பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
11:06
வத்திராயிருப்பு, :விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
தம்பிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜமாத் தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மத ஒற்றுமைக்கு உதாரணமாய் முஸ்லிம்கள் கலந்து கொண்டது, அனைவரையும் நெகிழச் செய்தது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீராமுகைதீன், மத பாகுபாடு இன்றி மாமா, அண்ணன் என்ற உறவுமுறை சொல்லித்தான் இன்றுவரை பழகி வருகிறோம். இல்ல விழாக்களில் இரு மதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும் தொடரும், என்றார். மசூதி இமாம் ஜாபர்அலி கூறுகையில், ரமலான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம், என்றார்.