3,000 ஆண்டுகள் பழமையான கோயில் திருப்பணிகள் நிறுத்தம் : அரசு நிதி கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2016 11:07
ராமநாதபுரம்: மூவாயிரம் ஆண்டுகள் பழமையான, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி, மங்களநாதர் சுவாமி கோயில் திருப்பணிகள், அரசு நிதி கிடைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள மரகத நடராஜர் சன்னிதி வரலாற்று சிறப்புமிக்கது. நடராஜர் சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூசப்படும் சந்தனம் அகற்றப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடக்கும். பின், மீண்டும் சந்தனம் பூசப்பட்டு ஆண்டு முழுவதும் சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி இருப்பார். இக்கோயிலின் தலவிருட்சமாக 3,000 ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் உள்ளது. மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ௨௦௧௨ல் திருப்பணிகள் துவக்கப்பட்டன. நீராடி தொட்டி சித்திரக்கால் மண்டபம் வடக்கு, தெற்கு பகுதியில் மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்தன. கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் கிடப்பில் உள்ளன. சுவாமி கொடிமரம் சேதமடைந்துள்ளது. கொடிமரம் அருகில் உள்ள துாண்களில் சுண்ணாம்பு கலவை உதிர்ந்து வருகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பணிகளை முடிக்க இன்னும் ரூ.1.75 கோடி தேவை. கொடிமரம் பகுதியில் துாண்களை, தொல்லியல் துறை ஆலோசனை பெற்றே சீரமைக்க முடியும் என்றார்.