன்) நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே.

தெளிவுரை : ஈசன், அழகிய கொன்றை மலர் மாலை சூடியும், புலித்தோல் ஆடையும் கொண்டு விளங்குபவன்; நீலகண்டமும் நெற்றிக் கண்ணும் உடையவன். அப் பெருமான், உலகத்தவர்கள் போற்றித் துதிக்கின்ற சூலப் படை கொண்ட ஈசனே என்று ஏத்திப் பரவுவார்க்குத் தொல்வினையானது சூழாது.

495. கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கள்
பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையான் என்றேத்துவார்க்கு எய்துமாம் இன்பமே.

தெளிவுரை : கறை தோய்ந்த மிடற்றினனாய், கபாலம் ஏந்தியவனாய், மழுப்படை, உடையவனாய், பிறை சூடிய சடை உடையவனாய், உமாதேவியைப் பாகம் உடையவனாய், பொழில்சூழ் நாலூர் மயானத்தில் வீற்றிருக்கும் ஈசனை, இறைவனே என்று ஏத்தி வணங்குபவர்களுக்கு இன்பம் சேரும்.

496. கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தா(ன்) நாலூர் மயானத்தை
நண்ணா தவர்எல்லா(ம்) நண்ணாதார் நன்னெறியே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணுடைய ஈசன், நெருப்பினைக் கரத்தில் ஏந்தி ஆடியும், பண்ணொளிரும் வேதம் ஓதியும், விளங்கம் பரஞ்சோதி ஆவார். அப்பெருமான் பகைவராய் வந்த மூன்று அசுரர்களையும் மதில்களையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர் உறையும் பதி நாலூர் மயானதம் ஆகும். அதனை நண்ணாதவர் நன்னெறியாகிய ஞானநெறியை நண்ணாதவரே.

497. கண்பாவு வேகத்தால் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோல் ஆகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க்கு ஏலா இடம்தானே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியின் வேகத்தால் மன்மதனை எரித்த ஈசன், உமாதேவியைப் பாகமாக உடையவன்; யானையின் தோலை உடம்பில் போர்த்துக் கொண்டவன்; நண்புடைய குணத்தவர்கள் விளங்கும் நாலூர் மயானத்தில் உள்ளவன். அப்பெருமானைச் சிந்தையில் கொண்டு தியானிப்பவர்களுக்கு இடர் இல்லை.

498. பத்துத் தலையோனைப் பாதத் தொரு விரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலியாவா நாலூர் மயானத் தென்
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.

தெளிவுரை : பத்துத் தலைகளையுடைய இராவணனைத் திருப்பாத விரால்ல ஊன்றி மலையால் அடர்த்த ஈசன், வாளும் நீண்ட வாழ்நாளும் தந்து அரள் புரிந்த பரமன். சங்கின் ஒலி ஓயாது முழங்கும் நாலூர் மயானத்தில் வீற்றிருக்கும் என் தந்தையை நினைத்துப் போற்றுபவர்களுக்கு அல்லல் அடையாது.

499. மாலோடு நான்முகனு(ம்) நேட வளரெரி யாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்க(ம்) நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேட, வளர்ந்து ஓங்கும் சோதியாய் விளங்கி, உச்சியும் அடியும் காணாதவாறு ஓங்கியவன், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகி நூலூர் மயானத்தில் வீற்றிருந்து பாலோடு நெய் கொண்டு பூசனை கொள்ளும் பரமன்; அப்பெருமானின் பாதங்களைப் பரவிப் பணிவோமாக.

500. துன்பாய மாசார் துவராய் போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பாய் இருந்தானை யேததுவார்க்கு இன்பமே.

தெளிவுரை : மாசுடையவராய்ப் புன்மையான பேச்சுக்களைக் கூறும் புறச் சமயிகள் சொற்களை ஏற்காது, புண்ணியனாக விளங்கும் ஈசனை நண்ணுமின்கள். பேரறிவு வாய்க்கப்பெற்ற இணக்கத்தால் மனம் ஒன்றி சிவாய என்று மொழிந்து நாலூர் மயானத்தில் இன்ப வடிவினனாய் வீற்றிருக்கும் நாதனை ஏத்திப் பரவுமின். அவ்வாறு செய்பவர்களுக்கு இன்பமே உண்டாகும்.

501. ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்தான்
நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிந்தேத்த வல்லாருக்கு
ஏலும் புகழ்வானத் தின்பாய் இருப்பாரே.

தெளிவுரை : உலகத்தில் புகழ்கொண்டு விளங்கும் சீகாழிப் பதியில் மேவும் ஞானசம்பந்தர், நான்கு மறைகளும் போற்றும் நாலூர் மயானத்தைச் சீலம் விளங்கும் தன்மையால் சிறந்து ஏத்திப் போற்றத் திகழும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், புகழ் பெருக வாழ்வார்கள்; வானுலகத்தில் சிறப்புடன் இன்பமாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் இரண்டாம் திருமறை »
temple news
183. மயிலாப்பூர் (அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை) திருச்சிற்றம்பலம் 502. மட்டிட்ட ... மேலும்
 
temple news
220 திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar