பதிவு செய்த நாள்
29
ஆக
2016
11:08
நாகப்பட்டினம்: நாகூர் சீராளம்மன் கோவில் பூச்சொரிதல் ஊர்வலத்திற்கு, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன், ஊர்வலம் நடந்தது. நாகை அடுத்த நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சீராளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி திருவிழா விமரிசையாக நடக்கும்.விழாவின் துவக்கமாக நாகூர், நாகநாதர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள், பூத்தட்டுகளை தலையில் சுமந்து சென்று, சீராளம்மன் கோவிலை அடைந்த பின், பூச்சொரிதல் வைபவம் நடக்கும். கடந்த ஆண்டு, பூச்சொரிதல் ஊர்வலம் செல்லும் பாதை குறித்து, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தலையீட்டிற்கு பின், ஊர்வலம் நடந்தது.
இவ்வாண்டும், ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருச்சி ஐ.ஜி., - டி.ஐ.ஜி., மற்றும் நான்கு எஸ்.பி.,க்கள் தலைமையில் ஆயிரம் போலீசார், ஊர்வல பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு நாகூர், நாகநாதர் கோவிலிலிருந்து பட்டினச்சேரி கிராம பஞ்சாயத்தார் தலைமையில், 2,500 பெண்கள், பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக சென்றனர். மாலை, 6:00 மணிக்கு ஊர்வலம் கோவிலை அடைந்ததும், பூச்சொரிதல் வைபவம் நடந்தது.