பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
06:07
மதுரை: வாடிப்பட்டி அருகே உள்ள பொன்பெருமாள் மலை மீது அமைந்துள்ள ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சனேயர் கோயிலுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் திருமோகூர் ராஜா பட்டர் அவர்களால் மஹா சம்ப்ரோக்ஷணமும் (கும்பாபிஷேகம்) அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மஹாஅர்ச்சனை விமரிசையாக நடைபெறவிருக்கின்றன.
மதுரை மாவட்டம், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, இராமநாயக்கன்பட்டியில் பொன்பெருமாள் மலை உள்ளது. இம்மலை தெய்வீக அருள்சக்தி வாய்ந்தது. இம்மலையின் அடிவாரத்தில் ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் சர்வ வரப்பிரசாதியாய் அருள்பாலித்துக் கொண்டு வருகிறார். இந்த பெருமாள் கோயிலிருந்து மலை உச்சிக்குச் செல்ல பாதையை சீரமைத்தும், புதிதாக 562 படிகள் கட்டுவித்தும் மலை உச்சியில் தளம் அமைத்தும், ஸ்ரீராமர் பாதம் ஒன்றும், ஸ்ரீஜெயவீர சஞ்சீவி ஆஞ்சனேயர் திருவுருவச் சிலை ஒன்றும் நூதனமாக அமைக்கப்பட்டிருப்பதுமான திருப்பணிகள் திருப்பணிக் கமிட்டியினர், கிராமப்பொதுமக்கள் மற்றும் திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நடந்தேறியுள்ளன. இதில் ஸ்ரீராமர் பாதம் மற்றும் புதிதாக மலையின் கீழிருந்து உச்சிவரை கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இம்மலை உச்சியில் அமைந்திருக்கும் தீப ஸ்தம்பத்தில் பொன்பெருமாளை ஜோதி சொரூபமாக எழுந்தருளச் செய்து மக்கள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலையில் தீபம் ஏற்றி வழிபடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த தீபதரிசனம் திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்திற்கு ஒப்பானதாக எண்ணப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
9.7.2016 (சனிக்கிழமை)
மாலை: 4.00 மணி முதல் 5.00 மணிவரை- விவேகானந்த கல்லூரி நரேந்திரா பஜனைக்குழு மாணவர்களின் பஜனை
மாலை: 5.00 மணி முதல் 6.00 மணிவரை- சொற்பொழிவு-புவிக்கு நாயகன் கவிக்கு நாயகன்-அனுமன் நிகழ்த்துபவர்: ஜகந்நாத பராங்குசதாசன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை மதுரைகல்லூரி, மதுரை.
மாலை: 6.00 மணிக்கு மேல்- எஜமானர் வரணம், ஆச்சார்யர் அழைப்பு, பகவத் பிரார்த்தனை பகவத் அனுக்ஞ விஷ்வக்ஷேனர் ஆராதனை, மஹாஸங்கல்பம்
வாசுதேவ புண்யாகவசனம், மிருத்சங்ரஹணம், வாஸ்து ஸாந்தி, அங்குரார்பணம், ரக்க்ஷாபந்தனம் யாகசாலை பிரவேசம், துவாரபூஜை, பாலிகைபூஜை, சக்ராப்ஜ மண்டலபூஜை கும்ப ஆவாஹணம், திருவாராதனம், வேதவிண்ணப்பம்
தீபாராதனை, முதல் கால யாகசாலை ஆரம்பம், பூர்ணாஹுதி
தளிகை கண்டருளல், சாற்றுமுறை, கோஷ்டி, அதனைத்தொடர்ந்து திருமஞ்சனம் நடைபெறும்.
10.7.2016 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: 7.00 மணிக்கு- சுப்ரபாதம், கோபூஜை, புண்யாகவசனம் துவாரபூஜை, பாலிகை பூஜை, சக்ராப்ஜ மண்டலபூஜை கும்பத்திற்கு திருவாராதனம் வேதவிண்ணப்பம் தீபாராதனை, இரண்டாம் கால யாகசாலை ஆரம்பம், பூர்ணாஹுதி
காலை: 9.00 மணிக்கு மேல்- துவாரபலி, யாத்ராதானம், தசதானம், கடோத்தாபனம்
காலை: 10.00 மணிக்கு- சிம்ஹ லக்னத்தில் மஹாசம்ப்ரோக்ஷணம்
திருவாராதனம் சாற்றுமுறை, கோஷ்டி, பிரசாதம் வழங்குதல் எஜமானர் மரியாதை நடைபெறும்.