கீழக்கரை : பெரியபட்டினம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில் 115ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. இங்கு செப்., 9 மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் மவுலீது எனும் புகழ்மாலை ஓதும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மேளதாளம், வாண வேடிக்கை முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. குதிரை, யானை முன்னே செல்ல பெரியப்பட்டினம் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வலம்வந்தது. தொடர்ந்து பேழையில் உள்ள சந்தனம், மகான் செய்யதலி அடக்க ஸ்தலத்தில் பூசப்பட்டு பச்சை போர்வை போர்த்தப்பட்டது. இதில் முஸ்லீம்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று இரவு தர்காவில் இருந்து மீண்டும் பள்ளிவாசலை சந்தனக்கூடு சென்றடைந்தது. கொடியிறக்கம் அக்., 30ல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் செய்யது இப்ராம்ஷா, துணைத்தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.