பதிவு செய்த நாள்
25
ஆக
2016
12:08
சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், சேலத்தில் இன்று (25ம் தேதி) கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பக்தர்களை காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கிருஷ்ணர் அவதரித்தார். அவர் அவதரித்த அந்த திருநாளை உலக மக்கள் அனைவரும் கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பல்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) 50வது ஆண்டு என்பதால், கிருஷ்ணரது அவதார திருநாளை பக்தர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாட உள்ளனர். இதற்காக, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், உலகெங்கிலும் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சேலம் இஸ்கான் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜென்மாஷ்டமி விழா, இந்தாண்டு சேலம் மூன்று ரோடு அருகில் உள்ள, ஜவஹர் மில் மைதாதனத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, ஐந்து ஏக்கர் பரப்பில் தண்ணீர் புகா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிப்பதற்காக, ஏழு ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.