பதிவு செய்த நாள்
02
ஜூலை
2016
11:07
பொள்ளாச்சி பகுதியில் களந்தை, கரைப்பாடி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில், கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பில், வரலாற்று ஆய்வு பயணத்தை ஆய்வு குழுவினர் மேற்கொண்டனர். தொல்லியியல் துறை அறிஞர் பூங்குன்றன் தலைமையில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில், பெரிய களந்தை பகுதியில் உள்ள ஆதிஸ்வரர் கோவில் பற்றி தொல்லியல் துறை அறிஞர் பூங்குன்றன் கூறிய விளக்கத்தினை அடிப்படையாக கொண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: கிணத்துக்கடவு அருகில் அமைந்துள்ளது பெரிய களந்தை. இங்கு, ‘ஆதீஸ்வரம்’ எனும் பெயர் கொண்ட சிவன் கோவில் உள்ளது. ஆனால், கோவிலின் பழம் பெயர் ,‘ஆதித்தேசுவரம்,’ என்பதாகும். இந்த கோவிலில் உள்ள கல்வெட்டு சிறப்பானதாகும். சேலம் ராஜாச்ரயபுரத்திலிருக்கும் கைக்கோளான் ஒருவன் இங்கு வந்து தங்கியிருந்த போது, கொடுத்த தானத்தை பற்றி குறிப்பிடுகிறது. உள்ளூர் அல்லாது, பல வெளியூர்களிலிருந்து வந்து இந்த கோவிலுக்கு கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாயறைக்கநாடு: களந்தை வாயறைக்காநாட்டை சேர்ந்தது. பல்லடம், பொள்ளாச்சி தாலுகாக்கள் சந்திக்கும் பகுதி இந்த வாயறைக்கநாடு. தென்கொங்கிலிருந்த ஏழு நாடுகளுள் ஒன்று. காவடிக்காநாடு, கரைவழிநாடு, வெண்டையூர்க்கால் வீரகேரளவள நாடு, நல்லுார்க்காடுநாடு முதலானவை இவ்வேழு நாடுகளுள் அமையும். கொழுமம் கோவில் கல்வெட்டில் ஏழு நாடுகள் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த ஏழு நாடுகளில், இருந்த கம்மாளர்களுக்கு அரசனால் சில உரிமைகள் வழங்கப்பட்ட செய்தியை கொழுமம், பேரூர், கரைப்பாடி, குடிமங்கலம் போன்ற பல ஊர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் காண்கிறோம். வாயறைக்காநாடு பூலுவர்கள் இருந்த பகுதியாகும். பொள்ளாச்சியிலும், குள்ளிச்செட்டிபாளையத்திலும் பூலுவர்கள் இருந்தனர். குள்ளிச் செட்டிபாளையம் தற்போது ஒரு சிற்றுார்.
தென்கொங்கின் வட பகுதி முழுவதும் பூலுவர்கள் இருந்த செய்தியை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் வெள்ளாளர் வந்த பிறகு, பூலுவர், வெள்ளாளர் இருவரையும் கல்வெட்டுகள் தனித்தனியே குறிப்பிடுகின்றன. இவ்விருவகையினருக்கும் தனித்தனியே நாட்டுச்சபைகள் இருந்தன. பூலுவர்களை சோழர்கள் வேளாண்குடிகளாக மாற்றினர். பூலுவர்களை வேளாண்குடிகளாக மாற்றும் ஒரு முயற்சியாக, அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதை குறிப்பிடலாம். பழங்குடிகளை வேளாண்குடிகளாக மாற்றும் போது, பழங்குடிகளின் தெய்வங்களை சிவன்கோவிலுக்குள் கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும்போது, பழங்குடித்தெய்வங்கள் எப்படி இருந்தனவோ அப்படியில்லாமல், பிராமணமரபுக்குட்பட்டு மாற்றப்பட்டன.
பழங்குடி தெய்வம்: தமிழ்நாட்டிலேயே இந்த ஊரில் தான் நந்தியின் மேல் அமர்ந்த நிலையில் அம்மனை பார்க்க இயலும். நந்தி மேல் அமர்ந்த அம்மன் என்பதால், ‘பெற்ற நாச்சியார்’ என அழைக்கின்றனர். பெற்ற நாச்சியார், கொழுமம், ஆனைமலை ஆகிய ஊர்கல்வெட்டுகளில் குறிப்பு வருகிறது. ஆனைமலை ஆனைக்கீசுவரர் கோவிலில், பெற்ற நாச்சியார் சிலையை பாண்டிமண்டலத்து இருஞ்சோனாட்டை சேர்ந்த சுந்தரபெருமாள் வாழ்வித்தாரான பல்லவராயர் என்பவர் திருக்காமக்கோட்ட நாச்சியாராக ஏறியருளப்பண்ணினார் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. பாண்டிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இங்கு பெற்ற நாச்சியார் சிலையை செய்து கொடுத்தார் எனும் செய்தியை காணும் போது, பெற்ற நாச்சியார் எனும் தாய்த்தெய்வம் இப்பகுதியில் எத்தணை முதன்மையாக தெய்வமாக இருந்திருக்கும் என்பதை அறியலாம். களந்தை கோவில் கருவறையில் இருப்பது பெற்ற நாச்சியார் உருவமேயாகும். இந்த பகுதி அம்மன் வழிபாட்டிற்குரிய பகுதியாக விளங்கியுள்ளது. அம்மன் வழிபாடு, சோழர் ஆதிக்கம் செயல்பட்டமை போன்ற பல அடிப்படைகளால் இக்கோவில் சிறப்பிடம் பெறுகிறது. இந்த கோவிலின் அருகில் ராசராசன் காசு கிடைத்துள்ளது.
பெருங்கற்சின்னம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருங்கற்சின்னங்கள் இந்த ஊர்பகுதியில் கிடைத்தன. பல வீடுகளில் இந்த தாழிகளை எடுத்து வீட்டுப்பயன்பாட்டுக்குப் புழங்கி வந்துள்ளனர். சாம்பல் மேடு இங்கே இருந்துள்ளது. மேலும், வேட்டுவர் நடுகற்களும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் ஊரின் பழமையை பறைசாற்றும் சான்றுகள். பூலுவவேட்டுவர் என்ற இப்பகுதியில் குறிப்பிடப்பெறுகின்றனர். பூலுவரும், வேட்டுவரும் ஒருவரே ஆகலாம். பழங்குடிகளை நாகரிகக்குடிகளாக மாற்றுவதற்கு சோழர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது எனலாம். காலம் செல்லச்செல்ல, அவர்கள் வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டனர். வாணிகமும் நிறைய நடந்தது. இன்னும் பல அரிய தகவல்கள், கோவில் கல்வெட்டு மூலம் கிடைத்துள்ளன. இவ்வாறு, சுந்தரம் தெரிவித்தார்.