திருப்பதியில் அகலமான பித்தளைக் கலயத்தில் கனத்த துணி சுற்றப்பட்டு தள்ளு வண்டியில் உண்டியல் இருக்கும். உண்டியல் எண்ணும் போது, தரிசனத்திற்கு வரும் பக்தர் ஒருவரை சாட்சியாக இருக்கச் செய்வர். வருபவர் வேட்டி மட்டும் அணிந்திருக்க வேண்டும். தப்பித்தவறி இவர் பணமோ, ஆபரணங்களோ அணிந்து வந்தால், அதை தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தாக வேண்டும். சிலர் வேண்டுமென்றே நகை, பணத்துடன் உண்டியல் எண்ணும் இடத்துக்கு சாட்சியாக செல்வார்கள். இவர்கள் ஆபத்தான கட்டங்களில், தன்னிடம் இருப்பதையெல்லாம் ஏழுமலையானுக்கு கொடுத்து விடுவதாக வேண்டுதல் செய்திருப்பார்கள். இப்படி காணிக்கை செலுத்துவதற்கு நிலுவு தோபிடி என்று பெயர். நிற்க வைத்து உருவுதல் என்பது இதன் பொருள்.