பதிவு செய்த நாள்
29
ஆக
2016
12:08
தஞ்சாவூர்: பேராவூரணியில் கூட்டு குடிநீருக்கு குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டிய போது, 10 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பெருமகளூரில் உள்ளது, சோமநாதர் சிவன் கோவில். இது, மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம், தாமரை தண்டினால் ஆன சுயம்பு லிங்கமாகும். இக்கோவிலின் முன் பகுதியில், கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டிய போது, 5 அடி ஆழத்தில் இரண்டரை அடி உயரமும், 50 கிலோ எடையும் உள்ள சிவன் சிலையும், பூமாதேவி, விநாயகர், நடராஜர் உட்பட, 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. பேராவூரணி தாசில்தார், சிலைகளை பார்வையிட்டு தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். இச்சிலைகள், பல லட்சம் மதிப்புள்ளவை என கூறப்படுகிறது.