பரிதாபத்தில் பஞ்சபாண்டவர் மலை: பாதுகாக்குமா தொல்லியல் துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2016 11:07
மேலுார்: மேலுார் அருகே கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிற்பங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இம்மலையை பராமரிக்கும் தொல்லியல் துறை, வரலாற்று சின்னங்களை பாதுகாக்க முன்வரவேண்டும். இம்மலையின் சமணர் காலத்து கல்படுக்கைகள், குகைகள் உள்ளன. கி.பி. 2 - 11ம் நுாற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டு தலமாக இம்மலை இருந்தது. மலையில் மூன்று தீர்த்தங்கரர் உருவங்களும், குகைதளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. தவிர பிராமிய கல்வெட்டுக்கள், கல் படிக்கட்டுளும் உள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர் மற்றும் முருகன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் கீழவளவு பகுதி மக்கள் திருமணம் செய்வது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்கள் நிறைந்த இம்மலையை தொல்லியல் துறை பராமரிக்கிறது. பெயரளவில் வேலி அமைத்துள்ளனரே தவிர, முறையான பராமரிப்பு இல்லை. அதனால் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
செந்தில்குமார்: வெளியூர் காரர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து போடுவதால் நடக்க முடியவில்லை. மது அருந்தி, மாமிசம் சமைத்து, சிலைகளை சேதப்படுத்துகின்றனர். மெயின் ரோட்டில் இருந்து மலைக்கு செல்ல முடியாத அளவிற்கு பாதைகள் மேடு, பள்ளமாக உள்ளதால் மலைக்கு செல்ல முடியவில்லை. மலை மீது கண்ட வார்த்தைகளை எழுதி அசிங்கப்படுத்தி உள்ளனர். இம்மலையை வெளிநாடு, வெளிமாநில வரலாற்று துறை மாணவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சபாண்டவர் மலை பரிதாபத்தில் உள்ளது. இனியாவது தொல்லியல் துறை முறையாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.