பதிவு செய்த நாள்
17
செப்
2016
02:09
இன்று புரட்டாசி சனிக்கிழமை. இந்த நாளில், திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசித்த காஞ்சி மகாபெரியவர் பற்றி அறிவோமா! ஒரு சமயம் திருப்பதிக்கு மகாபெரியவர் யாத்திரை சென்றார். ஊரின் எல்லையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில், பெரியவருக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஊர் மக்களும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். ஒரு தந்தப் பல்லக்கில் அவரை அமர வைத்து, வேத பாராயணம், பஜனை முழங்க கோவிந்தராஜ சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். வழியெங்கும் ஏராளமான மக்கள் அவரைத் தரிசித்தனர். பிறகு ராமசுவாமி கோவில் முன்புறம் இருந்த பூந்தோட்டத்திற்கு பெரியவர் சென்றார். அந்த தோட்டத்தை பெரியவர் மீது பெரிதும் பக்திகொண்ட மகந்த் என்பவர் சீர்திருத்தி வைத்திருந்தார். அங்கே சமஸ்கிருத பண்டிதர்களான பிரம்மஸ்ரீ வேங்கடேஸ்வர தீட்சிதர், நாகபூடி குப்புசுவாமி ஐயர் ஆகியோர் வரவேற்பு பத்திரம் வாசித்து அளித்தனர். பிறகு சுவாமி திருமலைக்குப் புறப்பட்டார். மலைக்கு சோபன மார்க்கம் (மலைப்பாதை) வழியாக நடந்தே செல்வது என முடிவு செய்தார். அதிகாரிகளும், தொண்டர்களும் எவ்வளவோ வேண்டாம் என தடுத்தனர்.
வாகனத்திலேயே மலைக்குச் செல்லலாம் என்றனர். ஆனால் சுவாமிகள் நடந்தே மலைக்குச் சென்றார். மூன்று நாட்கள் தங்கியிருந்தார். இந்த மூன்று நாட்களும் பெருமாளைத் தரிசித்தார். சுவாமிக்கு தேவஸ்தானம் சார்பில் தங்கக்கலசம் வைத்த குடை, பெருமாளுக்கு சாத்திய 25 முழ நீளமுள்ள பீதாம்பரம் (பட்டு வேட்டி) பிரசாதமாகத் தரப்பட்டது. பெரியவரும் பெருமாளுக்கு நவரத்தினங்கள் பதித்த மகரகண்டி என்னும் மாலை, பீதாம்பரம் ஆகியவற்றை அளித்தார். உண்டியலில் தங்க நாணயங்கள், முத்து, பவளம், கோமேதகம், வைரம், வைடூரியம் ஆகியவற்றை சேர்த்தார். அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வஸ்திரம் அளித்து ஆசிர்வதித்தார். மலையிலுள்ள பாபவிநாசம், ஆகாசகங்கை ஆகிய தீர்த்தங்களில் புனித நீராடினார். மலையில் இருந்து இறங்கும்போதும் மலைப்பாதையிலேயே இறங்கினார். அப்போது வழியில் அமர்ந்திருந்த ஏழைகளுக்கு வஸ்திரமும், நாணயங்களும் வழங்கினார். மூன்றுநாள் இரவிலும் தெலுங்கு மொழியில் உபன்யாசம் செய்தது அனைவரையும் வியக்க வைத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இதைக் கேட்டு மகிழ்ந்தனர். பாலாஜியைத் தரிசிக்க வந்த மக்கள் பெரியவரையும் தரிசித்து குருவருளும், திருவருளும் பெற்றனர். மகாராஷ்டிர சுவாமி எனப்படும் சந்நியாசி பெரியவரைத் தரிசிக்க வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்று பாலாஜியைத் தரிசிக்க வரும்படி அழைத்தனர்.“அவரோ...இதோ! இவரே பாலாஜி. இவரைத் தரிசித்த பின் பாலாஜியைத் தனியாக தரிசிக்க வேண்டுமா!” என்று சொல்லி பெரியவரின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார். பெருமாளைத் தரிசிக்க அவர் செல்லவே இல்லை. (மகான் காஞ்சிப் பெரியவர்)