சவுமிய நாராயண பெருமாள் கோவில் பராமரித்து பாதுகாக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2016 12:07
உத்திரமேரூர்: எடமச்சியில், பராமரிப்பின்றி சீரழியும், சவுமிய நாராயண பெருமாள் கோவிலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் இந்து அற நிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த, சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், கோவில் கட்டடமும் நாளுக்கு நாள் பலவீனமடைந்து, உறுதி தன்மையை இழந்துள்ளது. கோவில் நுழைவாயில் பகுதியின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளி கட்டடமும் இடிந்துள்ளது. இது குறித்து, அப்பகுதியினர் கூறுகையில், இக்கோவிலில், கருவறையில் பெருமாளுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இணைந்திருப்பது சிறப்பம். 15 ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலில் தினசரி ஒரு கால பூஜை நடந்து வந்தது. தற்போது, விசேஷ நாட்களில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு இப்பகுதியினரால் நியமிக்கப்பட்டுள்ள நபரால் பூஜைகள் நடக்கிறது. எனவே, இக்கோவிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு தினசரி பூஜைகள் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.