பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். அதற்காக, பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. திருக்கனுார் புதுகுப்பம் பகுதியில் விநாயகர் சிலை வடிவமைப்பு தொழில் இரவு பகலாக நடந்து வருகிறது. மண்பாண்ட தொழிலாளர் சங்கர் கூறும்போது, சுற்றுச்சூழலை பாதிக் கும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் சிலை, ரசாயன பெயின்ட்டினால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண் மற்றும் கிழங்கு மாவு, காகிதக் கூழ் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கும், விநாயகர் சிலைகளுக்கு மவுசு ஏற்பட்டது.
சுற்றுச்சூழலை பாதிக்காத இத்தகைய சிலைகளை வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்டர் கொடுத்து, வாங்கிச் செல்கின்றனர். ஒரு அடி முதல் 17 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள், தயாராகிறது. விலை அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
250 இடங்களில் சிலை பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியின், 250 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது என விநாயகர் சதுர்த்தி விழா பேரவை முடிவு செய்துள்ளது. பேரவை பொதுச் செயலாளர் சனில்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது என்றும், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 9ம் தேதி மாலை 4.00 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.