பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
ஈரோடு: ஆடி இரண்டாவது வெள்ளி யையொட்டி, அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோடு மாநகரில் உள்ள, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஈரோடு சின்னவலசு மாரியம்மன், தர்பார் ராஜ கலாநிதி அலங்காரத்திலும், ஈ.பி.பி., நகர் சக்தி மாரியம்மன், ரூபாய் நோட்டு அலங்காரத்திலும், கருங்கல்பாளையம் தேவி கருமாரியம்மன் வானவில் அலங்காரத்திலும், கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் சர்வ அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில், குண்டத்தின் முன் விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள், குண்டம் மண்ணை எடுத்து சென்றனர்.
*புன்செய்புளியம்பட்டி பிளேக் மாரியம்மன், வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
*பவானி செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன், அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவில், ஊமாரெட்டியூர் மாரியம்மன் கோவில், கக்குவாய் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
*கோபி, பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில், உச்சிகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலித்த அம்மன்களை, தரிசனம் செய்ய, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.