பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
02:07
ஆத்தூர்: ஆறகளூரில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் அருகே, ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், கால பைரவர் உட்பட எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில், அந்த சிலைகளுக்கு, அபி?ஷக பூஜை நடந்துவருகிறது. நேற்று முன்தினம், காலபைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உட்பட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. நள்ளிரவு, 12 மணியளவில், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், சேலம், விழுப்புரம், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிராதேவி கோவிலில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக, உலக நன்மை மற்றும் மழை வேண்டி, யாக குண்டத்தில் வற்றல் மிளகாய், மூலிகை கொட்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், சிறப்பு பூஜை நடந்தது.