பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
05:06
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒரு காலத்தில் ஆலமரங்கள் நிறைந்த காடாகத் திகழ்ந்தது. வேடர் குலத்தில் பிறந்த வில்லி என்ற மன்னன், ஒருநாள் வேட்டை ஆடச் செல்லும்போது, முள்புதரில் திருமால் சிலையையும் புதையலையும் கண்டெடுத்தான். அந்தத் தங்கப் புதையலைக் கொண்டு கோயிலைக் கட்டினான்ன. அதில் திருமாலை பிரதிஷ்டை செய்தான். காட்டை சரிசெய்து புதிய நகர் ஒன்றினையும் அமைத்தான். அந்த நகரமே ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டது. வில்லிப்புத்தூரில் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார் தன் தவத்தின் பயனால் கோயில் அருகில் உள்ள துளசி வனத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். அக்குழந்தையை வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைதான் ஆண்டாள். சிறுவயதிலேயே கண்ணன் மேல் காதல் கொண்ட ஆண்டாள், கண்ணனை மணப்பதற்காக மார்கழி மாதம் முழுக்க விரதம் இருந்தாள். இதனை பாவை நோன்பு என்பார்கள்.
ஆண்டாள் எழுந்தருளியுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் திருக்கோயிலின் ராஜகோபுரம் தான் தமிழக அரசின் முத்திரைச் சின்னம். இக்கோயிலின் தேர் சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்ட தேரினைப்போல் பிரம்மாண்டமானது. இக்கோயில் அருகில் உள்ள கண்ணாடிக் கிணறு மிகவும் புகழ்பெற்றது. திருமணமாகாதக் கன்னிப் பெண்கள் இக்கிணற்றின் நீரில் தங்கள் முக அழகைப் பார்த்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. மேலும், ஆண்டாள் அவதரித்த துளசி வனத்தில் உள்ள மண்ணை எடுத்துத் தங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் அனைத்துத் தடைகளும் நீங்கும் என்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் வில்லி மன்னனால் கட்டப்பட்டது. ராஜகோபுரம் மதுரை வல்லப தேவபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் சொல்வார்கள். பதினொரு நிலைகளுடன் கலசங்கள் பதினொன்றினைத் தாங்கியுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 196 அடி. இதில் எந்த சுவாமிப் பதுமைகளோ மற்ற உருவங்களோ இல்லை என்பது தனிச்சிறப்பு. அதனால்தான் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக இதுதிகழ்கிறது என்று கூறுவர். வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் சீர்வரிசை பெறுவாள். பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சீர்வரிசை வைபவம் நடக்கிறது. மார்கழி மாதம் பகல்பத்து உற்சவத்தில் முதல் நாளன்று தன் கணவருடன் தன் தாய் வீட்டுக்கு எழுந்தருள்கிறாள் ஆண்டாள். இவ்வைபவத்தின் போது ஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் இருவரையும் பெரியாழ்வார் வழிவந்த வேதப்பிரான் பட்டர்கள் வரவேற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
வெல்லப்பாகு சேர்த்த கொண்டைக்கடலைப் பருப்பான மணிப்பருப்பையும், திரட்டி பாலையும் அளிக்கிறார்கள். வேதப்பிரான் வீட்டுத் திண்ணையில் பூசணிக்காயிலிருந்து நெல்லிக்காய் மற்றும் கரும்புக்கட்டு, பழவகை வரை அனைத்தையும் சீர்வரிசையாக பரப்பி வைக்கிறார்கள். இதனை பச்சைப் பரப்பு என்பர். மேலும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் மார்கழி நோன்பான தைலக்காப்பு உற்சவம் நடைபெறும். மார்கழி 22-ந் தேதி முதல் தை மாதம் முதல் நாள் வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். மார்கழி எண்ணெய்க்காப்பு உற்சவத்தில் எட்டு நாள்களும் ஆண்டாளுக்குத் தேய்த்துவிடும் எண்ணெய் மிகவும் பக்தியுடன் தயாரிக்கப்படுகிறது. அறுபத்தியோரு வகை அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தைலத்தைக் கடைசியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இன்னும் பல சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆண்டாள் இடக் கையில் கிளியுடன் காட்சி தருகிறாள்.
ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் கையில் ஒரு புதுக்கிளி காட்சி தரும். வைணவத் திருக்கோயில்களில் வேறு எங்கும் காண முடியாத தனிச்சிறப்பு பெற்ற இந்தக் கிளியைக் கல்யாணக்கிளி என்று போற்றுவர். கல்யாணக்கிளி பற்றிப் புராணம் சொல்லும் தகவல் என்ன? இந்தக்கிளி ஆண்டாளுக்கு தூது சென்ற கிளி. ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருக்கு சுகம்பிரம்ம ரிஷியை கிளி ரூபத்தில் தூது அனுப்புகிறாள். தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம் இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் என்றும் நான் இருக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். அன்றிலிருந்து ஆண்டாளின் இடக் கையில் சுகப்பிரம்மம் கிளியாக எழுந்தருளி காட்சி கொடுக்கிறாள்.
தூது சென்று வந்த இந்தக் கிளியால் ஆண்டாளுக்கு, அவள் விரும்பிய கணவன் அமைந்ததால் இந்தக் கிளியை, கல்யாணக்கிளி என்று போற்றுவர். ஆண்டாளின் இடக்கையில் வீற்றிருக்கும் அழகிய கிளி தினசரி புதிதாக உருவாக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது. இக்கிளியை உருவாக்குவது தனிக்கலை. இதற்கென்றே ஒரு குடும்பத்தினர் இக்கோயில் அருகில் வசிக்கிறார்கள். சுத்தமான வாழைநார் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் இலைகளால் கல்யாணக்கிளியின் உடலும், முகமும் வடிமைப்பார்கள். ஏழு இலை என்று சொல்லப்படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிளி உருவாக எடுத்துக்கொள்ளப்பட்ட சிறிய மூங்கில் குச்சிகளை இலைகள் மறைக்கின்றன. உட்கார்ந்திருப்பது போல் காண்பிப்பதற்கு நந்தியாவட்டை பூக்களே கிளியின் மெல்லிய கால்கள். இறக்கைகளுக்குப் பனைஓலை. அதன்மேல் பச்சை இலைகள் சாத்தப்படுகின்றன. கிளியின் வால்பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் உதவுகின்றன. கண்கள் பளிச்சிட, காக்காய் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவர். சிவப்பு நிற மாதுளம் பூ கிளியின் அழகு மூக்காக உருமாறுகிறது.
தினசரி மாலை நேரம் பூஜையின்போது இந்தக் கிளி ஆண்டாளுக்குச் சாத்தப்படுகிறது. மறுநாள் காலை விஸ்வரூப தரிசனத்திற்கு முன், இந்தக் கிளி எடுக்கப்படும். இந்தக் கிளியை கல்யாணத்தடை நீக்கும் கிளி என்பர். இந்தக் கிளியைப் பெறுவதற்கு கடும் போட்டியிருப்பதால் முன்பதிவு அவசியம் என்பர். வெளியூர் பக்தர்கள் இந்தக் கிளியை உடனே பெற முடியாத நிலையின்போது, இதுபோல் கிளிகளைத் தயாரித்து அங்கு பூஜை சாமான்கள் விற்பவர்கள் விற்கிறார்கள். அந்தக் கிளியை வாங்கி, பூஜை பொருள்களுடன் அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் ஆண்டாள் பாதங்களில் சமர்ப்பித்து, பூஜை செய்து கொடுப்பார். இதனை வீட்டில் வைத்துப் பூஜிப்பதால் திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பிறக்கும் என்பது நம்பிக்கை.