பதிவு செய்த நாள்
06
ஜூன்
2016
10:06
செஞ்சி: மழை கொட்டி தீர்த்த போதும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அமாவாசை இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர். அன்று மதியம் முதல் மாலை வரை தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. இதனால் பக்தர்களின் வருகை குறையும் என எதிர் பார்த்த நிலையில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்னதாக ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடி இருந்த பக்தர்கள் கற்பூர தீபமேற்றி அம்மனை வணங்கினர். நுாற்றுக்கணக்கானாவர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர்.
இதில் விழுப்புரம் கலெக்டர் லட்சுமி, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் வாசுநாதன், உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.